

நெல்லை:
கூடங்குளம் அருகே உள்ள சிவகாமிபுரத்தை சேர்ந்தவர் முத்துகுருசாமி. இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி கலைசெல்வி(வயது 40). நேற்று இரவு 2 பேரும் வழக்கம்போல் தூங்க சென்றனர்.
நள்ளிரவில் முத்து குருசாமியை யாரோ போனில் அழைத்துள்ளனர். இதையடுத்து அவர் வீட்டின் கதவை திறந்து போட்டு விட்டு ஆட்டோவை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்.
இந்நிலையில் அதிகாலையில் அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் நன்றாக தூங்கி கொண்டிருந்த கலைசெல்வியின் அருகில் சென்றார். அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். உடனே விழித்துக்கொண்ட கலைசெல்வி திருடன் திருடன் என கத்தி கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர் தப்பி சென்றார்.
இதுகுறித்து கலைசெல்வி கூடங்குளம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர். இதுதொடர்பாக அந்த தெருவில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.