search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "reward"

    • 14 நாட்களுக்குள் கோர்ட்டு விசாரணை முடிந்து 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து, மாஜிஸ்திரேட்டு தீர்ப்பு கூறினார்.
    • நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு துரிதமாக தண்டனை பெற்று போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஏ.பி.டி. ரோட்டில் கடந்த 9-ந் தேதி இரவு 8¼ மணிக்கு செல்போனில் பேசியபடி நடந்து சென்ற நபரிடம் இருந்து செல்போனை தட்டிப்பறித்து சென்ற சம்பவம் தொடர்பாக மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தேனி மாவட்டம் அல்லிநகரம் பொம்மியகவுண்டம்பட்டியை சேர்ந்த திருப்பூர் வெள்ளியங்காட்டில் வசித்து வரும் கோகுல் (வயது 20) என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமுனா கைது செய்தார்.

    பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் 2 நாட்களில் புலன் விசாரணையை முடித்து, குற்ற இறுதி அறிக்கை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.3-ல் தாக்கல் செய்தனர். அதன்பின்னர் அந்த வழக்கில் முறையாக சாட்சிகளையும், சாட்சியங்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். 14 நாட்களுக்குள் கோர்ட்டு விசாரணை முடிந்து வழக்கில் சம்பந்தப்பட்ட கோகுலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து, மாஜிஸ்திரேட்டு பழனிக்குமார் தீர்ப்பு கூறினார்.

    திருப்பூர் மாநகரத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சம்பந்தப்பட்ட வழக்கில் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு துரிதமாக தண்டனை பெற்று சம்பந்தப்பட்டவர்களை சிறையில் இருந்து வெளியே வராமல் செய்ய வேண்டும் என்று திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு அறிவுறுத்தியிருந்தார்.

    அதன்படி சிறப்பாக பணியாற்றிய மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமுனா மற்றும் புலன் விசாரணைக்கு உதவியாக இருந்த போலீசார் ராஜசேகர்,ஜெகதீஷ், சூரியகலா, ஏட்டு அகஸ்டின் ஆகியோருக்கு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு வெகுமதி அளித்து பாராட்டினார். அப்போது துணை கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • 17 ஊராட்சிகளில் காந்திஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.
    • வாகனங்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    கோவை:

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சிகளில் காந்திஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. இதையொட்டி மேட்டுப்பாளையம் அருகே பெள்ளேபாளையம் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் ஊராட்சி தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபால் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோழி கழிவுகளை குடியிருப்பு, சாலையோரத்தில் கொட்டப்படும் வாகனங்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    தூய்மை பணியாளர்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் குப்பைகளை தரம்பிரித்து வாங்க வேண்டும். இதில் பிளாஸ்டிக் கழிவுகள் கிலோ ரூ.8-க்கு விலை கொடுத்து ஊராட்சி நிர்வாகம் வாங்கப்படும். அந்த தொகை தூய்மை பணியாளர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும். வேளாண்மை துறை அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகள் மலட்டு தன்மையாக உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால் அதற்கு மாற்று வழி சொல்ல தெரியாமல் களத்திற்கு வரும் வேளாண்மை அதிகாரிகள் தவிக்கின்றனர்.

    ரேசன் கடைகளில் பணியாளர்கள் பொதுமக்களுக்கு தரமான பொருட்களை வழங்க வேண்டும். இதோடு பொதுமக்கள் யாரும் ரேசன் அரிசை விற்பனை செய்ய கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    இதேபோல் சிக்காரம்பாளையம் ஊராட்சியில் தலைவர் ஞானசேகரன், இலுப்பநத்தத்தில் ரங்கசாமி, பெள்ளாதியில் சிவக்குமார் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது.

    வருமான வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பண பதுக்கலில் ஈடுபடுவோர் குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிப்போருக்கு ரூ.5 கோடி வரை பரிசு அளிக்கும் வகையில் திட்டத்தை மத்திய அரசு மாற்றி அமைத்து உள்ளது. #TaxEvasion #Rewards
    புதுடெல்லி:

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கருப்பு பண ஒழிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக வருமான வரி ஏய்ப்பு, பினாமி சொத்துகள் குவிப்பு மற்றும் கருப்பு பண பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.

    மத்திய அரசின் இந்த சீர்திருத்த நடவடிக்கைகளில் பொதுமக்களும் பங்கேற்கும் வகையில் பரிசுத்திட்டங்களை மத்திய அரசு அறிவித்து இருந்தது. அதன்படி வரி ஏய்ப்பு, பினாமி சொத்து பரிமாற்றம் மற்றும் கருப்பு பணம் பதுக்குவோர் குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் அளிப்போருக்கு பரிசுத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தில் பரிசுத்தொகையை மாற்றியமைத்து புதிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. ‘வருமான வரி தகவல் அளிப்போர் பரிசுத்திட்டம் 2018’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டத்தின் கீழ் 3 வகையிலான பரிசுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    அதன்படி வருமானம் மற்றும் சொத்து (வருமான வரிச்சட்டம் 1961-ன் கீழ் ஏலமிடத்தக்கது) வரி ஏய்ப்பில் ஈடுபடுவோர் குறித்த தகவல் அளிப்போருக்கு ரூ.50 லட்சம் வரை பரிசு வழங்கப்படும். இந்த முறைகேடு குறித்த கணிசமான தகவல்களை வருமான வரித்துறையின் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கைக்கு உதவலாம்.

    இதைப்போல பினாமி சொத்துகள் பரிமாற்றங்கள் குறித்து, பினாமி தடுப்பு பிரிவு இணை அல்லது கூடுதல் ஆணையர்களிடம் தகவல் அளிப்போருக்கு ரூ.1 கோடி வரை பரிசு வழங்கப்படும். மேலும் வெளிநாடுகளில் பதுக்கப்படும் கருப்பு பணம் மற்றும் சொத்துகள் குறித்து கணிசமான தகவல் அளிப்போருக்கு ரூ.5 கோடி வரை பரிசு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

    இந்த தகவல்களை வெளிநாட்டினர் உள்பட யாரும் வழங்கலாம் என்று கூறியுள்ள வருமான வரித்துறை, இவ்வாறு தகவல் அளிப்போரின் பெயர் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் கூறியுள்ளது. #TaxEvasion #Rewards #Tamilnews 
    ×