search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவில் அருகே கர்ப்பிணி அடித்து கொலை ஏன்? கணவரை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு
    X

    நாகர்கோவில் அருகே கர்ப்பிணி அடித்து கொலை ஏன்? கணவரை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு

    நாகர்கோவில் அருகே பணத் தகராறில் கர்ப்பிணி மனைவியை அடித்து கொலை செய்த கணவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    என்.ஜி.ஓ.காலனி:

    நாகர்கோவில் அருகே உள்ள என்.ஜி.ஓ. காலனி குஞ்சன்விளையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுபிதா (26).

    இந்த தம்பதிக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர். மேலும் சுபிதா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனால் அவர் அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து வந்தார்.

    சமீப காலமாக சுபிதாவுக்கும் கணவர் மணிகண்டனுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

    கடந்த 23-ந்தேதி மணிகண்டன், தான் வைத்திருந்த ரூ.200-ஐ எடுத்ததாக கூறி மனைவி சுபிதாவிடம் தகராறில் ஈடுபட்டார். அவர் அதை மறுத்தபோதும் கர்ப்பிணி என்றும் பாராமல் சுபிதாவை சரமாரியாக அடித்து, உதைத்து உள்ளார். மேலும் காலாலும் அவரை உதைத்ததாக தெரிகிறது. அக்கம், பக்கத்தினர் மணிகண்டனை தடுத்து அவர்களை சமரசம் செய்து வைத்தனர். கணவர் தாக்கியதில் உடல் நலம் பாதிக்கப்பட்டாலும் சுபிதா ஆஸ்பத்திரிக்கு உடனே செல்லாமல் வீட்டிலேயே மருந்து எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் சுபிதாவுக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டதால் அவர் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்த்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார்.

    டாக்டர்கள் சுபிதாவிடம் விசாரித்த போது கணவர் தாக்கியது பற்றி அவர் கூறினார். சுபிதாவின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்ததால் இதுபற்றி சுசீந்திரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசாரும் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சுபிதாவிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது நடந்த சம்பவங்களை சுபிதா கூறியதை தொடர்ந்து மணி கண்டன் மீது கர்ப்பிணி மனைவியை தாக்கியதாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதனால் பயந்துபோன சுபிதா ஆஸ்பத்திரியில் பாதியிலேயே சிகிச்சையை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். அதன் பிறகு அவரது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் மீண்டும் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். ஆனால் அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுபிதா நேற்று மாலை பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டு உள்ளது. சுபிதா மரணமடைந்ததால் அவரது கணவர் மணிகண்டன் மீது போலீசார் கொலை வழக்குபதிவு செய்து உள்ளனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள மணிகண்டனை கைது செய்ய 2 போலீஸ் தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படைகள் அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். சுபிதாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    போலீசாரால் தேடப்படும் மணிகண்டன் மீது அவரது தாயை தற்கொலைக்கு தூண்டியதாக ஏற்கனவே வழக்கு உள்ளது. மணிகண்டன் தனது தாய் பேபியிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு செய்து உள்ளார். அப்போது அவரை பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் சரமாரியாக மணிகண்டன் தாக்கி உள்ளார். இதனால் மனவேதனை அடைந்த பேபி தனது வீட்டின் முன்பு நடுரோட்டில் வைத்து உடலில் மண்எண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றிய வழக்கில் மணிகண்டனை போலீசார் தேடி வந்த நிலையில்தான் மனைவியை அடித்து கொன்ற வழக்கும் அவர் மீது பதிவாகி உள்ளது. தற்போது ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நேரத்தில் மணிகண்டனின் தாய் பேபி, மனைவி சுபிதா ஆகியோர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருப்பது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மணிகண்டன்-சுபிதா தம்பதிக்கு 5 வயதிலும், 1¾ வயதிலும் 2 பெண் குழந்தைகள் உள்ளது. மணிகண்டன் தாக்கியதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சுபிதா இறந்து விட்டார். போலீசார் தேடுவதால் மணிகண்டன் தலைமறைவாகி விட்டார். ஆதரவாக இருந்த பாட்டி பேபியும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அந்த 2 குழந்தைகளும் தற்போது தவித்தபடி உள்ளன. 

    Next Story
    ×