search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "President Trump"

    ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்கும் மோடியை சந்திக்கிறார்.
    வாஷிங்டன்:

    சமீபத்தில் நடைபெற்ற இந்திய பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

    அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ள மோடிக்கு பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்கும் மோடியை சந்திக்கிறார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.



    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜப்பானில் ஜூன் மாதம் 28, 29ம் தேதிகளில் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்கிறார். அப்போது அவர் இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்க உள்ள மோடியை சந்திக்கிறார் என தெரிவித்துள்ளது.

    தேர்தலில் அபார வெற்றி பெற்று தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றிய பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    வடகொரிய தலைவரை 3-வது முறையாக சந்தித்து பேச டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா சரியான அணுகுமுறையுடன் வரவேண்டும் கிம் ஜாங் அன் நிபந்தனை விதித்துள்ளார். #Trump #KimJongUn
    சியோல்:

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் எதிரிகளாக திகழ்ந்து, வார்த்தை யுத்தம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி சிங்கப்பூரில் உச்சிமாநாடு நடத்தி சந்தித்து பேசினர். கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் போட்டனர்.

    அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27, 28-ந்தேதிகளில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் இரண்டாவது உச்சிமாநாடு நடத்தி சந்தித்து பேசினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் ஏதுமின்றி தோல்வியில் முடிந்தது.

    அணு ஆயுதங்களை ஓரளவுக்கு கைவிடவே, தன் மீதான பொருளாதார தடைகளை எல்லாம் அகற்ற வேண்டும் என்று வடகொரிய தலைவர் கிம் கூறியதே, பேச்சுவார்த்தை தோல்விக்கு காரணம் என அமெரிக்கா கூறியது.

    ஆனால் வடகொரியாவோ, தங்கள் வாழ்வாதாரத்துக்காக பொருளாதார தடைகளில் ஒரு பகுதியையாவது விலக்கிக்கொள்ள வேண்டும் என்றுதான் கூறினோம் என தெரிவித்தது.

    இந்த நிலையில், இப்போது 3-வது முறையாக கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விருப்பம் வெளியிட்டுள்ளார்.

    இதை வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஏற்றுக்கொண்டுள்ளார். அதே நேரத்தில் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா சரியான அணுகுமுறையுடன் வரவேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.

    இதுபற்றி வடகொரிய பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் அவர் பேசும்போது, ‘‘இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அம்சங்களுடனும், சரியான அணுகுமுறையுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்கா முன்வந்தால், 3-வது உச்சி மாநாடு நடத்தி சந்திக்க நாங்கள் விரும்புகிறோம்’’ என குறிப்பிட்டார். #Trump #KimJongUn
    மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவதற்கு தேவையான நிதி ஒப்புதலை நாடாளுமன்றம் அளிக்கும் என்று ஜனாதிபதி டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார். #DonaldTrump #MexicoWall
    வாஷிங்டன்:

    மெக்சிகோ நாட்டின் வழியாக அமெரிக்காவுக்குள் அகதிகள் சட்டவிரோதமாக நுழைவதை தடுப்பதற்காக 5.7 பில்லியன் டாலர்கள் (ரூ.39 ஆயிரம் கோடி) செலவில் தடுப்புச் சுவர் கட்ட ஜனாதிபதி டிரம்ப் மிகவும் ஆர்வமாக உள்ளார்.

    ஆனால் இதற்கான நிதியை நாடாளுமன்றம் ஒதுக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து ஜனாதிபதி டிரம்ப், அரசின் பல்வேறு துறை செலவினங்களுக்கு நிதி ஒதுக்காமல் இழுத்தடித்து வருகிறார். இதனால் அமெரிக்காவில் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக அரசுத் துறைகள் முடங்கி உள்ளன. 22 நாட்களாக அரசுத்துறை ஊழியர்கள் எந்த சம்பளமும் பெறாமல் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.



    இப்படியொரு நிலைமை அமெரிக்க வரலாற்றில் எப்போதும் ஏற்பட்டதில்லை என்று கூறப்படுகிறது. 1995-96-ம் ஆண்டு பில்கிளிண்டன் ஜனாதிபதியாக இருந்தபோது கூட அதிக பட்சமாக 21 நாட்கள்தான் அமெரிக்க அரசுத்துறைகள் முடங்கிக் கிடந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், தடுப்புச் சுவர் கட்டுவதற்கான நிதியை நாடாளுமன்றம் ஒதுக்கீடு செய்யவில்லை என்றால் நாட்டில் அவசர நிலையை அறிவிக்க தயங்கமாட்டேன் என்று அண்மையில் அறிவித்த டிரம்ப் தற்போது தனது குரலை சற்று தளர்த்திக் கொண்டு உள்ளார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், “மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் கட்டுவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் நிச்சயமாக ஒப்புதல் அளிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே நாட்டில் அவசர நிலையை உடனடியாக அறிவித்து விட மாட்டேன். அவசர நிலையை அறிவிக்கும் உரிமை எனக்கு இருந்தாலும் கூட தடுப்புச் சுவருக்கான போதிய நிதியை நாடாளுமன்றம் முறைப்படி ஒதுக்கீடு செய்துவிடும் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது.

    நாடாளுமன்றம் தனது வழக்கமான பணியை மேற்கொள்ளவேண்டும் என்பதே எங்களின் விருப்பம். அதனால் எடுத்த எடுப்பிலேயே அவசர நிலை அறிவிப்பு என்னும் நிலைக்கு போக மாட்டேன். இது நிதியை பெறுவதற்கான எளிதான வழி என்றாலும் கூட அதை விரைவாக கையாள மாட்டேன். அதேநேரம் நாடாளுமன்றம் இதைச் செய்ய தவறும் பட்சத்தில் அவசர நிலை அறிவிக்கப்படும் என்கிற எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” என்றார்.
    ஆப்கானிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் படைகளை சரிபாதியாக குறைக்க அதிபர் டிரம்ப் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Trumpwithdraw #UStroops #Afghanistan
    வாஷிங்டன்:

    சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் முகாமிட்டிருந்த பன்னாட்டு ராணுவப் படைகள் கடந்த 2014-ம் ஆண்டு திரும்பப்பெற்ற பின்னர் அங்கு தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது.

    நாட்டின் பல பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் தீவிரவாதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர்மீது அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக அமெரிக்காவை சேர்ந்த ராணுவம் மற்றும் விமானப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    தற்போதைய நிலவரப்படி அங்கு அமெரிக்காவை சேர்ந்த சுமார் 14 ஆயிரம் ராணுவ துருப்புகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிரியாவில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவத்தினர் திரும்பி அழைக்கப்படுவார்கள் என அந்நாட்டின் அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார்.

    இதைதொடர்ந்து, ஆப்கானிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் படைகளை சரிபாதியாக குறைக்க அதிபர் டிரம்ப் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த தகவல் ஆப்கானிஸ்தான் அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தலிபான்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளதாக தெரிகிறது. 



    அமெரிக்காவின் இந்த முடிவு தொடர்பாக கருத்து தெரிவித்த ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை உயரதிகாரி ஒருவர், ‘தன்னுடைய முக்கிய எதிரி களத்தில் இருந்து பின்வாங்கி விட்டால் யார் சமாதானத்துக்கு வருவார்கள்? தாக்குதல்களை தலிபான்கள் அதிகரிப்பதற்கு இது வாய்ப்பாக அமைந்துவிடும்’ என தெரிவித்தார்.

    ஆனால், தலிபான்கள் இதை ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு என்று குறிப்பிட்டனர். இப்போதாவது அமெரிக்கா இங்குள்ள உண்மை நிலவரத்தை உணர்ந்துள்ளது மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. மேலும் சில நல்ல தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பதாக தலிபான்கள் கூறுகின்றனர்.

    கடந்த நான்கரை ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் படைகளின் முழு கட்டுப்பாட்டில்தான் உள்நாட்டு பாதுகாப்பு உள்ளது. அமெரிக்கப் படைகள் விலகுவதால் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இல்லை என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானியின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ஹாரூன் சக்கன்சுரி சுட்டிக்காட்டியுள்ளார்.

    அதேவேளையில், டிரம்ப்பின் இந்த முடிவு  மிகப்பெரிய ஆபத்தாக அமையலாம் என அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் லின்ட்சே கிராஹம் எச்சரித்துள்ளார். 

    ஆப்கானிஸ்தான் நாட்டில் நாம் அடைந்துள்ள வெற்றியை எல்லாம் இழக்கும் முடிவாக இது அமைவதுடன் மீண்டும் ஒரு 9/11 (அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுரம் தகர்ப்பு) சம்பவத்துக்கும் வழிவகுத்து விடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். #Trumpwithdraw #UStroops #Afghanistan
    வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்புடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் நிகழ்ந்த சர்ச்சை அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #WhiteHouse #Trump #Reporter
    வாஷிங்டன்:

    அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணிக்கு ஜனாதிபதி டிரம்ப் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அந்த பேட்டியின்போது சி.என்.என். டெலிவிஷன் நிருபர் அகோஸ்டா மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு அகதிகளாக வருவோர் பற்றி டிரம்ப் கூறிய கருத்துக்கு எதிராக கேள்வி எழுப்பினார். நாடு கடந்து அகதிகள் வருவது படையெடுக்க அல்ல என்று அவர் கூறினார்.

    அதைக் கேட்ட டிரம்ப் ஏளனமாக, “ஓ எனக்கு சொல்கிறீர்களா, நன்றி. பாராட்டுக்கள்” என்றார்.

    “அவர்களை ஏன் அப்படி சொன்னீர்கள்?” என அந்த நிருபர் மீண்டும் கேள்வி கேட்க, “நான் அவர்கள் படையெடுக்க வருவதாகத்தான் கருதுகிறேன். உங்களுக்கும் எனக்கும் மாறுபட்ட கருத்து இருக்கிறது” என டிரம்ப் கூறினார்.

    இப்படி இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் டிரம்ப், “என்னை இந்த நாட்டை வழிநடத்த அனுமதியுங்கள். நீங்கள் சி.என்.என். டி.வி. சேனலை நடத்துங்கள். நீங்கள் அதை நன்றாக செய்தால் ‘ரேட்டிங்’ (பார்வையாளர்கள் எண்ணிக்கை) கூடும்” என கூற, அந்த நிருபர் மேலும் கேள்வி கேட்க முயற்சிக்க, அவரிடம் இருந்து வெள்ளை மாளிகை பணியாளர் ஒருவர் ஒலிபெருக்கியை பறித்து வேறு ஒரு நிருபருக்கு தர முயற்சிக்க அவர் தர மறுக்க பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அந்த நிருபரை பயங்கரமான ஆள் என டிரம்ப் கூறியது சர்ச்சையை உண்டாக்கியது.

    இந்த சம்பவத்தின் போது பிற நிருபர்கள் சி.என்.என். நிருபருக்கு ஆதரவாக பேசினர். கடைசியில் சி.என்.என். நிருபர் அகோஸ்டாவின் வெள்ளை மாளிகை அனுமதிச்சீட்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    முதலாம் உலக போர் நினைவு நாளில் பங்கேற்க ரஷியா செல்லும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அங்கு அதிபர் புதினை சந்திக்க உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. #WorldWarI #DonaldTrump #VladimirPutin
    வாஷிங்டன்:

    1918-ம் ஆண்டு நவம்பர் மாதம் 11-ம் தேதி முதலாம் உலக போர் நடைபெற்றது. இந்த போரின் நூற்றாண்டு நினைவு தினம் அடுத்த மாதம் ரஷியாவில் அனுசரிக்கப்பட உள்ளது. இதில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் அதிபர் டிரம்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்று அதிபர் டிரம்ப் அடுத்த மாதம் மாஸ்கோ செல்கிறார்.



    இதுதொடர்பாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பால்டன் கூறுகையில், ரஷியாவில் நடைபெறும் முதலாம் உலக போர் நூற்றாண்டு நினைவு நாள் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிபர் டிரம்ப் செல்கிறார். அவர் பாரிசில் நவம்பர் 11-ம் தேதி ரஷிய அதிபர் புதினை சந்திக்கிறார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேசவுள்ளார் என தெரிவித்தார். #WorldWarI #DonaldTrump #VladimirPutin
    சவுதி அரேபியாவில் மாயமான பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவுகளை அந்நாடு சந்திக்கும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். #Trump #JamalKhashoggi
    வாஷிங்டன்:

    சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்ற அவர், மாயமானார்.

    அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வருகிறது. இது ஆதாரமற்றது, தவறானது என அந்த நாடு திட்டவட்டமாக கூறுகிறது.

    பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்தார்.



    அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயம் ஆனது தொடர்பாக மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே சவுதி அரேபிய அதிகாரிகளின் அனுமதி பெற்று, துருக்கி போலீஸ் அதிகாரிகள் இஸ்தான்புல் துணைத்தூதரகத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    இதற்கிடையே, பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை செய்யப்படும் வீடியோ வெளியாகி உள்ளதாக துருக்கி அரசு நாளிதழ் தகவல் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அப்படி இருக்கும் பட்சத்தில் அது மிகவும் துயரமானது. சவுதி அரேபியா அதற்கான கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். #Trump #JamalKhashoggi
    அமெரிக்காவில் வழங்கப்படும் எச் 1 பி விசாவில் மிக முக்கியமான மாற்றங்களை செய்ய உள்ளோம் என அதிபர் டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. #Trump #H1Bvisa
    வாஷிங்டன்:

    அமெரிக்க நாட்டில் இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டினர் தங்கி வேலை செய்வதற்கு, அந்த நாடு ‘எச்-1 பி’ விசா வழங்குகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள் இடையே இந்த விசாவுக்கு எப்போதுமே பெரும் வரவேற்பு இருக்கிறது.
     
    2007-ம் ஆண்டு தொடங்கி 2017-ம் ஆண்டு வரையில், இந்தியாவில் இருந்து 22 லட்சம் பேர் இந்த விசாவுக்கு விண்ணப்பித்தனர் என்றால், அந்த விசாவுக்கு இந்தியர்கள் மத்தியில் உள்ள ஆர்வத்தை அறிந்து கொள்ள முடியும்.



    அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ம் தேதி டிரம்ப் ஜனாதிபதி பதவியை ஏற்ற பின்னர், ‘அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்கர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும்’ என்ற கொள்கையை தீவிரமாக நடைமுறைப்படுத்தி இருக்கிறார். இதன்காரணமாக அமெரிக்காவில் மற்ற நாட்டினர் பணியாற்றுவதை குறைத்துக்கொள்வதற்கான நடவடிக்கையில் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது.

    இதன் காரணமாக ‘எச்-1 பி’ விசா கேட்டு விண்ணப்பிக்கிற இந்தியர்களின் விண்ணப்பங்கள் முன்எப்போதும் இல்லாத வகையில் நிராகரிக்கப்படுகின்றன என கடந்த ஜூலையில் வெளியான ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது.

    இந்நிலையில், எச்1 பி விசா பெறுவதற்கான வரையறைகளை, அமெரிக்க குடிபெயர்வுத்துறை  மாற்றியமைக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிறந்த மற்றும் மிகத்திறமையான வெளிநாட்டவர்கள் எச்1 பி விசா பெறும் வகையிலும், அமெரிக்க பணியாளர்கள் மற்றும் ஊதிய விகிதத்தைப் பாதுகாக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது என உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. #Trump #H1Bvisa
    அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் சென்ற விமானத்தில் திடீரென புகை ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #MelaniaTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக பதவி வகித்து வருபவர் டொனால்டு டிரம்ப். இவரது மனைவி மெலனியா டிரம்ப், அதிபர் மாளிகையில் வசிப்பவர்களுக்காக ஆன்ட்ரு ஏர்பேஸ் விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், மெலனியா டிரம்ப் நேற்று பிலடெல்பியா மாகாணம் புறப்பட்டு செல்வதற்காக ஆன்ட்ரு ஏர்பேஸ் விமானத்தில் ஏறினார்.

    சிறிது நேரத்தில் விமானத்தின் கேபின் அறையில் இருந்து திடீரென புகை வெளியானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் மீண்டும் ஆன்ட்ரு ஏர்பேஸ் விமான தளத்தை வந்தடைந்தது. விமானத்தில் இருந்து மெலனியா பத்திரமாக கீழே இறங்கினார்.

    இது தொடர்பாக, வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கூறுகையில், விமானத்தில் பயணித்தவர்கள் யாருக்கும் எந்த சேதமும் இல்லை. இயந்திர கோளாறால் புகை ஏற்பட்டது என தெரிவித்தார்.

    மெலினியா டிரம்ப் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதை அறிந்த டொனால்ட் டிரம்ப், அவருடன் தொலைபேசியில் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் சென்ற விமானத்தில் திடீரென புகை ஏற்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #MelaniaTrump
    அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன் கிளாடும் சந்தித்துப் பேசினர். இதில், பரஸ்பர வரி விதிப்பால் மோசமாகி வந்த இரு தரப்பு வர்த்தக உறவில் சமரசம் ஏற்பட்டு உள்ளது. #DoaldTrump #JeanClaude
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படுகிற உருக்குக்கு 25 சதவீதமும், அலுமினியத்துக்கு 10 சதவீதமும் வரி விதித்து ஜனாதிபதி டிரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்தார். இந்த நடவடிக்கையால் ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்லாமல் கனடா, மெக்சிகோ, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பாதிப்புக்கு ஆளாகின.

    மேலும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படக்கூடிய கார்களுக்கும் வரி விதிக்கப்போவதாக டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

    அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கத்தக்க விதத்தில் அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்களுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு 2.8 பில்லியன் யூரோ (சுமார் ரூ.22 ஆயிரத்து 120 கோடி) வரி விதித்து நடவடிக்கை எடுத்தது.



    இதனால் அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவு மோசமாகி வந்தது.

    இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன் கிளாட் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு இணக்கமான முறையில் நடந்து முடிந்து உள்ளது.

    அது மட்டுமின்றி இரு தரப்பு வர்த்தக உறவிலும் புதிய திருப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்து இருக்கிறது.

    இந்த சந்திப்புக்கு பின்னர் வெள்ளை மாளிகை ரோஜா தோட்டத்தில் ஜனாதிபதி டிரம்ப், ஜீன் கிளாடுடன் நிருபர்களை சந்தித்தார். அப்போது டிரம்ப் கூறியதாவது:-

    ஐரோப்பிய கூட்டமைப்புடன் வர்த்தக தடைகளை குறைத்துக்கொள்வதற்கு அமெரிக்கா சம்மதம் தெரிவித்து உள்ளது. இரு தரப்பு வர்த்தக உறவில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டு உள்ளது. இந்த நாள் சுதந்திரமான, நியாயமான வர்த்தகத்துக்கான நல்ல நாள் ஆகும்.

    நாங்கள் இப்போது முதல் பேச்சு வார்த்தையைத் தொடங்கி உள்ளோம். இது எங்கே போய் முடியும் என்பதை நாங்கள் நன்றாக அறிந்து இருக்கிறோம். அமெரிக்காவிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் கூடுதலான இயற்கை எரிவாயுவை (எல்.என்.ஜி.) இறக்குமதி செய்யும். ஐரோப்பிய நாடுகளுடனான சேவைகள், விவசாய வர்த்தகம் அதிகரிக்கும்.

    அமெரிக்க விவசாயிகளிடம் இருந்து அதிலும் குறிப்பாக மத்திய மேற்கு பகுதி விவசாயிகளிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் மிகக்கூடுதலான அளவில் சோயா பீன்ஸ் வாங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன் கிளாட் நிருபர்களிடம் பேசும்போது, “ஜனாதிபதி டிரம்புக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவருடனான பேச்சு வார்த்தை நன்றாக அமைந்தது. ஆக்கப்பூர்வமாக இருந்தது. எனது முக்கிய நோக்கம், தொழில் ரீதியிலான பொருட்களுக்கு வரிவிலக்கு பெறுவதற்கு உடன்பாட்டை ஏற்படுத்துவதுதான். தேசிய பாதுகாப்பு தடைகளை விரைவில் மறு மதிப்பீடு செய்வதற்கு ஜனாதிபதி டிரம்ப் ஒப்புக்கொண்டார்” என்று கூறினார்.

    இரு தலைவர்களின் சந்திப்பால் ஏற்பட்டு உள்ள மாற்றங்களை ஐரோப்பிய கூட்டமைப்பு வர்த்தக அதிகாரி செசிலியா மால்ம்ஸ்டிராம் வரவேற்று உள்ளார். 
    அமெரிக்க செனட் சபையில் பேசிய அதிபர் டிரம்ப், வடகொரியா அதிபருடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி என தெரிவித்துள்ளார். #Trump #NorthKoreaIssue
    வாஷிங்டன்:

    எலியும் பூனையுமாக கடந்த பல ஆண்டுகளாக இருந்த அமெரிக்கா - வடகொரியா சமீபத்திய சிங்கப்பூர் சந்திப்புக்கு பிறகு நண்பர்களாக மாறியுள்ளது.

    ஏவுகணை மனிதர் என டிரம்ப்பால் விமர்சிக்கப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், கடந்த 12-ம் தேதி சிங்கப்பூரில் டிரம்பை சந்தித்து பேசினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு உலக தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

    இந்நிலையில், வடகொரியா அதிபருடனான சந்திப்பு மிக பெரிய வெற்றி என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.  

    கிம்முடனான சந்திப்புக்கு பிறகு அமெரிக்காவின் வாஷிங்டன்னில் செனட் சபை நேற்று கூடியது. அதில் அதிபர் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது பேசிய டிரம்ப், வடகொரியா அதிபர் கிம்முடனான சந்திப்பு மிக பெரிய வெற்றியாக அமைந்து விட்டது. அந்த சந்திப்பு மறக்க முடியாத அனுபவத்தை தந்துள்ளது.

    இரு நாடுகளுக்கு இடையே நல்ல உறவு நிலவி வருகிறது. வடகொரியா அறிவித்தபடி ஏற்கனவே இயங்கி வந்த அணு ஆயுத சோதனை மையங்களை அழித்துள்ளது. அணு ஆயுத ஏவுகணை சோதனைகளையும் நிறுத்தியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். #Trump #NorthKoreaIssue
    அமெரிக்காவில் நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து தனியே சிறையில் அடைக்கும் உத்தரவுக்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். #Trump #immigrantFamilySeparations
    வாஷிங்டன்:

    எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.

    குழந்தைகளுடன் அமெரிக்காவுக்குள் வருபவர்களை பிடித்தால் குடியுரிமை சட்டத்தை மீறியதாக குழந்தைகள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்து எல்லையோரங்களில் உள்ள பிரத்யேக காப்பகங்களில் வைக்கப்படுகின்ற சூழல் உருவாகியுள்ளது.

    இந்த புதிய உத்தரவு அமலுக்கு வந்த கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதியில் இருந்து மே மாதம் 31-ம் தேதிவரை எல்லை வழியாக அத்துமீறி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக 1940 பேர் எல்லை காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அவர்களுடன் வந்த 1995 சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு கூண்டுகள் போன்ற காப்பகங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

    டொனால்ட் டிரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கை மனிதநேயமற்ற செயல் என உலகளாவிய அளவில் எதிர்ப்புக்குரல் கிளம்பியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கர்களில் பலரும் இதற்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்

    இந்நிலையில், அமெரிக்காவில் நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து தனியே சிறையில் அடைக்கும் உத்தரவுக்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். 

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எல்லை வழியாக ஊடுருவும் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைப்பதற்கு அதிபர் டிரம்ப் முடிவு கட்டியுள்ளார். இதுதொடர்பான உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Trump #immigrantFamilySeparations
    ×