என் மலர்
நீங்கள் தேடியது "தூய்மை பணியாளர்கள் போராட்டம்"
- இன்று காலை வழக்கம் போல் தூய்மை பணியாளர்கள் அந்தப்பகுதியில் சேகரமான குப்பைகளை அகற்றினர்.
- சக தூய்மை பணியாளர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டு கடையை முற்றுகையிட்டு பெருமாள் கோவில் வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் அருகே மாநகராட்சி பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட பூக்கடைகளில் வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். தினம்தோறும் தூய்மை பணியாளர்கள் பூ மார்க்கெட்டில் சேகரமாகும் குப்பைகளை அகற்றி வருகின்றனர்.
இன்று காலை வழக்கம் போல் தூய்மை பணியாளர்கள் அந்தப்பகுதியில் சேகரமான குப்பைகளை அகற்றினர். அப்போது பூ வியாபாரி நல்லுசாமி என்பவர் தனது கடையில் சேகரமாகிய குப்பைகளை கடைக்கு எதிரே நடை பாதையில் கொட்டி விட்டு சென்றுள்ளார்.
அப்போது தூய்மைபணியாளர்கள் இங்கு கொட்டக்கூடாது, அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளாக பிரித்து கொட்ட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நல்லுசாமி, தூய்மை பணியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கடையில் இருந்த பூக்கள் வைக்கக்கூடிய டிப்பரை வைத்து லட்சுமி என்ற தூய்மை பணியாளரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சக தூய்மை பணியாளர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டு கடையை முற்றுகையிட்டு பெருமாள் கோவில் வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு திருப்பூர் தெற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
- பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- கைது செய்யப்பட்ட அனைவரையும் வீட்டிற்கு செல்லுமாறு கூறியும் அவர்கள் சமுதாய கூடத்தை விட்டு வெளியேறாமல் தொடர் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:
கடந்த சில மாதங்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகையை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து பெரியமேடு, வேப்பேரி, உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 33 பெண்கள் 12 ஆண்கள் உட்பட 45 தூய்மை பணியாளர்களை கைது செய்து கண்ணப்பர் திடல் சமுதாய கூடத்தில் அடைத்து வைத்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரையும் வீட்டிற்கு செல்லுமாறு கூறியும் அவர்கள் சமுதாய கூடத்தை விட்டு வெளியேறாமல் தொடர் போரட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அனைவரையும் நேற்று இரவு கண்ணப்பர் திடல் சமுதாய கூடத்தில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அப்போது சரஸ்வதி, நிர்மலா, மகேஸ்வரி, தனலட்சுமி ஆகிய 4 தூய்மை பணியாளர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே சக தூய்மை பணியாளர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை கே.எம்.சி. மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டும் என போலீசாரிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால் போலீஸார் கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் நிறுத்தாமல் நேராக கோயம்பேடு நோக்கி சென்றதால் ஆத்திரமடைந்த தூய்மை பணியாளர்கள் பஸ்சிலேயே கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் பாதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்களை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மற்ற தூய்மை பணியாளர்களும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்று அவர்களுக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர்.
- சென்னையின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- பல்வேறு முறைகளில் போராட்டம் நடத்தி கைதானார்கள்.
வீடு சுத்தமாக இருந்தால் தெரு நன்றாக இருக்கும். தெரு சுத்தமாக இருந்தால் நகரம் நன்றாக இருக்கும். நகரம் நன்றாக இருந்தால் மாவட்டம் நன்றாக இருக்கும். மாவட்டம் நன்றாக இருந்தால் மாநிலம் நன்றாக இருக்கும். மாநிலம் நன்றாக இருந்தால் நாடே நன்றாக இருக்கும் என்பார்கள்... இதற்கு பொருள்...
வீடு சுத்தமாக இருப்பது என்பது தனிமனிதனின் ஒழுக்கத்தையும், பொறுப்புணர்வையும் குறிக்கிறது, இது ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படை. வீடுகளின் தூய்மை தெருக்களின் தூய்மையைத் தீர்மானிக்கிறது. இது குடிமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கும் கூட்டுப் பொறுப்பை உணர்த்துகிறது.
சுத்தமான தெருக்கள், சுத்தமான நகரங்களுக்கு வழிவகுக்கும். இது நகர்ப்புற மேம்பாடு, சுற்றுலா, மற்றும் பொது சுகாதாரத்திற்கு உதவுகிறது. மாவட்டங்கள் சீராக இருந்தால் மாநிலங்கள் வலுப்பெறும்; மாநிலங்களின் வளர்ச்சி நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அடித்தளமிடும் என்பதாகும்.
இதற்கெல்லாம் முழு முதற்காரணமானவர்கள் தூய்மை பணியாளர்கள். இவர்கள் குறித்து நாம் எப்போது பேசுகிறோம்... வெள்ளம் வந்தால் தெருக்களை சுத்தம் செய்ய இரவு, பகல் பாராமல் பணியாற்றும் போது. பிறகு போராட்டம் என்ற பெயரில் சாலைகளில் போட்டு செல்லும் குப்பைகளை சுத்தம் செய்யும் போது. பிறகு குப்பைகளில் தவறவிட்ட நகைகளை மீட்டு தரும் போது அவர்களை பாராட்டுகிறோம். அவ்வளவுதான்..
நம் வீட்டில் சேரும் மீதமான உணவு, குப்பைகளின் நாற்றத்தை கூட நம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மேலும் குப்பை வண்டிகள் செல்லும் போது ஏற்படும் துர்நாற்றத்தை கூட சகித்துக்கொள்ள முடியவில்லை. இப்படியிருக்க.. இதை எதை பற்றியும் கவலைப்படாமல் தெரு, சாலைகளை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்களை தெய்வத்திற்கு நிகர் என்றால் மிகையல்ல...

இப்படியான தூய்மை பணியாளர்கள் 120 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுகுறித்து யாரும் கவலைப்படவும் இல்லை. சிந்திக்கவும் இல்லை. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து போராட்டத்தை தொடங்கியவர்கள்
1 குறைந்தபட்ச தினசரி ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
2 பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
3 மாநகராட்சிகளில் நேரடியாகப் பணியாற்றுபவர்களுக்கும், ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் இடையிலான ஊதிய வேறுபாட்டைக் களைய வேண்டும்.
4 தரமான கையுறைகள், முகக்கவசங்கள் மற்றும் காலணிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை முறையாக வழங்க வேண்டும்.
5 என்.எம்.ஆர் (NMR) முறையில் பணியாற்றியவர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
என்பன முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சென்னையின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு தொடங்கிய போராட்டமானது உண்ணாவிரதம், காலவரையற்ற போராட்டம், கடலில் இறங்கி போராட்டம் என பல்வேறு முறைகளில் போராட்டம் நடத்தி கைதானார்கள். சென்னை உயர்நீதிமன்றமும் இவர்களின் போராட்டத்திற்கு அனுமதி வழங்கியது.

இதனிடையே தூய்மை பணியாளர்களின் கோரிக்கை குறித்து அரசு பரிசீலனையும் செய்தது. அதில், ஊதிய உயர்வு, அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு உள்ளிட்ட சில புதிய திட்டங்களை அறிவித்தது, ஆனால் போராட்டக்காரர்கள் இவை போதுமானதல்ல எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு முன்னதாக கடந்த ஆண்டும் சென்னை, கோவை, மதுரையில் தூய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வருடமும் தீர்க்கப்படாத பிரச்சனையா தொடர்ந்து வரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- அமைச்சர்கள், மேயர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.
- மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறம் கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சியின் 5, 6 மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியார்மயமாக்குவதை கண்டித்தும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 90 நாட்களுக்கு மேலாக ரிப்பன் மாளிகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கெனவே அமைச்சர்கள், மேயர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.
தூய்மைப் பணியாளர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல் துறையினரால் கடந்த ஆகஸ்ட் 13-ந்தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து சென்னையில் அவ்வப்போது வெவ்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். பின்னர் அவர்கள் காவல் துறையால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்படுவார்கள்.
கடந்த 5-ந்தேதி மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறம் கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடல் அலையில் இறங்கி கையில் பதாகைகளை ஏந்தி ஆபத்தான வகையில் தங்களுடைய போராட்டத்தை நடத்தினர்.
இந்நிலையில் தூய்மை பணியாளர்களின் போராட்டம் 100-வது நாளை எட்டியுள்ளதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- மதுரை அவுட் போஸ்ட் அம்பேத்கார் சிலை அருகே தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உரிய உடன்பாடு எட்டப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை தொடருவோம்.
மதுரை:
தமிழகத்தின் மிகப்பெரிய மாநகராட்சியான மதுரை 100 வார்டுகளை கொண்டது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வரும் இங்கு தினமும் சேரும் பல டன் குப்பைகளை நாள்தோறும் வார்டு வாரியாக துப்புரவு பணியாளர்கள் சென்று சேகரித்தும், அப்புறப்படுத்தியும் வருகின்றனர்.
கடந்த வாரம் சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சியை சேர்ந்த துப்புரவு தொழிலாளர்கள் நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுட்டனர்.
பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் திரண்டு போராட்டம் நடத்தினர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணிகளில் தனியார் மயத்தை புகுத்தும் அரசாணை 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வேண்டும், சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசாணை 62 (31)-ன் படி மாதச்சம்பளம் வழங்கிட வேண்டும்.
அனைத்து பிரிவு பணியாளர்களளுக்கும் தீபாவளி பண்டிகை போனசாக ஒரு மாத சம்பளத்தை வழங்கிட வேண்டியும் சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் காவல் துறையின் அராஜகத்தை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, தனியார் ஒப்பந்த நிறுவன பணியை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை முதல் இரவு வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று 6-வது முறையாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுடன் மாநகராட்சி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விளக்க கடிதம் கொடுக்கப்பட்ட நிலையிலும் போராட்டம் தொடர்ந்தது. இதனையடுத்து இரவு மதுரை மாநகராட்சி வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்து அடைத்து நள்ளிரவில் விடுவித்தனர்.
இன்று 2-வது நாளாக மதுரை அவுட் போஸ்ட் அம்பேத்கார் சிலை அருகே தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் எதிரொலியாக மாநகராட்சி வளாகம் முழுவதிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தூய்மை பணியாளர்கள் கலைந்து செல்லாவிட்டால் கைது செய்வோம் என்று போலீசார் எச்சரித்தனர்.
இந்நிலையில் தொழிற்சங்கத்தினர் காவல்துறையினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தலைமையில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அவர்லேண்ட் நிறுவன தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட முத்தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.
இதுகுறித்த மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை தங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை.
உரிமைகளுக்காக போராடும் தங்களை போராட கூட விடாமல் தடுக்கும் ஜனநாயகத்திற்கு எதிரான செயலை அரசும், காவல்துறையும் செய்கிறது.
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உரிய உடன்பாடு எட்டப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை தொடருவோம். எப்போதும் போராட்டத்தில் இருந்து நாங்கள் பின்வாங்க போவதில்லை என்று கூறினார்.
- தூய்மைப் பணியாளர்கள் சுயத்தொழில் தொடங்கினால் 35 சதவீதம் மானியமாக அதாவது, ரூ.3½ லட்சம் வரை வழங்கப்படும்.
- அரசு அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும், அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் பொருந்தும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற 2021-ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளில் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதன் மூலம் ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகமான தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்து உள்ளார். இதன் மூலம் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கியதில் 30 லட்சம் பேருக்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு மேலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார்.
இதைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழ் நாட்டுக்கான புதிய தொழில் முதலீடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அமைச்சரவை கூட்டம் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் நடந்தது. கூட்டம் முடிந்ததும் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நம்முடைய முதலமைச்சர் இன்றைக்கு தூய்மைப் பணியாளர்களுக்காக 6 சிறப்புத் திட்டங்களை அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதலுக்கு தந்துள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த நல வாரியத்தின் திட்டங்கள், நன்மைகள் அது வழங்கக் கூடிய நலன்கள் தூய்மைப் பணியாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் தருவதற்கு இந்த அரசு முனைப்புடன் உள்ளது.
நமது முதலமைச்சர் கலைஞர் காலத்தில் இருந்து தூய்மைப் பணியாளர்களுக்கு செய்து வரும் திட்டங்களை தொடர்ந்து கடைபிடித்து வருவதுடன் தூய்மைப் பணியாளர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்கள் நலனிலும் முதலமைச்சரின் அரசு பெரும் கருணைக் கொண்டதாக இருக்கிறது.
இதைத் தொடர்ந்து இன்று அமைச்சரவை கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்காக 6 சிறப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனித் திட்டம் செயல்படுத்தப்படும்.
தூய்மைப் பணியாளர்கள் பணியில் இருக்கும்போது இறக்க நேரிட்டால் நல வாரியம் மூலம் அவர்களது குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி உதவியுடன் கூடுதலாக ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும். இதன் மூலம் ரூ.10 லட்சம் அவர்களது குடும்பத்திற்கு கிடைக்கும்.
தூய்மைப் பணியாளர்கள் சுயத்தொழில் தொடங்கினால் 35 சதவீதம் மானியமாக அதாவது, ரூ.3½ லட்சம் வரை வழங்கப்படும்.
6 சதவீத வட்டி மானியத்துடன் வழங்குவதற்கு ஆண்டுக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் உயர்கல்வியில் சேரும் போதும் உதவித் தொகைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
அவர்கள் எந்தப் பள்ளியில் பயின்றாலும் கல்விக் கட்டணம், விடுதிக் கட்ட ணம் உள்ளிட்ட அனைத்தும் வழங்கும் வகையில் புதிய கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.
தூய்மைப் பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளில் வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 30 ஆயிரம் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்படும். தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கப்படும்.
தூய்மை பணியாளர்கள் அதிகாலையிலேயே வேலைக்கு வர வேண்டி இருப்பதால் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் காலை உணவு இலவசமாக வழங்கப்படும். இது சென்னை மாநகராட்சி பகுதியில் உடனடியாக செயல்பாட்டுக்கு வரும். எனவே தூய்மை பணியாளர்களின் நலனில் அரசு அக்கறை கொண்டுள்ளதால் போராட்டத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்ப வேண்டும்.
அவர்களின் பணி நிரந்தரம் தொடர்பான வழக்குகள் முடிவடைந்த பிறகு பரிசீலிக்கப்படும். அரசு அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும், அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் பொருந்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தூய்மைப்பணியாளர்களுக்கான காப்பீட்டு தொகை ரூ.10 லட்சமாக உயர்வு.
- தூய்மை பணியாளர்களுக்கு அந்தந்த ஊராட்சிகள் மூலமாக காலை உணவு இலவசமாக வழங்கப்படும்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இந்நிலையில் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும்.
* தூய்மை பணியாளர்களுக்கான திட்டங்கள் சென்னையில் தொடங்கி படிப்படியாக மற்ற இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
* பணியின்போது இறக்கும் தூய்மை பணியாளர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தர நடவடிக்கை.
* தூய்மைப்பணியாளர்களுக்கான காப்பீட்டு தொகை ரூ.10 லட்சமாக உயர்வு.
* தூய்மைப் பணியாளர்கள் துறைசார் நோய்களை கண்டறியவும் சிகிச்சை அளிக்க தனி திட்டம்.
* தூய்மை பணியாளர்கள் குழந்தைகள் எந்த பள்ளியில் பயின்றாலும் புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம்.
* தூய்மை பணியாளர்கள் குழந்தைகளுக்கு உயர்கல்வி, விடுதி மற்றும் புத்தக கட்டணத்தை அரசே ஏற்கும்.
* தூய்மை தொழிலாளர்கள் கடனுதவிக்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் முதல்முறையாக சென்னை மாநகராட்சியில் தொடங்கப்படும்.
* தூய்மை பணியாளர்களுக்கு அந்தந்த ஊராட்சிகள் மூலமாக காலை உணவு இலவசமாக வழங்கப்படும்.
* சென்னையை தொடர்ந்து மற்ற நகர்ப்புறங்களிலும் காலை உணவு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* நகர்ப்புற தூய்மை பணியாளர்களுக்காக காலை உணவு இலவசமாக வழங்கப்படும்.
* நகர்ப்புற தூய்மை பணியாளர்களுக்கு 30 ஆயிரம் குடியிருப்புகள் கட்டி தரப்படும்.
* கிராமப்புற தூய்மை பணியாளர்களுக்கு கலைஞர் வீடு திட்டத்தில் முன்னுரிமை
* தூய்மை பணியாளர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 6% வட்டி மானியமும் வழங்கப்படும்.
* நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மை பணியாளர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.
* தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துடன் இணைந்து தூய்மை பணியாளர்கள் வசிக்கும் இடங்களிலேயே புதிய வீடு கட்டித்தரப்படும்.
தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகளின் முடிவில் பணி நிரந்தரம் தொடர்பாக முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தூய்மைப் பணியாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க போராட்டம் நடத்தலாம்.
- அனுமதி பெற்று நடத்தும் போராட்டத்தை தடுத்திருந்தால், நீதிமன்றம் தலையிடும்.
சென்னை:
தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கச் சென்ற 20 வக்கீல்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாகக் கூறி, சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வில், வக்கீல்கள் ரமேஷ், வேல்முருகன், கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆஜராகி, 20 வக்கீல்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு சட்டக்கல்லூரி மாணவர் காணாமல் போய்விட்டார். அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. இதுசம்பந்தமான வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனக் கோரினர்.
இதுசம்பந்தமாக மனுவாக தாக்கல் செய்யும்படி அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை பிற்பகல் விசாரணை செய்யப்படும் என தெரிவித்தனர்.
முன்னதாக, தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்தும்போது கட்டுப்பாட்டுடன் செயல்பட காவல் துறைக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில், காவல் துறையினர் அத்துமீறி செயல்பட்டுள்ளனர். அதனால் போராட்டம் நடத்த மாற்று இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டது.
இந்த முறையீட்டைக் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, தூய்மைப் பணியாளர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க போராட்டம் நடத்தலாம். அதற்கு உரிமை உள்ளது. அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால், அவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது எனத் தெரிவித்தது.
அனுமதி பெற்று நடத்தும் போராட்டத்தை தடுத்திருந்தால், நீதிமன்றம் தலையிடும். இந்த விவகாரத்தில் எந்த மனுவும் இல்லாமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தலைமை நீதிபதி அமர்வு மறுத்து விட்டது.
- தூய்மைப் பணியாளர்களோடு டீ, காபி அருந்தியது போல் போட்டோஷூட் எடுத்துக்கொண்டீர்களே...
- தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரை, வலியை, வேதனையை தமிழ்நாடே பார்த்து கலங்குகிறது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
வணக்கம் மு.க.ஸ்டாலின் அவர்களே...
ரிப்பன் மாளிகை வாசலில், நள்ளிரவில் அடக்குமுறையை ஏவி, கொரோனாவின்போது கூட நம் குப்பைகளை நீக்கி சுத்தம் செய்த தூய்மை பணியாளர்களை அடித்து நொறுக்கி, அங்கிருந்து அகற்றி பல்வேறு இடங்களில் சிறை வைத்துள்ளனர் உங்கள் ஏவல்துறை.
யார் அவர்கள்? சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா? இல்லையே. ஏழை எளிய மக்கள்! அன்றாடம் தூய்மைப் பணி செய்து, சென்னை மாநகரை சுத்தமாக வைத்திருந்தவர்கள்.
நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அதற்கு நேர்மாறாக செயல்பட்டத்தைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் அறவழியில் போராடியது ஒரு தவறா?
அவர்களோடு டீ, காபி அருந்தியது போல் போட்டோஷூட் எடுத்துக்கொண்டீர்களே... அப்போது மட்டும் இனித்தது? இப்போது நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் கேட்கும்போது கசக்கிறதா?
எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் இருந்தபோது எழுதிய கடிதங்களில், எந்த வழக்கு இருந்தாலும், இவர்கள் பணி நிரந்தரம் செய்யுங்கள் என்று நாடகமாடினீர்களே, நினைவில் இருக்கிறதா?
"நள்ளிரவில் அடாவடித்தனமாக, வலுக்கட்டயாமாக நம் அரசுக்கும் மக்களுக்கும் பணிபுரியும், நலிவடைந்த தூய்மை பணியாளர்கள் மீது 79 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இதுபோன்ற ஒரு அடக்குமுறையை எந்த அரசும் ஏவியதில்லை.
தூய்மை பணியாளர்கள் 8-க்கும் மேற்பட்ட இடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள், அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும், இந்த அடாவடி நடவடிக்கைகளால் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் வலியுறுத்துகிறேன்.
தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரை, வலியை, வேதனையை தமிழ்நாடே பார்த்து கலங்குகிறது. அவர்கள் சிந்திய ஒவ்வொரு கண்ணீருக்கும் நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
சொல்ல வேண்டிய காலம் அவ்வளவு தூரமெல்லாம் இல்லை. இன்னும் 8 மாதங்கள் தான் மு.க.ஸ்டாலின்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- போராட்டத்தை ஆதரித்த பல சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- நீதிமன்ற உத்தரவே சனநாயகத்துக்கு எதிரானதாகும்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சென்னை மாநாகராட்சியின் தூய்மை பணியாளர்கள் தங்களை நிரந்தரப்படுத்தக்கோரி கடந்த 13 நாட்களாக அறவழியில் போராடி வந்தனர். அவர்களது கோரிக்கை ஞாயமானது என்பதை விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் எழுச்சித்தமிழர் திருமாவளவன் போராட்டக்களத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்தார்.
இடது சாரி கட்சித்தலைவர்களுடன் முதல்வரை சந்தித்து தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார்.
இச்சூழலில், நீதிமன்ற உத்தரவின் பேரில் போராடும் மக்களை நள்ளிரவில் கைது செய்துள்ளது காவல்துறை.
போராட்டத்தை ஆதரித்த பல சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக வழக்கறிஞர் நிலவுமொழி மற்றும் சமூக செயற்பாட்டாளர் தோழர் வளர்மதி போன்றோர் கைது செய்யப்பட்டு இரவு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஏன் கைது செய்கிறீர்கள்? என கேள்வி கேட்ட தோழர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர்.
காவல்துறையின் இப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
சனநாயக ரீதியாக போராடிய மக்களையும் ஆதரவாளர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
நீதிமன்ற உத்தரவே சனநாயகத்துக்கு எதிரானதாகும்.
நீதிமன்றமும் காவல்துறையும் இணைந்து நடத்தும் மக்கள் விரோதப்போக்கு கவலைக்குரியதாக உள்ளது.
தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்வதோடு, போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கோரிக்கை வைக்கின்றோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- போராட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை என போராட்டக்காரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
- போராட உரிமை இருந்தாலும் சாலை அல்லது நடைபாதையை ஆக்கிரமித்து போராட அனுமதிக்க முடியாது.
சென்னை:
சென்னை மாநகராட்சி மண்டலம் 5, 6 ஆகியவற்றில் தூய்மைப் பணி தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கடந்த 1-ந்தேதி முதல் ரிப்பன் கட்டிடம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு, பகல் பாராமல் அவர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்களின் போராட்டத்திற்கு, அ.தி.மு.க., த.வெ.க., பா.ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதேபோல, திரைப்பட நடிகர் நடிகைகளும் நேரில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தூய்மை பணியாளர்கள் இன்று 13-வது நாளாக தங்களுடைய போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அருகில் மருத்துவமனை உள்ளது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
போராட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை என போராட்டக்காரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்நிலையில், ரிப்பன் மாளிகைக்கு வெளியே போராடுவோரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
நாங்கள் உங்கள் கோரிக்கைக்கு எதிராகவோ அல்லது போராட்டத்திற்கு எதிராகவோ இல்லை. போராட உரிமை இருந்தாலும் சாலை அல்லது நடைபாதையை ஆக்கிரமித்து போராட அனுமதிக்க முடியாது.
அனுமதிக்கப்பட்ட இடத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த அனுமதி அளித்த நீதிபதிகள், யாரும் பாதிக்காத வகையில் போராட்டத்தில் ஈடுபடுமாறு தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினர்.
- போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை இதுவரை 4 முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன்.
- எந்த தூய்மை பணியாளரையும் பணியை விட்டு நீக்கவில்லை.
தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 1-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தூய்மை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தூய்மை பணியாளர்கள் போராட்டம் இன்று 12-வது நாளை எட்டி உள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்புமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
பொதுநலம் கருதி, பணி பாதுகாப்பு குறித்த உண்மை நிலையை அறிந்து பணிக்கு திரும்புமாறு தூய்மை பணியாளர்களுக்கு சென்னை மாநாகராட்சியும் வலியுறுத்தி உள்ளது.
இதற்கிடையே, சென்னை மாநகராட்சியின் அழைப்பை தூய்மை பணியாளர்கள் புறக்கணித்து உள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள், எங்கள் துறை அமைச்சரான கே.என்.நேரு எங்கே? என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை துறை அமைச்சரான நேரு சந்திக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்நிலையில், தூய்மை பணியாளர்களின் குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை இதுவரை 4 முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளேன். 4 நாட்களாக நான்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்.
எந்த தூய்மை பணியாளரையும் பணியை விட்டு நீக்கவில்லை. சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் முதலமைச்சர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.






