உலகிலேயே முதல்முறையாக இத்தாலி வாலிபருக்கு கொரோனா, குரங்கு அம்மை, எச்.ஐ.வி. பாதிப்பு

3 பெரு வியாதிகள் ஒரே நேரத்தில் ஒரு நபருக்கு ஏற்பட்டிருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது.அவர் வெளிநாடுகளுக்கு சென்றபோது அங்கு ஓரின சேர்க்கை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகிக்கிறார்கள்.
உலகிலேயே முதல்முறையாக இத்தாலி வாலிபருக்கு கொரோனா, குரங்கு அம்மை, எச்.ஐ.வி. பாதிப்பு
Published on

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இதில், இத்தாலியை சேர்ந்த 36 வயது நபர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றார்.

5 நாள் பயணத்தை முடித்து கொண்டு அவர் இத்தாலி திரும்பினார். வீட்டுக்கு சென்ற அவருக்கு காய்ச்சலும், உடல் சோர்வும் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.

இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. உடனே அவரை டாக்டர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தனர். கொரோனா சிகிச்சையில் இருந்தபோது அந்த நபருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டு கொப்புளங்கள் உருவானது. ஜூலை மாத தொடக்கத்தில் இந்த கொப்புளங்கள் உடைந்து அவருக்கு வேதனையை அளித்தது.

எனவே டாக்டர்கள் அவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருக்குமோ என்று சந்தேகப்பட்டனர். அதற்கான சோதனையும் அவருக்கு நடத்தப்பட்டது. இதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதியானது.

கொரோனா, குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அந்த வாலிபர் ஏற்கனவே எச்.ஐ.வி. நோயில் இருந்து மீண்டவர் என்ற தகவல் டாக்டர்களுக்கு தெரியவந்தது.

அவர் வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர் என்பதால் அவருக்கு மீண்டும் ஒரு முறை எச்.ஐ.வி. பரிசோதனையையும் மேற்கொள்ள டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி எச்.ஐ.வி. பரிசோதனை செய்தபோது அதுவும் அந்த நபருக்கு இருப்பது தெரியவந்தது.

ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கு அம்மை மற்றும் எச்.ஐ.வி. பாதிப்புகள் ஒரே நபருக்கு ஏற்பட்டிருப்பது அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுபோன்று 3 பெரு வியாதிகள் ஒரே நேரத்தில் ஒரு நபருக்கு ஏற்பட்டிருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த நபருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 3 நோய்களால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஓரின சேர்க்கை பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

அவர் வெளிநாடுகளுக்கு சென்றபோது அங்கு ஓரின சேர்க்கை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக அவர்கள் தொடர்ந்து அந்த நபரை கண்காணித்து வருகிறார்கள். தற்போது அவர் கொரோனாவில் இருந்தும், குரங்கு அம்மை பாதிப்பில் இருந்தும் மீண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com