என் மலர்
விளையாட்டு

முதல் டி20 போட்டி: இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்
- 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் இந்தியா வலுவான அணியாக திகழ்கிறது.
- 2015-ம் ஆண்டுக்கு பிறகு தென்ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்றதில்லை.
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய தென்ஆப்பிரிக்கா ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.
இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
பிப்ரவரி, மார்ச் மாதம் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி மொத்தம் பத்து 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. அவற்றில் இந்த தொடரும் ஒன்று. உலகக் கோப்பை போட்டிக்கான கனகச்சிதமான அணியை அடையாளம் காண்பதற்கு இந்த தொடர் பக்கபலமாக இருக்கும் என்பதால் அந்த வகையில் இந்த போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
20 ஓவர் வடிவிலான கிரிக்கெட்டில் இந்தியா வலுவான அணியாக திகழ்கிறது. கடந்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக எட்டு 20 ஓவர் தொடர்களை கைப்பற்றி இருக்கிறது. இதில் ஆசிய கோப்பை மற்றும் சமீபத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதும் அடங்கும். காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில் அணிக்கு திரும்பியுள்ளனர். மற்றபடி அணியில் பெரிய அளவில் மாற்றம் ஏதுமில்லை. கேப்டன் சூர்யகுமார் யாதவின் பார்ம் தான் சற்று கவலைக்குரியதாக உள்ளது. அவர் கடைசியாக களம் கண்ட 18 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அவரும் கணிசமாக ரன் குவித்தால் இந்தியாவின் பேட்டிங் வரிசை இன்னும் வலிமையடையும். 'நம்பர் ஒன்' பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா சூப்பர் பார்மில் உள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய அவர் அண்மையில் சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்டில் பெங்கால் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 52 பந்துகளில் 148 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். இந்த தொடரிலும் அவரது அதிரடி ஜாலத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப்சிங், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். பும்ரா இன்னும் ஒரு விக்கெட் எடுத்தால் 100 விக்கெட் மைல்கல்லை எட்டுவார். விக்கெட் கீப்பர் இடத்திற்கு சஞ்சு சாம்சன், ஜிதேஷ் ஷர்மா இடையே போட்டி நிலவுகிறது.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'இப்போது ஹர்திக் பாண்ட்யா, சுப்மன் கில் இருவரையும் பார்ப்பதற்கு நல்ல ஆரோக்கியத்துடன், உடல்தகுதியுடன் இருக்கிறார்கள். ஹர்திக் பாண்ட்யாவின் வருகை அணியை சரியான கலவையில் வைத்துக் கொள்வதற்கு வழிவகுக்கும். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் புதிய பந்தில் அருமையாக பந்து வீசினார். அவரது அனுபவம் அணிக்கு உதவிகரமாக இருக்கும்.
2026-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான எங்களது தயாரிப்பு, 2024-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற உடனே தொடங்கி விட்டது. அதில் இருந்து சில புதிய விஷயங்களை முயற்சித்து பார்த்துள்ளோம். அவை அணிக்கு நன்றாகவே கைகொடுத்துள்ளது. கடைசியாக விளையாடிய 5-6 தொடர்களில் ஒரே மாதிரியான அணி கலவையுடன் விளையாடி வெற்றி பெற்றுள்ளோம். அதாவது அணியில் பெரிய அளவில் மாற்றம் செய்ததில்லை. எல்லாமே நன்றாக சென்று கொண்டிருக்கிறது. அதை தொடருவோம்' என்றார்.
தென்ஆப்பிரிக்க அணி எய்டன் மார்க்ரம் தலைமையில் அடியெடுத்து வைக்கிறது. டிவால்ட் பிரேவிஸ், குயின்டான் டி காக், கார்பின் பாஷ், ரீஜா ஹென்ரிக்ஸ் என 20 ஓவர் கிரிக்கெட்டுக்குரிய அதிரடி பட்டாளங்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். மூத்த பேட்ஸ்மேன் டேவிட் மில்லர், வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்டியா நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு வந்துள்ளனர். கேஷவ் மகராஜ், மபகா, இங்கிடி, மார்கோ யான்சென் ஆகியோர் பந்து வீச்சு தாக்குதலுக்கு ஆயத்தமாக உள்ளனர்.
2015-ம் ஆண்டுக்கு பிறகு தென்ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்றதில்லை. அந்த நீண்ட கால ஏக்கத்தை தணிக்கும் வேட்கையில் உள்ளனர். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
அந்த அணியின் கேப்டன் மார்க்ரம் கூறுகையில், 'ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்து ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி உள்ளேன். சிறந்த வீரர். உண்மையிலேயே நன்றாக பேட்டிங் செய்யக்கூடியவர். தனிநபராக அணிக்கு வெற்றியை தேடித்தரக்கூடிய திறமைசாலி. அவரது விக்கெட் எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை. அவரது விக்கெட்டை சீக்கிரம் வீழ்த்துவோம் என்று நம்புகிறேன். இந்த போட்டிக்கு என்று பிரத்யேக வியூகம் எதுவும் தீட்டவில்லை. 20 ஓவர் கிரிக்கெட் என்றாலே குதூகலப்படுத்தும் வடிவமாகும். நாங்களும் அந்த பாணியிலேயே விளையாட விரும்புகிறோம். வீரர்கள் அழுத்தமின்றி உற்சாகமாக விளையாடி தங்களது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும்' என்றார்.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 31 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 18-ல் இந்தியாவும், 12-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
போட்டி நடக்கும் கட்டாக்கில் இந்திய அணி மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றியும், 2-ல் தோல்வியும் அடைந்துள்ளது. இரு தோல்வியும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சந்தித்தவையாகும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன் அல்லது ஜிதேஷ் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், ஹர்ஷித் ராணா அல்லது வாஷிங்டன் சுந்தர் அல்லது ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், மார்க்ரம், டிவால்ட் பிரேவிஸ், ரீஜா ஹென்ரிக்ஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், கார்பின் பாஷ் அல்லது ஜார்ஜ் லின்டே, மார்கோ யான்சென், கேஷவ் மகராஜ், இங்கிடி, அன்ரிச் நோர்டியா.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.






