search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slams"

    பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற பயத்தில்தான், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்புவதாக அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று (வியாழக்கிழமை) எண்ணப்படுகின்றன. இதில் ஒப்புகைச்சீட்டுகளை முதலில் எண்ணிவிட்டு, வாக்குகளை பிறகு எண்ண வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து உள்ளன. இது தொடர்பாக 22 எதிர்க்கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் தேர்தல் கமிஷனை சந்தித்து வலியுறுத்தின.

    ஆனால் இதை நிராகரித்த தேர்தல் கமிஷன், வாக்குகளை முதலில் எண்ணிவிட்டு பின்னரே ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்படும் என திட்டவட்டமாக கூறிவிட்டது. இதில் தற்போது கடைப்பிடிக்கும் நடைமுறையே பின்பற்றப்படும் என கூறியுள்ளது.

    இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் இத்தகைய கோரிக்கையை பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா குறை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:-

    வாக்கு எண்ணும் நடை முறையை மாற்ற வேண்டும் என தேர்தல் கமிஷனில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து இருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்த விவகாரத்தில் எந்த முடிவானாலும், அதை அனைத்துக்கட்சிகளின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே எடுக்க வேண்டும்.

    6-வது கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எதிரான போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தொடங்கின. பின்னர். தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானதும், இந்த போராட்டங்கள் தீவிரமடைந்தன.

    எனவே தேர்தலில் தோல்வியடைவோம் என்ற பயத்தால்தான் வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்புகின்றனர். வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எதிராக போராடுவது மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். இதுபோன்ற ஜனநாயக நடைமுறைகள் மீது கேள்வி எழுப்புவதன் மூலம் உலக அரங்கில் நாட்டையும், அதன் ஜனநாயகத்தையும் அவமதிக்கின்றனர். அவர்கள் புகாரில் உண்மையில்லை, சுயநலமே அடங்கி இருக்கிறது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மையை எப்படி கேள்வி எழுப்ப முடியும்? மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெற்றி பெறவில்லையா?

    அப்படி வாக்குப்பதிவு எந்திரங்களை நம்பவில்லை என்றால், அந்த தேர்தல்களுக்கு பின்னர் நீங்கள் ஏன் அரசு அமைத்தீர்கள்? மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலமான தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால், அது தேர்தல் வெற்றி என்றும், தோல்வியடைந்தால் அதற்கு வாக்குப்பதிவு எந்திரங்கள்தான் காரணம் என்றும் கூற முடியுமா?

    இவ்வாறு அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதே கருத்தை மத்திய மந்திரியும், லோக் ஜனசக்தி கட்சி தலைவருமான ராம்விலாஸ் பஸ்வானும் கூறியுள்ளார். அவர் கூறுகையில், ‘எதிர்க்கட்சிகள் தோல்வியடைவது உறுதியானால், அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதுதான் புகார் கூறுவார்கள் என நான் பல மாதங்களாக கூறி வருகிறேன். மின்னணு வாக்குப்பதிவு தொடர்பான வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டே 4 முறை விசாரித்து விட்டது. தோல்வியை மறைக்க அவர்கள் பல்வேறு போலி காரணங்களை கூறிவருகின்றனர்’ என தெரிவித்தார்.
    பா.ஜனதாவின் அத்துமீறல்களை தேர்தல் கமிஷன் மவுனமாக வேடிக்கை பார்க்கிறது, மக்களை ஏமாற்றி விட்டது என்று ப.சிதம்பரம் கூறினார். #PChidambaram #ElectionCommission #Congress
    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம், ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    தேர்தல் கமிஷன், நாட்டு மக்களை பெரிதும் ஏமாற்றி விட்டது. பா.ஜனதாவின் அத்துமீறல்கள், பிரதமர் மோடியின் உரைகள், பா.ஜனதாவால் செலவழிக்கப்படும் பெருமளவு பணம் ஆகியவற்றை தேர்தல் கமிஷன் மவுனமாக வேடிக்கை பார்க்கிறது.

    எதிர்க்கட்சி வேட்பாளர்களின் சிறு செலவுகள் என்று கூறப்படுவதை எல்லாம் அவர்களின் செலவுக்கணக்கில் சேர்க்கிறது. அதே அணுகுமுறையை மேற்கொண்டால், பா.ஜனதா வேட்பாளர்கள் அனைவரும் தகுதியிழப்புக்கு ஆளாக வேண்டி இருக்கும்.

    பா.ஜனதா தனது தோல்வியை மறைக்க ‘தேசியவாதம்’ என்ற கோஷத்தை எழுப்பி வருகிறது. பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இங்கு எல்லோரும் தேசவிரோதியாகவா இருந்தார்கள்?

    எல்லோரும் தேசபக் தர்கள்தான். எந்த தேசபக்தரையும் தேசவிரோதியாக கருத முடியாது. ஊடகங்களை கையில் போட்டுக்கொண்டு, இந்த பிரசாரத்தை பா.ஜனதா மேற்கொண்டு வருகிறது.

    இப்போது கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், “ஒவ்வொரு இந்தியனும் 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறானா?” என்பதுதான். என்னைக் கேட்டால் ‘இல்லை’ என்றுதான் சொல்வேன். ஒவ்வொரு இந்தியரும் அச்சத்துடனே வாழ்ந்து வருகிறார்கள். பெண்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் உள்பட அனைவரும் அச்சத்துடனே இருக்கிறார்கள்.

    பா.ஜனதா நிச்சயமாக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாது. பா.ஜனதா அல்லாத அரசே மத்தியில் அமையும். காங்கிரசும், அதன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி கட்சிகளுமே முக்கிய பங்கு வகிக்கும். தேர்தலுக்கு முந்தைய கூட்டணி கட்சிகள் நிறைய தொகுதிகளை கைப்பற்றினால், 3-வது தடவையாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது.

    சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள், நிலையான அரசு அமைய காங்கிரசை ஆதரிக்க வாய்ப்புள்ளது. எல்லா மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகளும் நிலையான அரசு அமைய ஒன்று சேரும்.

    இந்தியாவில், தேர்தல் சமயத்தில், சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவை இதற்கு முன்பு இப்படி பட்டவர்த்தனமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதே இல்லை. நாட்டில் 545 தொகுதிகள் உள்ளன. சில தொகுதிகளில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர்களிடம்தான் கணக்கில் காட்டாத பணம் இருக்கிறதா? எந்த பா.ஜனதா வேட்பாளரிடமும் கணக்கில் காட்டாத பணம் இல்லையா?

    துப்பு கிடைத்ததாக கூறுகிறார்கள். எதிர்க்கட்சி வேட்பாளர்களைப் பற்றி மட்டுமே துப்பு கிடைக்குமா? பா.ஜனதா வேட்பாளர்கள் பற்றி துப்பு கிடைக்காதா? பிரதமர் மோடியின் ஒவ்வொரு கூட்டத்துக்கும் ரூ.10 கோடி செலவிடப்படுகிறது. இப்பணம் எங்கிருந்து வருகிறது? அதற்கு யார் செலவிடுகிறார்கள்? அதற்கு என்ன கணக்கு?

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.  #PChidambaram #ElectionCommission #Congress
    காஷ்மீரில் அப்துல்லா குடும்பத்தையும், முப்தி குடும்பத்தையும் பிரதமர் மோடி விமர்சித்தார். அதற்கு மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி பதிலடி கொடுத்துள்ளார். #MehboobaMufti #PMModi
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, அப்துல்லா குடும்பத்தையும், முப்தி குடும்பத்தையும் விமர்சித்தார். அதற்கு முப்தி முகமது சயீதின் மகளும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-

    நான் அனுதாபம் தேடி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக, அரசியல் எதிரிகளை திட்டுவது இல்லை. ஆனால், பிரதமர் மோடியோ அனுதாபம் தேடும் நோக்கத்தில், தன்னை தேசத்துடன் சமப்படுத்தி பேசுகிறார்.

    மோடிதான் இந்தியா அல்ல, இந்தியாதான் மோடியும் அல்ல. தேர்தலுக்கு முன்பு, குடும்பங்களை விமர்சிக்கும் மோடி, தேர்தலுக்கு பிறகு அதே கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைக்க தூது விடுவது ஏன்? பா.ஜனதாதான், சிறுபான்மையினரை ஒதுக்கிவிட்டு, இந்தியாவை பிளவுபடுத்த விரும்புகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.   #MehboobaMufti #PMModi
    நீதியின் நலன் கருதி ராபர்ட் வதேராவின் உதவியாளர் அமலாக்கத்துறையிடம் ஆஜராவதை ராகுல் உறுதி செய்யவேண்டும் என மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கூறியுள்ளார். #SmritiIrani #Rahul #RobertVadra
    புதுடெல்லி:

    பணமோசடி வழக்கில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் உதவியாளரை ஜாமீனில் வெளி வரமுடியாத விதத்தில் கைது செய்ய உத்தரவிடக்கோரி அமலாக்கத்துறை டெல்லி கோர்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளது.

    இதுகுறித்து மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி நிருபர்களிடம் கூறும்போது, “ராபர்ட் வதேராவின் தனி உதவியாளர் மனோஜ் அரோராவுக்கு அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்காக நேரில் ஆஜராகவில்லை. எனவே நீதியின் நலன் கருதி ராபர்ட் வதேரா தனது உதவியாளர் மனோஜ் அரோராவை அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராகும்படி கூறவேண்டும். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் இதை உறுதி செய்யவேண்டும்” என்று வலியுறுத்தினார்.



    மேலும் அவர் கூறுகையில், “நாடாளுமன்ற மக்களவையில், ரபேல் விவாதத்தின்போது ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தபோது ராகுல்காந்தி கண் சிமிட்டியது ஒரு பெண் மந்திரியின் உணர்வுகளை காயப்படுத்துவது ஆகும். மேலும் இது சபையின் கண்ணியத்தை அவமதிப்பது போலவும் உள்ளது” என்றார்.
    ‘இங்கிலாந்து மண்ணில் தோல்வி பற்றி கவலைப் படாமல் இந்திய வீரர்கள் ஜாலியாக காபி அருந்தி மகிழ்கிறார்கள் போலும்’ என்று முன்னாள் வீரர் சந்தீப் பட்டீல் விமர்சித்துள்ளார். #SandeepPatil #Coffee #ViratKohli
    புதுடெல்லி:

    இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரு டெஸ்டுகளில் இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பாக அங்கு அணியின் திட்டம் என்ற கேள்விக்கு பயிற்சியாளர் ரவிசாஸ்திரியுடன் இணைந்து பேட்டி அளித்த இந்திய கேப்டன் விராட் கோலி, ‘கடந்த முறை இங்கிலாந்துக்கு சென்ற போதும் இப்படி தான் கேட்டார்கள். அதற்கு நான் இங்கிலாந்துக்கு சென்றதும் அங்குள்ள வீதிகளில் ஜாலியாக நடந்து சென்று காபி அருந்தி மகிழ்வேன். என்னுடைய சிந்தனை வித்தியாசமானது’ என்று பதில் அளித்தார்.



    அவரது இந்த கூற்றை இந்திய முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான சந்தீப் பட்டீல் கேலி செய்து சாடியுள்ளார். பட்டீல் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், ‘முதல் இரு டெஸ்டுகளில் இந்திய அணியின் செயல்பாட்டை பார்க்கும் போது விராட் கோலியின் கருத்தை இந்திய வீரர்கள் சீரியசாக எடுத்துக் கொண்டார்கள் போல் தான் தோன்றுகிறது. இங்கிலாந்தில் நிலவும் சீதோஷ்ண நிலையில் அவர்கள் உண்மையிலேயே நல்ல காபி குடித்துவிட்டு உற்சாகமாக இருக்கிறார்கள் போலும்.

    இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. ஆனால் விராட் கோலியும் ரவிசாஸ்திரியும் இணைந்து வீரர்களுக்கு ஓய்வு தேவை என்று கூறி 4 நாள் பயிற்சி ஆட்டத்தையும் 3 நாட்களாக குறைத்து விட்டார்கள். இந்திய அணியின் மோசமான ஆட்டம் குறித்து கவாஸ்கர், தெண்டுல்கர், கங்குலி போன்ற ஜாம்பவான்கள் தங்களது கவலையை வெளியிட்டு இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களின் அறிவுரையை இந்திய வீரர்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டது போல் தெரியவில்லை.

    தற்போது அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் அசாதாரணமான திறமை கொண்டவர்கள். நான் தேர்வு குழு தலைவராக இருந்த போது அதை அறிவேன். ஆனால் இப்போது களத்தில் ஏதோ அறிமுக போட்டி போன்று பயந்து கொண்டு விளையாடுகிறார்கள். நான் முன்பு சொன்னது போல் கிரிக்கெட் ஒரு குரூரமான விளையாட்டு. இங்கு எதுவும் நிலையானது கிடையாது. முந்தைய நாள் ஹீரோவாக இருப்பவர்கள், இன்று ஜீரோவாகி விடுவார்கள். இந்த இங்கிலாந்து பயணத்தில் ஏற்கனவே 70 சதவீதம் போட்டி முடிந்து விட்ட நிலையில் நாம் இன்னும் காபி குடித்துக் கொண்டு இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார். #SandeepPatil #Coffee #ViratKohli
    தாஜ்மகால் உலக பாரம்பரிய சின்னம் என்று அளித்து உள்ள அங்கீகாரத்தை யுனஸ்கோ திரும்பப்பெற்று விட்டால் என்ன செய்வீர்கள்? என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. #TajMahal #SupremeCourt
    புதுடெல்லி:

    உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிற தாஜ்மகால், சுற்றுச்சூழல் மாசு காரணமாக தனது பொலிவை இழந்து வருகிறது.

    சமீபத்தில் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடுமையாக கருத்து தெரிவித்தது. தாஜ்மகாலை பாதுகாக்க முடியாவிட்டால் இடித்துவிடுங்கள் என்று மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு கூறியது.



    இது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மதன் பி. லோகுர், தீபக் குப்தா ஆகியோர் நேற்று விசாரித்தனர்.

    அப்போது ஏற்கனவே உத்தரவிட்டபடி, தாஜ்மகால் பாதுகாப்பு தொடர்பான வரைவு திட்டத்தை தாக்கல் செய்யாததை நீதிபதிகள் கடுமையாக சாடினர்.

    தாஜ்மகால் பாதுகாப்புக்கு பொறுப்பான தொல்லியல் ஆய்வு அமைப்பு, இந்த விஷயத்தில் ஆலோசிக்கப்படாதது கண்டு நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

    அப்போது அட்டார்னி ஜெனரல் (மத்திய அரசின் தலைமை வக்கீல்) கே.கே. வேணுகோபாலிடம் நீதிபதிகள், “யுனஸ்கோவின் உலக பாரம்பரிய மையம் பாரீசில் இருக்கிறது. தாஜ்மகால் பாதுகாப்பு நிர்வாக திட்டத்தை அங்கு தாக்கல் செய்கிறீர்களா? இதை நீங்கள் தாக்கல் செய்யவில்லை. தாஜ்மகால் உலக பாரம்பரிய சின்னம் என்று அளித்து உள்ள அங்கீகாரத்தை யுனஸ்கோ திரும்பப்பெற்று விட்டால் என்ன செய்வீர்கள்?”என காட்டமாக கேட்டனர்.

    மேலும் தாஜ்மகால் பராமரிப்பு, பாதுகாப்புக்கு யார் பொறுப்பு என்பது குறித்து அட்டார்னி ஜெனரல் 30-ந் தேதிக்குள் தெரிவிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  #TajMahal #SupremeCourt #Tamilnews
    வெற்று கோஷங்களால் உண்மையை எப்போதும் மறைக்க முடியாது என்றும், காஷ்மீர் குறித்து தவறான தகவலை பாகிஸ்தான் ஐ.நா. பொது சபையில் பதிவு செய்வதாக ஐ.நா.வுக்கான இந்திய தூதர் சந்தீப் குமார் கூறியுள்ளார். #India #Pakistan #JammuKashmir
    நியூயார்க்:

    ஐ.நா. மனித உரிமை அமைப்பு சமீபத்தில், காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதாக அறிக்கை வெளியிட்டு இருந்தது.

    ஐ.நா. பொது சபையில், ஐ.நா. மனித உரிமை அமைப்பு அறிக்கையை சுட்டிக்காட்டி பேசிய பாகிஸ்தான், காஷ்மீரில் அனைவரும் சமமான உணர்வுடன் நடத்தப்படுவதாக போலி தகவலை இந்தியா பரப்பி வருவதாக குற்றம்சாட்டியது.



    இதற்கு பதில் அளித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதர் சந்தீப் குமார் கூறுகையில், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதை யாராலும் மாற்ற முடியாது. பாகிஸ்தான் மறுபடியும் காஷ்மீர் குறித்து தவறான தகவலை ஐ.நா. பொது சபையில் பதிவு செய்ய பயன்படுத்தி இருக்கிறது. வெற்று கோஷங்களால் உண்மையை எப்போதும் மறைக்க முடியாது என்று தெரிவித்தார்.

    மேலும் அவர் பேசுகையில், ஐ.நா. மனித உரிமை அமைப்பு அறிக்கை தவறான தகவல், ஒருதலைபட்சமானது, உள்நோக்கம் கொண்டது. இது இந்திய இறையாண்மையையும், ஒற்றுமையையும் பாதிக்கும் வகையில் உள்ளது என்றார்.   #India #Pakistan #JammuKashmir #Tamilnews
    கொள்கைக்காக போராடும் என் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள். அவற்றை நாங்கள் போராடி வெல்வோம் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். #RahulslamsModi #BJPRSS
    மும்பை:

    2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மகாத்மா காந்தியை ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் தான் கொன்றனர் என கூறினார். இதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும், மகாராஷ்டிர மாநில ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் குந்தே என்பவர் பிவான்டி நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.   

    இந்த வழக்கின் விசாரணையில் கடந்த முறை ஆஜராவதில் இருந்து ராகுல் காந்திக்கு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். விசாரணை தொடங்கியதும், ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

    குற்றச்சாட்டுகளை நீதிபதி வாசித்தபோது, அவற்றை ராகுல் காந்தி மறுத்தார். தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும் அவர் கூறினார். இதையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



    பின்னர், கோர்ட் வாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, ‘எங்களது போராட்டம் பிரதமர் மோடியின் கொள்கைகளுக்கு எதிரானவை. விவசாயிகள் கொதித்துப் போய் உள்ளனர். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றி பிரதமர் பேசுவதே இல்லை. அவர்கள் (பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்) கொள்கைக்காக போராடும் என் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடட்டும். அவற்றை நாங்கள் போராடி வெல்வோம்’ என குறிப்பிட்டுள்ளார்.  #RahulslamsModi #BJPRSS
     
    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் 20 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது. #Petrol #Diesel #Chidambaram
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் நிலவும் எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் விலையை தினசரி அடிப்படையில் உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன. இந்த நிலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு சர்வதேச சந்தையில் எண்ணெயின் விலை கடுமையாக உயர்ந்தது.

    ஆனாலும் கர்நாடக சட்டசபை தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 20 நாட்களாக உயர்த்தவில்லை. கடந்த மாதம் 24-ந்தேதிக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.



    கடந்த 12-ந்தேதி கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் முடிந்த சூட்டோடு சூடாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று மீண்டும் கடுமையாக உயர்த்தின. நகரங்களுக்கு ஏற்ப பெட்ரோல் விலை 17 மற்றும் 18 காசுகள் விலை உயர்த்தப்பட்டது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்று ரூ.74.80 ஆக இருந்தது. 20 நாட்களுக்கு முந்தை விலை ரூ.74.63 ஆகும்.

    சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.61க்கு விற்பனை செய்யப்பட்டது. இது முன்பு ரூ.77.43 ஆக இருந்தது. அதாவது சென்னையில் லிட்டருக்கு 18 காசுகள் அதிகரித்தது.

    கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.77.50 ஆகவும்(முந்தைய விலை ரூ.77.32), மும்பையில் ரூ.82.65 ஆகவும் (முந்தைய விலை ரூ.82.48) இருந்தது.

    இதேபோல் டீசல் விலையும் கடுமையாக உயர்த்தப்பட்டது. டெல்லியில் நேற்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.66.14 ஆகும். இது ஏப்ரல் 24-ந்தேதி ரூ.65.93 ஆக இருந்தது. அதாவது 21 காசுகள் உயர்த்தப்பட்டு உள்ளது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.69.79 ஆகும். முந்தைய விலை ரூ.69.56. சென்னையில் லிட்டருக்கு 23 காசுகள் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    மும்பையில் நேற்று டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.43 ஆகவும்(முந்தைய விலை ரூ.70.20), கொல்கத்தாவில் ரூ.68.68 ஆகவும்(முந்தைய விலை ரூ.68.63) இருந்தது.

    டெல்லியில் பெட்ரோல் விலை 56 மாதங்களில் இல்லாத அளவிற்கும், டீசல் விலை இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    சென்னையை பொறுத்தவரை தினசரி விலை மாற்றம் கொண்டு வரப்பட்ட கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி, ஒரு லிட்டர் பெட்ரோல் 65 ரூபாய் 46 காசுகளும், ஒரு லிட்டர் டீசல் 56 ரூபாய் 13 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி பார்த்தால், அன்றிலிருந்து நேற்று வரை ஒரு லிட்டர் பெட்ரோல் 12 ரூபாய் 15 காசுகளும், ஒரு லிட்டர் டீசல் 13 ரூபாய் 66 காசுகளும் அதிகரித்துள்ளது. தினசரி விலை மாற்றும் செய்து இன்னும் ஓர் ஆண்டு நிறைவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது.

    இதுபற்றி முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில், “நாம் பழைய நிலைக்கு மீண்டும் செல்கிறோம். தற்போது கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்துவிட்டதால் டீசல், பெட்ரோல் மீது அதிக வரி விதிக்கப்பட்டு உள்ளது. நுகர்வோர் மீது சுமை ஏற்றப்பட்டு இருக்கிறது. கர்நாடக தேர்தலுக்காக பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இடைவேளை விடப்பட்டு இருந்தது” என்று கிண்டலாக குறிப்பிட்டார்.  #Petrol #Diesel #Chidambaram 
    ×