search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "HIV"

    • தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் தானம் அளிக்கலாம்.
    • நோய்த்தொற்று உள்ளதா என்று பரிசோதிக்க உடன்பட வேண்டும்.

    தாய்ப்பால் தானம் யாரெல்லாம் அளிக்கலாம்?

    ஆரோக்கியமாக, தற்போது எவ்வித மருந்துகளும் (வைட்டமின்கள், இன்சுலின், ஆஸ்துமா இன்ஹேலர்கள், தைராய்டு மாத்திரை, கண் சொட்டு மருந்துகளைத் தவிர்த்து) உட்கொள்ளாத தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் தானம் அளிக்கலாம்.

    குறிப்பாக, அவர்கள், தங்களுக்கு நோய்த்தொற்று உள்ளதா என்று பரிசோதிக்க உடன்பட வேண்டும். அவர்களின் பச்சிளங்குழந்தைகள், ஆரோக்கியமாக போதுமான அளவு எடை அதிகரிப்புடன் இருக்க வேண்டும்; குழந்தை தாய்ப்பால் குடித்த பிறகு, போதுமான அளவு தாய்ப்பால் சுரத்தல் இருக்க வேண்டும்.

    தாய்ப்பால் தானம் யாரெல்லாம் அளிக்கக் கூடாது?

    புகைப்பழக்கம் உள்ளவர்கள், புகையிலைப் பொருள்களை உபயோகிப்பவர்கள் மற்றும் நிகோட்டின் மாற்று சிகிச்சையில் (Nicotinereplacement therapy) உள்ளவர்கள், மதுப்பழக்கம் உள்ளவர்கள், ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி, HTLV அல்லது சிபிலிஸ் நோய்த்தொற்று உள்ளவர்கள், கடந்த 12 மாதங்களில் உறுப்புதானம் அல்லது ரத்ததானம் பெற்றவர்கள், மார்பகங்களில் முலையழற்சி (mastitis), பூஞ்சைத் தொற்று, ஹெர்பெஸ் (herpes simplex) அல்லது வேரிசெல்லா (varicella zoster) நோய்த்தொற்று உள்ளவர்கள் தாய்ப்பால் தானம் அளிக்கக் கூடாது.

    தாய்ப்பால் தானமளிப்பவர்களிடம் ஒப்புதல் வாங்கப்பட்டு, நோய்த்தொற்று உள்ளதா என்று ரத்தப் பரிசோதனை எடுத்த பிறகு, தாய்ப்பால் சேகரிக்கும் பகுதிக்கு அழைத்துச் செல்லப் படுவார்கள். அங்கே, தாய்மார்கள் தங்கள் விரல்களைக் கொண்டு Manual எஸ்பிரஸின் முறையிலோ, பிரெஸ்ட் பம்ப் பயன்படுத்தியோ, தாய்ப்பாலை அதற்குரிய கொள்கலனில் சேகரிப்பர். கொள்கலன் லேபிள் ஒட்டப்பட்டு குளிர்சாதனப் பெட்டியில் சேகரிக்கப்படும்.

    தானமளித்தவருக்கு ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி மற்றும் சிபிலிஸ் நோய்த்தொற்று இல்லை என்று ரத்தப் பரிசோதனையில் உறுதி செய்த பிறகு, தானமளிக்கப்பட்ட தாய்ப்பால், Pasteurization-க்கு உட்படுத்தப்படும்.

     பாஸ்டுரைசேஷன் செய்வதற்கு முன்பும் பின்பும், தானமளிக்கப்பட்ட தாய்ப்பாலில் நுண்ணுயிர்க்கிருமிகள் உள்ளனவா என்பதை அறிய வளர்சோதனை (culture) பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். வளர்சோதனைப் பரிசோதனையில் நுண்ணுயிர்க் கிருமிகள் இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, தாய்ப்பால் கொள்கலனில் அதன் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டு, உறைவிப்பானில் 20 டிகிரி செல்சியசில் உறைவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும். 3 - 6 மாதங்கள் வரை, இவ்வாறு உறைய வைக்கப்பட்ட தாய்ப்பாலை உபயோகப்படுத்தலாம்.

    தீவிர பச்சிளங்குழந்தை சிகிச்சைப் பிரிவில் உள்ள பச்சிளங்குழந்தைகளுக்கு தாய்ப்பால் தேவைப்படும்போது, உறைய வைக்கபட்ட தாய்ப்பாலுடைய கொள்கலன், குழாயின் மிதமான சுடுநீரில் காட்டப்பட்டு, நீர்ம நிலைக்குக் கொண்டு வரப்படும். இவ்வாறு நீர்ம நிலைக்குக் கொண்டு வரப்பட்ட தாய்ப்பால், மூன்று மணி நேரத்துக்குள் உபயோகப்படுத்தப்பட வேண்டும்.

    சென்ற அத்தியாயத்தில், தானமளிக்கப்பட்ட தாய்ப்பால் மூலம் நோய்த்தொற்று ஏற்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. தாய்ப்பால் வழியாக ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி நோய்த்தொற்று ஏற்படக் கூடுமென்ற காரணத்தால்தான், தாய்ப்பால் தானமளிப்பவர்கள் இந்தப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

     இந்த பரிசோதனைகள் நெகட்டிவ்வாக இருப்பின் மட்டுமே, தானமளிக்கப்பட்ட தாய்ப்பால் பாஸ்டுரைசேஷன் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டு, பின்பு உறைய வைக்கப்படும். பாஸ்டுரைசேஷன் செயல்முறையில், தாய்ப்பாலில் வேறு நுண்ணுயிர்க் கிருமிகள் இருந்தால், கொல்லப்பட்டுவிடும். அதன்பிறகு, வளர்சோதனைப் பரிசோதனையில் நுண்ணுயிர்க் கிருமிகள் இல்லையென்பது, உறுதியான பிறகுதான், தாய்ப்பால் உறைவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

    எனவே, தானமளிக்கப்பட்ட தாய்ப்பாலின் மூலம் பச்சிளங்குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படும் சாத்தியக்கூறு மிகமிகக் குறைவு. பவுடர் பாலைவிட, தானமளிக்கப்பட்ட தாய்ப்பால் பலமடங்கு மேலானதாகும். எனவே கண்டிப்பாக, பச்சிளங்குழந்தைகளுக்கு தானமளிக்கப்பட்ட தாய்ப்பாலைப் பயன்படுத்தலாம்.

    • அரசு மருத்துவமனையில் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறார்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.
    • 6 முதல் 16 வயதுக்கு உட்பட்ட 14 சிறார்களுக்கு தானம் பெறப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரில் உள்ள லாலா லஜபதிராய் அரசு மருத்துவமனையில், தலாசீமியா எனும் மரபணு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    இதற்கிடையே, 6 முதல் 16 வயதுக்கு உட்பட்ட 14 சிறார்களுக்கு தானம் பெறப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டதாகத் தெரிகிறது.

    இந்நிலையில், ரத்தம் ஏற்றப்பட்ட 14 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி மற்றும் ஹெபடைடிஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அதில் 2 பேருக்கு எச்.ஐ.வி, 7 பேருக்கு ஹெபடைடிஸ் பி, 5 பேருக்கு ஹெபடைடிஸ் சி இருப்பது கண்டறியப்பட்டது.

     

    விசாரணையில் சிறார்கள் அனைவரும் கான்பூர், பரூகாபாத், இட்டாவா மற்றும் கன்னோஜ் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும்,

    ரத்தத்தைப் பரிசோதிக்காமல் சிறார்களுக்கு செலுத்தப்பட்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    • 81 எச்ஐவி-பாசிட்டிவ் பெண்களில், குறைந்தது 35 பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.
    • பிறந்த குழந்தைகளுக்கு 18 மாதங்கள் நிறைவடைந்தவுடன் எச்ஐவி பரிசோதனை செய்யப்படும்.

    உத்திரபிரதேச மாநிலம் மீரட் அரசு மருத்துவமனையில் 80 கர்ப்பிணி பெண்களுக்கு எச்ஐவி கண்டறியப்பட்டுள்ளது.

    அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சையளித்து கண்காணித்து வருவதாக மீரட் அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 16 மாதங்களில் 80க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    மீரட்டின் லாலா லஜ்பத் ராய் மருத்துவக் கல்லூரியின் ஆன்டி- ரெட்ரோவைரல் தெரபி மையத்தின் அறிக்கையின்படி, "லாலா லஜபதி ராய் மருத்துவமனைக்கு குழந்தைப் பிரசவத்திற்காக வந்த 81 கர்ப்பிணிப் பெண்களுக்கு எச்ஐவி இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான பாதிப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

    81 எச்ஐவி-பாசிட்டிவ் பெண்களில், குறைந்தது 35 பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.

    ஆன்டி- ரெட்ரோவைரல் தெரபி (ஏஆர்டி) மையத்தின் அறிக்கையின்படி, 2022-23ம் ஆண்டுக்கு இடையில், மீரட்டின் லாலா லஜ்பத் ராய் மருத்துவக் கல்லூரியில் கர்ப்பிணிப் பெண்களிடையே 33 புதிய எச்ஐவி பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜூலை 2023 வரை 13 புதிய பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 35 கர்ப்பிணிப் பெண்கள் ஏற்கனவே எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் மருத்துவக் கல்லூரியின் ஏஆர்டி மையத்தில் சிகிச்சை பெற்று நலமாக உள்ளதாக மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

    பிறந்த குழந்தைகளின் உடல்நிலை குறித்து கேட்டதற்கு, ஏஆர்டி மையத்தின் நோடல் அதிகாரியிடம், பிறந்த குழந்தைகளுக்கு 18 மாதங்கள் நிறைவடைந்தவுடன் எச்ஐவி பரிசோதனை செய்யப்படும் என்றார்.

    • இந்த வருட ஐபிஎல் தொடருக்கு பஞ்சாப் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட உள்ளார்.
    • எனக்கு 14-15 வயது இருக்கும் போது மணாலிக்குச் சென்றேன்.

    மும்பை:

    ஐபிஎல் தொடர் வரும் 31-ம் தேதி அகமதாபாத்தில் தொடங்க உள்ளது. தொடக்க ஆட்டத்தில் சென்னை-குஜராத் அணிகள் மோதுகின்றன. இதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற்போது தீவிரமாக தயாரகி வருகின்றனர். இந்த வருட ஐபிஎல் தொடருக்கு பஞ்சாப் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட உள்ளார்.

    இந்நிலையில் 14-15 வயதில் எச்ஐவி பரிசோதனை மேற்கொண்டதாக ஷிகர் தவான் கூறியுள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    எனக்கு 14-15 வயது இருக்கும் போது, மணாலிக்குச் சென்று, என் குடும்பத்தாருக்குத் தெரிவிக்காமல் முதுகில் பச்சை குத்தியிருந்தேன். நான் அதை சிறிது காலம் மறைத்து வைத்திருந்தேன். சுமார் 3-4 மாதங்களுக்கு பின்னர் என் தந்தைக்கு நான் பச்சை குத்தியது தெரிந்துவிட்டது. அவர் என்னை அடித்தார்.

     

    டாட்டூவைக் குத்திய பிறகு நான் கொஞ்சம் பயந்தேன். எனக்கு டாட்டு குத்திய ஊசியை வைத்து எத்தனை பேருக்கு குத்தப்பட்டது என்ற தகவல் எனக்கு தெரியவில்லை. எனவே நான் எச்ஐவி பரிசோதனை மேற்கொண்டேன். அது இன்று வரை எதிர்மறையாக (நெகட்டிவ்) உள்ளது.

    நான் குத்திய முதல் டாட்டு ஸ்கார்பியோ (தேள்) என்னுடைய முதுகில் குத்தினேன். ஏனென்றால் அந்த நேரத்தில், அது என் எண்ணமாக இருந்தது. பிறகு நான் அதை ஒரு டிசைன் செய்தேன். என் கையிலும் சிவபெருமான் பச்சை குத்தினேன். அர்ஜூனன் பச்சையும் குத்தி உள்ளேன். ஏனென்றால் அவர் வில் எய்வதில் மிகச்சிறந்தவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 3 பெரு வியாதிகள் ஒரே நேரத்தில் ஒரு நபருக்கு ஏற்பட்டிருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது.
    • அவர் வெளிநாடுகளுக்கு சென்றபோது அங்கு ஓரின சேர்க்கை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகிக்கிறார்கள்.

    உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இதில், இத்தாலியை சேர்ந்த 36 வயது நபர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றார்.

    5 நாள் பயணத்தை முடித்து கொண்டு அவர் இத்தாலி திரும்பினார். வீட்டுக்கு சென்ற அவருக்கு காய்ச்சலும், உடல் சோர்வும் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.

    இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. உடனே அவரை டாக்டர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தனர். கொரோனா சிகிச்சையில் இருந்தபோது அந்த நபருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டு கொப்புளங்கள் உருவானது. ஜூலை மாத தொடக்கத்தில் இந்த கொப்புளங்கள் உடைந்து அவருக்கு வேதனையை அளித்தது.

    எனவே டாக்டர்கள் அவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருக்குமோ என்று சந்தேகப்பட்டனர். அதற்கான சோதனையும் அவருக்கு நடத்தப்பட்டது. இதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதியானது.

    கொரோனா, குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அந்த வாலிபர் ஏற்கனவே எச்.ஐ.வி. நோயில் இருந்து மீண்டவர் என்ற தகவல் டாக்டர்களுக்கு தெரியவந்தது.

    அவர் வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர் என்பதால் அவருக்கு மீண்டும் ஒரு முறை எச்.ஐ.வி. பரிசோதனையையும் மேற்கொள்ள டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி எச்.ஐ.வி. பரிசோதனை செய்தபோது அதுவும் அந்த நபருக்கு இருப்பது தெரியவந்தது.

    ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கு அம்மை மற்றும் எச்.ஐ.வி. பாதிப்புகள் ஒரே நபருக்கு ஏற்பட்டிருப்பது அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுபோன்று 3 பெரு வியாதிகள் ஒரே நேரத்தில் ஒரு நபருக்கு ஏற்பட்டிருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த நபருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 3 நோய்களால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஓரின சேர்க்கை பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

    அவர் வெளிநாடுகளுக்கு சென்றபோது அங்கு ஓரின சேர்க்கை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக அவர்கள் தொடர்ந்து அந்த நபரை கண்காணித்து வருகிறார்கள். தற்போது அவர் கொரோனாவில் இருந்தும், குரங்கு அம்மை பாதிப்பில் இருந்தும் மீண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    எச்.ஐ.வி. பாதித்த சாத்தூர் பெண்ணிடம் இருந்து 2 மாதமாக பிரித்து வைக்கப்பட்ட மூத்த மகளை, அவரிடமே மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் நேற்று ஒப்படைத்தனர். #HighCourtMaduraiBench #HIVBlood
    மதுரை:

    மதுரையை சேர்ந்த வக்கீல்கள் எஸ்.முத்துக்குமார், அப்பாஸ்மந்திரி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு எச்.ஐ.வி. தொற்றுடன் இருந்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எச்.ஐ.வி. பாதித்த பெண்ணுக்கு உரிய இழப்பீடு மற்றும் சிகிச்சை வழங்கவும், தானமாக பெறப்படும் ரத்தத்தை பாதுகாப்பாக பெற கடும் விதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுக்களில் கூறியிருந்தனர்.

    ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, எச்.ஐ.வி. பாதித்த பெண்ணை நேரில் அழைத்து தனி அறையில் வைத்து விசாரித்தனர். அப்போது, தன்னுடைய மூத்த மகளை 2 மாதமாக பார்க்காமல், மனரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்த பெண் தெரிவித்தார். இதையடுத்து அந்த பெண்ணின் கணவர், மூத்தமகள் ஆகியோரை ஆஜராகும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதன்படி அவர்களும், பாதிக்கப்பட்ட பெண்ணும் நீதிபதிகளின் தனி அறையில் நேற்று ஆஜரானார்கள். அவர்களிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.

    பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:-

    ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்தபோது, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரையும், மூத்த மகளையும் ஆஜராக உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் அவர்கள் இன்று (நேற்று) ஆஜராகினர். பாதிக்கப்பட்ட பெண்ணை பார்த்ததும், அவரது கணவர் சேர்ந்து வாழ முயற்சிப்பதாக கூறியுள்ளார். ஆனால் அவர் தன்னை பார்த்துக்கொள்ள மாட்டார் என்று அந்த பெண் தெளிவாக கூறியுள்ளார்.

    தற்போது தன் குழந்தைகளுடன் அந்த பெண் தனது பெற்றோருடன் இருந்து வாழ்நாளை கழிக்க விரும்புகிறார். அங்கு தனது கணவர் வந்து பார்க்க எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. எனவே 2 மாதமாக பிரித்து வைக்கப்பட்டு இருந்த சிறுமி, அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்படுகிறார். இந்த வழக்கில் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியின் மனநலத்துறை உதவி பேராசிரியர் கீதாஞ்சலி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் மருத்துவ அதிகாரி ரஞ்சித்ராம்குமார் ஆகியோரும் ஆஜரானார்கள்.

    பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு, வேலை, இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசிடம் கேட்டு, அடுத்த விசாரணையின்போது தெரிவிக்க கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியனுக்கு உத்தரவிடப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் சார்பில் ஆஜராக, வக்கீல் ஆர்.வெங்கடேசன் நியமிக்கப்படுகிறார். அவருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணத்தை சுகாதாரத்துறை செயலாளர் ஒரு வாரத்தில் வழங்க வேண்டும்.

    பாதிக்கப்பட்ட பெண் எப்போது வேண்டுமானாலும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய மருத்துவ அதிகாரி ரஞ்சித்ராம்குமார் தெரிவித்துள்ளார். மேலும், அந்த பெண்ணுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். இந்த பெண்ணை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து டாக்டர்களே உரிய முடிவை எடுக்கலாம். இந்த வழக்கு வருகிற 29-ந்தேதி (அதாவது நாளை) ஒத்திவைக்கப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. #HighCourtMaduraiBench  #HIVBlood
    உரிய பரிசோதனை செய்யாமல் ரத்தம் ஏற்றியதால் எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளாகிய சாத்தூர் பெண், வருகிற 25-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #HighCourtMaduraiBench #HIVBlood
    மதுரை:

    மதுரையை சேர்ந்த வக்கீல்கள் எஸ்.முத்துக்குமார், அப்பாஸ் மந்திரி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உரிய முறையில் பரிசோதிக்காததால் எச்.ஐ.வி. தொற்றுடன் இருந்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசு ரத்த வங்கி பணியாளர்கள், டாக்டர்களின் கவனக்குறைவால்தான் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டுள்ளது.



    ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் தானமாக பெறப்படும் ரத்தத்தை ரத்தசோகை பாதித்த பெண்கள், கர்ப்பிணிகள், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் என பல லட்சம் நோயாளிகளுக்கு செலுத்துகிறார்கள். தானமாக பெற்ற ரத்தத்தில் நோய் தொற்று உள்ளதா? என முறையாக பரிசோதித்து, அதன்பின் மற்றவர்களுக்கு செலுத்த வேண்டும்.

    இதற்காக தமிழக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் உரிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, ரத்தத்தை பரிசோதிக்க வேண்டும். ஆனால் ரத்தப்பரிசோதனை செய்வதற்கான ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன.

    இதனால் ரத்தப்பரிசோதனை செய்வதில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. எனவே பாதுகாப்பான முறையில் ரத்தம் தானமாக பெற்று, முறையாக பரிசோதித்து, பிறருக்கு செலுத்த உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும். எச்.ஐ.வி. பாதித்த சாத்தூர் பெண்ணுக்கு உரிய இழப்பீடு மற்றும் சிகிச்சை வழங்கவும், தானமாக பெறப்படும் ரத்தத்தை பாதுகாப்பாக பெற கடும் விதிகளை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுக்களில் கூறியிருந்தனர்.

    ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தது.

    இந்தநிலையில் அந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    மனுதாரர் முத்துக்குமார் சார்பில் ஆஜரான வக்கீல் நீலமேகம், “சாத்தூர் பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளதா என்பதை அறிய நவீன பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால் தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் பழைய நடைமுறைகள் மூலம் தான் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தற்போது பிறந்த குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளதா? என்பது 3 மாதத்துக்கு பிறகு தான் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் மேலைநாடுகளில் பி.சி.ஆர். (பாலிமர் செயின் ரியாக்சன்) பரிசோதனை மூலம் 48 மணி நேரத்தில் முடிவை தெரிந்து கொள்ளலாம். அங்கு உள்ளதுபோல நவீன பரிசோதனை எந்திரங்களை தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் பொருத்த வேண்டும்” என்று வாதாடினார்.

    அதேபோல் அப்பாஸ் மந்திரி சார்பில் ஆஜரான வக்கீல் ஆர்.வெங்கடேஷ், “ரத்தப்பரிசோதனை செய்வதில் உள்ள குளறுபடிகளை தவிர்க்க கடும் விதிகளை ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார்.

    விசாரணை முடிவில், “எச்.ஐ.வி. பாதித்த சாத்தூர் பெண்ணுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதா? என்பதை அறிந்து கொள்ள, வருகிற திங்கட்கிழமை (25-ந்தேதி) அவர் நீதிபதிகள் அறையில் நேரில் ஆஜராக வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். #HighCourtMaduraiBench  #HIVBlood
    இரத்தம் மூலம் கருவில் உள்ள குழந்தைகளுக்கு 30 சதவீதமும், பிரசவத்தின் போது 50 சதவீதமும், தாய்ப்பால் கொடுக்கும்போது 15 சதவீதமும் குழந்தையை பாதிக்கும்.
    சாத்தூரைச் சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ள நபரின் ரத்தத்தைச் செலுத்தியதால் அந்த அப்பாவி பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்டவசமான சம்பவம் தமிழகம் முழுவதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    எச்.ஐ.வி. என்ற வைரஸ் தொற்றுநோய் அமெரிக்காவில் 1981-ம் ஆண்டிலும், இந்தியாவில் அதுவும் சென்னையில் 1986-ம் ஆண்டிலும் கண்டுபிடிக்கப்பட்டது. பரிசோதனை செய்யப்படாத ரத்தம், சுத்தம் செய்யப்படாத ஊசி, பாதுகாப்பற்ற உடலுறவு, கவனிக்கப்படாத கருவுற்ற தாயிடம் இருந்து பிறக்கும் குழந்தை ஆகிய நான்கு வழிகளில் எச்.ஐ.வி. தொற்று பரவும்.

    பொதுவாக ரத்தம் கொடுக்க தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களிடமிருந்து மட்டும்தான் ரத்தம் எடுக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகளில் எடுக்கப்படும் அனைத்து ரத்ததான பைகளை மற்றவர்களுக்கு ஏற்றுவதற்கு முன்பு கட்டாயமான பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

    பரிசோதிக்கப்பட்ட ரத்தத்தில் பாதிப்பு இல்லை என்று அச்சிடப்பட்ட சான்றிதழ் ரத்தம் சேகரிக்கப்பட்ட பையில் ஒட்டப்பட்டு இருக்கும். அதை பயன்படுத்துவதால் விளையக்கூடிய தொற்றை உடனடியாக தடுக்க முடியும்.

    சாத்தூர் பெண்ணுக்கு நடைபெற்ற இந்த நிகழ்வு ரத்த வங்கி ஊழியர்களின் கவனக்குறைவே காரணமாக இருக்க வேண்டும். ரத்ததானம் அளித்த அந்த இளம் நபர் சமீபத்தில் எச்.ஐ.வி. கிருமி தொற்றுக்கு ஆட்பட்டு, ரத்தக்கூறு மாற்று கண்டுபிடிக்கக்கூடிய கால அவகாசத்திற்கு முன்னரே தனது உறவினருக்காக ரத்ததானம் அளித்திருக்கக்கூடும்.

    பாதுகாப்பற்ற உடல் உறவினால் சிறுதுளியில் வரக்கூடிய எய்ட்ஸ் தொற்றை எலிசா முறையில் கண்டுபிடிக்க மூன்று வாரம் முதல் மூன்று மாதம் வரை ஆகலாம்.

    250 மில்லி லிட்டர் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட, ரத்தத்தை பெறும் மற்றவருக்கு ஒருசில நாட்களிலேயே எச்.ஐ.வி. முதல் நிலையான குறுகிய கால ரத்தக்கூறு மாற்று நிலை ஏற்படக்கூடும். சாத்தூர் பெண்ணுக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் ஏற்றப்பட்டு உள்ளது. வீட்டுக்குச் சென்ற சில நாட்களிலேயே அவர் கடுமையான காய்ச்சலுடன் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த காய்ச்சல் எச்.ஐ.வி.யின் அறிகுறி. பரிசோதனையின் போது எச்.ஐ.வி. தொற்று இந்த பெண்ணுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவனமான உரிய சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ரத்தம்தான் பாலாக சுரக்கிறது. எச்.ஐ.வி. கிருமி தொற்றுக்கு ஆளாகி இருக்கும் அந்தப் பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படும். ரத்தம் மூலம் கருவில் உள்ள குழந்தைகளுக்கு 30 சதவீதமும், பிரசவத்தின் போது 50 சதவீதமும், தாய்ப்பால் கொடுக்கும்போது 15 சதவீதமும் குழந்தையை பாதிக்கும்.

    அந்த பெண்ணுக்கு நிச்சயமாக தொற்றுக்கு பின் தர வேண்டிய தடுப்புபடி எச்.ஐ.வி. கூட்டு மருந்து ஆரம்பிக்கப்பட்டு இருக்க வேண்டும். பொதுவாக இது நான்கு வாரங்கள் மட்டுமே வழங்கப்படும். ஆனால் ஆபத்தான நிகழ்வுக்கு பின் மூன்று நாட்களுக்குள் ஆரம்பிக்கப்பட வேண்டும். எனவே இந்த பெண்ணுக்கு மற்ற எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரியவந்துள்ள கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பிரவச காலம் வரை நீடிக்கப்பட வேண்டும்.



    இதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் பிறக்க இருக்கும் குழந்தைக்கும் எச்.ஐ.வி. தொற்று முழுவதுமாக தடுக்கப்படுவது சாத்தியமாகும். அறுவை சிகிச்சை மூலமே பிரசவம் பார்க்கப்பட வேண்டும். பிறந்த உடனே குழந்தைக்கு நிவரம்பின் சிரப் அளிப்பதன் மூலம் எஞ்சிய வாய்ப்பும் முற்றிலுமாக தடுக்கப்படும்.

    என்றாலும் தொடர்ந்து தாய்பாலின் மூலம் எச்.ஐ.வி. தொற்று வரும் வாய்ப்பு 10 சதவீதம் இருப்பதால், இதனைக் கருத்தில் கொண்டு தாய்க்கு வைரஸ் எண்ணிக்கை செய்யப்பட்டு ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட வேண்டும். தாயும், குழந்தையும் தொடர்ந்து ஆறு மாதம் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டியதிருக்கும். எச்.ஐ.வி. நோய் தொடக்க காலத்தில் மருந்து எதுவும் இல்லாததால் கொடிய உயிர்கொல்லி நோயாக கருதப்பட்டது. தற்போது ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் போன்று எச்.ஐ.வி.யையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். எச்.ஐ.வி. தொற்றுக் கிருமிகள் பாதிக்கப்பட்டவர்கள் முறையான கூட்டு மருந்துகளை உட்கொள்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் நீடித்து இருக்க முடியும்

    மன உளைச்சலுடன் இருக்கும் சாத்தூர் பெண்ணுக்கு நம்பிக்கை தரக்கூடிய உளவியல் ஆலோசனைகளை கூற வேண்டும். எச்.ஐ.வி. நோயை கட்டுப்படுத்த மருந்து இருக்கிறது என்று அவரை நம்பும்படி செய்ய வேண்டும்.

    இன்று கிராம மக்களும், படித்தவர்களும், அறியாமையால் ரத்த சோகையாக இருந்தால் ரத்தம் ஏற்றுங்கள் என்று சொல்கிறார்கள். இது தவறு. மருத்துவர்கள் ரத்த சோகையை நீக்க தேவையான சத்துணவு உணவுகளையும், மருந்து மாத்திரைகளையும் பயன்படுத்தும்படி பரிந்துரை செய்கின்றனர். ஆனால் சிலர் ரத்தம் ஏற்றிக்கொள்கின்றனர். இவ்வாறு ரத்தம் ஏற்றிக்கொள்வதால் பல நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளன.

    தேவையான போது மருத்துவர்கள் அறுவை சிகிச்சை, சாலை விபத்து, அதிக உதிரப் போக்கு, அணுக்கள் குறைபாடு உள்ள நிலையில் தங்களுக்கு தேவையான அளவு ரத்தத்தை முன்கூட்டியே முறையாக பரிசோதனை செய்து கொடுக்கப்பட்ட ரத்தத்தையே பயன்படுத்துவார்கள்.

    பெண்கள் கருவுற்றவுடன் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் ரத்த சோதனை மறுக்காமல் முறையாக செய்துகொள்ள வேண்டும்.

    ரத்த சோதனையின் போது இரும்பு சத்து மாத்திரைகளும் கொடுக்கப்படுகின்றன. அதை அவர்கள் முறையாக சாப்பிடுகிறார்களா என்று ஊழியர்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று கண்காணித்து உரிய ஆலோசனைகள் வழங்குகிறார்கள். இதனால் ரத்தம் ஏற்றப்படுவது குறைவாகவே உள்ளது. இன்று பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் எச்.ஐ.வி. தொற்று பாதிக்கப்பட்டவர்களை அழைத்து மருத்துவ உதவிகளையும் மன நல ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

    சாத்தூர் பெண்ணுக்கு நேர்ந்த நிகழ்வு அனைவரின் மனதையும் நெகிழச் செய்யும் நிகழ்வு. இது மருத்துவத்துறைக்கும், பொதுமக்களுக்கும் பாடமாக அமைந்து, மற்றொரு இதுமாதிரியான நிகழ்வு நடக்காதிருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.

    அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் தங்களுக்கு ஒரு பெரிய சமுதாய பொறுப்பு இருக்கிறது என்பதை முதலில் உணர வேண்டும். சிறந்த உயிர் காப்பு மருந்தாக திகழும் ரத்தமேற்றுதல் பக்க விளைவுகள் கொண்ட ஒரு அபாயகரமான மருந்தாகவும் நிகழக்கூடும் என்பதை மறக்கக்கூடாது. இதில் மனித தவறுகளுக்கு துளியளவும் இடமில்லை என்பதை ரத்த வங்கிகளில் பணிபுரியும் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். ரத்த வங்கியில் தானம் செய்ய வரும் உன்னத கொடையாளி நுழையும் தருணத்தில் இருந்து, ரத்தப்பை வெளியே செல்லும் வரை கடைபிடிக்க வேண்டிய முறைகள் அனைவராலும், அனைத்து நேரங்களிலும் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். பிறர் நலனுக்காக தன் நலனை பேணி காக்கும் தன்னார்வ ரத்த கொடையாளிகள் ஊக்குவித்து அதிகரிக்க வேண்டும்.

    ரத்தம் ஏற்றுவது கடைசி ஆயுதமாக அனைத்து மருத்துவர்களும் பயன்படுத்த வேண்டும். மாற்று வழிகளை முதலில் செய்ய வேண்டும். அவசியமாக தேவைப்படும் போது, முழு ரத்தம் கேட்காது அந்தந்த ரத்த கூறுகளை மட்டும் கேட்க வேண்டும். ரத்தம் செலுத்தும்போது ஒரு மருத்துவ உதவியாளர் அருகில் இருக்க வேண்டும்.

    ரத்த வங்கி ஒழுங்கு முறைகள் எழுத்திலும், செயலிலும் நடைமுறைப்படுத்தப்படுவதே இம்மாதிரியான நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க உதவும்.

    டாக்டர் எம்.பாலசுப்பிரமணியன்,
    முன்னாள் துணை இயக்குனர்,
    தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம்.
    சிவகாசியில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என்று திமுக மகளிரணி தலைவர் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். #kanimozhi #HIVBlood #PregnantWoman
    சென்னை:

    திமுக மகளிரணி தலைவர் கனிமொழி எம்பி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

    சிவகாசியில் அரசு மருத்துவமனையில் பெறப்பட்டு, சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்ஐவி வைரஸ் உள்ள ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

    எச்ஐவி குறித்து இத்தனை விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்னும், சுகாதாரத் துறை ஊழியர்களின் கவனக் குறைவால், இந்த கொடூரம் நிகழ்ந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண், ஒரு மாதத்தில் குழந்தை பெற உள்ளார்.

    இந்த வைரஸ் அக்குழந்தைக்கு பரவாமல் தடுப்பதற்கும், அப்பெண்ணின் நலனை பாதுகாப்பதற்கும் அரசு உயரிய சிகிச்சை வழங்குவதோடு, உரிய இழப்பீட்டையும் வழங்க வேண்டும். 

    சம்பந்தப்பட்ட ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்தது போதுமானதல்ல.  உடனடியாக அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.  #kanimozhi #HIVBlood  #PregnantWoman
    எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை, நிவாரணம் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் கூறினார். #HIVBlood #PregnantWoman
    மதுரை:

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண் இன்று போலீஸ் நிலையம், ஆர்.டி.ஓ. மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார்.



    இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்று விருதுநகர் வந்தார். அங்கு சுகாதாரத்துறை இணை இயக்குநர் மனோகரனிடம் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தமிழக அரசு உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வருகிறது. அதே போல் அவருக்கு உரிய நிவாரணம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.

    கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விஷயத்தில் கவனக்குறைவாக இருந்த சாத்தூர், சிவகாசி அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #HIVBlood #PregnantWoman

    ×