search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவர் தாக்குதல்"

    கழுத்தை நெரித்து இளம்பெண் கொலை செய்யப்பட்டார். கணவரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை அவனியாபுரம் குடிசை மாற்று குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 34). ஆட்டோ டிரைவரான இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சரவணனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கரகாட்ட கலைஞர் அர்ச்சனா தேவி (வயது 19) என்பவருக்கும் ஆட்டோ சவாரியின் போது பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இருவரும் நெருங்கி பழகவே திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மாத பெண் குழந்தை உள்ளது.

    திருமணமான பின்பு அர்ச்சனா தேவி அடிக்கடி கரகாட்டம் ஆட சென்று வந்தார். இது சரவணனுக்கு பிடிக்கவில்லை.

    மேலும் அர்ச்சனா தேவியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவும் அவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சரவணன், மனைவியை அரிவாளால் வெட்டியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தார். பின்னர் உடலை வீட்டின் கழிவறையில் பதுக்கி வைத்தார்.

    இந்த நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்க வில்லை. இதனால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்தது.

    தகவல் அறிந்த அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு, சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்றனர்.

    வீட்டின் கதவை பல முறை தட்டியும் எந்த பலனும் இல்லை. இதையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.


    அப்போது சரவணன் அங்கு அமர்ந்திருந்தார். கழிவறையில் அர்ச்சனா தேவியின் பிணம் கிடந்தது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சரவணனை கைது செய்தனர். இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நாகூர் அருகே கள்ளத்தொடர்பை மனைவி கண்டித்ததால் அவரை கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவரின் செயல் போலீசார் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூர் அருகே திருப்பயத்தாங்குடி பி.எஸ்.ஆர். காலனி தெருவை சேர்ந்தவர் பரசுராமன் (வயது 40). தொழிலாளி. இவருடைய மனைவி அனுராதா(30). இவர்களுக்கு விக்னேஷ் (14), ஆகாஷ்(7) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் அனுராதா தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அனுராதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் அனுராதா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பரசுராமனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், தனது மனைவி அனுராதாவை கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது உடலை தூக்கில் தொங்க விட்டதும், பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என நாடகமாடியதை பரசுராமன் ஒப்புக்கொண்டார்.

    பரசுராமனுக்கும் வேறொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதை மனைவி அனுராதா தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பரசுராமன், அனுராதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை தூக்கில் தொங்க விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி உள்ளார். மேற்கண்ட தகவல் போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.

    இதை தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பரசுராமனை போலீசார் கைது செய்தனர்.

    பெண் சாவில் திடீர் திருப்பமாக அவரது கணவரே கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சேலம் அருகே உல்லாசத்துக்கு மறுத்த மனைவியை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து மிதித்து கொன்ற கணவரின் செயல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள பள்ளிப்பட்டி, அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மாதேஸ் (வயது 27). கம்பி கட்டும் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு.

    இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் இரும்பாலை தளவாய்ப்பட்டியை சேர்ந்த வடிவேல்- பச்சியம்மாள் தம்பதியின் மகள் சசிகலா(23) என்பவருடன் திருமணம் நடந்தது.

    கடந்த ஆண்டு கர்ப்பமான சசிகலா 7-வது மாதத்தில் பிரசவத்திற்காக தனது தாய் வீட்டுக்கு சென்றார். 7 மாதங்களுக்கு முன்பு சசிகலா அறுவை சிகிச்சை மூலம் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் பூரண குணம் அடையும் வரை சசிகலா தனது கணவர் வீட்டுக்கு செல்லாமல் தொடர்ந்து தாய் வீட்டிலேயே வசித்து வந்தார்.

    நேற்று மாலை தளவாய்ப்பட்டியில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்த மாதேஸ் திடீரென கதவை பூட்டி சசிகலாவை கொடூரமாக கொலை செய்தார்.

    இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாதேஸ் தனது மனைவி சசிகலாவை ஏன்? எதற்காக கொலை செய்தார்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அதன் விபரம் வருமாறு:-

    மாதேஸ் தனது குழந்தையை பார்க்க வீட்டுக்கு வர இருப்பதாக நேற்று சசிகலாவிடம் தெரிவித்தார். இதையொட்டி அவருக்கு விருந்து அளிக்கும் வகையில் குடும்பத்தினர் இறைச்சி எடுத்து சமைத்து வைத்தனர்.

    நேற்று மாலையில் மாதேஸ் தளவாய்பட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் சசிகலா மற்றும் அவரது தாயார் பச்சியம்மாள் மற்றும் உறவினர்கள் இருந்தனர்.

    வீட்டிற்கு வந்த மாதேஸ், எனது குழந்தை எங்கே இருக்கிறது? என்ன பண்ணுகிறது? என கேட்டார். அதற்கு அவர்கள் குழந்தை வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறினார்கள்.

    இதையடுத்து மாதேஸ் வீட்டின் வெளியே போடப்பட்டிருந்த ஒரு நாற்காழியில் அமர்ந்திருந்தார். பின்னர் 5 நிமிடங்கள் கழித்து சசிகலாவிடம் சாப்பாடு போடுமாறு கூறினார். சரி என்று அவர் சொல்லிவிட்டு சாப்பாடு எடுப்பதற்காக சமையலறைக்கு போனார். அப்போது மாதேஸ் அவரது பின்னால் சென்றார்.

    இதனால் மாமியார் பச்சியம்மாள் மற்றும் உறவினர்கள் நிறைய நாட்கள் கழித்து மருமகன் வீட்டுக்கு வந்திருப்பதால் இடைஞ்சலாக இருக்கக்கூடாது என கருதி அவர்கள் அனைவரும் வீட்டின் வெளியே போய் உட்கார்த்திருந்தனர். கணவன், மனைவி இருவரும் வீட்டுக்குள் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டு இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தனர்.

    ஆனால் சசிகலாவின் பின்னால் சென்ற மாதேஸ் திடீரென கதவை உள் பக்கமாக தாழ்ப்பாள் போட்டு கதவை பூட்டினார். பின்னர் சசிகலாவை படுக்கை அறைக்குள் தள்ளி உல்லாசத்துக்கு வருமாறு வற்புறுத்தினார். அதற்கு சசிகலா மறுத்தார். தான் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுள்ளேன். அதனால் பூரண குணமடையும் வரை உல்லாசத்துக்கு வரமுடியாது என கூறினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மாதேஸ் என்கூட உல்லாசத்துக்கு வராததால் நீ உயிரோடு இருக்கக்கூடாது என தெரிவித்து சசிகலாவை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து மிதித்தார்.

    இதற்கிடையே வீட்டுக்குள் இருந்து ரொம்ப நேரமாக சத்தம் எதுவும் வராததால் சந்தேகம் அடைந்த பச்சியம்மாள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார். அங்கு மகளின் கழுத்தில் காலை வைத்து மாதேஸ் மிதித்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். அவர், எனது மகளை விட்டு விடு என கெஞ்சினார். ஆனாலும் மாதேஸ் கேட்கவில்லை. மிருக தனமாக காலால் மிதித்து, கழுத்தை இறுக்கினார்.

    உடனே பச்சியம்மாள் எனது மகளை கொலை செய்கிறான். யாராவது ஓடி வாருங்கன் என கூச்சல் போட்டார். ஆனால், அதற்குள் மாதேஸ், சசிகலாவை கொலை செய்து விட்டார்.

    உடனடியாக வீட்டின் வெளியே இருந்த உறவினர்கள் கதவை அடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். அங்கு படுக்கை அறையில் சசிகலா பிணமாக கிடந்தார். உடனே மாதேசை கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

    இவ்வாறு போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    கும்பகோணம் அருகே குடும்ப தகராறில் மனைவியை எரித்து கொல்ல முயன்ற கணவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதில் இருவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஏராகரம் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி பிரியா (வயது 25). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

    குழந்தை இல்லாததால் இளையராஜா வேதனை அடைந்து வந்தார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவும் கணவன்- மனைவி இடையே வழக்கம் போல் பிரச்சினை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கணவரை , பிரியா கண்டித்து பேசியதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற இளையராஜா, வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து திடீரென பிரியா உடலில் ஊற்றி தீ வைத்தார். இதில் உடல் முழுவதும் தீ பிடித்ததால் அவர் அலறி கூச்சல் போட்டார்.

    அப்போது பிரியா, திடீரென கணவரை கட்டி பிடித்ததால் இதில் அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

    இதனால் உடல் கருகி கிடந்த கணவன்- மனைவி இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கும்பகோணம் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் கழுத்தை அறுத்த தொழிலாளி தனது வயிற்றில் மதுபாட்டிலால் குத்தியதால் காயம் அடைந்தார்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோணுலாம்பள்ளம் அடுத்த திட்டசேரி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35), கூலி தொழிலாளி. இவரது மனைவி கொடியரசி (24). இவர்களுக்கு சிபாசினி (5), சந்தித் குமார் (3) ரேஷ்மா (1½) என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.

    செந்தில்குமாரின் எதிர் வீட்டில் பார்த்திபன் (26) என்ற வாலிபர் தனது தாய் லட்சுமியுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் பார்த்திபனுக்கும், கொடியரசிக்கும் இடையே பழக்கம் காரணமாக இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவர் செந்தில்குமாருக்கும், கொடியரசிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் புத்தாண்டு அன்று பார்த்திபன், தனது செல்போனில் கொடியரசிக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து பேசியதாக கூறப்படுகிறது. இதை பற்றி கேள்விப்பட்ட செந்தில்குமார் , மனைவியின் மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது செந்தில்குமாரை கண்டித்து கொடியரசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதனால் மனைவி மீது கடும் ஆத்திரத்தில் செந்தில்குமார் இருந்து வந்தார். தொடர்ந்து நிம்மதியில்லாமல் தவித்து வந்த அவர் , மனைவியை கொன்று விட முடிவு செய்தார். இன்று அதிகாலையில் செந்தில்குமார் கண் விழித்தார். அப்போது தூங்கி கொண்டிருந்த கொடியரசியை பார்த்து ஆத்திரம் அடைந்தார். உடனே வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கொடியரசி கழுத்தை அறுத்தார். இதில் ரத்தம் பீறிட்டு வெளியேறியதால் அவர் அலறி துடித்தார்.


    இதனால் மனைவி இறந்து விட்டால் தன்னை போலீசார் கைது செய்து விடுவார்களே என்று செந்தில்குமார் பயந்தார். உடனே அவர் மதுபாட்டிலால் தனது வயிற்றை கிழித்தார். இதில் அவரது குடல் சரிந்து ரத்தம் வெளியேறியது.

    இதற்கிடையே கொடியரசின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரையும், செந்தில்குமாரையும் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் செந்தில்குமார் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி திருப்பனந்தாள் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில் அருகே பணத் தகராறில் கர்ப்பிணி மனைவியை அடித்து கொலை செய்த கணவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    என்.ஜி.ஓ.காலனி:

    நாகர்கோவில் அருகே உள்ள என்.ஜி.ஓ. காலனி குஞ்சன்விளையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுபிதா (26).

    இந்த தம்பதிக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர். மேலும் சுபிதா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனால் அவர் அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து வந்தார்.

    சமீப காலமாக சுபிதாவுக்கும் கணவர் மணிகண்டனுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    கடந்த 23-ந்தேதி மணிகண்டன், தான் வைத்திருந்த ரூ.200-ஐ எடுத்ததாக கூறி மனைவி சுபிதாவிடம் தகராறில் ஈடுபட்டார். அவர் அதை மறுத்தபோதும் கர்ப்பிணி என்றும் பாராமல் சுபிதாவை சரமாரியாக அடித்து, உதைத்து உள்ளார். மேலும் காலாலும் அவரை உதைத்ததாக தெரிகிறது. அக்கம், பக்கத்தினர் மணிகண்டனை தடுத்து அவர்களை சமரசம் செய்து வைத்தனர். கணவர் தாக்கியதில் உடல் நலம் பாதிக்கப்பட்டாலும் சுபிதா ஆஸ்பத்திரிக்கு உடனே செல்லாமல் வீட்டிலேயே மருந்து எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் சுபிதாவுக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதால் அவர் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்த்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார்.

    டாக்டர்கள் சுபிதாவிடம் விசாரித்த போது கணவர் தாக்கியது பற்றி அவர் கூறினார். சுபிதாவின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்ததால் இதுபற்றி சுசீந்திரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசாரும் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சுபிதாவிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது நடந்த சம்பவங்களை சுபிதா கூறியதை தொடர்ந்து மணி கண்டன் மீது கர்ப்பிணி மனைவியை தாக்கியதாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதனால் பயந்துபோன சுபிதா ஆஸ்பத்திரியில் பாதியிலேயே சிகிச்சையை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். அதன் பிறகு அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் மீண்டும் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆனால் அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுபிதா நேற்று மாலை பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டு உள்ளது. சுபிதா மரணமடைந்ததால் அவரது கணவர் மணிகண்டன் மீது போலீசார் கொலை வழக்குபதிவு செய்து உள்ளனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள மணிகண்டனை கைது செய்ய 2 போலீஸ் தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படைகள் அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். சுபிதாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    போலீசாரால் தேடப்படும் மணிகண்டன் மீது அவரது தாயை தற்கொலைக்கு தூண்டியதாக ஏற்கனவே வழக்கு உள்ளது. மணிகண்டன் தனது தாய் பேபியிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு செய்து உள்ளார். அப்போது அவரை பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் சரமாரியாக மணிகண்டன் தாக்கி உள்ளார். இதனால் மனவேதனை அடைந்த பேபி தனது வீட்டின் முன்பு நடுரோட்டில் வைத்து உடலில் மண்எண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றிய வழக்கில் மணிகண்டனை போலீசார் தேடி வந்த நிலையில்தான் மனைவியை அடித்து கொன்ற வழக்கும் அவர் மீது பதிவாகி உள்ளது. தற்போது ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நேரத்தில் மணிகண்டனின் தாய் பேபி, மனைவி சுபிதா ஆகியோர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருப்பது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மணிகண்டன்-சுபிதா தம்பதிக்கு 5 வயதிலும், 1¾ வயதிலும் 2 பெண் குழந்தைகள் உள்ளது. மணிகண்டன் தாக்கியதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சுபிதா இறந்து விட்டார். போலீசார் தேடுவதால் மணிகண்டன் தலைமறைவாகி விட்டார். ஆதரவாக இருந்த பாட்டி பேபியும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த 2 குழந்தைகளும் தற்போது தவித்தபடி உள்ளன. 

    நாகர்கோவிலில் கள்ளக்காதலனுடன் ஓடிய இளம்பெண்ணை அடித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

    நாகர்கோவில்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி மஞ்சுளா (வயது 19). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    மஞ்சுளாவுக்கும், அவரது எதிர் வீட்டில் வசித்த ஜோதி என்ற வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அங்கு அவர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இதையறிந்த மஞ்சுளாவின் கணவர் மணிகண்டனும், உறவினர்களும் கள்ளக் காதலர்களை கண்டித்தனர்.

    இதனால் கள்ளக்காதலர்கள் அடிக்கடி சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மஞ்சுளாவும், ஜோதியும் வீட்டை விட்டு வெளியேறி குமரி மாவட்டம் வந்தனர். கன்னியாகுமரி அருகே உள்ள செங்கல்சூளையில் வேலை பார்த்து கணவன்-மனைவி போல் வாழ்ந்தனர்.

    மஞ்சுளா மாயமானதால் மணிகண்டன் அவரை தேடி அலைந்தார். அவர் மாயமானது பற்றி போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார். பின்னர் மஞ்சுளா கன்னியாகுமரியில் இருப்பதை அறிந்து மணிகண்டன் இங்கு தேடி வந்தார். உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி மஞ்சுளாவை ஊருக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு சிறிது காலம் மணிகண்டனுடன் வாழ்ந்த மஞ்சுளா கடந்த 15 நாட்களுக்கு முன்பு மீண்டும் காதலன் ஜோதியுடன் கன்னியாகுமரிக்கு ஓடி வந்தார். குழந்தைகள் நலன் கருதி மணிகண்டன், மஞ்சுளாவை தேடி கன்னியாகுமரிக்கு வந்தார். மஞ்சுளாவிடம் பேசி அவரை ஊருக்கு அழைத்து செல்ல தயாரானார்.

    ஊருக்கு செல்வதற்காக மஞ்சுளாவும், மணிகண்டனும் நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்தனர். அவர்களுடன் கள்ளக் காதலன் ஜோதியும் சென்றார். ரெயில் நிலையத்தில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக மணிகண்டனுக்கும், மஞ்சுளாவுக்கும் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மணிகண்டன், கல்லை எடுத்து மஞ்சுளா தலையில் ஓங்கி அடித்தார். இதில் மஞ்சுளாவின் தலையில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்து விழுந்தார்.

    அந்த பகுதியில் நின்றவர்கள் மஞ்சுளாவை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மஞ்சுளா இன்று காலை இறந்தார்.

    மஞ்சுளா தாக்கப்பட்டது தொடர்பாக ஏற்கனவே அவரது கள்ளக்காதலன் ஜோதி, கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார். அதன்பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்திருந்தனர். தற்போது மஞ்சுளா இறந்து விட்டதால் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு உள்ளது.

    வள்ளியூர் அருகே மது குடிப்பதை தட்டிக்கேட்டதால் பெண்ணை அடித்து கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் கலையரங்க தெருவை சேர்ந்தவர் நம்பி, கூலித்தொழிலாளி. இவரது மனைவி பேச்சியம்மாள் (வயது 37). நம்பிக்கு குடிப்பழக்கம் உள்ளது. தினமும் அவர் வேலைக்கு சென்றுவிட்டு மதுகுடித்தபடி வீட்டுக்கு வருவார். வீட்டில் மனைவி, குழந்தைகளிடம் போதையில் தகராறு செய்துவந்தார்.

    மேலும் வேலை செய்து கிடைக்கும் சம்பள பணத்தை வீட்டிற்கு சரிவர கொடுப்பதில்லையாம். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நம்பி மது குடித்துவிட்டு வரும்போதெல்லாம் பேச்சியம்மாள் கண்டித்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவு நம்பி வழக்கம்போல் குடித்துவிட்டு வந்தார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் படுத்து தூங்கி விட்டனர்.

    நள்ளிரவு திடீரென விழித்த நம்பி ஆத்திரத்தில் அங்கு கிடந்த கம்பை எடுத்து மனைவி பேச்சியம்மாளை சரமாரியாக தாக்கினார். இதில் பேச்சியம்மாளின் முகம் சிதைந்தது.

    பலத்த காயம் அடைந்த பேச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். உடனே நம்பி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி வள்ளியூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொலை செய்யப்பட்ட பேச்சியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளி நம்பியை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் வள்ளியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வரதட்சணை கேட்டு மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவனை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 32). இவர் வானூர் அருகே உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அதே கம்பெனியில் புதுவை கூடப்பாக்கத்தை சேர்ந்த சவீதா (25) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

    வெங்கடேசுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது. அதனை மறைத்து, சவீதாவை காதலித்து 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதனை அறிந்த வெங்கடேசின் முதல் மனைவி கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். வெங்கடேஷ் தனது 2-வது மனைவி சவீதாவுடன் பூத்துறை காலனி பகுதியில் வசித்து வந்தார். இவர்களுக்கு 1 மகன், 2 மகள்கள் உள்ளனர்.

    வெங்கடேஷ் தனது மனைவி சவீதாவிடம் உன் வீட்டில் இருந்து எனக்கு வரதட்சணையாக பணம், நகை வாங்கிகொடு. இல்லை என்றால் உன்னை விவாகரத்து செய்துவிடுவேன் என கூறிவந்தார். இதற்கு சவீதா எங்கள் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கிதர முடியாது என்றார். இதனால் கணவன்-மனை விக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு வெங்கடேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மாமியார் வீடான புதுவை கூடப்பாக்கத்துக்கு சென்றார். அங்கு வைத்து மாமியார் செல்லம்மாளிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். பின்னர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பூத்துறைக்கு வந்தார்.

    அப்போது கணவன்- மனைவிக் கிடையே வரதட்சணை பணம் சம்பந்தமாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வெங்கடேஷ் ஆத்திரமடைந்து சவீதாவை கட்டையால் தாக்கினார். பின்னர் சிலிண்டர் பைப்பை எடுத்து சவீதாவின் கழுத்தை நெரித்தார். இதில் மூச்சுத்திணறி சவீதா பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து தடயங்களை மறைப்பதற்காக வீட்டில் படிந்திருந்த ரத்தக் கறைகளை வெங்கடேஷ் சுத்தப்படுத்தினார். சவீதா அணிந்திருந்த புடவையை அப்புறப்படுத்தி வேறு புடவையை சவீதாவுக்கு கட்டினார்.

    சவீதாவின் தாய் செல்லம்மாளுக்கு போன் செய்து உங்கள் மகள் தூக்குபோட்டு தற் கொலை செய்து கொண்டார். என கூறி போனை துண்டித்தார். பின்னர் வீட்டில் இருந்து வெங்கடேஷ் தப்பி ஓடிவிட்டார்.

    தகவல் கேட்டு செல்லம்மாள் மற்றும் உறவினர்கள் அலறியடித்துக் கொண்டு பூத்துறைக்கு வந்தனர். அங்கு சவீதா பிணமாக கிடந்ததை பார்த்து கதறி அழுதனர்.

    இதுகுறித்து வானூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த சவீதாவின் உடலை பார்வையிட்டு வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து சவீதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை சம்பவம் குறித்து சவீதாவின் தாய் செல்லம்மாள் வானூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய வெங்கடேசை தேடிவருகின்றனர்.


    இந்த நிலையில் இன்று காலை செல்லம்மாள் தனது உறவினர்களுடன் வானூர் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். சவீதாவை கொலை செய்த வெங்கடேசை உடனே கைது செய்யக் கோரி கோ‌ஷம் எழுப்பினர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் எழிலரசி சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திண்டுக்கல் அருகே காதல் மனைவியை தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே சிறுமலை அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராமையா (வயது 23). இவருக்கும் அம்மைய நாயக்கனூரைச் சேர்ந்த ரேணுகா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    ராமையா சரக்கு வேன் ஓட்டி வருகிறார். ரேணுகாவுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். மீண்டும் அவரை அழைத்துக் கொண்டு சரக்கு வேனில் ராமையா சிறுமலைக்கு வந்து கொண்டு இருந்தார்.

    சிறுமலை பழையூர் பகுதியில் வேனை நிறுத்தி விட்டு காட்டு பகுதிக்குள் கணவன், மனைவி சென்றுள்ளனர்.

    அப்போது ரேணுகாவின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். மேலும் அவரது சேலையை மரத்தில் கட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது போல் தொங்க விட்டுள்ளார்.

    இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. புறநகர் டி.எஸ்.பி. கோபால் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயந்திரன் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் தப்பி ஓடிய கணவர் ராமையாவை தேடி வருகின்றனர். ராமையாவிடம் விசாரணை நடத்திய பிறகுதான் கொலைக்கான உண்மை நிலவரம் வெளிவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    அசாம் மாநிலத்தில் கோர்ட் வளாகத்தில் எதிர் சாட்சி சொல்ல வந்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #ManKillsWife #MurderInAssamCourt
    திப்ருகர்:

    அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூர்ண நகார் தேகா. இவர் தனது 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக மனைவி ரீட்டா நகார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூர்ண நகார் தேகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். சமீபத்தில் ஜாமீன் பெற்ற பூர்ண நகார், திப்ருகர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வருகிறார்.

    இந்நிலையில், திப்ருகர் நீதிமன்றத்தில் இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட் பூர்ண நகார் மற்றும் அவருக்கு எதிராக சாட்சி அளிப்பதற்காக அவரது மனைவி ரீட்டா ஆகியோர் தனித்தனியாக கோர்ட்டுக்கு வந்தனர். 

    ஆனால், விசாரணை தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக, திடீரென பூர்ண நகார் தன் மனைவி ரீட்டாவை கூர்மையான ஆயுதத்தால் தாக்கினார். இதில், ரீட்டாவின் கழுத்தில் வெட்டு விழுந்தது. ரத்தம் சொட்டச் சொட்ட அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்துவிட்டார். 

    மனைவியை கொலை செய்த பூர்ண நகாரை போலீசார் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், பொய் புகார் கொடுத்து வழக்கில் சிக்க வைத்ததால் மனைவியை கொலை செய்ததாகவும் கூறினார். #ManKillsWife #MurderInAssamCourt
    செங்குன்றத்தில் பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர்களை தட்டிக்கேட்ட கணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    செங்குன்றம்:

    செங்குன்றத்தை அடுத்த எடப்பாளையம் பாரதியார் தெருவில் 39 வயது இளம்பெண் கணவருடன் வசித்து வருகிறார். நேற்று மாலை இளம்பெண் வீட்டின் வெளியே உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார்.

    இவர்களது வீட்டின் அருகே பாழடைந்த ஒரு வீடு உள்ளது. அங்கு 6 வாலிபர்கள் இருந்தனர். குளியலறையில் சத்தம் கேட்டு 6 வாலிபர்களும் இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் தாங்கள் வைத்திருந்த செல்போனில் அந்த பெண் குளிப்பதை வீடியோ எடுத்தனர். சத்தம்கேட்டு வீட்டில் இருந்து வெளியே வந்த இளம்பெண்ணின் கணவர் வாலிபர்களை கண்டித்தார். இதில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் இளம்பெண்ணின் கணவரை சரமாரியாக தாக்கி தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து செங்குன்றம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அதே பகுதியை சேர்ந்த நரேஷ், ஷியாம், முரளி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குபதிவு செய்து தேடிவருகிறார்கள். தாக்குதலில் காயம் அடைந்த இளம்பெண்ணின் கணவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    ×