search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச பஸ்"

    • வருகிற 2029-ல் நாடாளு மன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை அமலுக்கு வரும்.
    • மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் முறையான தரமான கல்வி வழங்கப்படும்.

    திருப்பதி:

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தனது பிறந்த நாளை திருப்பதி அடுத்த கூடூரில் கொண்டாடினார்.

    ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அரசு பஸ்சில் பெண்களுக்கு இலவசமாக பயண திட்டம் அமல்படுத்தப்படும்.

    தகுதியுள்ள அனைத்து பெண் பயனாளிகளுக்கும் மாதந்தோறும் முதல் தேதியில் ரூ.4 ஆயிரம் வீட்டிலேயே நேரடியாக வழங்கப்படும். மகா சக்தி திட்டத்தின் மூலம் பெண்களை நாட்டிலேயே மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக மாற்றப்படுவார்கள். முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி சமூகத்தில் அனைத்து பிரிவினரையும் ஏமாற்றிவிட்டார்.

    வருகிற 2029-ல் நாடாளு மன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை அமலுக்கு வரும். அப்போது பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.

    தெலுங்கு தேசம் கட்சி எப்போதும் பெண்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் முறையான தரமான கல்வி வழங்கப்படும்.

    தனது ஆட்சியில் மஞ்சள், குங்குமம் திட்டத்தில் பெண்களுக்கு திருமண நிதி உதவியாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. மத்திய அமைச்சரவையில் பெண் ஒருவர்தான் நிதி அமைச்சராக இருக்கிறார். அதேபோல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பெண்கள் தான் நிதி அமைச்சர்.

    ஏழைகள் மற்றும் தெலுங்கு சமூகத்தின் மேம்பாட்டிற்காக எப்போதும் தனது நேரத்தை செலவிடுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பெண்கள் பேருந்து சேவைகளைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
    • திட்டம் மிகவும் முற்போக்கான எண்ணத்தோடு செயல்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    2021 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று, தமிழ்நாடு அரசு பெண்களுக்கான "கட்டணமில்லா அரசுபேருந்து" திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது ஜூலை 2021-இல் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டமானது பாராட்டுகளையும் விமர்சனங்களையும் சமமாக பெற்றுள்ளது. பெண்கள் அதை ஏற்றுக்கொண்டனர், வல்லுநர்கள் அதைப் பாராட்டினர், ஆனால் விமர்சனர்களோ பெண்களுக்கான இந்த 'இலவசம்' கடினமாக உழைக்கும் ஆண்களால் மட்டுமே சாத்தியமானது, இத்திட்டம் இயல்பாகவே நியாயமற்றது, பாரபட்சமானது, பெண்கள் இந்த திட்டத்தை உபயோகமில்லாமல் பயன்படுத்துகிறார்கள் என்று குறை கூறினர். சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்க்ஷன் குரூப் (CAG)பல ஆண்டுகளாக நிலையான போக்குவரத்து துறையில் பணியாற்றி வருகிறது. மேலும் தமிழ்நாட்டில், திட்டத்தின் தாக்கம் மற்றும் நிலையான பொது போக்குவரத்திற்கான அணுகலை இது எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை ஆய்வு செய்து உள்ளது. கட்டணமில்லா பேருந்து திட்டத்தால் பயனடைந்த 3000 பெண்களை சிஏஜி நேர்காணல் செய்தது. தமிழ்நாட்டின் சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் ஆகிய ஆறு நகரங்களில் இருந்து பல்வேறு வயது மற்றும் சமூக-பொருளாதாரப் பின்னணியைச் சேர்ந்த பெண்கள் நேர்காணல் செய்யப்பட்டனர்.

    இந்த ஆய்வின் மூலம், ஆறு நகரங்களிலும் கண்டறியப்பட்டவை:-

    ● இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, பெண்கள் பேருந்து சேவைகளைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தனர். இப்பெண்கள் ஏற்கனவே பேருந்து சேவையை வழக்கமாகப் பயன்படுத்திய நிலையில், இத்திட்டத்தின் விளைவாக ஷேர் ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்கள் போன்ற பிற போக்குவரத்து வகைகளைப் பயன்படுத்துவது குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    ● இந்த ஆய்வில், பெண்கள் ஒரு மாதத்தில் சுமார் 800 ரூபாய் சேமிப்பதால், அந்தப் பணம் வீட்டுத் தேவைகள், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றிற்குச் செலவழித்து, குடும்பம் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் சிறந்த பலன்களை ஏற்படுத்துகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

    ● ஆய்வில் இருந்து மற்றொரு முக்கிய கண்டுபிடிப்பு என்னவென்றால், அதிகமான பெண்கள் பொதுப் போக்குவரத்தை அணுகுவதும், பொது இடங்களில் காணப்படுவதும், இது பாலின நிலைப்பாடுகள் மற்றும் பெண்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளுக்கு தொடர்புடைய தடைகளை உடைக்க உதவியது என்பது தெரியவந்துள்ளது.

    பிப்ரவரி 20 ஆம் தேதி நடந்த நிகழ்வில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ், I.A.S இந்த அறிக்கையை வெளியிட்டார்.

    இந்த ஆய்வை வரவேற்ற டாக்டர். ஆல்பி ஜான், "இந்தத் திட்டம் பெண்களுக்குச் சிறந்த போக்குவரத்து வசதிகளை வழங்குகிறது, ஏனெனில் அவர்களில் பலர் சொந்த வாகனங்களை வைத்திருக்கவில்லை. அதிகமான பேருந்துகளின் தேவையை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், மேலும் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் மற்ற நகரங்களுக்கு இத்தேவையை பூர்த்தி செய்ய அரசு தற்போது செயல்பட்டு வருகிறது" என்றார்.

    சிஏஜியின் மூத்த ஆராய்ச்சியாளர் சுமனா நாராயணன், பெண்களுக்கு மட்டுமின்றி அவர்களின் முழு குடும்பத்திற்கும் இந்தத் திட்டத்தின் பொருளாதார நன்மைகளை எடுத்துரைத்தார். "இந்தத் திட்டம் பெண்களுக்கு சராசரியாக மாதம் 800 ரூபாய் சேமிக்க அனுமதித்துள்ளது. மேலும் அவர்கள் இந்த சேமிப்பை தங்கள் குடும்ப ஆரோக்கியம், கல்வி மற்றும் ஊட்டச்சத்துக்காக மறு முதலீடு செய்கிறார்கள். இது சமூகத்திற்கும் நாட்டிற்கும் நீண்டகால நன்மைகளை அளிக்கிறது, "என்று அவர் கூறினார். "கட்டணமில்லா பொது போக்குவரத்து திட்டமானது வரி செலுத்துவோரின் பணத்தால் மட்டுமே கட்டணமில்லா பேருந்து திட்டத்தில் இலவச டிக்கெட்டுகள் வழங்குவது சாத்தியம் என்று கருதாமல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பையும், மேலும் இந்தத் திட்டம் மூலம் சமூகத்தில் அனைத்து தரப்பினரின் உள்ளடக்கத்திற்கு அனுமதிக்கிறது."

    இந்தத் திட்டம் முதலில் அறிவிக்கப்பட்டபோது பேசப்பட்ட சில எதிர்மறைக் கருத்துக்களை சுமனா எடுத்துரைத்தார். "இந்தத் திட்டம் பெண்களை நோக்கமின்றி வீட்டை விட்டு வெளியேறவும், ஊர் சுத்தவும் ஊக்குவிக்கிறது என்று பொதுக் கருத்து உள்ளது. பெண்கள் இப்போது பொழுதுபோக்கிற்காகவும் தனிப்பட்ட நேரத்திற்காகவும் கோவில்கள், கடற்கரைகள் மற்றும் பூங்காக்களுக்கு செல்வதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். பெண்களுக்கும் அவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கு சில 'மீ டைம்' தேவை, இது ஒரு நேர்மறையாக பார்க்கப்பட வேண்டும்," என்று அவர் சுட்டிக்காட்டினார்.

    பசுமை போக்குவரத்து தீர்வுகளை மையமாக கொண்டு செயல்படும் ஆராய்ச்சி நிறுவனமான அர்பன் ஒர்க்ஸ் நிறுவனர் ஸ்ரேயா கடப்பள்ளி, அறிக்கை வெளியீட்டு குழுவின் ஒரு பகுதியாக இருந்தார்.

    "இந்தியாவில், ஆண்களில் 10ல் 8 பேர் வெளியே பணிபுரியும் பொழுது, பெண்களில் 10ல் 2 பேர் மட்டுமே வீட்டிற்கு வெளியே வேலை செய்கிறார்கள். இது போன்ற திட்டங்கள் தொழிலாளர் பணிக்குள் நுழைவதில் பெண்கள் எதிர்கொள்ளும் தடைகளை குறைக்கிறது," என்றார். "நீண்ட காலத்தில், பேருந்துகள் அனைவருக்கும் விருப்பமான போக்குவரத்து முறையாக இருக்க வேண்டும். அங்கு செல்வதற்கு, குடிமக்களுக்கு பேருந்து நிறுத்தங்களுக்கு எளிதான அணுகல் மற்றும் குறைந்த காத்திருப்பு நேரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.

    "இந்த திட்டம் மிகவும் முற்போக்கான எண்ணத்தோடு செயல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மேம்பட்ட நகரங்களுக்கு இணையாக பொதுப் போக்குவரத்தின் தரம் மற்றும் பேருந்து சேவைகளின் எண்ணிக்கை தன்மையில் வியத்தகு முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறோம்" என்று UNDPன் தலைமை மேம்பாட்டு இலக்கு நிபுணர் ராஜ் செருபால் கூறினார்.

    2021-22 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கொள்கையானது, கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் நோக்கம் பெண்களை சமூகத்தில் அதிக அளவில் செயல்படுவதை ஊக்குவிப்பதாகும் என்பதை வலியுறுத்துகிறது. பொது இடங்களில் பெண்களின் வெளிக்கொணர்தல் இந்தியாவில் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. அதிகமான பெண்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தினால், அது பொது இடங்களில் பெண்களின் இருப்பை அதிகரிக்க வழிவகுக்கும், இதன் விளைவாக, மக்கள்தொகையில் பாதி பேருக்கு அதிகத் தெரிவுநிலை ஏற்படும்.

    சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்க்ஷன் குரூப் (CAG) என்பது 38 வருடங்கள் பழமையான ஒரு இலாப நோக்கற்ற மற்றும் அரசியல் சார்பற்ற அமைப்பாகும், இது குடிமக்கள் உரிமைகள் மற்றும் நல்லாட்சிக்காக செயல்படுகிறது. அதன் முயற்சிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் கூட தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தாலும், சென்னையின் நுகர்வோர் மற்றும் குடிமக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக இது முதன்மையாக செயல்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • போலீசார் ஆட்டோ டிரைவைர் தேவாவை கைது செய்தனர்.

    திருப்பதி:

    தெலங்கானாவில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பஸ் பயண சேவை வழங்கப்படுகிறது.

    இந்த திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் மஹ்பூப்நகரை சேர்ந்த தேவா (வயது 45) குடிபோதையில் தனது ஆட்டோவுடன் முதல் மந்திரி முகாம் அலுவலகமான ஐதராபாத் பிரஜா பவனுக்கு வந்தார்.


    பின்னர் பெண்களுக்கான இலவச பஸ் பயணத்தால் எங்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

    இதனைத் தொடர்ந்து ஆட்டோவுக்கு திடீரென தீ வைத்தார். இதனை பார்த்த பிரஜா பவன் ஊழியர்கள் மற்றும் போலீசார், ஆட்டோவில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.

    இருப்பினும் தீ பரவியதில் ஆட்டோ முழுவதும் எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் ஆட்டோ டிரைவைர் தேவாவை கைது செய்தனர்.

    • சென்னை முழுவதும் 3000 பேரிடம் இந்த கருத்துக் கேட்பு நடத்தப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் தான் அதிகமான பெண் போலீஸ் நிலையங்களும் உள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளுமே ஆட்சிக்கு வரும்போது இலவச திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்த வகையில் இந்த முறை தி.மு.க. அரசு பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்ற புரட்சிகரமான திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இந்த முன்னோடி திட்டத்தை வட மாநிலங்களிலும் செயல்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்.

    இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் என்ன நினைக்கிறார்கள் சென்னை பெண்கள்? என்பதற்காக சென்னை மாநகராட்சி ஒரு ஆய்வை நடத்தி இருக்கிறது.

    சென்னை முழுவதும் 3000 பேரிடம் இந்த கருத்துக் கேட்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் 2432 பேர் பெண்கள், 568 பேர் ஆண்கள். நூறு பேர் திருநங்கைகள்.

    இவர்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் 89 சதவீத பெண்கள் போக்கு வரத்திற்கு அரசு பஸ்களை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். இவ்வாறு போக்குவரத்துக்கு அரசு பஸ்களை நம்பி இருக்கும் 89 சதவீத பெண்களில் 82 சதவீதம் பேர் அரசு வழங்கியிருக்கும் இலவச பஸ் பயணத்தின் மூலம் பெருமளவு பணம் மிச்சப்படுவதாக மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்கள்.

    அதில் 42 சதவீதம் பெண்கள் பஸ் பயணத்தின் போது பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாகவும் தெரிவித்துள்ளார்கள். இவர்களில் 35 சதவீதம் பெண்கள் கூறும் போது பஸ்சில் ஏறும் போதும், பஸ் நிறுத்தங்க ளில் பஸ்சுக்காக காத்தி ருக்கும் போதும் இந்த மாதிரி பாலியல் ரீதியி லான தொந்த ரவுகளை சந்திப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

    384 பெண்கள் பாலியல் தொந்தர வுகளை பஸ் பயணத்தின் போது சந்தித்திருப்பதாக கூறுகிறார்கள். அவர்களில் 62 சதவீதம் பேர் துணிச்ச லாக தட்டி கேட்டதாகவும் ஆனால் பொதுமக்கள் தரப்பில் ஒருவர் கூட உதவிக்கு முன் வரவில்லை என்றும் ஆதங்கப்பட்டனர்.

    ஆனால் இது பற்றி மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, பெண்களுக்கான பாதுகாப்பு வசதிகள் என்னென்ன இருக்கிறது என்பது பற்றி 62 சதவீத பெண்களுக்கு எதுவுமே தெரியவில்லை. 32 சதவீதம் பெண்களுக்கு மட்டுமே காவலன் செயலியை பற்றிய புரிதல் இருக்கிறது. 10 சதவீதம் பேர் பெண்களுக்கு உதவுவதற்கான பெண்கள் போலீஸ் ரோந்து வாகனத்தை பற்றி அறிந்திருக்கிறார்கள்.


    29 சதவீத பெண்கள் மாநகர பஸ்களில் அவசர உதவிக்கு வைக்கப்பட்டிருக்கும் பொத்தான் பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

    இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்டு மேயர் பிரியா கூறும் போது, பஸ் பயணம் செய்யும் பெண்கள் என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். உங்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று அறிந்து கொள்வதற்காகவே இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

    இதன் மூலம் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு பரிந்துரைகள் செய்யப்படும் அடிக்கடி பஸ்களை இயக்க வேண்டும் பெண்களுக்காகவே பஸ்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அவசரகால பொத்தான் பற்றிய விழிப்புணர்வை பெண் பயணிகளிடம் ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் 10 சதவீத பெண்கள் இதே போல் பாலியல் ரீதியான தொந்தரவுகள் பஸ்களில் மட்டுமல்ல மெட்ரோ ரெயிலில் கூட நடப்பதாக தெரிவித்து உள்ளார்கள் என்றார்.

    சென்னை போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர் கூறும்போது, நாட்டிலேயே பாதுகாப்பான நகரம் சென்னை என்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் தான் அதிகமான பெண் போலீஸ் நிலையங்களும் உள்ளன. இந்த போலீஸ் நிலையங்கள் மூலம் பெண்களுக்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து உள்ளது. கவுன்சிலிங்களும் கொடுக்கப்படுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத பகுதி என்று தெரியவரும் இடங்களில் கூடுதலான ரோந்து பணிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றார்.

    • குழந்தைகளுடன் வந்தவர்கள் பரிதவிப்பு
    • பயணச்சீட்டை பெற்று பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.

    நாகர்கோவில்:

    தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டது பெண்களுக்கான இலவச அரசு பேருந்து வசதி திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம், அதற்கென இயக்கப்படும் பிரத்தியேக அரசு பேருந்துகளில், பிரத்யேகமாக வழங்கப்படும் பயணச்சீட்டை பெற்று பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பெண்களுக்கான இலவச அரசு பேருந்துகளில் இலவ சமாக பயணம் செய்வதன் மூலம் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை தங்களுக்கு மிச்சமாவதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் பெண் களுக்கான இலவச அரசு பேருந்து வசதி திட்டத்தில் ஏராளமான பஸ்கள் இயக்கப் படுகின்றன. மாவட்டத்தின் புறநகர் பகுதிகளுக்கும் இலவச பஸ்கள் இயக்கப்படுவதால், கிராமப்புறம் நகர்ப்புறம் என அனைத்து பகுதி பெண்களும் பயனடைந்து வருகின்றனர்.

    குமரி மாவட்டத்தில் பெண்களுக்கான இலவச பஸ்கள் ஏராளமாக இயக்கப்படுகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பஸ்களில் ஏராளமான பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பயணிக்கின்றனர். காலை முதல் இரவு வரை பெண்களுக்கான இலவச பஸ்கள் தொடர்ந்து இயக்கப் படுவதால் மார்க்கெட் மற்றும் கடைகளுக்கு செல்பவர்கள், பணி நிமித்தமாக செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கிறது.

    பெண்களுக்கான இலவச பஸ்களில் ஆண்க ளும் பயணிக்கலாம். இந்த பஸ்களில் மற்ற வகை பஸ்களை காட்டி லும், கட்டணம் குறை வாகும். இதனால் ஆண்களும் இந்த பஸ்களில் அதிகளவில் பயணிக்கின்றனர். இந்த நிலையில் நாகர்கோவிலில் பெண்களுக்கான இலவச பஸ் ஒன்று பாதி வழியிலேயே பயணிகளை இறக்கி விட்ட சம்பவம் நடந்துள்ளது.

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து அரிய பெருமாள்விளை காலனிக்கு தடம் எண் 36பி என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் அந்த பஸ், நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கோட்டார், செட்டிகுளம் ஜங்ஷன், இந்து கல்லூரி, பீச் ரோடு, இருளப்ப புரம், வல்லன் குமாரன்விளை, என்.ஜி.ஓ. காலனி, மேல கிருஷ்ணன்புதூர், புத்தளம் வழியாக அரிய பெருமாள்விளை காலனிக்கு சென்று வருகிறது.

    அந்த பஸ் நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் வழக்கம் போல் புறப்பட்டது. அந்த பஸ்ஸில் பீச் ரோடு, இருளப்ப புரம், என்.ஜி.ஓ. காலனி, புத்தளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய ஏராளமான பெண்கள் பயணித்தனர். ஒரு சிலரை தவிர அனைவருமே பெண் பயணிகள் ஆவார். சில பெண்கள் தங்களது குழந்தைகளுடன் அந்த பஸ்ஸில் சென்ற னர்.

    அவர்களில் கைக் குழந்தை களுடன் வந்த பெண்களும் இருந்தனர். அனைவருக்குமே கண்டக்டர் பயணச்சீட்டை கொடுத்தார். பெண் பயணி களுக்கு இலவச பயண டிக்கெட்டை வழங்கினார். இந்நிலையில் அந்த பஸ் செட்டிகுளம் ஜங்ஷனை தாண்டி சென்று கொண்டி ருந்தது. அப்போது இந்து கல்லூரி அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அந்த பஸ் நிறுத்தப்பட்டது.

    பணிமனைக்குள் பஸ் செல்வதாக கூறி, பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பணிமனைக்கு வெளியே இறக்கி விடப்பட்டனர். இந்த பஸ்சுக்கு பதிலாக மாற்று பஸ் மாலை 4 மணிக்கு பிறகு வரும் என்றும், அதுவரை பணி மனைக்கு வெளியே காத்திருக்குமாறும் பயணிகளிடம் கண்டக்டர் கூறினார்.

    பஸ் புறப்படும் போது எதுவும் கூறாமல், அனை வரையும் ஏற்றுக்கொண்டு செல்ல வேண்டிய இடத்திற்கு பயண டிக்கெட்டையும் கொடுத்துவிட்டு, நடுவழியில் இறக்கி விட்டதால் அந்த பஸ்ஸில் வந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். திடீ ரென நடுவழியில் இறக்கி விட்டால் தங்களது ஊருக்கு எப்படி செல்வோம் என்று சில பயணிகள் கண்டக்டரிடம் கேட்டனர்.

    அதற்கு அவர் பஸ்ஸில் ஒரு போல்ட் மாட்ட வேண்டி இருக்கிறது. ஆகவே அந்த பஸ்சை தொடர்ந்து இயக்க முடியாது. மாற்று பேருந்து வரும்வரை காத்திருக்குமாறு கண்டக்டர் கூறியிருக்கிறார். அரை மணி நேரத்திற்கு மேல் எவ்வாறு நடுவழியில் காத்திருப்பது என்று பயணிகள் கேட்டனர். அதற்கு கண்டக்டர் வேறு வழியில்லை எனவும், விரும்பினால் அண்ணா பஸ் நிலையத்திற்கு மாற்று பஸ்சில் ஏற்றி விடுவதாக தெரிவித்திருக்கிறார்.

    ஏறிய இடத்திற்கே மீண்டும் ஏற்றி விடுவதாக கண்டக்டர் கூறியதால், பயணிகள் என்ன செய்வ தென்று தவித்தபடி நின்றனர். அந்த பஸ்ஸில் தான் சென்றாக வேண்டும் என்ற நிலையில் இருந்த பயணிகள், பணிமனைக்கு வெளியிலேயே வெகு நேரம் காத்திருந்தனர். அருகில் உள்ள பகுதிக்கு செல்ல வேண்டியவர்கள் அந்த வழியாக வந்த தனியார் மினி பஸ் உள்ளிட்ட வேறு பேருந்துகளில் ஏறிச் சென்றனர். அரசு பஸ்களை பொறுத்தவரை, நடுவழியில் பழுதாகி நின்றால் செல்ல வேண்டிய இடத்திற்கு உடனடி யாக மாற்று பஸ் மூலம் பயணிகள் அழைத்து செல்லப்படுவார்கள்.

    ஆனால் பணி மனைக்கு செல்லும் ஒரு பஸ்ஸில், பயணிகளை பயணச் சீட்டு கொடுத்து ஏற்றுக்கொண்டு சென்றது மட்டுமின்றி, அவர்களை நடுவழியிலேயே இறக்கி விட்டு காத்திருக்கு மாறு கூறிய சம்பவம் அந்த பஸ்ஸில் சென்ற பயணி கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி யது. இலவச பஸ் என்பதால் பயணிகளை இவ்வாறு நடத்து கிறார்கள் என்று பெண்கள் பலர் புலம்பினர். பெண்களுக்கான இலவச பஸ்ஸில் பயணிப்போருக்கு இதுபோன்று அசவுகரியம் நடக்காத வகையில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • இலவச பஸ் பயணம் மூலம் 33 கோடியே 38 லட்சம் பெண்கள் பயன் அடைந்துள்ளனர்.
    • மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தால் அவர்களது பொருளாதார நிலை உயர்ந்துள்ளதாக அமைச்சர் பேசினார்.

    மதுரை

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மதுரை புதூர் பணிமனையில் டிரைவர், கண்டக்டர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

    அமைச்சர் மூர்த்தி குத்துவிளக்கு ஏற்றி ஓய்வறையை திறந்து வைத்தார். ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வுகால பலன்கள் மற்றும் விபத்தில்லாமல் பணியாற்றிய டிரைவர், கண்டக்டர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    விழாவில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-

    கிராமப்புற வளர்ச்சியை கருத்தில் கொண்டு 1972-ம் ஆண்டு அரசு போக்குவரத்து கழகத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார். தி.மு.க. ஆட்சி காலத்தில் அதிகளவில் அரசு பஸ்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. பஸ் வசதி இல்லாத பகுதிக்கு புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டு பஸ்கள் விடப்பட்டன.

    தமிழகத்தில் கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தின் கீழ் இதுவரை 33 கோடியே 38 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ள னர். கட்டணமில்லா பஸ்சில் சராசரியாக ஒரு நாளைக்கு 5 லட்சத்து 56 ஆயிரம் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள்.

    மதுரைக்கு 251 மாசு இல்லாத பஸ்கள் மற்றும் 100 மின்சார பஸ்கள் கொள்முதல் செய்ய திட்டம் உள்ளது. மதுரை மாவட்டத்தில் இயக்கப்படும் பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

    மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தால் அவர்களது பொருளாதார நிலை உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழக அரசு பெண்களுக்கு இலவச பஸ் பயணத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
    • புழல் பகுதியில் வசிக்கும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பெண்கள் அரசின் இலவச பஸ் பயணத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழக அரசு பெண்களுக்கு இலவச பஸ் பயணத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதனால் தினமும் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களது பயணச் செலவு கணிசமாக மிச்சமாகி இருப்பதாக கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் புழல் பகுதியில் வசிக்கும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பெண்கள் அரசின் இலவச பஸ் பயணத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    திருவொற்றியூரில் இருந்து செங்குன்றத்துக்கு விளாங்காடுப்பாக்கம் கிராமம் வழியாக மாநகர பேருந்து ஒன்று இயக்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இந்த பஸ் வருவதால் அவசரமாக வெளியில் செல்பவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் பெரும்பாலும் இந்த பஸ்சை எதிர்பார்ப்பது இல்லை. சிங்கிலிமேடு, தர்காஸ், பெருங்காவூர், அழிஞ்சி வாக்கம், வடகரை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வெளியிடங்களுக்கு செல்லும் பெண்கள் செங்குன்றம் போய் அங்கிருந்து தான் மற்ற இடங்களுக்கு பஸ்சை பிடிக்க வேண்டும். முறையான பஸ் வசதி இல்லாததால் இந்த கிராமங்களுக்கு அதிக அளவிலான ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஷேர் ஆட்டோக்களில் விளாங்காடுப் பாக்கத்தில் இருந்து செங்குன்றம் செல்ல ரூ.30 கட்டணமாக வசூலிக்கப் படுகிறது.

    இப்படி காலை, மாலை 2 வேளையும் இப்பகுதிகளில் பெண்கள் பயணம் செய்ய வேண்டி உள்ளது.

    இதனால் தினமும் ரூ.60 வரை செலவு ஆவதாக பெண்கள் குற்றம்சாட்டுகிறார்கள். வருமானத்தின் பெரும் பகுதியை இழப்பதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.

    அ.தி.மு.க. ஆட்சியின் போது பஸ் வசதி இல்லாத பகுதி மக்களின் நலனுக்காக மினி பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ் பயணம் இந்த கிராம மக்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது.

    இதனால் தமிழக போக்கு வரத்து துறை அதிகாரிகள் இந்த கிராமங்கள் அடங்கிய வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்கிற கோரிக்கையை அப்பகுதி மக்கள் நீண்ட காலமாகவே வைத்து வருகிறார்கள். செலவில்லாத அரசு பஸ் பயணம் இப்பகுதி மக்களுக்கு கை கூடுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

    • ராணிப்பேட்டை கலெக்டர் தகவல்
    • பஸ்சின் முகப்பில் இளஞ்சிவப்பு வண்ணமிட்டு சுலபமாக அடையாளம் கண ஏற்பாடு

    ராணிப்பேட்டை:

    தமிழக முதலமைச்சர் பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 2.31 கோடி மகளிர்கள் பயனடைந்துள்ளதாக ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் சோளிங்கர் பணிமனையில் 14 டவுன் பஸ்களும், ஆற்காடு பணிமனையில் 50 டவுன் பஸ்களும் என மொத்தமாக 64 டவுன் பஸ்களில் மகளிருக்கான கட்டணமில்லா பயணம் என பிரத்யேகமான ஒட்டுவில்லைகளையும் ஒட்டி பஸ்சின் முகப்பில் இளஞ்சிவப்பு வண்ணமிட்டும் பெண்கள் சுலபமாக பஸ்களை அடையாளம் கண்டு பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன.

    இத்திட்டம் மூலம் தினசரி 48,312 பெண்களும், கடந்த 08.05.2021 முதல் தற்பொழுது வரை 2.31 கோடி மகளிர்கள் மற்றும் 26.000 திருநங்கைகள் நகரப் பஸ்களில் இலவசப் பயண சலுகை பெற்றுள்ளனர் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • மத்திய சமையல் கூடத்தில் முட்டை அவிக்கப்பட்டு 293 பள்ளிகளில் உள்ள 50 ஆயிரம் மாணவர்களுக்கு ஒரு லட்சம் முட்டை அனுப்பும் பணி இன்று மீண்டும் தொடங்கியது.
    • அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பஸ்களில் இலவச பயணம் செய்யலாம்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாரத்திற்கு 2 முட்டை மதிய உணவில் வழங்கப்பட்டு வந்தது.

    கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதிலாக அரிசியும், பணமும் வழங்கப்பட்டது. கொரோனாவுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் முட்டை வழங்கப்படவில்லை.

    இதனிடையே பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அக்சயா என்ற தன்னார்வ நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இந்த தன்னார்வ நிறுவனம் சைவ உணவை மட்டும்தான் வழங்கி வருகிறது. இதனால் மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை. அதேநேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு முட்டையுடன் மதிய உணவு வழங்க அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.

    இதையடுத்து இன்று முதல் மாணவர்களுக்கு பள்ளிகளில் முட்டை வழங்கப்பட்டது. மத்திய சமையல் கூடத்தில் முட்டை அவிக்கப்பட்டு 293 பள்ளிகளில் உள்ள 50 ஆயிரம் மாணவர்களுக்கு ஒரு லட்சம் முட்டை அனுப்பும் பணி இன்று மீண்டும் தொடங்கியது.

    இதற்கான பணியை பள்ளி கல்வித்துறை துணை இயக்குனர் கொஞ்சிமொழி குமரன் நேரில் பார்வையிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    வாரத்தில் 2 நாட்கள் முட்டை வழங்கப்படுகிறது. முதல் நாள் 147 பள்ளி மாணவர்களுக்கும் அடுத்து 146 பள்ளி மாணவர்களுக்கும் என சுழற்சி முறையில் கொடுக்கப்பட உள்ளது.

    இதேபோல கொரோனா முடிவுற்று பள்ளி தொடங்கிய பிறகு மாணவர்களுக்கு இயக்கப்படும் ஒரு ரூபாய் கட்டண பஸ் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் கட்டணம் செலுத்தி பள்ளி, கல்லூரிக்கு சென்று வந்தனர். பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், இயக்கங்கள் வலியுறுத்தி வந்தன.

    இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டணமின்றி இலவச பஸ் இயக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். இதன்படி இன்று முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் இயக்கப்படுகிறது.

    இந்த இலவச பஸ் சேவையை பிற்பகலில் கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார். அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பஸ்களில் இலவச பயணம் செய்யலாம்.

    நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் இருந்து இயக்க திட்டம்
    • தேவஸ்தான தலைவர் சேகர் ரெட்டி பேட்டி

    கன்னியாகுமரி:

    சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய தலைவர் சேகர் ரெட்டி நேற்று கன்னியாகுமரி வந்தார். அவர் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்து உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு சென்றார்.

    அவரை கோவில் ஆய்வாளர் சாய் கிருஷ்ணா மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர் கோவில் வளாகத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அவருடன் சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் தகவல் மற்றும் ஆலோசனை மைய அறங்காவலர்குழு உறுப்பினர்கள் மற்றும் தென்தாமரைகுளம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் தாமரைதினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதன் பின்னர் சேகர் ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரியில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் வருகிற நவம்பர் மாதம் 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை 4 நாட்கள் பவித்ர உற்சவம் நடைபெற உள்ளது. அதன் பிறகு ஜனவரி மாதம் வருஷாபிஷேக விழாவும் பிப்ரவரி மாதம் முதல் முறையாக பிரமோற்சவ திருவிழாவும் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ திருவிழாவின் போது 12 வாகனங்கள் பயன் படுத்தப்பட உள்ளன.

    கன்னியாகுமரியில் மார்ச் மாதம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச திருக்கல்யாணம் நடத்தப்படும். கன்னியா குமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தற்போது லட்டு விற்பனை செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. அந்த குறை விரைவில் போக்கப்படும். அதேபோல திருப்பதியில் மட்டும் தான் முடி காணிக்கை செலுத்தப்படும். இங்கு அதற்கான ஏற்பாடுகள் இதுவரை செய்யப்படவில்லை. மேலும் கோசாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்கள் குமரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கோவில்களான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்வதற்கு வசதியாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இலவச பஸ் விடப்படும். இந்த இலவச பஸ் சேவை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற டிசம்பர் மாதம் முதல் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×