என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nuclear plant"

    • கூடங்குளம் அணுமின் நிலையம் தென் தமிழ்நாட்டு மக்களின் தலையில் எரிமலையாக அமர்ந்திருக்கிறது.
    • அணுக்கழிவுகளை அணுஉலைக்கு அருகிலுள்ள கடற்கரையைத் தவிர வேறு எங்கும் கொட்டப்போவதில்லை.

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள அணுக்கழிவுகள் பாதுகாப்பாக அகற்றுவது குறித்தும், அதன் ஆபத்து குறித்தும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாராளுமன்ற மாநிலங்களவையில் பேசினார்.

    நேரமில்லா நேரத்தின்போது வைகோ பேசியதாவது:-

    குஜராத் மாநிலத்தில் மிதி-விர்தி கிராமத்திற்கு அருகிலுள்ள பாவ்நகரில் அணுமின் நிலையத்தை நிறுவ ஒன்றிய அரசு ஒரு திட்டம் வகுத்தது. அந்த நேரத்தில், குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி குஜராத் மாநிலத்தில் அனுமதி தர மறுத்தார். குஜராத் மாநிலம் இந்திய பிரதமருக்கு சொந்த மாநிலம். எனவே, அவர் குஜராத்தில் அணுமின் நிலையத்தை நிறுவ ஒருபோதும் முயற்சிக்கவில்லை.

    நவம்பர் 22, 1988 அன்று, அப்போதைய சோவியத் ஒன்றிய அதிபர் கோர்பச்சேவ் இந்தியாவிற்கு வருகை தந்தபோது, அப்போதைய இந்திய பிரதமர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஓர் அறிக்கை வெளியிட்டு உரையாற்றினார்.

    அதில், இந்தியாவும் சோவியத் ஒன்றியமும் இணைந்து, இந்தியாவில் அணுமின் நிலையத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறினார். மக்களவையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டபோது யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ராஜ்யசபாவிலும் யாரும் கேள்வி எழுப்பவில்லை.

    இந்திய பிரதமரிடம் இது குறித்து விளக்கம் கேட்ட ஒரே ஒரு உறுப்பினர் நான்தான். அணுமின் நிலையம் அமைக்க நீங்கள் எந்த இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்று கேட்டேன். பதில் இல்லை. ஆனால் தென் தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதியான கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை அமைக்க நீங்கள் திட்டமிட்டுள்ளீர்கள் என்று கூறினேன். இதுபற்றி அறிந்ததும் கூடங்குளம் பகுதி பொதுமக்களும், மீனவர்களும் கிளர்ந்தெழுந்தனர்.

    அமெரிக்காவின் மூன்று மைல் தீவில் உள்ள அணு உலையிலும், சோவியத் ரஷ்யாவின் செர்னோபிலிலும் அணு உலை பேரழிவுகள் நிகழ்ந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். ஜப்பான் புகுஷிமாவில், மார்ச் 11, 2011 அன்று, அணு பேரழிவு ஏற்பட்டு பலர் இறந்தனர். அணுக் கதிர் பாதிப்பால் மக்கள் இன்றும் அவதிப்படுகிறார்கள்.

    இந்த உண்மைகளை எல்லாம் மறைக்க முயற்சிக்கிறார்கள். ஏதேனும் பேரழிவு ஏற்பட்டால், தென் தமிழ்நாடு முற்றிலுமாக அழிக்கப்படும்.

    கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான மீனவ பெண்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்கள் 18 மாதங்கள் போராடினர். நானும் மூன்று முறை அந்தப் போராட்டங்களில் கலந்து கொண்டேன். போராட்டம் நடத்திய மக்கள் மீது அப்போதைய மாநில அரசால் குற்றவியல் வழக்குகள் தொடரப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் என் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டது.

    கூடங்குளத்தில் ஏற்கனவே நான்கு அணு உலை அலகுகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் இரண்டு அலகுகள் அமைக்க முடிவுசெய்துள்ளனர். மேலும் முழுப் பகுதியும் அணு நரகமாக மாறி வருகிறது.

    பேரழிவு ஏற்பட்டால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள். கற்பனை செய்ய முடியாத அளவு மரணங்கள் நடக்கும்.

    இப்போது எழும் முக்கியமான மில்லியன் டாலர் கேள்வி என்னவென்றால், அவர்கள் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக எங்கே அப்புறப்படுத்தப் போகிறார்கள்? இப்போது அணுக்கழிவுகள் ஆலையிலேயே வைக்கப்பட்டிருக்கிறது. அந்த அணுக் கழிவுகளை கடலில் கொட்டப்போகிறார்கள் என்று நான் அச்சப்படுகின்றேன். ஒரு எரிமலை எங்கள் தலையில் அமர்ந்திருக்கிறது.

    இதை எதிர்த்துப் போராடும் பூவுலக நண்பர்கள் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அதில். அணுமின் நிலையம் 2018ஆம் ஆண்டுக்குள் நிலத்தடி ஆழ்நிலைக் கிடங்கு (DGR) அமைக்க வேண்டும் என்று கூறியது.

    அது அமைக்கப்படாததால், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. உச்ச நீதிமன்றமானது DGR கட்டுவதற்கு ஏப்ரல் 2022 வரை காலகெடு வழங்கியது. ஆனால் இதுவரை அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

    கூடங்குளம் அணுமின் நிலையம் தென் தமிழ்நாட்டு மக்களின் தலையில் எரிமலையாக அமர்ந்திருக்கிறது, இந்த அணுக் கழிவுகளை அணுஉலைக்கு அருகிலுள்ள கடற்கரையைத் தவிர வேறு எங்கும் கொட்டப் போவதில்லை. அணுஉலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதுதான் தென் தமிழக மக்களின் கோரிக்கையாகும். அணுமின் நிலையத்தை மூடவும், வரவிருக்கும் பேரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றவும் நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசையும், பிரதமர் அவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்."

    வைகோ அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்.

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எந்திரத்தில் இருந்து தவறி விழுந்து இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராதாபுரம்:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3, 4-வது அணு உலை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ராமச்சந்திரன் என்பவர் சப்-காண்டிராக்ட் எடுத்து நடத்தி வருகிறார். இவரிடம் புளியம்பட்டியை சேர்ந்த இன்பராஜ் (வயது36). என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று அதிகாலை 3 மணி அளவில் இவர் அங்குள்ள எந்திரத்தில் வால்வுகளை சரி பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் எந்திரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் இன்பராஜை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    வழியிலேயே இன்பராஜ் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கூடங்குளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று இன்பராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

     


    இதுதொடர்பாக கூடங்குளம் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த இன்பராஜுக்கு ஜெபா அன்ன பூர்ணம் என்ற மனைவியும், ஜெபிஷா, ஏஞ்சல் என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே இன்பராஜின் மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள், கிராம மக்கள் ஏராளமானோர் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு இன்று காலை திரண்டு வந்தனர்.

    அணுமின் நிலைய நுழைவு வாயிலில் அமர்ந்து அவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பலியான இன்பராஜ் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது மனைவிக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்திற்கு ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அணுமின் நிலைய நுழைவு வாயிலில் போராட்டம் நடந்ததால் அங்கு பணிக்கு செல்லும் ஊழியர்கள் பாதுகாப்பாக செல்ல அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ரஷியாவை சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்பரேசன், உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை (‘அகடமிக் லோமோனோசோவ்’ என்ற பெயரிலான கப்பல்) உருவாக்கி சாதனை படைத்துள்ளது. #Russia #nuclearplant
    மாஸ்கோ:

    ரஷியாவை சேர்ந்த ரொஸாட்டம் ஸ்டேட் அணுசக்தி கார்ப்பரேசன், உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை (‘அகடமிக் லோமோனோசோவ்’ என்ற பெயரிலான கப்பல்) உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

    இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அலெக்ஸி லிக்காசெவ் கூறும்போது, “உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தின் அணு உலையினுடைய செயல்பாட்டு சோதனைகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். 10 சதவீத திறனுடன் இந்த அணு உலை தொடங்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்டபடி ரஷியாவின் பெவெக் நகரத்தை அடுத்த இலையுதிர் காலத்திற்குள் சென்று அடைந்து உற்பத்தியை தொடங்கும். மிகவும் தொலைதூரத்தில் உள்ள பின்தங்கிய பகுதிகளுக்கு மின்சார வினியோகம் செய்வதில் இந்த அணு உலை முக்கிய பங்கு வகிக்கும்” என்று கூறினார்.

    மேலும், “இந்த புதிய அணு உலை, ரஷிய ஆர்க்டிக் பகுதிகளுக்கு மட்டுமல்லாமல், உலகில் உள்ள எண்ணற்ற நாடுகளுக்கு நல்ல தீர்வாக அமையும். இந்த திட்டம் வெற்றி பெற்றிருப்பதையடுத்து சிறிய அணு உலைகளுக்கான தேவை உலகம் முழுவதும் வெகுவாக அதிகரிக்கும். உலகின் அணு உலை தொழில் நுட்ப சந்தையில் ரஷியா முதலிடத்தில் இருக்கும்” எனவும் அவர் தெரிவித்தார்.#Russia #nuclearplant
    ×