என் மலர்
நீங்கள் தேடியது "Kudankulam"
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது.
- விபத்து ஏற்பட்ட உடனே தகவல் கிடைத்ததால் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு, காவல்துறை அங்கு விரைந்து வந்தனர்.
நெல்லை:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி இன்று காலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 60 பயணிகள் வரை பயணம் செய்தனர்.
அந்த பஸ் கூடங்குளம் அருகே உள்ள முருகானந்தபுரம் பகுதியில் வந்தபோது எதிரே அந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக பஸ் டிரைவர் ஓரமாக நிறுத்த முற்பட்டுள்ளார். அப்போது சமீப காலமாக பெய்த மழையினால் சாலையோரம் இருந்த மண் ஈரப்பதத்துடன் இருந்ததால் பஸ் டயர் கீழே இறங்கவும், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 27 பேர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து ஏற்பட்ட உடனே தகவல் கிடைத்ததால் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு, காவல்துறை அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு கூடங்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயங்கள் அதிகமாக இருந்த பயணிகள் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து கூடங்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இறங்கியது.
- பஸ் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் வழியாக இன்று காலை நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இறங்கியது.
டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததனால் சாலையோரம் சறுக்கி இறங்கிய அந்த பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சில பயணிகள் சிறிய காயங்களுடன் தப்பினர்.
தகவல் அறிந்த உடனே கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். பஸ் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கூடங்குளம் அணுமின் நிலையம் தென் தமிழ்நாட்டு மக்களின் தலையில் எரிமலையாக அமர்ந்திருக்கிறது.
- அணுக்கழிவுகளை அணுஉலைக்கு அருகிலுள்ள கடற்கரையைத் தவிர வேறு எங்கும் கொட்டப்போவதில்லை.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள அணுக்கழிவுகள் பாதுகாப்பாக அகற்றுவது குறித்தும், அதன் ஆபத்து குறித்தும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாராளுமன்ற மாநிலங்களவையில் பேசினார்.
நேரமில்லா நேரத்தின்போது வைகோ பேசியதாவது:-
குஜராத் மாநிலத்தில் மிதி-விர்தி கிராமத்திற்கு அருகிலுள்ள பாவ்நகரில் அணுமின் நிலையத்தை நிறுவ ஒன்றிய அரசு ஒரு திட்டம் வகுத்தது. அந்த நேரத்தில், குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி குஜராத் மாநிலத்தில் அனுமதி தர மறுத்தார். குஜராத் மாநிலம் இந்திய பிரதமருக்கு சொந்த மாநிலம். எனவே, அவர் குஜராத்தில் அணுமின் நிலையத்தை நிறுவ ஒருபோதும் முயற்சிக்கவில்லை.
நவம்பர் 22, 1988 அன்று, அப்போதைய சோவியத் ஒன்றிய அதிபர் கோர்பச்சேவ் இந்தியாவிற்கு வருகை தந்தபோது, அப்போதைய இந்திய பிரதமர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஓர் அறிக்கை வெளியிட்டு உரையாற்றினார்.
அதில், இந்தியாவும் சோவியத் ஒன்றியமும் இணைந்து, இந்தியாவில் அணுமின் நிலையத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறினார். மக்களவையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டபோது யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ராஜ்யசபாவிலும் யாரும் கேள்வி எழுப்பவில்லை.
இந்திய பிரதமரிடம் இது குறித்து விளக்கம் கேட்ட ஒரே ஒரு உறுப்பினர் நான்தான். அணுமின் நிலையம் அமைக்க நீங்கள் எந்த இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்று கேட்டேன். பதில் இல்லை. ஆனால் தென் தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதியான கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை அமைக்க நீங்கள் திட்டமிட்டுள்ளீர்கள் என்று கூறினேன். இதுபற்றி அறிந்ததும் கூடங்குளம் பகுதி பொதுமக்களும், மீனவர்களும் கிளர்ந்தெழுந்தனர்.
அமெரிக்காவின் மூன்று மைல் தீவில் உள்ள அணு உலையிலும், சோவியத் ரஷ்யாவின் செர்னோபிலிலும் அணு உலை பேரழிவுகள் நிகழ்ந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். ஜப்பான் புகுஷிமாவில், மார்ச் 11, 2011 அன்று, அணு பேரழிவு ஏற்பட்டு பலர் இறந்தனர். அணுக் கதிர் பாதிப்பால் மக்கள் இன்றும் அவதிப்படுகிறார்கள்.
இந்த உண்மைகளை எல்லாம் மறைக்க முயற்சிக்கிறார்கள். ஏதேனும் பேரழிவு ஏற்பட்டால், தென் தமிழ்நாடு முற்றிலுமாக அழிக்கப்படும்.
கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான மீனவ பெண்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்கள் 18 மாதங்கள் போராடினர். நானும் மூன்று முறை அந்தப் போராட்டங்களில் கலந்து கொண்டேன். போராட்டம் நடத்திய மக்கள் மீது அப்போதைய மாநில அரசால் குற்றவியல் வழக்குகள் தொடரப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் என் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டது.
கூடங்குளத்தில் ஏற்கனவே நான்கு அணு உலை அலகுகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் இரண்டு அலகுகள் அமைக்க முடிவுசெய்துள்ளனர். மேலும் முழுப் பகுதியும் அணு நரகமாக மாறி வருகிறது.
பேரழிவு ஏற்பட்டால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள். கற்பனை செய்ய முடியாத அளவு மரணங்கள் நடக்கும்.
இப்போது எழும் முக்கியமான மில்லியன் டாலர் கேள்வி என்னவென்றால், அவர்கள் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக எங்கே அப்புறப்படுத்தப் போகிறார்கள்? இப்போது அணுக்கழிவுகள் ஆலையிலேயே வைக்கப்பட்டிருக்கிறது. அந்த அணுக் கழிவுகளை கடலில் கொட்டப்போகிறார்கள் என்று நான் அச்சப்படுகின்றேன். ஒரு எரிமலை எங்கள் தலையில் அமர்ந்திருக்கிறது.
இதை எதிர்த்துப் போராடும் பூவுலக நண்பர்கள் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அதில். அணுமின் நிலையம் 2018ஆம் ஆண்டுக்குள் நிலத்தடி ஆழ்நிலைக் கிடங்கு (DGR) அமைக்க வேண்டும் என்று கூறியது.
அது அமைக்கப்படாததால், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. உச்ச நீதிமன்றமானது DGR கட்டுவதற்கு ஏப்ரல் 2022 வரை காலகெடு வழங்கியது. ஆனால் இதுவரை அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
கூடங்குளம் அணுமின் நிலையம் தென் தமிழ்நாட்டு மக்களின் தலையில் எரிமலையாக அமர்ந்திருக்கிறது, இந்த அணுக் கழிவுகளை அணுஉலைக்கு அருகிலுள்ள கடற்கரையைத் தவிர வேறு எங்கும் கொட்டப் போவதில்லை. அணுஉலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதுதான் தென் தமிழக மக்களின் கோரிக்கையாகும். அணுமின் நிலையத்தை மூடவும், வரவிருக்கும் பேரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றவும் நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசையும், பிரதமர் அவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்."
வைகோ அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்.
- கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் பகுதியை சேர்ந்த டாக்டர் அதே பகுதியில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார்.
- அங்கு பணிபுரியும் நர்ஸ்களை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
வள்ளியூர்:
கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் வேல்ராஜ் (வயது 39). டாக்டரான இவர் அதே பகுதியில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார்.
அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் கண்ணன் (54). சம்பவத்தன்று இவர் வேல்ராஜ் நடத்தி வரும் மருத்துவமனை முன்பு நின்று அங்கு பணிபுரியும் நர்ஸ்களை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
இதுகுறித்து வேல்ராஜ் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வினுக்குமார் விசாரணை செய்து கண்ணனை கைது செய்தார்.
- நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுஉலை நிர்வாகம் சார்பில் அங்குள்ள சுற்று வட்டார பகுதிகளில் சமூக பொறுப்பு நிதியில் இருந்து பல பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
- பணிகள் 2 ஆண்டுகளாக கிடப்பில் கிடப்பதால் மழை நீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறக்கூடிய கழிவுநீர் அந்த கால்வாயில் தேங்கி நிற்கிறது
பணகுடி:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுஉலை நிர்வாகம் சார்பில் அங்குள்ள சுற்று வட்டார பகுதிகளில் சமூக பொறுப்பு நிதியில் இருந்து பல பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கூடங்குளம் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்காக ஊரின் நடுப்பகுதியில் கால்வாய் கட்டும் பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. தற்போது அந்த பணிகள் 2 ஆண்டுகளாக கிடப்பில் கிடப்பதால் மழை நீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறக்கூடிய கழிவுநீர் அந்த கால்வாயில் தேங்கி நிற்கிறது.
இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்டும் நிலை இருப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு மற்றும் ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
போராட்டம் அறிவிப்பு
அந்த கால்வாயை பார்வையிட்ட பின்னர், பா.ஜனதா ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், கூடங்குளம் அணுஉலை நிர்வாகம் சார்பில் பல கோடி ரூபாய் நிதியில் கழிவு நீர் கால்வாய் கட்டுமான பணி நடந்தது. எந்தவித திட்டமிடலும் இல்லாமல் வேலை தெரியாதவர்களை வைத்து பணிகளை செய்தனர்.
தற்போது கழிவு நீர், மழை நீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இந்த சுகாதார சீர்கேட்டை வருகிற 22-ந்தேதிக்குள் ஊராட்சி நிர்வாகம் சரி செய்யவில்லை என்றால் பா.ஜனதா சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.
- திருச்சி மாவட்டம் பூவலூர் கிராமத்தை சேர்ந்தவர் சமயகண்ணன். இவரது மகன் ராஜேஷ்.
- இன்று அதிகாலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
நெல்லை:
திருச்சி மாவட்டம் பூவலூர் கிராமத்தை சேர்ந்தவர் சமயகண்ணன். இவரது மகன் ராஜேஷ்(வயது 33).
மயங்கி விழுந்தார்
இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தனியார் நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தார்.இதற்காக கூடங்குளம் அருகே பரமேஸ்வரபுரத்தில் தனது சக நண்பர்களுடன் அவர் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தார்.
ஒப்பந்த பணியாளரான ராஜேஷ் நேற்று இரவு பணிக்கு சென்றுள்ளார். இன்று அதிகாலையில் வேலை பார்த்துக்கொண்டி ருந்தபோது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
சாவு
உடனே அங்கு பணியில் இருந்தவர்கள் ராஜேசை மீட்டு ராதாபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த ராஜேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- கூடங்குளம் ஹார்வேர்ட் ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மழலையர் பிரிவின் சார்பில் புத்தாண்டு தின விழா மற்றும் பச்சை வண்ண விழா சிறப்பாக நடைபெற்றது.
- விழாவுக்கு தாளாளர் டாக்டர் தினேஷ் தலைமை தாங்கினார்.
வள்ளியூர்:
கூடங்குளம் ஹார்வேர்ட் ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மழலையர் பிரிவின் சார்பில் புத்தாண்டு தின விழா மற்றும் பச்சை வண்ண விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு தாளாளர் டாக்டர் தினேஷ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறப்பான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டன. மழலையர் பிரிவு தலைவி முத்துலட்சுமி நன்றி கூறினார்.
- கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் நெல்லையில் இக்னோசிஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டியில் வெற்றி பெற்றனர்.
- சூப்பர் சீனியர், சீனியர், ஜீனியர் மாணவ-மாணவிகள் எப்பீ பிரிவில் ரிவால்டோ, ஜெப்ரி, இன்பதரணி முதல் பரிசையும் விக்னேஷ், ஜீவா 2-ம் பரிசையும் பெற்றனர்.
வள்ளியூர்:
கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் நெல்லையில் இக்னோசிஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டியில் வெற்றி பெற்றனர்.
சூப்பர் சீனியர், சீனியர், ஜீனியர் மாணவ-மாணவிகள் எப்பீ பிரிவில் ரிவால்டோ, ஜெப்ரி, இன்பதரணி முதல் பரிசையும் விக்னேஷ், ஜீவா 2-ம் பரிசையும் பெற்றனர்.
பாயில் பிரிவில் ஆஷிக், ஜீடித் முதல் பரிசையும், ஆகாஷ் 2-ம் பரிசையும் பெற்றனர். சகாய ஆன்றோ, எபன் 3-ம் பரிசை பெற்றனர்.சேபர் பிரிவில் செரின் முதல் பரிசையும், வின்சர் 2-ம் பரிசையும் பெற்றனர்.
பவுல் ராஜ், ரோஷன் 3-ம் பரிசையும் பெற்றனர். ஜீனியர் மாணவர் சேபர் பிரிவில் ஜெர்னிசன், தருண்குமார் முதல் மற்றும் 2-ம் பரிசையும் பெற்றனர். பாயில், எப்பீ பிரிவுகளில் மெல்சன், அமீர் 2-வது பரிசு பெற்றனர்.
மொத்தம் 26 மாணவ-மாணவிகள் மாவட்ட அளவிலான வாள்வீச்சு போட்டிகளில் வெற்றி பெற்றுமாநில அளவிலான வாள் வீச்சு போட்டிக்கு தகுதி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளிதாளாளர் டாக்டர்.தினேஷ், முதல்வர் முருகேசன், துணை முதல்வர் ஜெனி, டேனியல் பயிற்சியாளர் ஏஞ்சல் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சுந்தர் ஆகியோர் பாராட்டினர்.
- வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த செந்தில் சமீபத்தில் சொந்த ஊர் திரும்பினார்.
- செந்தில் தூக்குப்போட்ட நிலையில் தோட்டத்தில் பிணமாக தொங்கினார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 40). இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர்.
மனைவி பிரிந்து சென்றார்
வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் சமீபத்தில் சொந்த ஊர் திரும்பினார். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் கிருபாகரன் (40). இவர்கள் 2 பேரும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக பழகினர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக செந்திலை பிரிந்து அவரது மனைவி குமரி மாவட்டம் பால் குளத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
அரிவாள்வெட்டு
இதற்கு கிருபாகரன் தான் காரணம் என்று நினைத்து செந்தில் ஆத்திரத்தில் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் அவரை ஓட ஓட அரிவாளால் வெட்டினர். இந்த அரிவாள் வெட்டு தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் வைரலாக பரவின.
இதில் படுகாயம் அடைந்த கிருபாகரன் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்கொலை
இந்நிலையில் நேற்று இரவு செந்திலை திடீரென காணவில்லை. அவரது உறவினர்கள் அவரை தேடிப் பார்த்தபோது அங்குள்ள தோட்டத்தில் செந்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார்.
சம்பவ இடத்திற்கு கூடங்குளம் போலீசார் விரைந்து சென்று செந்தில் உடலை மீட்டு நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் செந்தில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.இது தொடர்பாக போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
- திருவிழா கொடியேற்றம் நடந்துள்ளதால் அசம்பாவிதங்களை தடுக்கும்விதமாக இன்று காலை கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ தலைமையில் போலீசார் ஆய்வில் ஈடுபட்டனர்.
- கூத்தங்குழி அருகே உள்ள பாத்திமா நகர், சுண்டங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மோப்ப நாயுடன் சோதனையில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை அடுத்த கூத்தங்குழி மீனவ கிராமத்தில் உள்ள பகுதிகளில் நாட்டு வெடிகுண்டுகள் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளனவா? ஆயுதங்கள் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா? என்பது பற்றி அவ்வப்போது போலீசாரால் சோதனை நடத்தப்படுவது வழக்கம்.
அங்கு இரு தரப்பினரிடையே பிரச்சினைகள் இருந்து வருகிறது. சமீபத்தில் திருவிழா கொடியேற்றம் நடந்துள்ளதால் அசம்பாவிதங்களை தடுக்கும்விதமாக இன்று காலை கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ தலைமையில் போலீசார் ஆய்வில் ஈடுபட்டனர். அவர்கள் கூத்தங்குழி அருகே உள்ள பாத்திமா நகர், சுண்டங்காடு உள்ளிட்ட பகுதிகளில் மோப்ப நாயுடன் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடைபெற்றது.
- கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வள்ளியூர் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
- போட்டியில் 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் கைப்பந்து விளையாட்டில் சூப்பர் சீனியர் பிரிவில் ஹார்வேடு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றனர்.
வள்ளியூர்:
கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வள்ளியூர் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டியில் 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் கைப்பந்து விளையாட்டில் சூப்பர் சீனியர் பிரிவில் ஹார்வேடு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ரியான், ஜுடுவின், புகழேந்தி, முத்துகிருஷ்ணன், சாத்ராக், சாரோன், எட்வின், ரினு, யோகேஷ், ரிஜோ, சிவகுரு,சுபிஷ் மற்றும் டஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் டாக்டர் தினேஷ், பள்ளி முதல்வர் முருகேசன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சுந்தர் ஆகியோர் பாராட்டினர்.
- முதல் மற்றும் 2-வது அணு உலைகள் பராமரிப்பு காரணத்திற்காக அவ்வப்போது நிறுத்தப்படும்.
- மின்வெட்டு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதாக மக்கள் அச்சம்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் மின்திறன் கொண்ட 2 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. அதன்மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் 3 மற்றும் 4-வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் 70 சதவீதம் நடந்து முடிந்துவிட்டது. மேலும் 5 மற்றும் 6-வது அணு உலைகள் கட்டுமானத்திற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் மற்றும் 2-வது அணு உலைகள் பராமரிப்பு காரணத்திற்காக அவ்வப்போது நிறுத்தப்படும். அதன்படி 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2-வது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று காலை நிறுத்தப்பட்டது.
இந்த பராமரிப்பு பணிகள் முடிவடைய 60 நாட்கள் வரை ஆகலாம். பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என அணுமின் நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்திற்கு தினமும் கிடைக்க வேண்டிய 562 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் முதலாவது அணு உலை மூலமாக 1,000 மெகாவாட் மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் ஒரு நாள் மின் தேவை 21 ஆயிரம் மெகா வாட்டிற்கும் அதிகமாக தேவைப்படும் சூழ்நிலையில் கூடங்குளத்தில் இருந்து கிடைக்க வேண்டிய 562 மெகா வாட் மின் உற்பத்தி பராமரிப்பு பணி காரணமாக நிறுத்தப்படுவதால் மின்வெட்டு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.






