search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public request"

    • மது பிரியர்கள் செய்யும் இடையூறுகள் சில நேரங்களில் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
    • இதனால் இந்த 2 மதுபான கடைகளையும் உடன்குடி நகரப் பகுதியை விட்டு வெளியே அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், பயணிகளும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    உடன்குடி:

    உடன்குடி பஸ் நிலையம் எதிரில் ஒரு அரசு மதுபான கடையும், வடக்கு பஸ் நிலைய ரோட்டில் ஒரு மதுபான கடையும் பஸ்நிலையம் அருகில் இருப்பது பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. குடும்பத்துடன் பஸ் நிலையம் வரும் பயணிகளுக்கும், பெண்களுக்கும் மிகுந்த இடையூறாக உள்ளதாக புகார் கூறப்படுகிறது.

    மேலும் வடக்கு பஸ் நிலைய ரோட்டில் உள்ள மதுபான கடை அருகே ஒரு ஏ.டி.எம். அலுவலகம் இருக்கிறது. மது பிரியர்கள் அடிக்கடி இந்த ஏ.டி.எம்.-ல் பணம் எடுப்பதாக சொல்லி உடைத்து விடுகிறார்கள். மது பிரியர்கள் செய்யும் இடையூறுகள் சில நேரங்களில் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. அவர்களின் பார்வைக்கு பயந்து பள்ளி செல்லும் சிறுவர்- சிறுமிகள் மற்றும் பெண்கள் பயந்து ஓடும் நிலை உள்ளது. இதனால் இந்த 2 மதுபான கடைகளையும் உடன்குடி நகரப் பகுதியை விட்டு வெளியே அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், பயணிகளும், விவசாயிகளும், வியாபாரிகளும், தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • செங்கோட்டை நுழைவுவாயில் மற்றும் செங்கோட்டை-பாவூர்சத்திரம் நெடுஞ்சாலை வளைவு பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    • இதனை சரிசெய்ய போலீசார் கனரக வாகனங்களுக்கு குறிப்பிட்ட நேரம் கட்டுப்பாடு விதித்தல், போக்குவரத்து மாற்றம் போன்ற முறைகளை பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

    செங்கோட்டை:

    தமிழக-கேரள எல்லையில் மிக முக்கிய பகுதியாக செங்கோட்டை நகராட்சி விளங்கி வருகிறது. இந்த வழியாக கேரளாவுக்கு நாள்தோறும் அத்தியாவசிய பொருட்களான பால், அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் உள்ளிட்டவை ஆயிரக்க ணக்கான வாகனங்களில் இரவு, பகலாக சென்று வருகிறது.

    போக்குவரத்து நெரிசல்

    கடந்த சில மாதங்களாக தென்காசி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து எம்-சாண்ட் மணல், ஜல்லி கற்கள் என அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக செங்கோட்டை நகரில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    கடந்த 2 நாட்களாக போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக செங்கோட்டை நுழைவுவாயில் மற்றும் செங்கோட்டை-பாவூர்சத்திரம் நெடுஞ்சாலை வளைவு பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் 2 மாநில பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைகின்றனர். இதன் காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைகிறது.

    இதனை சரிசெய்ய போலீசார் போராடி வரும் நிலையில் கனரக வாகனங்களுக்கு குறிப்பிட்ட நேரம் கட்டுப்பாடு விதித்தல், போக்குவரத்து மாற்றம் போன்ற முறைகளை பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கைகளை சம்பந்தபட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சாத்தான்குளத்தில் ஒரு வழிப்பாதை நடைமுறையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் மெயின்ரோட்டில் ஏராளமான மளிகை, காய்கறி, ஜவுளி, நகைக்கடைகள் மற்றும் ஓட்டல்கள்,தொடக்க, மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.

    குறுகலான இந்த ரோட்டில் இருபுறமும் வரும் கனரக வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் நெருக்கடி ஏற்படுகிறது.

    சமூக ஆர்வலர்களின் கோரிக்கைகளை ஏற்று முன்பு தாசில்தாராக இருந்த தம்பிராஜ் ஈனோக் ஒரு வழிப் பாதையை காவல்துறை உதவியுடன் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தினார்.அதன் பிறகு மீண்டும் விதிமீறல் நடந்து தற்போது ஒரு வழிப்பாதை அறிவிப்பு பலகையே காணாமல் போய்விட்டது.

    வருகிற 13-ந் தேதி பள்ளிகளும் அதனைத் தொடர்ந்து கலை, அறிவியல், பாலிடெக்னிக், என்ஜினியரிங் கல்லூரிகளும் இயங்க உள்ள நிலையில் காலை, மாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் நிலை உள்ளது.

    எனவே ஒருவழிப்பாதையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், அதுவரை காலை,மாலை நேரங்களில் மட்டுமாவது போக்குவரத்து போலீசாரை நியமித்து ஒரு வழிப் பாதையை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வண்ணார்பேட்டை மேம்பாலம் பஸ் நிறுத்தம் பகுதியில் தற்காலிக கழிப்பிடம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே செல்கிறது.

    டவுன், வண்ணார் பேட்டை, பாளை, சமாதானபுரம் உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்புகள் காரணமாக போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கித் தவிக்கின்றனர்.

    அதேநேரத்தில் வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியாக உள்ளது.

    இங்கு தினமும் பணி நிமித்தமாகவும் பல்வேறு காரணங்களுக்காகவும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு மேம்பாலம் பகுதியில் கழிப்பிட வசதி இல்லாமல் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

    வண்ணார்பேட்டை மேம்பாலத்திற்கு கீழே பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்ட உடனேயே இது தொடர்பான கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து மாநகராட்சி சார்பில் மேம்பாலத்தின் அருகே தற்காலிகமாக கழிப்பிடம் அமைக்கப்பட்டது.

    ஆனால் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் சிறுநீர் சாலைகளில் ஓடியது. தற்போது அந்த தற்காலிக கழிப்பிடத்தை பொதுமக்கள் யாரும் பயன்படுத்தவில்லை.

    ஆனால் அதன் பின்னர் வேறு தற்காலிக கழிப்பிடம் அமைக்கப்படாததால் பஸ் ஏறுவதற்கு வரும் பயணிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதேபோல் அங்கு காவல் பணியில் ஈடுபடும் போலீசாரும் கழிப்பிடம் செல்லமுடியாமல் சிரமம் அடைகின்றனர். குறிப்பாக பெண் பயணிகள் அதிக அளவில் சிரமம் அடைகின்றனர்.

    எனவே மாநகராட்சி நிர்வாகம் அந்த பகுதியில் தற்காலிக கழிப்பிடங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    திருமருகல் அருகே குழாய் உடைப்பால் குடிநீர் சாலையில் வீணாகி செல்கிறது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே நாகூர்-கங்களாஞ்சேரி சாலை வழியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் கடம்பங்குடியிலிருந்து பெருஞ்சாத்தன்குடி, வாழஒக்கூர், ஒக்கூர், வெங்கிடாங்கால், உத்தமசோழபுரம், பூதங்குடி, நரிமணம், சுள்ளாங்கால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ஒக்கூர் பெரியார் சிலை அருகில் இரண்டு இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் அதிக அளவில் வெளியேறி வாய்க்காலில் ஓடி வீணாகிறது. இந்த குடிநீர் குழாய் உடைப்புகள் இன்னும் சரி செய்யப்படாமல் அப்படியே உள்ளது. கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரை பயன்படுத்தும் உத்தமசோழபுரம், பூதங்குடி, நரிமணம், சுள்ளாங்கால் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

    இதுகுறித்து சம்பந்தப்ப ட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவி த்தும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நாகூர் -கங்களாஞ்சேரி மெயின் சாலையில் உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய்களை சீரமைக்க கவனம் செலுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காரிமங்கலம் பாலக்கோடு சாலையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சேதமான மின்கம்பத்தை மாற்ற கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காரிமங்கலம்:

    தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பாலக்கோடு சாலையில் வணிக நிறுவனங்கள், அரசு பள்ளி மற்றும் அரசு அலுவலகங்கள் என பல அமைந்துள்ளது. இவ்வழியே உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மும்முனை மின்சார இணைப்பு தரப்பட்டுள்ளது. உயர் மின்னழுத்தம் செல்லும் மின்கம்பம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பலத்த சேதம் அடைந்து உள்ளது. குறிப்பாக மின்கம்பத்தின் அடிப்புறம் காங்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் காண்போரை அச்சப்படுத்தி வருகிறது. 

    சேதமடைந்த கம்பத்தை உடனடியாக அகற்ற இப்பகுதி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் மின்வாரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    எனவே, சேதமடைந்த மின்கம்பம் மேலும் சேதமடைந்து பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பு மின்கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஊத்துக்கோட்டை அருகே உடைந்து கிடக்கும் கிருஷ்ணா கால்வாய் கரை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு 1983-ம் ஆண்டு ஆந்திர அரசுடன் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்ட ஒப்பந்தம் செய்து கொண்டது.

    அதன்படி வருடந்தோரும் 12 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 8 டி.எம்.சி.யும், ஜூலை முதல் அக்டோபர் வரை 4 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறக்க வேண்டும்.

    இதற்காக 1983-ம் ஆண்டு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோ மீட்டர் தூரத்துக்கு திறந்தவெளி கால்வாய் வெட்டப்பட்டது. இதில் ஆந்திராவில் 152 கிலோ மீட்டர் தூரத்துக்கும், தமிழகத்தில் தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் அமைக்கப்பட்டது. 1983-ல் துவங்கிய இப்பணிகள் 1995-ல் முடிக்கப்பட்டன. 1996-ல் முதல் முதலாக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் கரை புரண்டு ஓடும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கரைகள் சேதமடைவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இதனை தடுக்க கடந்த 8 வருடங்களுக்கு இஸ்ரேல் நாட்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கரைகளை பலப்படுத்தும் பணிகளை பொதுப்பணித் துறை அதிகாரிகள் மேற் கொண்டனர். எனினும் கரைகள் சேதமடையும் சம்பவம் தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    அப்போது ஊத்துக்கோட்டை அருகே உள்ள தொம்பரம்பேடு, அம்பேத்கார் நகர், சிற்றபாக்கம், அனந்தேரி, போந்தவாக்கம், கரகம்பாக்கம், தேவந்த வாக்கம் உட்பட 25 பகுதிகளில் கால்வாய் கரை சேதமடைந்தது.

    இவற்றை சீர் செய்ய வில்லை என்றால் கால்வாயில் தண்ணீர் வரும் போது கரைகள் உடைந்து அருகில் உள்ள தண்ணீர் கிராமங்களில் பாயும் அபாயம் உள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு சேதமடைந்த கரைகளை சீர் செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    தொட்டகாஜனூரில் ரோட்டோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    தாளவாடி:

    தாளவாடி அருகே உள்ள தொட்டகாஜனூர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்தப்பகுதிக்கு மெட்டல்வாடி ரோட்டோரத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அந்த குடிநீர் தொட்டியின் கீழ் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், தொட்டகாஜனூர் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு குடிநீர் வழங்குவதற்காக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. தற்போது அந்த குடிநீர் தொட்டி புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் குப்பைகளும் குவிந்து கிடக்கிறது. இதனால் சுற்றுச் சூழல் மாசு அடைவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மேலும் விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது. இதேபோல் தொட்டகாஜனூர் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்பட பல்வேறு நோய்கள் பரவுகிறது. இதேபோல் அந்த குடிநீர் தொட்டியின் அருகில்தான் அங்கன்வாடி மையம், மக்கள் நலவாழ்வு மையமும் உள்ளது. இதனால் அங்கன்வாடி மையம் செல்லும் குழந்தைகளுக்கு சுவாச கோளாறுகள் ஏற்படுகிறது.

    அதனால் மெட்டல்வாடி ரோட்டில் உள்ள குடிநீர் தொட்டியின் அருகே வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டியை வேறு இடத்தில் வைக்க வேண்டும். மேலும் ரோட்டோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றுவதோடு, கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 
    எஸ்.புதூர் ஒன்றியம் உலகம்பட்டி மேல்நிலைபள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    எஸ்.புதூர்:

    எஸ்.புதூர் ஒன்றியம் உலகம்பட்டி மேல்நிலைப்பள்ளி 1990-ல் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இங்கு 217 மாணவிகள் மற்றும் 271 மாணவர்கள் என மொத்தம் 482 பேர் படித்து வருகின்றனர். இங்கு மொத்தம் 20 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தநிலையில் பள்ளி நடைபெறும் போது அந்த பகுதியில் சுற்றிதிரியும் நாய்கள் உள்ளிட்ட கால்நடைகள் பள்ளியின் உள்ளே நுழைந்து விடுகின்றன.

    இதனால் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படுவதோடு, மதிய உணவு இடைவேளையின் போது மாணவ-மாணவிகள் அச்சமடைந்து வருகின்றனர். இதற்கு காரணம் பள்ளியில் சுற்றுச்சுவர் கிடையாது என்பது தான். மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாராமாகவும் மாறி வருகிறது.

    இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் சம்மந்தப்பட்டவர்களுக்கு பல முறை தெரிவிக்கப்பட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். மேலும் விடுமுறை நாட்களில் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருவதால் அந்த பகுதி பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.

    மேலும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், அவர்களின் பாதுகாப்பு கருதியும், அரசுப்பள்ளிக்கு உடனடியாக சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அரூர் நகரில் குரங்குகள் தொல்லையால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். எனவே குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
    அரூர்:

    அரூர் திருவிகநகர், பெரியார் நகர், தில்லை நகர், பாட்சாபேட்டை மற்றும் பரசுராமன் தெரு ஆகிய பகுதிகளில் குரங்குகள் பொதுமக்களுக்கு பெரும் தொல்லை கொடுத்து வருகிறது.

    வீட்டுக்குள் வரும் குரங்குகளை விரட்டினால் கடிக்க வருவதுடன் பொருட்களை தூக்கி கொண்ட சென்று விடுகிறது. குழந்தைகளையும் குரங்குகள் கடித்துள்ளது. மேலும், கேபிள் லைன், தொலைபேசி வயர்களையும் துண்டித்து விடுகிறது. 10-க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டமாக வருகிறது. கதவு திறந்திருக்கும் சமயம் பார்த்து உள்ளே நுழைந்து விடும் குரங்குகள் வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி சென்று விடுகிறது. மேலும், கடைகளில் மாட்டி வைக்கப்பட்டுள்ள திண்பண்டங்களை பாக்கெட்டுடன் அப்படியே தூக்கி சென்று விடுகிறது. இதனால் மக்கள் பெரும் தொல்லைக்கு ஆளாகியுள்ளனர்.

    எனவே, குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என வனத்துறையினரை பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
    திருச்செந்தூர் அருகே சாலை நடுவே உள்ள மின் கம்பத்தை மாற்றி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே குமாரபுரம் அன்புநகர் மெயின் ரோட்டின் நடுவே மின் கம்பம் ஒன்று உள்ளது. இது போக்குவரத்துக்கு இடையூராக உள்ளது. எந்த நேரத்திலும் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் சாலை நடுவே உள்ள மின் கம்பத்தை சாலை ஒரத்தில் மாற்றி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு குமாரபுரம் ஊர் நலக் கமிட்டி சார்பில் அதற்கான தொகை மின் வாரிய அலுவலகத்திற்கு செலுத்தியுள்ளனர்.

    இதையடுத்து மின் கம்பத்தை மாற்றி வைக்க பணம் செலுத்தி பல மாதங்கள் ஆகியும் இன்னும் மாற்றி வைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சாலை நடுவே உள்ள மின் கம்பத்தை மாற்றி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    ஜெயங்கொண்டம் கடைவீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பதாகைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரப்பகுதி கடைவீதிகளில் பல்வேறு இடங்களில் தனியார் ஜவுளி கடை உரிமையாளர்கள் மற்றும் திருமண விழா, கோவில் திருவிழா, அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் பொது நிகழ்ச்சிகளுக்காக பதாகைகள் வைத்து ரோட்டை அடைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்து வருகின்றனர். மேலும் கடைவீதி, நான்கு ரோட்டில் நாலாபுறமும் குற்ற கண்காணிப்புக்காக போலீசாரால் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களும் மறைக்கப்படுகின்றன. இதனால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசாருக்கு மிகுந்த சிரமமும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

    மேலும் ஜெயங்கொண்டம் கடைவீதியில் சுமார் 10 மாதத்திற்கு முன்பு சின்னவளையம் கிராமத்தை சேர்ந்த மளிகைக் கடைக்காரர் ஒருவரிடம் இருந்து பணப்பையை மர்ம நபர் ஒருவர் திருடி கொண்டு தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் அந்த மர்ம நபரை கண்டுபிடிப்பதற்காக, போலீசார் கேமராவில் பார்க்கும் போது பதாகைகள் மறைத்து விட்டது. இதனால் மர்ம நபர் யார் என்று இதுவரை கண்டு பிடிக்கவில்லை. மேலும் கடைவீதிகளில் ரோட்டு ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள கடை களால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை ரோட்டின் நடுவே நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நட வடிக்கை எடுப்பதுடன் சாலை ஓரங்களில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தியும், பதாகைகளை அகற்றியும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ×