என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்ஆப்பிரிக்கா"

    • சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.
    • இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடக்கிறது.

    டெஸ்ட் தொடரை இழந்ததால் விமர்சனத்திற்குள்ளான இந்திய அணியினர் ஒரு நாள் தொடரை வெற்றியோடு தொடங்கி பரிகாரம் தேடிக் கொண்டனர். விராட் கோலியின் சதமும், ரோகித் சர்மா, கேப்டன் லோகேஷ் ராகுலின் அரைசதமும் 349 ரன்கள் குவிக்க உதவியதோடு வெற்றிக்கும் வித்திட்டது. பந்து வீச்சில் ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் கலக்கினர். இன்றைய மோதலிலும் கோலி, ரோகித் சர்மாவின் ரன்வேட்டை தொடருமா? இந்த ஆட்டத்தோடு இந்திய அணி தொடரை சொந்தமாக்கி விடுமா? என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

    முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 11 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த போதிலும் மார்கோ யான்சென் (70 ரன்), மேத்யூ பிரீட்ஸ்கே (72 ரன்), கார்பின் பாஷ் (67 ரன்), ஆகியோரது அதிரடியால் இலக்கை நெருங்கி வந்தது. எக்ஸ்டிரா வகையில் அதிகமான ரன்களை (23) விட்டுக்கொடுத்தது பின்னடைவாக அமைந்தது. இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். உடல்நலக்குறைவால் முதல் ஆட்டத்தில் ஓய்வு எடுத்த கேப்டன் பவுமா அணிக்கு திரும்புகிறார். அவரது வருகை அந்த அணியின் பேட்டிங் வரிசையை பலப்படுத்தும்.

    'பொதுவாக நான் டாப்-3 வரிசையில் ஆடுவேன். ஆனால் இப்போது எந்த இடம் காலியாக உள்ளதோ அந்த இடத்தில் களம் காணுவேன்' என பவுமா குறிப்பிட்டார். சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜிக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. இதனால் சுப்ராயனுக்கு இடமிருக்காது. இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் தென்ஆப்பிரிக்க வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    போட்டி நடக்கும் ராய்ப்பூரில் இதற்கு முன்பு ஒரே ஒரு, ஒரு நாள் ஆட்டம் நடந்துள்ளது. 2023-ம் ஆண்டு நடந்த அந்த ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை 108 ரன்னில் சுருட்டி எளிதில் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.

    போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட் அல்லது ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுல் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப்சிங், பிரசித் கிருஷ்ணா.

    தென்ஆப்பிரிக்கா: எய்டன் மார்க்ரம், குயின்டான் டி காக் அல்லது ரையான் ரிக்கெல்டன், பவுமா (கேப்டன்), மேத்யூ பிரீட்ஸ்கே, டோனி டி ஜோர்ஜி, டிவால்ட் பிரேவிஸ், மார்கோ யான்சென், கார்பின் பாஷ், கேஷவ் மகராஜ், நன்ரே பர்கர், பார்த்மேன்.

    பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • தனி விமானம் மூலம் 153 பாலஸ்தீனர்கள் ஜோகன்னஸ்பர்க் விமான நிலையம் வந்தடைந்தனர்.
    • அதிகாரிகள் அவர்களை தரையிறங்க அனுமதிக்காமல் விமானத்திலேயே காத்திருக்க வைத்தனர்.

    150-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களுடன் ஜோகன்னஸ்பர்க் சர்வதேச விமானம நிலையம் வந்த தனி விமானத்தில் (charter plane) இருந்து, அவர்களை இறங்க அனுமதிக்காததால் 12 மணி நேரம் உள்ளேயே இருக்கும் அவல நிலை ஏற்பட்டது.

    தென்ஆப்பிரிக்கா மாநிலத்தில் உள்ள ஜோகன்னஸ்பர்க் ஓ.ஆர். டாம்போ சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை தனி விமானம் ஒன்று தரையிறங்கியது.

    இந்த விமானத்தில் 9 மாத கர்ப்பிணி உள்பட 153 பாலஸ்தீனர்கள் இருந்தனர். அவர்களிடம் இஸ்ரேல் முத்திரை கொண்ட ஆவணங்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், தென்ஆப்பிரிக்காவில் எங்கு தங்குவார்கள் உள்ளிட்ட எந்த தகவலும் இல்லை.

    இதனால் அதிகாரிகள் அவர்களை விமானத்தில் இருந்து இறக்க அனுமதிக்கவில்லை. சுமார் 12 மணி நேரம் விமானத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வறையில் கூட தங்கவைக்கப்படவில்லை.

    சுமார் 12 மணி நேரம் கழித்து தென்ஆப்பிரிக்க மந்திரி தலையிட, அவர்கள் தரையிறக்கப்பட்டுள்ளனர். பின்னர் தொண்டு நிறுவனம் ஒன்று அவர்களுக்கு தங்க இடம் கொடுக்க முன்வந்ததால், அவர்கள் தென்ஆப்பிரிக்கா தங்க அனுமதிக்கப்பட்டனர்.

    இஸ்ரேல்- காசா இடையிலான சண்டையில் காசா மக்களுக்காக தென்ஆப்பிரிக்கா குரல் கொடுத்தது. அப்படி குரல் கொடுத்த தென்ஆப்பிரிக்கா, இவ்வாறு செயல்பட்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு விமானங்களில் இதுபோன்று பாலஸ்தீனர்கள் வந்துள்ளனர். அவர்கள் காசாவில் இருந்து வந்தவர்களாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால், இவர்களுக்கான தனி விமானம் ஏற்பாடு செய்தது யார் என்பது தெரியவில்லை.

    இந்த விமானம் கென்யாவின் நைரோபியில் தரையிறங்கிய பின்னர், ஜோகன்னஸ்பர்க் வந்துள்ளது.

    • வெள்ளை ஆப்பிரிக்க விவசாயிகள் துன்புறுத்தப்படுவதற்கும் தாக்கப்படுவதற்கும் தென் ஆப்பிரிக்க அரசு அனுமதி அளிக்கிறது.
    • டிரம்ப்பின் குற்றச்சாட்டை தென் ஆப்பிரிக்க அதிபர் திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

    ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் வருகிற 22, 23-ந்தேதிகளில் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிற விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவில் ஜி-20 மாநாடு நடைபெறுவது முற்றிலும் அவமானகரமானது. அங்கு வெள்ளை நிற விவசாயிகளிடம் இருந்து நிலம் பறிக்கப்பட்டு தாக்குதல், கொலை செய்யப்படுகின்றனர்.

    அங்கு சிறுபான்மையினராக உள்ள வெள்ளை ஆப்பிரிக்க விவசாயிகள் துன்புறுத்தப்படுவதற்கும் தாக்கப்படுவதற்கும் தென் ஆப்பிரிக்க அரசு அனுமதி அளிக்கிறது. இதனால் அமெரிக்காவில் இருந்து ஜி 20 உச்சி மாநாட்டில் யாரும் பங்கேற்க மாட்டார்கள்' என்று தெரிவித்தார்.

    முன்னதாக ஜி-20 மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என்று டிரம்ப் கூறியிருந்தார். தற்போது இந்த மாநாட்டை அமெரிக்கா முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளார்.

    டிரம்ப்பின் இந்த குற்றச்சாட்டை தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா திட்டவட்டமாக மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது
    • இந்திய வீராங்கனைகள் தலைமை பயிற்சியாளர் அமோல் முஜும்தார் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.

    மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

    299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

    45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    சாம்பியன் வென்ற நிலையில், இந்திய வீராங்கனைகள் தலைமை பயிற்சியாளர் அமோல் முஜும்தார் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.

    இதனையடுத்து இணையத்தில் அமோல் முஜும்தாரின் புகைப்படங்கள் வைரலாகின. யார் இந்த அமோல் முஜும்தார் என்ற பலரும் இணையத்தில் அவரை தேடி வருகின்றனர்.

    யார் இந்த அமோல் முஜும்தார்?

    * அமோல் முஜும்தார் 1974 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.

    * அமோல் முஜும்தார் தான் அறிமுகமான முதல் ரஞ்சி போட்டியிலேயே 260 ரன்கள் குவித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அந்த காலத்தில் உலக அளவில் அறிமுக போட்டியில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

    * அமோல் முஜும்தார் 171 முதல்தர போட்டிகளில் விளையாடி 30 சதங்கள், 60 அரைசதங்களுடன் 11167 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 48.13 ஆகும். 113 'லிஸ்ட் ஏ' போட்டிகளில் 3286 ரன்கள் சேர்த்துள்ளார்.

    * உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும் இந்திய ஆடவர் அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்திய அணியின் மிடில் ஆர்டரில் டிராவிட், சச்சின், வி.வி.எக்ஸ். லட்சுமண் மற்றும் கங்குலி ஆகியோர் இருந்த காலத்தில் அவர் விளையாடியதே அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு காரணம்.

    * அமோல் முஜும்தார் 2014 ஆம் ஆண்டில், முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர் பயிற்சியாளர் என்ற புதிய அவதாரம் எடுத்தார்

    * தென் ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் ஐ.பி.எல். இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளாகவும் பணியாற்றினார்.

    * 2023 ஆம் ஆண்டு இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர்கா பொறுப்பேற்றார்.

    * கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 11 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக, அவர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றுள்ளார்.

    • கெய்ன்ஸ் ஸ்டேடியத்தில் சர்வதேச 20 ஓவர் போட்டி நடப்பது இதுவே முதல் முறையாகும்.
    • உடல் நலக்குறைவால் முந்தைய ஆட்டத்தில் ஓய்வில் இருந்த விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் அணிக்கு திரும்புகிறார்.

    மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டத்தில் 17 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவும், 2-வது ஆட்டத்தில் 53 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கெய்ன்ஸ் நகரில் இன்று நடக்கிறது. இதையொட்டி வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    முதல் ஆட்டத்தில் டிம் டேவிட்டின் அதிரடி அரைசதமும், ஹேசில்வுட், பென் துவார்ஷூயிஸ் ஆகியோரது அபார பந்து வீச்சும் (தலா 3 விக்கெட்) ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியை தேடித்தந்தன. அடுத்த ஆட்டத்தில் டிவால்ட் பிரேவிசின் மின்னல் வேக சதத்தின் (56 பந்தில் 125 ரன்) மூலம் தென்ஆப்பிரிக்கா பதிலடி கொடுத்தது.

    ஆஸ்திரேலிய அணியில் இரு ஆட்டத்திலும் தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட், கேப்டன் மிட்செல் மார்ஷ் சரியாக ஆடாதது பின்னடைவாகும். தவறுகளை திருத்திக் கொண்டு இந்த ஆட்டத்தில் அதிரடியாக ரன் திரட்ட முயற்சிப்பார்கள். உடல் நலக்குறைவால் முந்தைய ஆட்டத்தில் ஓய்வில் இருந்த விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் அணிக்கு திரும்புகிறார்.

    தென்ஆப்பிரிக்க அணி 2-வது ஆட்டத்தில் கிடைத்த வெற்றி உத்வேகத்துடன் தொடரை கைப்பற்ற வரிந்து கட்டுகிறது. இதனால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

    கெய்ன்ஸ் ஸ்டேடியத்தில் சர்வதேச 20 ஓவர் போட்டி நடப்பது இதுவே முதல் முறையாகும். ஒரு நாள் போட்டி நடந்து கூட 3 ஆண்டுகள் ஆகி விட்டது. இதனால் இதன் ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பதை கணிப்பது கடினம். இருப்பினும் இங்கு நடந்த பிக்பாஷ் 20 ஓவர் போட்டிகளின் போது ஓரளவு சுழற்பந்து வீச்சு எடுபட்டதால் இரு அணியினரும் சுழலுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், கேமரூன் கிரீன், டிம் டேவிட், மேக்ஸ்வெல், ஆரோன் ஹார்டி, பென் துவார்ஷூயிஸ், நாதன் எலிஸ், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட் அல்லது மேத்யூ குனேமேன்.

    தென்ஆப்பிரிக்கா: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ரையான் ரிக்கெல்டன், லுவான் டிரே பிரிட்டோரியஸ், டிவால்ட் பிரேவிஸ், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், வான்டெர் டஸன், கார்பின் பாஷ் அல்லது ஜார்ஜ் லிண்டே, ககிசோ ரபடா, இன்கபா பீட்டர் அல்லது செனுரன் முத்துசாமி, கிவெனா மபகா, இங்கிடி அல்லது நன்ரே பர்கர்

    இந்திய நேரப்படி பிற்பகல் 2.45 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ஆஸ்திரேலிய அணியில் பேட்டிங்கில் அதிரடி ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட், டிம் டேவிட், மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஸ் என்று பெரிய பட்டாளமே இருக்கிறது.
    • வலுவான இரு அணிகளும் மல்லுக்கட்டும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    டார்வின்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டார்வினில் இன்று நடக்கிறது.

    மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அண்மையில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக வென்று அசத்திய கையோடு இந்த போட்டியில் களம் இறங்குகிறது.

    ஆஸ்திரேலிய அணியில் பேட்டிங்கில் அதிரடி ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட், டிம் டேவிட், மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஸ் என்று பெரிய பட்டாளமே இருக்கிறது. பந்து வீச்சில் ஹேசில்வுட், நாதன் எலிஸ், பென் துவார்ஷூயிஸ் மிரட்டக்கூடியவர்கள். தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் விளையாடுவார்கள் என்று ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அரங்கேறும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான அணியை கட்டமைக்கும் முயற்சியை அந்த அணி இந்த தொடரில் இருந்தே தொடங்குகிறது.

    தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தமட்டில் கடந்த ஜூன் மாதம் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. அதன் பிறகு ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற தென்ஆப்பிரிக்கா சமீபத்தில் ஜிம்பாப்வேயில் நடந்த 3 நாடுகள் பங்கேற்ற 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்திடம் 3 ஆட்டங்களில் தோல்வியை தழுவியது. அந்த தோல்வியில் இருந்து விடுபட்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு சிறப்பாக தயாராகும் ஆர்வத்தில் உள்ளது.

    ஜிம்பாப்வேயில் நடந்த 20 ஓவர் போட்டியில் ஆடாத கேப்டன் மார்க்ரம், ரையான் ரிக்கெல்டன், வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா ஆகியோர் இந்த தொடருக்கு திரும்பி இருப்பது தென்ஆப்பிரிக்க அணிக்கு கூடுதல் வலுசேர்க்கும். மேலும் பேட்டிங்கில் டிரிஸ்டான் ஸ்டப்ஸ், லூஹான் டி பிரிட்டோரியஸ், பந்து வீச்சில் கார்பின் போஷ், லுங்கி இங்கிடி ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    உள்ளூர் சூழலை கச்சிதமாக பயன்படுத்தி ஆஸ்திரேலிய அணி தனது ஆதிக்கத்தை தொடர முனைப்பு காட்டும். ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்டிங்கை கட்டுப்படுத்துவதை பொறுத்தே தென்ஆப்பிரிகாவின் வெற்றி வாய்ப்பு அமையும் எனலாம். வலுவான இரு அணிகளும் மல்லுக்கட்டும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை சர்வதேச 20 ஓவர் போட்டியில் 25 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஆஸ்திரேலியா 17 ஆட்டங்களிலும், தென்ஆப்பிரிக்கா 8 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், கேமரூன் கிரீன், டிம் டேவிட், மேக்ஸ்வெல், மிட்செல் ஓவன், பென் துவார்ஷூயிஸ், நாதன் எலிஸ், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.

    தென்ஆப்பிரிக்கா: மார்க்ரம் (கேப்டன்), ரையான் ரிக்கெல்டன், வான்டெர் டஸன், டிவால்ட் பிரேவிஸ், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ஜார்ஜ் லிண்டே, பிரினெலன் சுப்ராயன், கார்பின் போஷ், ககிசோ ரபடா, நன்ரே பர்கர், லுங்கி இங்கிடி.

    இந்திய நேரப்படி பிற்பகல் 2.45 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
    • 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி சாம்பியன் ஆகியுள்ளது.

    தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.

    இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.

    இந்நிலையில், தென்னாப்ரிக்க அணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், " மகத்தான வெற்றி பெற்ற தென்னாப்ரிக்காவுக்கு வாழ்த்துகள். அனைத்து சவால்களையும் எதிர்த்த கேப்டன் பவுமாவுக்கு சிறப்பு பாராட்டு. அற்புதமான ஆட்டத்தால், விமர்சனம் செய்த வாய்களை அடைத்துவிட்டீர்கள்.

    எய்டன் மார்க்ரமின் பங்களிப்பை பாராட்டியே ஆகவேண்டும். லார்ட்ஸ் மைதானத்தில் நீங்கள் பெற்ற வெற்றி, சென்னை வரை எதிரொலிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    • டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரபடா 9 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்
    • ககிசோ ரபாடா அசாத்தியமான வீரர்

    தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.

    இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.

    சாம்பியன் பட்டம் வென்ற பின்பு பேசிய கேப்டன் பவுமா, "ககிசோ ரபாடா அசாத்தியமான வீரர். சில நாட்களுக்கு முன்பு, நான் ICC HALL OF FAME அறிமுக விழாவில் கலந்து கொண்டேன். இன்னும் சில ஆண்டுகளில் ரபடா அதில் இணைந்துவிடுவார்" என்று புகாலாராம் சூட்டினார்.

    டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரபடா 9 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
    • தென் ஆப்பிரிக்கா அணியில் 2 பேர் கறுப்பினத்தவர்களாக இருக்க வேண்டும் என இ டஒதுக்கீடு வகுக்கப்பட்டுள்ளது.

    தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.

    இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.

    இதுவரை டெம்பா தலைமையில் தென்ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் போட்டிகளில் தோல்வியே அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    தென் ஆப்பிரிக்கா அணியில் 2016-ம் ஆண்டு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு, அந்த அணியில் 6 வீரர்கள் வெள்ளை இனத்தவர்கள் அல்லாதவர்களாக இருக்க வேண்டும் 2 பேர் கறுப்பினத்தவர்களாக இருக்க வேண்டும் என ஒதுக்கீடு வகுக்கப்பட்டுள்ளது.

    இந்த விதிமுறையின்படி தான் ரபடா , கேப்டன் பவுமா, லுங்கி இங்கிடி போன்ற கறுப்பின வீரர்கள் தென் ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    பவுமா தலைமையில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது.

    இதனையடுத்து, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் இடஒதுக்கீடு இருப்பதால்தான் அந்த அணியால் ஐசிசி கோப்பையை வெற்றி பெற முடியவில்லை என்று பலரும் பவுமாவை விமர்சித்தனர்.

    குறிப்பாக நிறம், உயரம் உள்ளிட்டவற்றால் பவுமா இணையத்தில் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டார்.

    இந்நிலையில், டெம்பா பவுமாவை விமர்சித்தவர்களுக்கு உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்று அவர் பதிலடி கொடுத்துள்ளார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    முன்னதாக தனது பெயர் குறித்து பேசிய பவுமா, "என்னுடைய பாட்டி எனக்கு டெம்பா என்று பெயர் வைத்தார். அதற்கு நம்பிக்கை என்று அர்த்தம்" என கூறினார். அந்த நம்பிக்கை தான் தென் ஆப்பிரிக்கா அணியின் 27 ஆண்டு கால ஏக்கத்திற்கு முடிவு கட்டியுள்ளது. 

    • தென்ஆப்பிரிக்கா அணி லீக் சுற்றில் நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.
    • தென்ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்து வெற்றி பெறும் ஆர்வத்தில் அமெரிக்கா உள்ளது.

    வாஷிங்டன்:

    20 ஓவர் உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    20 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்றன. அவை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிந்தது.

    சூப்பர்-8 சுற்றுக்கு இந்தியா, அமெரிக்கா (குரூப் ஏ) ஆஸ்திரேலியா, இங்கிலாந்து (பி), ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் (சி), தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் (டி) ஆகிய அணிகள் தகுதி பெற்றன. முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூசிலாந்து, நெதர்லாந்து, அயர்லாந்து, கனடா, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், உகாண்டா, பப்புவா நியூ கினியா, நேபாளம் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

    சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகளும், குரூப் 2-ல் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.


    சூப்பர்-8 சுற்று நாளை தொடங்குகிறது. இதில் நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. தென் ஆப்பிரிக்கா அணி லீக் சுற்றில் நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.

    அந்த அணி பேட்டிங்கில் டி காக்,ஹென்ரிக்ஸ், கேப்டன் மார்க்ரம், கிளாசன், ஸ்டெப்ஸ், டேவிட் மில்லர் ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சில் நார்ஜே, ரபடா, மார்கோ ஜேனசன் ஆகியோர் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா தனது வெற்றி உத்வேகத்தை தொடரும் முனைப்பில் உள்ளது.

    முதல் முறையாக உலக கோப்பையில் விளையாடும் அமெரிக்கா அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தி உள்ளது. லீக் சுற்றில் பாகிஸ்தான், கனடா ஆகிய அணிகளை வீழ்த்தியது. இந்தியாவிடம் தோற்றது. அயர்லாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து ஆனது.

    அந்த அணியில் ஸ்டீவன் டெய்லர், ஆரோன் ஜோன்ஸ், ஆண்ட்ரிஸ் கவுஸ், மோனாத் பட்டேல், நிதிஷ்குமார், கோரி ஆண்டர்சன், அலிகான், சவுரவ் நேத்ராவல்கர் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்து வெற்றி பெறும் ஆர்வத்தில் அமெரிக்கா உள்ளது.

    • தென் ஆப்பிரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • 4 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிகா அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு உள்ள நிலையில், கடைசி சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்கா வீரர் டேல் ஸ்டெய்னின் பந்து வீச்சு சாதனையை அன்ரிச் நோர்ஜே முறியடித்துள்ளார்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. தென் ஆப்பிரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அன்ரிச் நோர்ஜே ஒரு விக்கெட்டை எடுத்தபோது அவர் டேல் ஸ்டெய்னின் சாதனையை முறியடித்துள்ளார்.

    தென்ஆப்பிரிக்கா வீரரான டேல் ஸ்டெய்ன், டி20 உலக கோப்பை போட்டிகளில் 30 விக்கெட்டுக்களை எடுத்து இருந்தார். தற்போது நோர்ஜே 31 விக்கெட்டுகளுடன் அவரை முந்தியுள்ளார்.

    இந்த போட்டியில், அன்ரிச் நோர்ஜே 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் தொடரில் இதுவரை அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    டி20 உலகக் கோப்பையில் அன்ரிச் நோர்ஜே 16 போட்டிகளில் 31 விக்கெட்டுகளும், டேல் ஸ்டெய்ன் 23 போட்டிகளில் 30 விக்கெட்டுகளும், மோர்னே மோர்கல் 17 போட்டிகளில் 24 விக்கெட்டுகளும், ரபாடா 19 போட்டிகளில் 24 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.

    4 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிகா அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு உள்ள நிலையில், கடைசி சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    • இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.
    • வெற்றி வாகை சூடும் அணிக்கு ரூ.20¼ கோடி பரிசுத்தொகை.

    பிரிட்ஜ்டவுன்:

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 1-ம்தேதி தொடங்கியது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 20 அணிகள் பங்கேற்றன.

    லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரைஇறுதியை எட்டின.

    அரைஇறுதியில் தென்ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், இந்திய அணி 68 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தையும் விரட்டியடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

    இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், தென்ஆப்பிரிக்காவும் பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இந்தியா எப்படி?

    முன்னாள் சாம்பியனும், 'நம்பர் ஒன்' அணியுமான இந்தியா, நடப்பு தொடரில் தோல்வி பக்கமே செல்லாமல் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது.

    லீக்கில் பாகிஸ்தான் உள்பட 3 அணிகளையும், சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 3 அணிகளையும் தோற்கடித்தது. கனடாவுக்கு எதிரான லீக் மட்டும் மழையால் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது.

    அரைஇறுதியில் குல்தீப், அக்ஷர் பட்டேலின் சுழல் ஜாலத்தால் இங்கிலாந்தை போட்டுத்தாக்கிய இந்தியா அதே உத்வேகத்துடன் தென்ஆப்பிரிக்காவையும் எதிர்கொள்ள ஆயத்தமாக உள்ளது.

    கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் கடந்த இரு ஆட்டங்களில் பேட்டிங்கில் அசத்தினர். ஆனால் விராட் கோலியின் செயல்பாடு தொடர்ந்து கவலைக்குரியதாக இருக்கிறது. 7 ஆட்டங்களில் 75 ரன் மட்டுமே எடுத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர் வரிசைக்கு தாவிய பிறகு அவரது இயல்பான பேட்டிங்கே காணாமல் போய் விட்டது.

    இருப்பினும் அவருக்கு ஆதரவாக உள்ள கேப்டன் ரோகித் சர்மா, 'கோலியின் தரம் குறித்து எங்களுக்கு தெரியும். 15 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடுபவருக்கு பார்ம் ஒரு பிரச்சினையே இல்லை. அனேகமாக இறுதிப்போட்டியில் ஒட்டுமொத்தமாக தனது சிறந்த இன்னிங்சை வெளிப்படுத்துவார்' என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

    இதே போல் ஷிவம் துபேவும் கணிசமாக ரன் சேர்க்க வேண்டியது அவசியமாகும். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (13 விக்கெட்), அர்ஷ்தீப்சிங் (15), குல்தீப் யாதவ் (10), அக்ஷர் பட்டேல் பிரமாதப்படுத்துகிறார்கள்.

    கடந்த ஆண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 50 ஓவர் உலகக் கோப்பை இரண்டிலும் இறுதிப்போட்டியில் கோட்டை விட்ட இந்தியா இந்த முறை கோப்பையை கையில் ஏந்தி நீண்ட கால ஏக்கத்தை தணிக்குமா என்பதே ரசிகர்களின் பேராவலாகும். விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு இதுவே கடைசி 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியாகும். அதனால் அவர்களும் வெற்றியுடன் நிறைவு செய்ய வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுவார்கள்.

    2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை உச்சிமுகர்ந்த பிறகு இந்தியா எந்த ஐ.சி.சி. கோப்பையும் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    தென்ஆப்பிரிக்கா

    உலக தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் தென்ஆப்பிரிக்க அணி மீது ஆரம்பத்தில் பெரிய அளவில் எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. உலகக் கோப்பைக்கு முன்பாக 20 ஓவர் கிரிக்கெட்டில் 11 ஆட்டங்களில் ஆடி 9-ல் தோற்று இருந்தது.

    ஆனால் உலகக் கோப்பைக்குள் நுழைந்ததும் பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளங்கள் அவர்களுக்கு புதுதெம்பை கொடுத்தது. லீக்கில் 4 வெற்றி, சூப்பர் 8 சுற்றில் 3 வெற்றி, அரைஇறுதி என்று அந்த அணியும் சறுக்கலின்றி வீறுநடை போடுகிறது.

    அது மட்டுமின்றி உலகக் கோப்பை போட்டி ஒன்றில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். இதற்கு முன்பு அரைஇறுதியை தாண்டியதில்லை. அவர்களின் பேட்டிங் சீரற்றதாக காணப்பட்டாலும் ககிசோ ரபடா (12 விக்கெட்), ஷம்சி (11), அன்ரிச் நோர்டியா (13) மார்கோ யான்சென், கேஷவ் மகராஜ் ஆகிய பந்து வீச்சு கூட்டணி அவர்களுக்கு பக்கபலமாக இருந்து வெற்றியை தேடிக்கொடுத்திருக்கிறது.

    இதில் அரைஇறுதியில் ஆப்கானிஸ்தானை 56 ரன்னில் சுருட்டியது கவனிக்கத்தக்கது. பந்து வீச்சில் வலுவாக உள்ள நிலையில் குயின்டான் டி காக், கிளாசென், மில்லர், கேப்டன் மார்க்ரம், ஹென்ரிக்ஸ் ஆகியோரது பேட்டிங் ஒருசேர கிளிக் ஆகும் பட்சத்தில், இன்னும் அபாயகரமான அணியாக மாறி விடுவார்கள். அதனால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    மொத்தத்தில் இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். ஆனால் நெருக்கடியை திறம்பட சமாளிக்கும் அணிக்கே வெற்றி வாய்ப்பு கிட்டும்.

    தென்ஆப்பிரிக்காவின் உலகக் கோப்பை கனவு நனவாகுமா? வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் உலகக் கோப்பையை வெல்லும் முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்தியா வசப்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    இந்த மைதானத்தை பொறுத்தவரை நடப்பு தொடரில் இங்கு 8 ஆட்டங்கள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 181 ரன்கள் எடுத்து வெற்றி கண்ட ஆட்டமும் அடங்கும். அந்த அனுபவம் இந்தியாவுக்கு கூடுதல் அனுகூலமாக இருக்கும்.

    20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 14-ல் இந்தியாவும், 11-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    இன்றைய ஆட்டத்தில் வெற்றி வாகை சூடும் அணிக்கு ரூ.20¼ கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.10½ கோடி கிடைக்கும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: விராட் கோலி, ரோகித் சர்மா (கேப்டன்), ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப்சிங், பும்ரா.

    தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், ரீஜா ஹென்ரிக்ஸ், மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ யான்சென், கேஷவ் மகராஜ், ககிசோ ரபடா, அன்ரிச் நோர்டியா, தப்ரைஸ் ஷம்சி.

    இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டி.டி. ஸ்போர்ட்ஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    ×