என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிகே மணி"

    • கூட்டணி அமைப்பதில் டாக்டர் ராமதாசுக்கு எந்த சிக்கலும் இல்லை.
    • தேர்தலில் ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்வார்கள்.

    திண்டிவனம்:

    பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி தைலாபுரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஒரு தேர்தலில் வெற்றி என்பது கட்சியின் பலம். அந்த கட்சியை வழிநடத்தக் கூடிய தலைவருக்கான மிகப்பெரிய சக்தி, அதையும் தாண்டி கூட்டணி. அதற்கும் மேல் அந்த தொகுதியில் வேட்பாளர்களுக்குரிய முக்கியத்துவம். இதெல்லாம் சேர்ந்ததுதான் வெற்றி.

    அந்த அடிப்படையில் இதையெல்லாம் கூட்டி கழித்து நேர்காணல் நடத்தி டாக்டர் ராமதாஸ் தலைமையில் ஒரு நல்ல முடிவு எடுப்போம்.

    பா.ம.க. இன்று ஒரு நெருக்கடியான சூழலை சந்தித்தால் கூட டாக்டர் ராமதாஸ் பின்னால் கிராமங்களில் உள்ள அடித்தட்டு மக்கள், பா.ம.க.வின் அனுதாபிகள், மூத்த நிர்வாகிகள் ஆகியோர் உள்ளனர். அவர்கள் இந்த தேர்தலில் டாக்டர் ராமதாசின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.

    டாக்டர் ராமதாசை பாதுகாக்க வேண்டும் என்று பேசத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த தேர்தல் டாக்டர் ராமதாசுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    கேள்வி: கூட்டணி தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும்?

    பதில்: கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க டாக்டர் ராமதாசுக்கு பொதுக்குழு அதிகாரம் கொடுத்து உள்ளது. அதற்கு பிறகு 3 கட்ட நிர்வாக குழு கூட்டம் நடத்தப்பட்டது. நிர்வாக குழுவிடம் டாக்டர் ராமதாஸ் கருத்து கேட்டார். மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களிடம் தனித்தனியாகவும் கருத்து கேட்டார். அந்த கருத்தின் அடிப்படையில் நல்ல முடிவு எடுப்பார். முடிவை வேகமாக அறிவிக்காமல் சற்று காலதாமதம் ஆவதற்கு என்ன காரணம் என்றால் நல்ல முடிவாக இருக்கணும்.

    வெற்றி பெறக்கூடிய கூட்டணியாக இருக்க வேண்டும். டாக்டர் ராமதாஸ் இடம் பெறுகிற கூட்டணிதான் ஆட்சியை பிடிக்கக் கூடிய கூட்டணியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர் அலசி ஆராய்ந்து, யோசனை செய்து கொண்டிருக்கிறார். நல்ல முடிவை விரைவில் அறிவிப்பார்.

    கேள்வி: த.வெ.க. சார்பில் கூட்டணி தொடர்பாக பேசினார்களா?

    பதில்: எல்லா தரப்பும் பேசுகிறார்கள். தேர்தல் என்று சொன்னாலே சில கட்சிகள் தலைமையில் நேரடியாக பேசுவார்கள். சில கட்சியின் சார்பில் யாராவது ஆள் அனுப்பி பேசுவார்கள். இதெல்லாம் இயல்பானது. இறுதி முடிவுதான் உறுதியானது. இறுதி முடிவை டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார்.

    கேள்வி: கூட்டணி அமைப்பதில் ஏதாவது சிக்கல் இருக்கிறதா?

    பதில்: கூட்டணி அமைப்பதில் டாக்டர் ராமதாசுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஒரே ஒரு சிக்கல். வெற்றி கூட்டணி எது என்று கண்டறிவதை தவிர வேறு எதுவும் இல்லை.

    கேள்வி: மாம்பழம் சின்னம் யாருக்கு?

    பதில்: கட்சி யாருக்கு, மாம்பழம் சின்னம் யாருக்கு என்பதை மிக தெளிவாக விரைவில் உங்களிடம் டாக்டர் ராமதாஸ் சொல்வார்.

    கேள்வி: அ.தி.மு.க. தலைமையில் இருந்து உங்களிடம் பேசினார்களா?

    பதில்: எல்லா தரப்பிலும் பேசப்பட்டு வருகிறது. அதை இப்போது வெளியில் சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது.

    கேள்வி: பா.ம.க. இடம்பெறும் கூட்டணியில் இடம் பெற மாட்டோம் என்று திருமாவளவன் கூறி இருக்கிறாரே?

    பதில்: தேர்தலில் ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்வார்கள். இன்னொருவர் கருத்துக்கு நாம் பதில் சொல்லக்கூடாது. அது சரியாக இருக்காது. தேர்தலின் போது எல்லோருடனும் இணக்கமாக இருக்க வேண்டும். நான் அப்படித்தான் இருப்பேன்.

    கேள்வி: திருமாவளவனை சமாதானப்படுத்தும் முயற்சி நடந்ததா?

    பதில்: அப்படி எதுவும் எனக்கு தெரியவில்லை.

    கேள்வி: பா.ம.க.வுக்கு கடந்த காலங்களை போல தொகுதிகள் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா?

    பதில்: பா.ம.க. வலிமையான சக்தி. டாக்டர் ராமதாசின் வலிமை எப்போதும் குறையாது. தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக பா.ம.க.வும், டாக்டர் ராமதாசும் இருக்கிறார்கள்.

    கேள்வி: கூட்டணி தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலுவிடம் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறதே?

    பதில்: இது உங்கள் கற்பனை மற்றும் யூகம்தான்.

    கேள்வி: உங்களை தி.மு.க.வின் கைக்கூலி என்று விமர்சித்து சொல்லப்படுகிறதே?

    பதில்: டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் ஏற்பட்ட பிரிவுக்கு நான் தான் காரணம் என்று சொல்கிறார்கள். கைக்கூலி என்றும் சொல்கிறார்கள். டாக்டர் ராமதாசையும், அன்புமணியையும் பிரிப்பதற்கு எனது மனசாட்சி இடம் கொடுக்குமா? ஒன்றாக இணைக்கும் முயற்சியை 5 மாதமாக மேற்கொண்டேன். அது நடக்கவில்லை என்ற வருத்தம் இன்று வரை இருக்கிறது. அவர்கள் இருவரும் ஒன்றாக பேச வேண்டும் என்று நினைக்கிற முதல் ஆள் நான்தான். அவர்கள் இணைய தடையாக இருக்க மாட்டேன். கைக்கூலி என்று சொல்வதை கனத்த இதயத்துடன் தாங்கிக் கொண்டு வாழ்கிறேன் என்றார். 

    • தான் நிலைக்குலைந்து கண் கலங்கினாலும் கட்சியை வலிமையான சக்தியாக உருவாக்க ராமதாஸ் முயற்சித்து வருகிறார்.
    • அன்புமணி பிரிந்து சென்ற பிறகு ராமதாசுக்கு செல்வாக்கு கூடியுள்ளது.

    சேலம்:

    சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலத்தில் நாளை காலை 10 மணிக்கு பா.ம.க.வின் செயற்குழுவும், 11.30 மணிக்கு பொதுக்குழுவும் நடைபெற உள்ளது. தேர்தல் கூட்டணி குறித்து நிறுவனர் ராமதாஸ் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என தமிழகம் எதிர்பார்த்து உள்ளது.

    ராமதாசால் பா.ம.க.வில் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவியில் இருந்தும் அன்புமணி நீக்கப்பட்டுள்ளார். பா.ம.க.வை பிளவுபடுத்த அன்புமணி மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளாலும் ராமதாஸ் வேதனை அடைந்துள்ளார். அன்புமணியால் தூண்டிவிடப்பட்ட சிலரின் அவதூறு பேச்சால் நிறுவனர் நிலைகுலைந்து போயுள்ளார். சூழ்ச்சியால் பா.ம.க.வை அபகரிக்க பார்க்கிறார்கள்.

    தான் நிலைக்குலைந்து கண் கலங்கினாலும் கட்சியை வலிமையான சக்தியாக உருவாக்க ராமதாஸ் முயற்சித்து வருகிறார். கட்சியை வலிமையாக்க ராமதாஸ் எடுக்கும் முயற்சிகளை கண்டு ராமதாசை விட்டு அன்புமணியிடம் சென்ற நிர்வாகிகள் வேதனை அடைந்துள்ளனர். அவர்கள் மீண்டும் ராமதாஸ் உடன் வருவார்கள்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் அடையாளம் ராமதாஸ்தான். தற்போது ராமதாசுக்கு பெரிய சோதனை வந்துள்ளது. ஆனால் வரும் தேர்தலில் ராமதாஸ் சொல்பவர்களுக்குதான் பாட்டாளி மக்கள் வாக்களிப்பார்கள். ராமதாசின் நேற்றைய உருக்கமான பேச்சு அனைவருக்கும் வேதனை அளிக்கிறது. ராமதாசின் உருக்கமான பேச்சு வரும் தேர்தலில் வாக்காக மாறும். தேர்தல் கூட்டணி குறித்து மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து ராமதாஸ் கருத்து கேட்டுள்ளார். ராமதாஸ் அமைக்கும் கூட்டணிதான் வெற்றி கூட்டணி; அந்த கூட்டணிதான் ஆளுங்கட்சியாக ஆட்சியை பிடிக்கும்.

    என்னை கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. ராமதாசால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணியால் பா.ம.க.வில் இருந்து யாரையும் நீக்க முடியாது. தற்போது வரை கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை யாரிடமும் பேசவில்லை. பா.ம.க தனித்துப் போட்டி அல்ல. நிச்சயம் கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்திப்போம். கூட்டணியில் சேர 3 பக்கம் இருந்து ராமதாசுக்கு அழைப்பு வந்துள்ளது.

    அன்புமணியை நம்பவில்லை; பொதுநலத்துடன் செயல்படும் ராமதாசை தான் நம்புகிறார்கள். பா.ம.க.வின் செயற்குழுவை நடத்தக் கூடாது என சொல்ல அன்புமணிக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் எந்த அதிகாரமும் இல்லை. அன்புமணியின் ஒவ்வொரு நடவடிக்கையும் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்துவதோடு அவரின் வளர்ச்சியையும் பாதிக்கும். ராமதாசை ஆதரிப்பவர்கள் மட்டும்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும்; ஆட்சி அமைக்க முடியும். அன்புமணிக்கு பின்னால் சில நிர்வாகிகள்தான் உள்ளார்களே தவிர பா.ம.க.வின் உண்மை தொண்டர்களோ, பொதுமக்களோ கிடையாது. அன்புமணி பிரிந்து சென்ற பிறகு ராமதாசுக்கு செல்வாக்கு கூடியுள்ளது. அன்புமணி உடன் உள்ள நிர்வாகிகள் மீண்டும் ராமதாஸ் பக்கம் வருவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அன்புமணிக்கு மத்திய இணை மந்திரி பொறுப்பு வாங்கிக் கொடுத்தது யார்?
    • முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி என தமிழகம் முழுவதும் எடுத்துக் கூறியது யார் என்றார் ஜி.கே.மணி.

    சேலம்:

    பா.ம.க.வில் இருந்து ஜி.கே.மணியை நீக்குவதாக அன்புமணி அதிரடி அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.

    இந்நிலையில், சேலத்தில் ஜி.கே.மணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    46 ஆண்டு காலம் நான் ராமதாசுடன் பயணிக்கிறேன். 25 ஆண்டு காலம் கட்சி தலைவராக இருந்திருக்கிறேன்.

    என்னை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை.

    கட்சியில் ஒருவரைச் சேர்க்கவும், நீக்குவதற்கான அதிகாரம் ராமதாசுக்கு மட்டுமே உள்ளது.

    பா.ம.க.வில் சேர வேண்டும் என்று அன்புமணி நினைத்தால், ராமதாசை நேரில் சென்று பார்க்க வேண்டும். அவர் சேர்த்துக் கொண்டால் கட்சியில் இருங்கள்.

    அன்புமணியை அரசியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று சண்டை போட்டு வாதாடியவன் நான்.

    அன்புமணிக்கு மத்திய இணை மந்திரி பொறுப்பு வாங்கிக் கொடுத்தது யார்? கொஞ்சம்கூட மனசாட்சி வேண்டாமா?.

    பா.ம.க. என்ற ஆலமரம் ராமதாஸ்தான். தற்போது ராமதாஸ் கை ஓங்கிக் கொண்டிருக்கிறது.

    எந்தக் கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. கூட்டணி குறித்து ராமதாஸ் நல்ல செய்தியை அறிவிப்பார் என தெரிவித்தார்.

    • பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் கூடி விவாதித்தது.
    • கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜி.கே.மணி பாட்டாளி மக்கள் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்.

    சென்னை:

    பா.ம.க.வில் அந்த கட்சியின் நிறுவன தலைவரான டாக்டர் ராமதசுக்கும், அவரது மகனான அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் நீடித்து வருகிறது.

    இருவரும் தனித்தனியாக பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரிலேயே செயல்பட்டு வருகிறார்கள். டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இருந்தபடியும், அன்புமணி சென்னையில் இருந்தபடியும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    இப்படி இரு பிரிவாக பா.ம.க. செயல்பட்டு வரும் நிலையில், தற்போது உள்கட்சி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

    டாக்டர் ராமதாசின் தீவிர ஆதரவாளராக இருந்து வரும் ஜி.கே.மணி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் அன்புமணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

    எனது மீது அன்புமணி கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை எனவும், ஜி.கே.மணி கூறி இருந்தார்.

    இந்த நிலையில் ஜி.கே.மணியை பா.ம.க.வில் இருந்து நீக்குவதாக அன்பு மணி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருவதால், அதற்காக கட்சியின் அமைப்பு விதி 30-ன்படி அடிப்படை உறுப்பினரில் இருந்து அவரை ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவால் கடந்த 18-ந் தேதி அறிவிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

    அவருக்கு அளிக்கப்பட்ட காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ஜி.கே.மணியிடம் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை. அதைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் கூடி இது குறித்து விவாதித்தது.

    கட்சி விரோத செயல்பாடுகள் குறித்து ஜி.கே.மணி எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், கட்சியின் அமைப்பு விதி 30-ன்படி அடிப்படை உறுப்பினரிலிருந்து அவரை நீக்கலாம் என்று கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாசுக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரைத்தது. அதை ஏற்று ஜி.கே.மணி பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து இன்று (26-ந் தேதி) வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்படுவதாக கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜி.கே.மணி பாட்டாளி மக்கள் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • டாக்டர் ராமதாஸ் பொதுக்குழு மற்றும் செயற்குழுவை நடத்த அதிகாரமில்லை என்பது எவ்வளவு அநாகரீகமானது.
    • செயற்குழு, பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி சரியாக நடக்கும்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 29-ந்தேதி சேலத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கு பா.ம.க. பெயரில் அனுமதி வழங்கக் கூடாது என அன்புமணி தரப்பினர் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    இந்த நிலையில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * வருகிற 29-ந்தேதி சேலத்தில் பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.

    * தமிழ்நாடு, புதுச்சேரி மாநில கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    * செயற்குழு, பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி சரியாக நடக்கும்.

    * 2026 சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார் என்று மாநில அளவிலும், தேசிய அளவிலும் பார்க்கப்படுகிற முக்கியமான கூட்டமாக கருதப்படுகிறது.

    * கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம்.

    * டாக்டர் ராமதாஸை கொச்சைப்படுத்தாதீர்கள். அவமானப்படுத்தாதீர்கள். அவர்கள் வேதனைப்படுகிறார். கண் கலங்குகிறார். அதோடு வேகமாகிறார். நீங்கள் பேச பேச மக்கள் மத்தியில் டாக்டர் ராமதாஸ் வலிமை அதிகரித்து வருகிறது.

    * டாக்டர் ராமதாஸ் பொதுக்குழு மற்றும் செயற்குழுவை நடத்த அதிகாரமில்லை என்பது எவ்வளவு அநாகரீகமானது. வெட்கக்கேடானது. வன்மையாக கண்டிக்கிறேன்.

    இவ்வாறு ஜி.கே. மணி தெரிவித்தார்.

    • முதலில் பரபரப்பை ஏற்படுத்தினாலும் நாளடைவில் சரியாகிவிடும் என்றுதான் நினைத்தார்கள் பலரும்.
    • ராமதாஸை சிலர் ஆட்டிவைப்பதாகவும் துரோகிகள் சிலர் உடன் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

    தமிழக அரசியலில் தந்தை, மகன் இணைந்து பணியாற்றுகிறார்கள். அது கட்சிகள் என்று தெரியுமா? என்று கேட்டால், அனைவரும் சொல்வது தி.மு.க., பா.ம.க. என்று... தந்தையின் சொல்படி கேட்டு கட்சியில் பணியாற்றி வருகிறார்கள் என்று கூறப்பட்டது. அதன்படி, மு.க.ஸ்டாலின், தி.மு.க.வில் இணைந்து தொண்டர், செயலாளர், இளைரஞரணி தலைவர், மேயர், துணை முதலமைச்சர் என பணியாற்றி தற்போது முதலமைச்சராக உள்ளார்.

    அன்புமணி ராமதாஸ், பா.ம.க.வில் இணைந்தவுடன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்று பின்னர் கட்சியின் தலைவராக பணியாற்றி வருகிறார்.

    இப்படி இருக்கும் நிலையில், தி.மு.க.வில் தந்தைக்கு பிறகு கட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார் மு.க.ஸ்டாலின். ஆனால் பா.ம.க.விலோ கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் தந்தை- மகனுக்கும் ஏற்பட்ட கருத்து மோதல் முதலில் பரபரப்பை ஏற்படுத்தினாலும் நாளடைவில் சரியாகிவிடும் என்றுதான் நினைத்தார்கள் பலரும். ஆனால், அந்த மோதலோ ஓராண்டாக நீடித்து வருகிறது.

     

    ராமதாஸின் மகள் வழி பேரனான முகுந்தனை பா.ம.க. இளைஞரணி செயலாளராக நியமிப்பதில் தொடங்கிய அதிகாரப் போட்டி தற்போது கட்சி யாருக்கு சொந்தமானது? என்று வரை சென்றுள்ளது.

    மேலும் அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவதும் என போட்டாபோட்டியாக தொடங்கி தைலாபுரம், பனையூர் என மாற்றி மாற்றி அறிக்கைகள் வந்தன. இதனிடையே, இருதரப்பினரும் போட்டிபோட்டு பொதுக்குழுவை கூட்டினார்கள்.

    கட்சி நிர்வாகிகள் நியமனம், வேட்பாளர் தேர்வு, கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் போன்ற முக்கிய முடிவுகளில் இருவரின் அதிகாரப் போட்டியே இந்த மோதலின் அடிப்படை என்று கூறப்பட்டது. ஆனால் அன்புமணியோ, ராமதாஸை சிலர் ஆட்டிவைப்பதாகவும் துரோகிகள் சிலர் உடன் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார். வேவு பார்க்க டெலிபோனில் ஓட்டுகேட்பு கருவி வைக்கப்பட்டது என்றும் அது அன்புமணியின் வேலை தான் என்று ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

     

    தந்தை, மகனுக்கான மோதலால் கட்சி நிர்வாகிகள் மட்டுமில்லாமல் அதிமுக போன்ற கூட்டணிக் கட்சிகள் பாமகவுடன் கூட்டணி அமைப்பதில் குழப்பத்தில் உள்ளன. யாரை அணுகுவது எனத் தெரியாமல் தவிக்கின்றன.

    இந்த மோதல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கு முன்பாக தீர்க்கப்படாவிட்டால், கட்சியின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றன. 

    • கட்சியில் இருந்த மூத்தவர்களை கடுமையாக அவமானப்படுத்தியவர் அன்புமணி.
    • துரோகிகள் என அன்புமணி கருதும் அனைவரும் கட்சியை விட்டு வெளியேற தயார்.

    சென்னை:

    துரோகிகள் இருக்கும் வரை ஒன்றிணைய முடியாது என அன்புமணி கூறியிருந்தார். இதற்கு, ராமதாசும், அன்புமணியும் ஒன்றாக இணைவார்கள் எனில் கட்சியை விட்டு வெளியேற தயார் என்று ஜி.கே. மணி கூறியுள்ளார்.

    செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.கே.மணி கூறியிருப்பதாவது:-

    * பா.ம.க. நிறுவனர் ராமதாஸை கொல்லுங்கள் என பதிவிட்டவரை கூப்பிட்டு அன்புமணி பாராட்டினார்.

    * ராமதாசுடன் இருப்பவர்களை துரோகி என அன்புமணி அவமானப்படுத்துகிறார்.

    * கட்சியில் இருந்த மூத்தவர்களை கடுமையாக அவமானப்படுத்தியவர் அன்புமணி.

    * அ.தி.மு.க. பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமியைக் கூட மிக கடுமையாக அன்புமணி விமர்சித்தார்.

    * வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை கெடுத்தது நான்தான் என்றும் அன்புமணி அவதூறாக பேசினார்.

    * ஆட்சி மாற்றம் காரணமாக 10.5 சதவீத இடஒதுக்கீடு கிடைக்காமல் போனதற்கு நான் எப்படி காரணமானேன்.

    * ராமதாசும், அன்புமணியும் ஒன்றாக இணைவார்கள் எனில் கட்சியை விட்டு வெளியேறத் தயார். நானும் எனது குடும்பத்தினரும் கட்சியை விட்டு வெளியேற தயார்.

    * ராமதாஸ், அன்புமணி இணைவதற்காக பா.ம.க.விலிருந்து விலகுவதுடன் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்யவும் தயார்.

    * துரோகிகள் என அன்புமணி கருதும் அனைவரும் கட்சியை விட்டு வெளியேறத் தயார் என்று கூறினார். 

    • அன்புமணிக்கு நான் ஒரு போதும் துரோகம் செய்யவில்லை.
    • அன்புமணிக்கு தேர்தலில் சீட் அளிக்க வேண்டும் என பேசியது நான் தான்.

    சென்னை:

    பா.ம.க.வில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் அன்புமணி மட்டுமே என செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.கே. மணி குற்றம்சாட்டினார். மேலும் அவர், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    ஜி.கே.மணி கூறியதாவது:-

    * அன்புமணியை இளம் வயதில் மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.

    * அன்புமணி மத்திய அமைச்சராக கூடாது என உறுதியாக இருந்தவர் ஜெ.குரு.

    * அன்புமணியின் செயல்பாடுகளால் கண்ணீர் வடித்தார் ராமதாஸ்.

    * ராமதாஸ் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அன்புமணி பேசியிருக்கிறார். அன்புமணி மனசாட்சியோடு பேச வேண்டும்.

    * அன்புமணியால் பா.ம.க.வுக்கு ஏற்பட்ட சோதனை, நெருக்கடி சொல்லி மாளாது.

    * என் அப்பாவுக்கு அடுத்ததாக உங்களை நினைக்கிறேன் என கூறியவர் அன்புமணி.

    * பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள பிளவிற்கு நான் காரணம் என பேசியிருக்கிறார் அன்புமணி.

    * பா.ம.க.வில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் அன்புமணி மட்டுமே.

    * மனதளவில் கூட துரோகம் நினைக்காத என்னை துரோகி என்று அன்புமணி பேசுகிறார். இது மிகவும் வருத்தமாக உள்ளது.

    * அன்புமணிக்கு நான் ஒரு போதும் துரோகம் செய்யவில்லை.

    * அன்புமணிக்கு தேர்தலில் சீட் அளிக்க வேண்டும் என பேசியது நான் தான்.

    * அன்புமணியை மத்திய அமைச்சராக வேண்டும் என ராமதாசிடம் பேசினேன்.

    * மாவட்டந்தோறும் அன்புமணியை அழைத்து சென்று அறிமுகப்படுத்தினேன்.

    * தந்தையையும், மகனையும் பிரித்து விட்டதாக மனசாட்சி இல்லாமல் அன்புமணி பேசுகிறார்.

    இவ்வாறு ஜி.கே.மணி பேசினார். 

    • அன்புமணி தரப்பில் கொடுக்கப்பட்ட ஆவணங்களை ஏற்று அவரை பா.ம.க. தலைவராக தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
    • வருகிற ஆகஸ்டு மாதம் வரை அவரது தலைவர் பதவி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், டாக்டர் அன்புமணிக்கும் மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில் டாக்டர் அன்புமணி தரப்பில் கொடுக்கப்பட்ட ஆவணங்களை ஏற்று அவரை பா.ம.க. தலைவராக தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. வருகிற ஆகஸ்டு மாதம் வரை அவரது தலைவர் பதவி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் டாக்டர் அன்புமணி மீது டெல்லி போலீசில் டாக்டர் ராமதாஸ் சார்பாக ஜி.கே.மணி இன்று புகார் செய்துள்ளார். அந்த புகாரில், "தேர்தல் ஆணையத்திடம் போலி ஆவணங்களை அளித்து டாக்டர் அன்புமணி மோசடி செய்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

    • பா.ம.க.வில் உள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
    • ராமதாசுக்கு சோதனை ஏற்பட்டுள்ளது. நாங்கள் வேதனையில் உள்ளோம்.

    சட்டசபை வளாகத்தில் அன்புமணி தரப்பு 3 எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்திய நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, அருள் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து முறையிட்டுள்ளனர்.

    அப்போது, சட்டசபை குழு தலைவர், கொறடா பொறுப்புகளில் இருந்து தங்களை நீக்கக்கூடாது என சபாநாயகரிடம் வலியுறுத்தி உள்ளனர்.

    பா.ம.க. சட்டசபை குழு தலைவர், கொறடாவாக தாங்களே தொடர்வதாக ஜி.கே.மணியும் அருளும் சபாநாயகரிடம் முறையிட்டனர்.

    இதையடுத்து பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * பா.ம.க.வில் உள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டும். ஒற்றுமையாக இருந்தால் தான் பா.ம.க.வுக்கு வாழ்வு.

    * பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் காலத்திலேயே பா.ம.க.வுக்கு இப்படி ஒரு நிலை வந்தது வேதனையாக உள்ளது.

    * ராமதாசுக்கு சோதனை ஏற்பட்டுள்ளது. நாங்கள் வேதனையில் உள்ளோம்.

    * ராமதாசுக்கு தான் முழு அதிகாரம் இருக்கிறது. அவரது வழியில் நாங்கள் பயணிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைவரும் மதிக்கக்கூடிய தலைவர் ராமதாஸ்.
    • சமூக நீதி என்றால் ராமதாஸ் அவர்கள் என்கிற அடையாளம் நாடு முழுவதும் இருக்கிறது.

    திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி கூறியதாவது:-

    ராமதாஸ் அவர்கள் ஐசியுவில் இல்லை. இன்னும் சொல்லப்போனால், ஆஞ்சியோகிராம் செய்யும்போது கூட அவருக்கு மயக்க மருத்து செலுத்தவில்லை. ஐயாவிடம், உங்களது இதயம் எப்படி துடிக்கிறது என்று பாருங்கள் என்று மருத்துவர்கள் கூறினர்.

    அவரும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். அதனால், அவர் ஐசியுவில் இல்லை. அனைவரும் மதிக்கக்கூடிய தலைவர் ராமதாஸ் என்பதால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பிற மாநில தலைவர்களும், தேசிய தலைவர்களும் நலம் விசாரித்தனர்.

    பெரும்பாலான தலைவர்கள் நேரில் வந்து நலம் விசாரித்தனர். வர முடியாதவர்கள் போனில் பேசி நலம் விசாரித்தனர்.

    சமூக நீதி என்றால் ராமதாஸ் அவர்கள் என்கிற அடையாளம் நாடு முழுவதும் இருக்கிறது.

    அதனால், யாரையும் மருத்துவமனைக்கு வந்து ராமதாஸ் அவர்களை பார்க்கும்படி வற்புறுத்தவில்லை. இது அன்புமணி கூறும் அபாண்டமா பொய். இவ்வாறு கூறுவது தேவையற்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அன்புமணி ராமதாஸ் பத்திரிகைகளுக்கு கொடுக்கும் அறிக்கையில் நம்பர் 10, திலக் தெரு, தி.நகர் என்றுதான் இருக்கும்.
    • டாக்டர் ராமதாஸ் ஒப்புதலுடன் வழங்கப்பட்ட உறுப்பினர் கார்டிலும் தி.நகர் முகவரிதான் இருக்கும்.

    பாமக நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ராமதாஸ்தான். அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. அவர் எப்படி செயற்குழுவை கூட்ட முடியும். மாமல்லபுரத்தில் கூட்டிய கூட்டம் செல்லாது. தேர்தல் ஆணையம் தி.நகர் முகவரிக்கு கடிதம் அனுப்பியது, முகவரி மோசடி காரணமாக என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, அன்புமணி மீது மோசடி குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

    அதற்கு அன்புமணி ஆதரவாளரான வழக்கறிஞர் பாலு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கறிஞர் பாலு கூறியதாவது:-

    முகவரி மோசடி என்கிறார். திடீரென்று நேற்றுதான் தெரிந்தது என்கிறார் ஜி.கே. மணி. 25 வருடம் கட்சியின் தலைவராக இருந்தவர். சட்டசபை மற்றும் பொது வெளியில் கட்சியாக பேசியவர். அவர் இப்படி அபாண்டமாக பேசுவது கவுரவ தலைவருக்கு கவுரவமா? என கேள்வி கேட்க விரும்புகிறேன்.

    அன்புமணி ராமதாஸ் தலைவராக 2022ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட பிறகு, ஜூன் 1ஆம் தேதி தி.நகருக்கு தலைமை அலுவலகத்தை மாற்ற தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் கொடுத்து விட்டோம். அதில் இருந்து தி.நகர் திலக் தெருதான் தலைமை அலுவலகமாக இருந்து வருகிறது.

    அன்புமணி ராமதாஸ் பத்திரிகைகளுக்கு கொடுக்கும் அறிக்கையில் நம்பர் 10, திலக் தெரு, தி.நகர் என்றுதான் இருக்கும். டாக்டர் ராமதாஸ் ஒப்புதலுடன் பாமக உறுப்பினர் கார்டு வழங்கப்பட்டது. அதற்கான பணி மேற்கொள்ளப்பட்டது. அதிலும் தி.நகர் முகவரிதான் இருக்கும்.

    தேர்தல் ஆணையம் சார்பில் பல வருடங்களாக தி.நகர் முகவரிக்குதான் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏதோ, நேற்றுதான் திடீரென தெரிந்தது போன்று, பதட்டமாகி விட்டோம் என்று சொல்கிறார். அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. அதில் அலுவலகம் முகவரியை மாற்றிவிட்டதாக கூறும் குற்றச்சாட்டும் ஒன்று. இது நேற்றைய செய்தி அல்ல. ஒரு பழைய செய்தி.

    அலுவலகம் மாற்றப்பட்டது எல்லோருக்கும் தெரியும். 63 நாட்டு முத்து நாய்க்கன் தெரு என்றால், தைலாபுரத்தில் உறுப்பினர் அட்டை சேர்க்கையின்போது ஜி.கே. மணி தூக்கிப் பிடித்த கார்டில் தைலாபுரம், விழுப்புரம் மாவட்டம் என ஏன் இருந்தது?. 63 நாட்டு முத்து நாய்க்கன் தெரு என இப்போது சொல்பவர், தைலாபுரம் என மாற்றி எப்படி செய்தி வெளியிட முடியும்.

    இவ்வாறு பாலு தெரிவித்தார்.

    ×