என் மலர்
நீங்கள் தேடியது "Bus travel"
- சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து மாநகர சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் இதுவரை 2.75 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் இப்போதே தயாராகி வருகிறார்கள். தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த ஒரு வாரமாகவே ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்துக்கான ஆடைகளை வாங்கிவிட்டனர். அவர்கள் தற்போது தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கும் புறப்பட்டு செல்ல தொடங்கி உள்ளனர்.
தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் சென்று கொண்டாட விரும்பும் மக்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் 4 நாட்கள் சிறப்பு பஸ்களும் விடப்பட்டுள்ளன. மேலும் மற்ற முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த 4 நாட்களும் மொத்தம் 20,378 பஸ்கள் விடப்படுகிறது.
இந்த சிறப்பு பஸ்கள் நேற்று முதல் புறப்பட்டு சென்றன. சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன், சிறப்பு பஸ்களும் புறபட்டு செல்கின்றன. இந்த பஸ் நிலையங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு வசதியாக சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து மாநகர சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.
முதல் நாளான நேற்று சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பஸ்கள், 761 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 2,853 பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் 1,28,275 பயணிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் இதுவரை 2.75 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் இருந்து இன்று வழக்கமாக இயக்கப்படும் 2,092 பஸ்களுடன் 2,165 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 4,257 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 1,790 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இன்று சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக இன்று மட்டும் 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை வருகிற திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் நாளை (சனிக்கிழமை) முதல் விடுமுறை தொடங்குகிறது. இதனால் கடைசி நேர நெரிசலை தவிர்ப்பதற்காக இன்று முதல் பொதுமக்கள் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். அதன் அடிப்படையில் இன்று சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன.
மேலும் பொதுமக்கள் நேரடியாக சென்று, அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு செய்யும் வகையில், சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பஸ் நிலையங்களில் 12 முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுஉள்ளன. இந்த முன்பதிவு மையங்கள் நேற்று முதல் செயல்பட்டு வருகின்றன. இங்கும் பொதுமக்கள் நேரடியாக சென்று டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
வார இறுதி நாட்களான நாளையும், நாளை மறுநாளும் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்வார்கள் என்றும், கடைசி நேரத்தில் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் கூடுதல் பஸ்களை இயக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் தனியார் ஆம்னி பஸ்கள் மூலமும் பயணிகள் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு நேற்று முதல் புறப்பட்டு சென்றனர். தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனாலும் இன்று முதல் வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆம்னி பஸ்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளனர். அவர்கள் ஏற்கனவே ஆம்னி பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் ரெயில் பயணத்தையே முதலில் திட்டமிடுவது வழக்கம். தற்போது ரெயில்களில் பயணம் செய்வதற்கு 2 மாதங்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. தீபாவளிக்காக ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நாளிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தன.
இதையடுத்து தீபாவளிக்கு சிறப்பு ரெயில்களும் அறிவிக்கப்பட்டன. அந்த ரெயில்களிலும் டிக்கெட் முழுவதும் நிரம்பிவிட்டது. சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் இருந்து புறப்படும் 60 ரெயில்களில் பயணிக்க சுமார் 2.20 லட்சம் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து உள்ளனர். இந்த ரெயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் மேலும் 35 ஆயிரம் பயணிகள் பயணம் செய்ய முடியும்.
மேலும், சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இன்றும் நாளையும் முன்பதிவு இல்லாத ரெயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களில் பயணம் செய்யவும் பயணிகள் இப்போதே தயாராகி வருகிறார்கள்.
இதுதவிர சென்னையில் வசிப்பவர்களில் பலர் கார்கள் உள்ளிட்ட தங்களது சொந்த வாகனங்களிலும் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களது சொந்த வாகனங்கள் மூலம் தீபாவளி பண்டிகையை கொண்டாட தென்மாவட்டங்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இன்றும் நாளையும் சென்னை ஜி.எஸ்.டி. சாலையில் செல்ல கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அவை மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகின்றன.
மேலும், கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் வெளியூர் செல்பவர்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து பழைய மாமல்லபுரம் சாலை, கேளம்பாக்கம், திருப்போரூர், செங்கல்பட்டு வழியாக செல்ல வேண்டும். அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலை, கேளம்பாக்கம், திருப்போரூர், செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதன்படி நேற்று முதலே போலீசார் அறிவுறுத்திய பாதைகளில் சொந்த வாகனங்களில் சென்றவர்கள் பயணம் செய்தனர்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து அரசு விரைவு பஸ்கள், தனியார் ஆம்னி பஸ்கள், ரெயில்கள் மற்றும் சொந்த வாகனங்கள் மூலம் சுமார் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.
- தனது இரண்டு கால்களையும் இழந்த மாணவன் சந்தோஷின், எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
- தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி ஆபத்தான முறையில் பயணிக்கிறார்கள்.
பூந்தமல்லி:
படியில் பயணம் நொடியில் மரணம் என்று அரசு பஸ்களில் எழுதி போட்டிருந்தாலும் படியில் பயணம் செய்வதே சாகச பயணம் என்பது போய் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ்களில் தொங்கிய படி பயணிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.
அதிலும் படிக்கட்டுகளில் ஒருவர் மீது ஒருவர் பிடித்து கொண்டு சாகசம் செய்வது போல் பயணிப்பதை பார்ப்பவர்களே பதற்றப்படுகிறார்கள். கீழே விழுந்தால் என்ன நிலைமை என்று ஒவ்வொருவரும் ஆதங்கப்படுகிறார்கள்.
ஆனால் மாணவர்களோ எதையும் காதில் வாங்குவதில்லை. தங்கள் சாகச பயணத்தை தினமும் படிக்கட்டுகளில் நிகழ்த்தி வருகிறார்கள்.
குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரி நான்கு ரோடு சந்திப்பு அருகே சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த சில மாணவர்கள் காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளும் அவ்வழியாக செல்லும் அரசுப் பேருந்தில் ஆபத்தான நிலையில் படியில் தொங்கியபடி பயணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்ததும் அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து ஒன்றின் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு வந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் சந்தோஷ் (16), பேருந்து குன்றத்தூர் தேரடி அருகே வந்த போது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தான். அப்போது, பேருந்தின் பின் சக்கரம் அவனது இரண்டு கால்கள் மீதும் ஏறி இறங்கியது. இதில், படுகாயமடைந்த மாணவனை பொதுமக்கள் உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத் தான நிலையில் மாணவன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாணவனின் இரண்டு கால்களும் பாதத்திற்கு கீழ் கடுமையாக சேதமடைந்து காணப்பட்டதால், அதனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். தொடர்ந்து மாணவன் சிகிச்சை பெற்று வருகிறான். எவ்வளவு அறிவுரை கூறினாலும், அதனை காதில் வாங்காததன் விளைவாக தனது இரண்டு கால்களையும் இழந்த மாணவன் சந்தோஷின், எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
நேற்று வரை துள்ளித் திரிந்த மாணவன் இன்று தனது இரு கால்களையும் பறிகொடுத்து முடமாகி இருக்கிறான். அவனது எதிர்காலமே இருண்ட காலமாக மாறியிருக்கிறது. இது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்து அல்ல. தானாக விலை கொடுத்து வாங்கிய விபத்து.
இந்த மாணவரை போல் தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி ஆபத்தான முறையில் பயணிக்கிறார்கள். இந்த சம்பவத்தை பார்த்த பிறகாவது அவர்கள் திருந்த வேண்டும்.
- ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
- போலீசார் ஆட்டோ டிரைவைர் தேவாவை கைது செய்தனர்.
திருப்பதி:
தெலங்கானாவில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பஸ் பயண சேவை வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மஹ்பூப்நகரை சேர்ந்த தேவா (வயது 45) குடிபோதையில் தனது ஆட்டோவுடன் முதல் மந்திரி முகாம் அலுவலகமான ஐதராபாத் பிரஜா பவனுக்கு வந்தார்.

பின்னர் பெண்களுக்கான இலவச பஸ் பயணத்தால் எங்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து ஆட்டோவுக்கு திடீரென தீ வைத்தார். இதனை பார்த்த பிரஜா பவன் ஊழியர்கள் மற்றும் போலீசார், ஆட்டோவில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.
இருப்பினும் தீ பரவியதில் ஆட்டோ முழுவதும் எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் ஆட்டோ டிரைவைர் தேவாவை கைது செய்தனர்.
- பெண்கள் பேருந்து சேவைகளைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
- திட்டம் மிகவும் முற்போக்கான எண்ணத்தோடு செயல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
2021 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று, தமிழ்நாடு அரசு பெண்களுக்கான "கட்டணமில்லா அரசுபேருந்து" திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது ஜூலை 2021-இல் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டமானது பாராட்டுகளையும் விமர்சனங்களையும் சமமாக பெற்றுள்ளது. பெண்கள் அதை ஏற்றுக்கொண்டனர், வல்லுநர்கள் அதைப் பாராட்டினர், ஆனால் விமர்சனர்களோ பெண்களுக்கான இந்த 'இலவசம்' கடினமாக உழைக்கும் ஆண்களால் மட்டுமே சாத்தியமானது, இத்திட்டம் இயல்பாகவே நியாயமற்றது, பாரபட்சமானது, பெண்கள் இந்த திட்டத்தை உபயோகமில்லாமல் பயன்படுத்துகிறார்கள் என்று குறை கூறினர். சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்க்ஷன் குரூப் (CAG)பல ஆண்டுகளாக நிலையான போக்குவரத்து துறையில் பணியாற்றி வருகிறது. மேலும் தமிழ்நாட்டில், திட்டத்தின் தாக்கம் மற்றும் நிலையான பொது போக்குவரத்திற்கான அணுகலை இது எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதை ஆய்வு செய்து உள்ளது. கட்டணமில்லா பேருந்து திட்டத்தால் பயனடைந்த 3000 பெண்களை சிஏஜி நேர்காணல் செய்தது. தமிழ்நாட்டின் சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் ஆகிய ஆறு நகரங்களில் இருந்து பல்வேறு வயது மற்றும் சமூக-பொருளாதாரப் பின்னணியைச் சேர்ந்த பெண்கள் நேர்காணல் செய்யப்பட்டனர்.
இந்த ஆய்வின் மூலம், ஆறு நகரங்களிலும் கண்டறியப்பட்டவை:-
● இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, பெண்கள் பேருந்து சேவைகளைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தனர். இப்பெண்கள் ஏற்கனவே பேருந்து சேவையை வழக்கமாகப் பயன்படுத்திய நிலையில், இத்திட்டத்தின் விளைவாக ஷேர் ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்கள் போன்ற பிற போக்குவரத்து வகைகளைப் பயன்படுத்துவது குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
● இந்த ஆய்வில், பெண்கள் ஒரு மாதத்தில் சுமார் 800 ரூபாய் சேமிப்பதால், அந்தப் பணம் வீட்டுத் தேவைகள், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றிற்குச் செலவழித்து, குடும்பம் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் சிறந்த பலன்களை ஏற்படுத்துகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
● ஆய்வில் இருந்து மற்றொரு முக்கிய கண்டுபிடிப்பு என்னவென்றால், அதிகமான பெண்கள் பொதுப் போக்குவரத்தை அணுகுவதும், பொது இடங்களில் காணப்படுவதும், இது பாலின நிலைப்பாடுகள் மற்றும் பெண்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளுக்கு தொடர்புடைய தடைகளை உடைக்க உதவியது என்பது தெரியவந்துள்ளது.
பிப்ரவரி 20 ஆம் தேதி நடந்த நிகழ்வில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ், I.A.S இந்த அறிக்கையை வெளியிட்டார்.
இந்த ஆய்வை வரவேற்ற டாக்டர். ஆல்பி ஜான், "இந்தத் திட்டம் பெண்களுக்குச் சிறந்த போக்குவரத்து வசதிகளை வழங்குகிறது, ஏனெனில் அவர்களில் பலர் சொந்த வாகனங்களை வைத்திருக்கவில்லை. அதிகமான பேருந்துகளின் தேவையை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், மேலும் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் மற்ற நகரங்களுக்கு இத்தேவையை பூர்த்தி செய்ய அரசு தற்போது செயல்பட்டு வருகிறது" என்றார்.

சிஏஜியின் மூத்த ஆராய்ச்சியாளர் சுமனா நாராயணன், பெண்களுக்கு மட்டுமின்றி அவர்களின் முழு குடும்பத்திற்கும் இந்தத் திட்டத்தின் பொருளாதார நன்மைகளை எடுத்துரைத்தார். "இந்தத் திட்டம் பெண்களுக்கு சராசரியாக மாதம் 800 ரூபாய் சேமிக்க அனுமதித்துள்ளது. மேலும் அவர்கள் இந்த சேமிப்பை தங்கள் குடும்ப ஆரோக்கியம், கல்வி மற்றும் ஊட்டச்சத்துக்காக மறு முதலீடு செய்கிறார்கள். இது சமூகத்திற்கும் நாட்டிற்கும் நீண்டகால நன்மைகளை அளிக்கிறது, "என்று அவர் கூறினார். "கட்டணமில்லா பொது போக்குவரத்து திட்டமானது வரி செலுத்துவோரின் பணத்தால் மட்டுமே கட்டணமில்லா பேருந்து திட்டத்தில் இலவச டிக்கெட்டுகள் வழங்குவது சாத்தியம் என்று கருதாமல், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பையும், மேலும் இந்தத் திட்டம் மூலம் சமூகத்தில் அனைத்து தரப்பினரின் உள்ளடக்கத்திற்கு அனுமதிக்கிறது."
இந்தத் திட்டம் முதலில் அறிவிக்கப்பட்டபோது பேசப்பட்ட சில எதிர்மறைக் கருத்துக்களை சுமனா எடுத்துரைத்தார். "இந்தத் திட்டம் பெண்களை நோக்கமின்றி வீட்டை விட்டு வெளியேறவும், ஊர் சுத்தவும் ஊக்குவிக்கிறது என்று பொதுக் கருத்து உள்ளது. பெண்கள் இப்போது பொழுதுபோக்கிற்காகவும் தனிப்பட்ட நேரத்திற்காகவும் கோவில்கள், கடற்கரைகள் மற்றும் பூங்காக்களுக்கு செல்வதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். பெண்களுக்கும் அவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கு சில 'மீ டைம்' தேவை, இது ஒரு நேர்மறையாக பார்க்கப்பட வேண்டும்," என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பசுமை போக்குவரத்து தீர்வுகளை மையமாக கொண்டு செயல்படும் ஆராய்ச்சி நிறுவனமான அர்பன் ஒர்க்ஸ் நிறுவனர் ஸ்ரேயா கடப்பள்ளி, அறிக்கை வெளியீட்டு குழுவின் ஒரு பகுதியாக இருந்தார்.
"இந்தியாவில், ஆண்களில் 10ல் 8 பேர் வெளியே பணிபுரியும் பொழுது, பெண்களில் 10ல் 2 பேர் மட்டுமே வீட்டிற்கு வெளியே வேலை செய்கிறார்கள். இது போன்ற திட்டங்கள் தொழிலாளர் பணிக்குள் நுழைவதில் பெண்கள் எதிர்கொள்ளும் தடைகளை குறைக்கிறது," என்றார். "நீண்ட காலத்தில், பேருந்துகள் அனைவருக்கும் விருப்பமான போக்குவரத்து முறையாக இருக்க வேண்டும். அங்கு செல்வதற்கு, குடிமக்களுக்கு பேருந்து நிறுத்தங்களுக்கு எளிதான அணுகல் மற்றும் குறைந்த காத்திருப்பு நேரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.
"இந்த திட்டம் மிகவும் முற்போக்கான எண்ணத்தோடு செயல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மேம்பட்ட நகரங்களுக்கு இணையாக பொதுப் போக்குவரத்தின் தரம் மற்றும் பேருந்து சேவைகளின் எண்ணிக்கை தன்மையில் வியத்தகு முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறோம்" என்று UNDPன் தலைமை மேம்பாட்டு இலக்கு நிபுணர் ராஜ் செருபால் கூறினார்.
2021-22 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கொள்கையானது, கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் நோக்கம் பெண்களை சமூகத்தில் அதிக அளவில் செயல்படுவதை ஊக்குவிப்பதாகும் என்பதை வலியுறுத்துகிறது. பொது இடங்களில் பெண்களின் வெளிக்கொணர்தல் இந்தியாவில் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. அதிகமான பெண்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தினால், அது பொது இடங்களில் பெண்களின் இருப்பை அதிகரிக்க வழிவகுக்கும், இதன் விளைவாக, மக்கள்தொகையில் பாதி பேருக்கு அதிகத் தெரிவுநிலை ஏற்படும்.
சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்க்ஷன் குரூப் (CAG) என்பது 38 வருடங்கள் பழமையான ஒரு இலாப நோக்கற்ற மற்றும் அரசியல் சார்பற்ற அமைப்பாகும், இது குடிமக்கள் உரிமைகள் மற்றும் நல்லாட்சிக்காக செயல்படுகிறது. அதன் முயற்சிகள் மாநில அளவிலும் தேசிய அளவிலும் கூட தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தாலும், சென்னையின் நுகர்வோர் மற்றும் குடிமக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக இது முதன்மையாக செயல்படுகிறது.
- கள்ளக்குறிச்சியில் இருந்து சார்வாய் ஊருக்கு செல்ல தனியார் பஸ் மூலம் பயணம் செய்து கொண்டிருந்தார்.
- அப்பொழுது இந்திலியை கடக்கும் பொழுது பஸ்ஓசை டிவைர் திடீரென பிரேக் போட்டதால் செல்லம்மாள் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே உள்ள உலகம்காத்தான் கிராமத்தை சேர்ந்தவர். செல்லம்மாள். இவர் கள்ளக்குறிச்சியில் இருந்து சார்வாய் ஊருக்கு செல்ல தனியார் பஸ் மூலம் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது இந்திலியை கடக்கும் பொழுது பஸ்ஓசை டிவைர் திடீரென பிரேக் போட்டதால் செல்லம்மாள் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.






