என் மலர்
உலகம்
- ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் மூலம் சாந்தோ கான் நாயகனாக அறிமுகமானார்.
- திரைப்பட தயாரிப்பாளரான செலிம் கான் பல படங்களை தயாரித்துள்ளார்.
வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் தீவிரம் அடைந்து வன்முறை வெடித்ததால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது இந்தியாவில் உள்ளார்.
இந்நிலையில், வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் வன்முறையில் நடிகர் சாந்தோ கான் மற்றும் அவரது தந்தை செலிம் கானை கும்பல் ஒன்று அடித்து கொலை செய்துள்ளது.
திரைப்பட தயாரிப்பாளரான செலிம் கான் பல படங்களை தயாரித்துள்ளார். ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு ஒரு படத்தையும் செலிம் கான் இயக்கியுள்ளார். இந்த படத்தின் மூலம் செலின் கான் தனது மகன் சாந்தோ கானை நாயகனாக சினிமாத்துறையில் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு அவர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளம் வந்தார்.
சட்டவிரோதமாக மணல் கடத்திய குற்றச்சாட்டில் செலிம் கான் கைதாகி ஏற்கனவே சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- லண்டனில் தற்காலிகமாக குடியேற ஷேக் ஹசீனா அனுமதி கேட்டுள்ளார்.
- இங்கிலாந்து அரசு பரிசீலனை செய்து வருகிறது.
வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது இந்தியாவில் உள்ளார்.
லண்டனில் தற்காலிகமாக குடியேற அனுமதி கேட்டுள்ளதாக தெரிகிறது. அனுமதி கிடைத்தால் லண்டனில் அடைக்கலம் புகுவார்.
ஆனால் இங்கிலாந்தின் குடியேற்ற சட்டத்தின்படி தனிநபர் இங்கிலாந்துக்கு பயணம் செய்து அடைக்கலம் அல்லது தற்காலிக தஞ்சம் கோர முடியாது. ஆனாலும் முறையாக அடைக்கலம் கோரிக்கை குறித்து இங்கிலாந்து அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஷேக் ஹசீனாவின் விசாவை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஹெலிகாப்டர் இன்று பிற்பகலில் நுவாகோட்டின் ஷிவ்புரி பகுதியில் விபத்துக்குள்ளானது.
- ஹெலிகாப்டர் புறப்பட்ட மூன்று நிமிடங்களில் தொடர்பை இழந்து விபத்துக்குள்ளானது.
நேபாளம், காத்மாண்டுவில் இருந்து ரசுவா நோக்கி சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
ஏர் பைனஸ்டி என்கிற ஹெலிகாப்டர் இன்று பிற்பகலில் நுவாகோட்டின் ஷிவ்புரி பகுதியில் விபத்துக்குள்ளானது.
இந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக வெளியான அறிக்கையின்படி, ஹெலிகாப்டர் காத்மாண்டுவில் இருந்து ரசுவா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சூர்யா சவுர்-7 என்ற மலையில் மோதியுள்ளது.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், அதிகாரிகள் மீட்புக் குழுவை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ஹெலிகாப்டர் காத்மாண்டுவில் இருந்து பிற்பகல் 1:54 மணிக்கு புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. சூர்யா சவுரை அடைந்த பிறகு, ஹெலிகாப்டர் அதிகாரிகளுடனான தொடர்பை இழந்தது. ஹெலிகாப்டர் புறப்பட்ட மூன்று நிமிடங்களில் தொடர்பை இழந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது
இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சில மாதங்களுக்கு முன்பு ஹசீனா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது கவனம் பெற்று வருகிறது.
- 'மறு தேர்தலில் வெற்றி பெற வைப்பதாக ஒரு வெள்ளை இன நபர் சொன்னார்'
வங்காள தேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுக் கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலவரம் காரணமாகப் பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்காளதேச சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து நடத்தப் போராட்டம் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற குரலாக மாறியது.

14 ஆண்டுகால ஆட்சியை இரண்டே மாதங்களில் தூக்கியெறிய வைத்தது எது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.போராட்டங்களில் பாகிஸ்தான் ஆதரவு அமைப்பான ஜமாத்- இ- இஸ்லாமியின் பங்கு கவனிக்கத்தக்கது. மேலும் ஹசீனாவுடனான இந்தியாவின் நெருக்கம், சீனா உள்ளிட்ட நாடுகளை உறுத்துதலாக இருந்து வருவதையும் பொருத்திப் பார்க்க வேண்டி உள்ளது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஹசீனா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது கவனம் பெற்று வருகிறது.
மே 2024 இல் அவர் அளித்த அந்த பேட்டியில், வங்காள தேசத்தில் தங்களது நாட்டின் விமான படைத்தளத்தை அமைக்க அனுமதி அளித்தால் தன்னை மீண்டும் மறு தேர்தலில் வெற்றி பெற வைப்பதாக ஒரு வெள்ளை இன நபர் சொன்னார்' என்று ஹசீனா தெரிவித்திருந்தார். ஆனால் எந்த புதிய விமான தளமும் வங்காள தேசத்தில் அமைக்கப்படவில்லை. தற்போது ஹசீனா ஆட்சியை இழந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

ஹசீனா வெள்ளை இன நபர் என்று குறிப்பிட்டது, மேற்கு நாடுகளை குறிக்கிறது என்றும் எனவே இந்த ஆட்சிக் கவிழ்ப்பில் மேற்கு நாடு ஒன்றின் சதி இருக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன. கடந்த 2009 முதல் ஆட்சியில் உள்ள ஹசீனாவின் அவாமி லீக் கட்சி இந்த வருடத்தின் தொடக்கத்தில் நடந்த தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்டு வெற்றி பெற்றது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
- இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே மிகப்பெரிய புரட்சி வெடித்தது.
- தம்மிக்க பெரேரா பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவர் கடைசி கட்டத்தில் தனது முடிவை திரும்ப பெற்றார்.
கொழும்பு:
இலங்கையில் வருகிற செப்டம்பர் 21-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 15-ந்தேதி முதல் தொடங்குகிறது.
அதிபர் தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே போட்டியிடுவதாக அறிவித்து உள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா களத்தில் உள்ளனர். இதற்கிடையே ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் அதிபர் வேட்பாளர் யார் என்பது குறித்து சில நாட்களாக ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் அதிபர் வேட்பாளராக நமல் ராஜபக்சே(வயது 38) தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு அக்கட்சி வேட்பாளருக்கு தொழில் அதிபர் தம்மிக்க பெரேரா பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவர் கடைசி கட்டத்தில் தனது முடிவை திரும்ப பெற்றார். நமல் ராஜபக்சே முன்னாள் அதிபரும், பிரதமருமான மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் ஆவார்.
இலங்கையில் கடந்த 2022-ல் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே மிகப்பெரிய புரட்சி வெடித்தது. இதனையடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவி விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆசிப்மெர்ச்சன்ட்டுக்கு ஈரானுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.
- முன்பணமாக 5 ஆயிரம் அமெரிக்க டாலர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் பாகிஸ்தானை சேர்ந்த ஈரான் உளவாளி ஆசிப் மெர்ச்சன்ட் (வயது 46) என்பவரை உளவுத்துறையினர் சமீபத்தில் கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் உள்பட பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. ஆசிப்மெர்ச்சன்ட்டுக்கு ஈரானுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.

பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கா புறப்படுவதற்கு முன்பு ஆசிப் மெர்ச்சன்ட் ஈரான் சென்று வந்ததாகவும், அமெரிக்காவில் அரசியல் கொலைகளை செய்வதற்காக சதித்திட்டத்துடன் அவர் ஈரானில் இருந்து வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் தனது சதித்திட்டத்தை நிறைவேற்ற சிலரை அணுகியுள்ளார். ஆனால் அந்த நபர்கள் போலீஸ் அதிகாரிகள் ஆவார்கள். கூலிப்படை போல் நடித்த அதிகாரிகளி டம் ஆசிப் மெர்ச்சன்ட் தனது திட்டத்தை தெரிவித்துள்ளார்.
ஆவணங்களைத் திருடுதல், அரசியல் பேரணிகளில் போராட்டங்களை ஏற்பாடு செய்தல், ஒரு அரசியல் நபரை கொல்வது ஆகிய மூன்று திட்டங்களை அவர் தெரிவித்துள்ளார். மேலும் முன்பணமாக 5 ஆயிரம் அமெரிக்க டாலர்களை கொடுத்துள்ளார்.
அதன்பின் அமெரிக்காவில் இருந்து புறப்பட முயன்றபோது ஆசிப் மெர்ச்சன்ட்டை கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் டொனால்ட் டிரம்பை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார் என்று நேரடியாக தெரிவிக்கப்படவில்லை.
ஆனால் சில முக்கிய ஆதாரங்களின்படி டிரம்பை கொலை செய்யும் திட்டமும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி ஈராக் சென்றபோது அவரை அமெரிக்கா கொலை செய்தது. இதற்கு பதிலடியாக முன்னாள் அதிபர் டிரம்பை பழி வாங்குவோம் என்று ஈரான் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் ஈரான் உளவாளி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தலைவர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர்.
- வீடு, தொழில் நிறுவனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
வங்காளதேசத்தில் நடந்த வன்முறையில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தலைவர்கள் குறி வைத்து தாக்கப்பட்டனர். அவர்களின் வீடு, தொழில் நிறுவனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

அக்கட்சி தலைவர்களின் வீடுகளுக்குள் கும்பலாக புகுந்து சூறையாடினர். பின்னர் வீடுகளுக்கு தீ வைத்தனர். இந்த நிலையில் அவாமி லீக் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 29-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குமில்லா பகுதியில் முன்னாள் கவுன்சிலர் முகமது ஷா ஆலமின் வீடு மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர். அங்கிருந்து அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
சத்கிராவில் பல அவாமி லீக் தலைவர்களின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சேதப்படுத்தப்பட்டு சூறை யாடப்பட்டது. இதில் 10 பேர் கொல்லப்பட்டனர். ஷபிகுல் இஸ்லாம் ஷிமுல் எம்.பி.யின் வீட்டிற்கு ஒரு கும்பல் தீ வைத்ததில் 4 பேர் இறந்தனர்.

போக்ராவில் உள்ள அவாமி லீக்கின் இளைஞர் பிரிவான ஜூபோ லீக்கின் 2 தலைவர்களின் உடல் களை கண்டெடுத்தனர். லால்மோனிர்ஹாட்டில், மாவட்ட அவாமி லீக் இணைப் பொதுச் செயலா ளர் சுமன் கான் வீடு தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் அங்கு 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
- போட்டித் தன்மையை அதிகளவு பாதிக்காது என வல்லுநர்கள் தெரிவித்தனர்.
- மற்ற நிறுவனங்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளன.
பிரபல எப்எம்சிஜி நிறுவனமான மரிகோ பங்குகள் 4 சதவீதம் வரை சரிவடைந்துள்ளன. சஃபோலா மற்றும் பாராஷூட் என முன்னணி பிராண்டுகளின் உரிமையாளராக மரிகோ இருப்பது குறிப்பிடத்தக்கது. வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக இந்நிறுவன பங்குகள் சரிவடைந்துள்ளன.
மரிகோ நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 11 முதல் 12 சதவீதம் வங்காளதேசத்தில் இருந்து கிடைப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வங்காளதேசத்தில் வியாபாரம் செய்து வரும் மரிகோ தற்போது விற்பனையில் மந்த நிலையை சந்திக்கும். ஆனாலும், இது அந்நிறுவன போட்டித் தன்மையை அதிகளவு பாதிக்காது என சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக ஜூன் மாதம் வரையிலான காலாண்டு முடிவுகளை வெளியிட்ட மரிகோ, ஒட்டுமொத்த சர்வதேச வியாபாரத்தில் வங்காளதேச விற்பனை தொடர்ந்து சரிவடைந்து வருவதாக தெரிவித்தது. மரிகோவின் சர்வதேச வியாபாரத்தில் வங்காளதேசத்தின் பங்குகள் 44 சதவீதம் வரை சரிந்துள்ளது.
"2025 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வங்காளதேச நிலைமை கவலையில் ஆழ்த்துகிறது. மற்ற எப்எம்சிஜி நிறுவனங்கள் வங்காளத போராட்டங்களால் இரண்டாம் காலாண்டு விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளன. வங்காளதேசத்தில் அதிகளவு எப்எம்சிஜி பொருட்களை விற்கும் நிறுவனமாக மரிகோ விளங்குகிறது. மற்ற நிறுவனங்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளன," என்று முதலீட்டு நிறுவனமான நுவாமாவின் அப்னீஷ் ராய் தெரிவித்தார்.
மாணவர் போராட்டம் வன்முறையாக மாறியதால் வங்காளதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தற்போது அந்நாட்டில் அமைய உள்ள இடைக்கால அரசாங்கத்தை முகமது யூனஸ் நடத்த இருக்கிறார்.
- யூனுஸ் 1983-ல் கிராமீன் வங்கியை நிறுவி, தொழில்முனைவோருக்கு சிறு கடன்களை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தினார்.
- யூனுஸ் 2007-ல் ஒரு ராணுவ ஆதரவுடைய ஆட்சி நடக்கும்போது ஒரு அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக அறிவித்தார்.
வங்காளதேசத்தில் அமைய இருக்கும் இடைக்கால அரசின் தலைமை பொறுப்பை நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான முகமது யூனுஸ் ஏற்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்துகின்றனர். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவை "நாட்டின் 2-ம் விடுதலை நாள்" என்று தெரிவித்துள்ள முகமது யூனுஸ் தற்போது, ஒலிம்பிக் போட்டிகளுக்காக பிரான்ஸ் நாட்டில் உள்ளார்.
யார் இந்த முகமது யூனுஸ் என்பதை இங்கே காண்போம்.
83 வயதான முகமது யூனுஸ், ஷேக் ஹசீனா அரசின் தீவிர எதிர்ப்பாளர் ஆவார்.
யூனுஸ் 1983-ல் கிராமீன் வங்கியை நிறுவி, தொழில்முனைவோருக்கு சிறு கடன்களை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தினார்.
மக்களை வறுமையில் இருந்து விடுவிப்பதில் அவரது கிராமீன் வங்கி வெற்றி பெற்றதுடன் மற்ற நாடுகளிலும் இதேபோன்ற முயற்சிகளுக்கு வழி வகுத்தது.
ஏழை மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு சிறுகடன்களை வழங்குவதில் முன்னோடியாக இருந்த யூனுசுக்கு 2006-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
யூனுஸ் 2007-ல் ஒரு ராணுவ ஆதரவுடைய ஆட்சி நடக்கும்போது ஒரு அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாக அறிவித்தார். ஆனால் அவர் அதை செய்யவில்லை.
இந்த சூழலில் 2008-ல் ஹசீனா ஆட்சிக்கு வந்த பிறகு, முகமது யூனுசுக்கு எதிராக பல்வேறு விசாரணைகள் தொடங்கின. இதனால் அவர் ஷேக் ஹசீனா அரசை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். 2011-ல் யூனுஸ் கிராமீன் வங்கி இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்
இந்த ஆண்டின் தொடக்கத்தில், மோசடி வழக்கில் யூனுஸ் மீது வங்காளதேசத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டு குற்றச்சாட்டு பதிவு செய்தது. எனினும் யூனுஸ் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்ளாத நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
- ஹசீனா, டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராக உருவெடுத்திருந்தார்.
- எதிர்க்கட்சியாக இருந்தபோது ஹசீனா பலமுறை கைது செய்யப்பட்டார்.
நமது அண்டை நாடான வங்காளதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் தொடங்கிய போராட்டம் அந்த நாட்டை வன்முறை தேசமாக மாற்றியது. அதன் எதிரொலியாக வங்காளதேசத்தின் நீண்டகால பிரதமர் என்கிற பெருமைக்குரிய ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
அவர், சிறிது நாட்கள் இங்கேயே தங்கி இருந்து பிறகு இங்கிலாந்து செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைவது என்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே அவர் இந்தியாவில் 6 ஆண்டுகள் ரகசியமாக வாழ்ந்துள்ளார்.
அதன் பின்னணியையும், ஷேக் ஹசீனா கடந்து வந்த பாதையையும் இங்கே காணலாம்.
1947-ம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவரான ஷேக் ஹசீனாவின் ரத்தத்திலேயே அரசியல் ஊறியுள்ளது. ஏனெனில் 'வங்கதேசத்தின் தந்தை' என போற்றப்படும் ஷேக் முஜிபுர் ரகுமானின் மகள் தான் இந்த ஷேக் ஹசீனா.
1971-ல் பாகிஸ்தானுடனான போருக்கு பிறகு சுதந்திர நாடாக உருவெடுத்த வங்காளதேசத்தில் முதல் அதிபராக பதவி வகித்து வங்கதேசத்தை வழிநடத்தினார் ஷேக் முஜிபுர் ரகுமான்.
அந்த சமயத்தில் ஹசீனா, டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராக உருவெடுத்திருந்தார். இளம் வயதிலேயே அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தபோதும் தேர்தல் அரசியலில் அவர் இறங்கவில்லை.
அதிபராக பதவி ஏற்ற 4 ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்டு 15, 1975-ல் ஷேக் முஜிபுர் ரகுமானின் ஆட்சியை கவிழ்த்து, அதிகாரத்தை கைப்பற்றியது ராணுவம். அதோடு ஷேக் முஜிபுர் ரகுமான் மற்றும் அவரது குடும்பத்தினர் 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
அந்த சமயத்தில் ஹசீனா தனது கணவரை பார்ப்பதற்காக குழந்தைகளுடன் ஜெர்மனி சென்றிருந்தார். அவருடன் அவரது இளைய சகோதரியும் சென்றிருந்தார். இதனால் அவர்கள் மட்டுமே குடும்பத்தில் உயிர் பிழைத்திருந்தனர்.
அவர்கள் வங்காளதேசத்துக்கு திரும்ப முடியாத சூழல் நிலவிய நிலையில், இந்தியாவில் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினார். அதன்படி ஹசீனா தனது கணவர், குழந்தைகள் மற்றும் சகோதரியுடன் டெல்லி வந்து, 6 ஆண்டுகள் ரகசியமாக வாழ்ந்து வந்தார்.
பின்னர் 1981-ம் ஆண்டு வங்கதேசத்திற்கு திரும்பி அவரது தந்தையின் அவாமி லீக் கட்சிக்கு தலைவராக பொறுப்பேற்றார்.
நாட்டில் மீண்டும் ஜனநாயக ஆட்சியை கொண்டு வர, ராணுவ ஆட்சியை எதிர்த்து பிற அரசியல் கட்சிகளுடன் கைகோர்த்து போராட்டங்களை முன்னெடுத்தார். இதன் மூலம் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை பெற்றார்.
அதன் பலனாக 1996-ல் முதன் முறையாக வங்காளதேசத்தின் பிரதமர் ஆனார். இந்தியாவுடன் நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் மற்றும் நாட்டின் தென்கிழக்கில் உள்ள பழங்குடி கிளர்ச்சியாளர்களுடன் அமைதி ஒப்பந்தம் போன்றவற்றுக்காக போற்றப்பட்டார்.
ஹசீனாவின் ஆட்சியில் வங்காளதேசம் வளர்ச்சி பாதையில் சென்றாலும், அவரது அரசு மீது ஊழல் புகார்கள் எழுந்ததுடன், இந்தியாவுக்கு கீழ்ப்படிந்து நடப்பதாக விமர்சனங்களும் எழுந்தன.
இதனால் 2001-ல், கூட்டணியில் இருந்து பின் போட்டியாளராக மாறிய வங்கதேச தேசியவாத கட்சியின் பேகம் கலீதா ஜியாவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தார்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது ஹசீனா பலமுறை கைது செய்யப்பட்டார். மேலும் அவரை படுகொலை செய்ய முயற்சிகள் நடந்தன. குறிப்பாக 2004-ல் நடந்த கொலை முயற்சியின்போது அவரது காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது. அதோடு, ஹசீனாவை வங்காளதேசத்தை விட்டு கட்டாயமாக வெளியேற்றவும் பலமுறை முயற்சிக்கப்பட்டது. எனினும் அதில் இருந்து தப்பினார்.
பின்னர் 2009-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஹசீனா மீண்டும் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தார். ஹசீனா ஆட்சியின் கீழ் வங்காளதேசம் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்டது. இப்போது வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது வங்காளதேசம்.
கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் வங்காளதேசத்தின் தனிநபர் வருமானம் 3 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், கடந்த 20 ஆண்டுகளில் வங்காளதேசத்தில் 2.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு வங்கதேசத்தில் விலைவாசி உயர்வு அதிகரித்தது, பணவீக்கம் வானளவுக்கு உயர்ந்தது, அன்னிய செலாவணி கையிருப்பு வெகுவாக குறைந்துள்ளது.
இதற்கு ஹசீனா அரசின் தவறான நிர்வாகமே காரணம் என்று விமர்சகர்கள் குற்றம்சாட்டினர். வங்காளதேசத்தின் முந்தைய பொருளாதார வெற்றி, ஹசீனாவின் அவாமி லீக்கிற்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே உதவியது என்று கூறப்பட்டது. இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஹசீனா மற்றும் அவரது அரசு மறுத்தது.
அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களோடு சேர்த்து வங்கதேச தேசியவாத கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். ஒரு காலத்தில் பிற கட்சிகளோடு இணைந்து ஜனநாயகத்திற்காக போராடிய தலைவரின் செயல்பாட்டில் பெரும் திருப்புமுனையாக இது பார்க்கப்படுகிறது.
- ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
- புதிய ஹமாஸ் தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரான் நாட்டின் புதிய அதிபராக மசூத் பெசேஷ்கியான் கடந்த ஜூலை 30 அன்று பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள கத்தாரில் இருந்து வந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
2 மாதங்களுக்கு முன்பே அவரது வீட்டில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் வீட்டில் இருக்கும் சமயத்தில் ரிமோட் மூலம் குண்டை வெடிக்கச் செய்ததில் ஹனியேவும் அவரது பாதுகாவலரும் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல் தான் இதற்குக் காரணம் என்று ஈரான் கடுங் கோபத்தில் உள்ள நிலையில் இஸ்ரேல்- ஈரான் இடையே போர் மூலம் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய ஹமாஸ் தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் அறிவிக்கப்பட்டுள்ளார். யாஹ்யா சின்வார் ஹமாஸ் ஆயுதக்குழுவின் காசா முனை பிரிவிற்கு மட்டும் தலைவராக இருந்து வந்த நிலையில் தற்போது ஒட்டுமொத்த ஹமாஸ் அமைப்பிற்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் மீதான அக்டோபர் 7ம் தேதி தாக்குதலுக்கு திட்டமிட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவினரில் யாஹ்யா சின்வாரும் முக்கிய நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் பதில் தாக்குதலில் 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
இதற்கிடையில் ஹமாஸின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள யாஹ்யா சின்வார் அழித்தொழிக்கப்படவேண்டியவர் என்றும் ஹமாஸ் அமைப்பு உலகத்தில் இருந்தே துடைத்தெறியப்படும் என்றும் இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் காட்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையே நேரடி போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- ஹிஸ்புல்லா தலைவர் உரையாற்றிய நிலையில் இஸ்ரேல் விமானங்கள் பெய்ரூட்டை வட்டமிடுள்ளன.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது. அதேபோல் லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பின் உயர் ராணுவ கமாண்டர் ஃபவத் சுக்ர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஹிஸ்புல்லா சூளுரைத்துள்ளது.
ஹிஸ்புல்லாவை ஈரான் பின்புறத்தில் இருந்து இயக்கி வருகிறது. இதனால் லெபனானில் இருந்து இஸ்ரேலை ஈரான் ஆதரவுடன் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய நேரப்படி இன்று மாலை 7.30 மணிக்கு ஹிஸ்புல்லா தலைவர் சய்யத் ஹசன் நஸ்ரல்லா உரையாற்றினார்.
இதற்கிடையே இஸ்ரேல் போர் விமானம் 30 நிமிடத்திற்கும் மூன்று முறை சத்தம் எழுப்பியவாறு பெய்ரூட் நகரில் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் பொது இடங்களில் நின்றிருந்த மக்கள் சிதறியடித்து பாதுகாப்பான இடத்திற்கு ஒடினர். பெய்ரூட்டில் உள்ள படாரோ மாவட்டத்தில் உள்ள கஃபேயில் மக்கள் சிதறியடித்து ஓடியதை பார்க்க முடிந்தது என ராய்ட்டர்ஸ் ரிப்போர்ட்டர் தெரிவித்துள்ளார்.
லெபனானில் மோசமான நிலை நிலவி வருவதால் அமெரிக்காரி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.






