என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இரு அணிகளும் முதல் போட்டியில் மோதுகின்றன.
    • வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இன்றையபோட்டியில் வங்காளதேசம் மற்றும் இந்தியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இந்திய அணியின் அபார பந்துவீச்சு காரணமாக வங்காளதேசம் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி 10 ஓவர்களுக்குள் 50 ரன்களை குவிக்காமலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 49.4 ஓவர்களில் வங்காளதேசம் அணி 228 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    வங்காளதேசம் அணியின் தவ்ஹித் ரிடோய் மற்றும் ஜேகர் அலி நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த அணியின் ஸ்கோர் மெல்ல அதிகரித்தது. ஜேகர் அலி 68 ரன்களையும், ரிடோய் 100 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் முகமது சமி 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளையும் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

    229 எனும் எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பான துவக்கத்தை கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை கடந்த நிலையில், கேப்டன் ரோகித் சர்மா 41 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி 22 ரன்களில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். 

    மேலும், ஸ்ரேயஸ் அய்யர், அக்சர் படேல் அடுத்தடுத்து வந்த வேகத்தில் நடையை கட்டினர். மறுப்பக்கம் சுப்மன் கில் நிதானமாக விளையாடி சதம் அடித்தார். இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்களை குவித்தது. சுப்மன் கில் 101 ரன்களுடனும், கே.எல். ராகுல் 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • மீனவர்கள் தற்போது வரை 70-க்கும் மேற்பட்டவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை செய்துள்ளது.

    இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களின் 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான மீனவர்களை யாழ்ப்பாணம் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தற்போது வரை 70-க்கும் மேற்பட்டவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர்.

    மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் குறித்து அறிந்த மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கைதானவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதைதொடர்ந்து, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு மார்ச் 5ம் தேதி வரை சிறை காவல் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • சட்டரீதியிலான நடைமுறைகள் நிறைவுபெறுவதாக தகவல்.
    • பல மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ விவகாரத்து செய்யப் போவதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருவரும் சமீப காலங்களில் தனித்தனியே வசிப்பதாகவும், இருவரின் விவாகரத்து தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

    சாஹல் மற்றும் தனஸ்ரீ இடையிலான விவகாரத்து தொடர்பாக சட்டரீதியிலான நடைமுறைகள் அனைத்தும் இன்றுடன் நிறைவுபெறுவதாக புதிய தகவல் வெளியானது. முன்னதாக சாஹல் மற்றும் தனஸ்ரீ ஒருவரை ஒருவர் சமூக வலைதளங்களில் பின்தொடர்வதை நிறுத்திக் கொண்டனர்.

     


    மேலும், சாஹல் தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து மனைவி தனஸ்ரீயுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நீக்கியுள்ளதாக தெரிகிறது. இதனிடையே இருவரும் பல மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், இதுப்பற்றி இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    இந்த நிலையில், சாஹல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார். அதில், "நான் கணக்கில் வைக்க முடியாத அளவுக்கு பலமுறை கடவுள் என்னை பாதுகாத்துள்ளார். இதனால் நான் எத்தனை முறை காப்பாற்றப்பட்டேன் என்று எனக்கே தெரியாததை தான் நினைத்துப் பார்க்க வேண்டும். எனக்கே தெரியாத அளவுக்கு என்னுடன் இருந்ததற்கு கடவுளுக்கு மிக்க நன்றி. ஆமென்," என குறிப்பிட்டுள்ளார்.

    • புதுமைப் பெண் திட்டத்தால் இடைநிற்றல் குறைந்து மாணவிகளின் சேர்க்கை உயர்ந்திருக்கிறது.
    • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு முறை எல்லோராலும் பாராட்டப்பட்டிருக்கிறது.

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள், மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 1,14,59,000 தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.

    புதுமைப் பெண் திட்டத்தால் இடைநிற்றல் குறைந்து மாணவிகளின் சேர்க்கை உயர்ந்திருக்கிறது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு முறை எல்லோராலும் பாராட்டப்பட்டிருக்கிறது.

    காலை உணவுத் திட்டம் மூலம் 17,53,000 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். நான் முதல்வன் திட்டம் மூலம் 2.60 லட்சம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வங்காளதேசத்தை சேர்ந்த 2 வீரர்கள் டக் அவுட் ஆகினர்.
    • முகமது சமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இன்றைய போட்டியில் வங்காளதேசம் மற்றும் இந்தியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இந்திய அணியின் அபார பந்துவீச்சு காரணமாக வங்காளதேசம் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி 10 ஓவர்களுக்குள் 50 ரன்களை குவிக்காமலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மேலும், 49.4 ஓவர்கள் முடிவில் வங்காளதேசம் அணி 228 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இந்தியா தரப்பில் முகமது சமி 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளையும் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இந்தப் போட்டியில் விக்கெட் எடுத்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை முகமது சமி படைத்துள்ளார்.

    இன்றைய போட்டியில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய போது, முகமது சமி 200-வது விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். தனது 104-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் முகமது சமி அஜித் அகார்கர் சாதனையை முறியடித்துள்ளார். அஜித் அகார்கர் 133 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    68 ரன்களை எடுத்திருந்த வங்காளதேசம் அணியின் ஜேகர் அலி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் முகமது சமியின் 200-வது விக்கெட்டாக மாறினார். சர்வேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் முகமது சமி இரண்டாவது இடத்தில் உள்ளார். 102 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் முதலிடத்தில் உள்ளார்.

    பந்துகள் அடிப்படையில் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக முகமது சமி உருவெடுத்துள்ளார். இவர் தனது 5,126-வது பந்தில் 200 விக்கெட்டை கைப்பற்றினார். ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 5240 பந்துகளை வீசி இந்த மைல்கல்லை எட்டியிருந்தார். 

    • படம் 2026 ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
    • படப்பிடிப்பின் முதல் நாளில் கலவரக்காட்சி ஒன்றை எடுத்து உள்ளனர்.

    கே.ஜி.எப் படங்கள் மூலம் இந்திய திரைத்துறையை கர்நாடகாவை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த பிரசாந்த் நீல் அடுத்தடுத்த படங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

    இதற்கிடையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி கதநாயகன் ஜூனியர் என்.டி. ஆரின் 31 ஆவது படத்தை பிரசாந்த் நீல் இயக்குவதாக கடந்த மே 20 ஆம் தேதி என்.டி.ஆர் பிறந்தநாள் அன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருத்தது.

    ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

    இதைதொடர்ந்து, 'NTR-31' படம் கடந்த மாதம் பூஜையுடன் துவங்கியது. இந்த படமானது 2026 ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    பான் இந்தியா படமாக உருவாகி வரும் இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர்களை விரைவில் படக்குழு முடிவு செய்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரபூர்வமாக இன்று துவங்கியுள்ளது. முதல் நாளில் கலவரக்காட்சி ஒன்றை எடுத்து உள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 228 ரன்களை சேர்த்த வங்காளதேசம் அணி ஆல் அவுட் ஆனது.
    • இந்தியா தரப்பில் முகமது சமி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்றைய போட்டியில் வங்காளதேசம் மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து 49.4 ஓவர்களில் 228 ரன்களை சேர்த்த வங்காளதேசம் அணி ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ரிடோய் நிதானமாக ஆடி சதம் அடித்தார்.

    இந்தியா தரப்பில் முகமது சமி 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து 229 ரன்களை துரத்தும் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 11 ஆயிரம் ரன்களை கடந்து அசத்தியுள்ளார். 261-வது போட்டியில் விளையாடி வரும் ரோகித் சர்மா இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இதன் மூலம் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை ரோகித் சர்மா தற்போது முந்தியுள்ளார்.

    276வது போட்டியில் விளையாடும் போது சச்சின் டெண்டுல்கர் 11 ஆயிரம் ரன்களை கடந்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். இவர் 222 இன்னிங்ஸில் விளையாடி 11 ஆயிரம் ரன்களை கடந்தார்.

    இன்றைய போட்டியை பொருத்தவரை கேப்டன் ரோகித் சர்மா 36 பந்துகளில் 41 ரன்களை எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். தஸ்கின் அகமது வீசிய பந்தை எதிர்கொண்ட ரோகித் சர்மா ரிஷத் பிடித்த கேட்ச்-இல் விக்கெட்டை பறிக்கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

    • உலகத் தாய் மொழி தினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு.

    உலகத் தாய் மொழி தினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது.

    இதைமுன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறுகையில், " சூழும் பகைதனில் இருந்து தாய்மொழிகளைக் காப்போம்!

    தமிழே அறம்! தமிழே அரண்!" என்றார்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ். டோனியை தக்கவைத்தது.
    • டோனி விளையாடும் கடைசி ஐ.பி.எல். சீசன் இதுதான்.

    இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி. கடந்த 2019-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த எம்.எஸ். டோனி அப்போது முதல் ஐ.பி.எல். தொடரில் விளையாடி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக எம்.எஸ். டோனி விளையாடும் கடைசி ஐ.பி.எல். சீசன் இதுதான் என்பது போன்ற தகவல்கள் அடிக்கடி வெளியாகும்.

    கடந்த ஆண்டு இறுதியில் ஐ.பி.எல். மெகா ஏலம் நடைபெறும் வரை எம்.எஸ். டோனி 2025 ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. ஐ.பி.எல். மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ். டோனியை தக்கவைப்பதாக அறிவித்த பிறகே, எம்.எஸ். டோனி ஓய்வு குறித்த பேச்சுகள் ஓரளவுக்கு ஓய்ந்தது.

    இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எம்.எஸ். டோனி தனது ஓய்வு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசினார்.

    அப்போது, "நான் 2019-ல் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். அதன் பிறகு தற்போது வரை நான் செய்து கொண்டிருப்பது எல்லாமே, கடைசிவரை கிரிக்கெட்டை கொண்டாட வேண்டும் என்பது தான். கடந்த சில ஆண்டுகளில், உங்களுக்கே தெரியும், என்னால் விளையாட முடியும் என்று. நான் பள்ளி சமயத்தில் இருந்ததை போல், அவற்றை கொண்டாடி மகிழ வேண்டும்."

    "பள்ளி காலங்களில் தினமும் மாலை 4 மணி எனக்கு விளையாட்டு நேரம், நான் மகிழ்ச்சியாக வெளியில் சென்று கிரிக்கெட் விளையாடுவேன். சமயங்களில் வானிலை காரணமாக கிரிக்கெட் விளையாட முடியவில்லை எனில், நாங்கள் கால்பந்து விளையாடுவோம். அதே போன்ற அப்பாவித்தனமாக இப்போதும் விளையாட வேண்டும்," என்று தெரிவித்தார்.

    • சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வெளியான திரைப்படம் கேம் சேஞ்சர்.
    • இந்நிலையில் ஷங்கரின் 10.11 கோடி ரூபாய் அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். சமீபத்தில் இவர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வெளியான திரைப்படம் கேம் சேஞ்சர். இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இந்நிலையில் ஷங்கரின் 10.11 கோடி ரூபாய் அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு ரஜினிகாந்த் மற்றும் ஐஷ்வர்யா ராய் நடிப்பில் எந்திரன் திரைப்படம் வெளியானது. இப்படத்தின் கதை தன்னுடைய ஜிகுபா படத்தின் கதையோடு பொருந்திப் போனதால் ஆருர் தமிழ்நாடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    அமலாக்கதுறை விசாரணையில் எந்திரன் திரைப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்கள் ஜிகுபா படத்தின் கதையை ஒன்றியிருந்தது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் எந்திரன் திரைப்படத்தின் சம்பள தொகையை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

    எந்திரன் திரைப்படத்திற்கு இயக்குநர் ஷங்கர் சம்பளமாக 11.5 கோடி ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் தற்பொழுது அவருடைய 10.11 கோடி ரூபாய் அசையா சொத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கே வேலை இல்லை.
    • இந்தி படித்த லட்சக்கணக்கானோர் தமிழகத்தில் கட்டிட வேலைக்கு வருகின்றனர்.

    நான் பள்ளி எதுவும் நடத்தவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு விசிக தலைவர் திருமாவளவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்தி திணிப்பு விவகாரத்தில் அண்ணாமலைக்கு திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருமாவளவன் கூறியிருப்பதாவது:-

    இந்தி படிக்க வேண்டிய தேவை என்ன ? இந்தியை படிப்பதால் என்ன பயன் ?

    இந்தியை தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கே வேலை இல்லை. இந்தி படித்த லட்சக்கணக்கானோர் தமிழகத்தில் கட்டிட வேலைக்கு வருகின்றனர்.

    நான் பள்ளி எதுவும் நடத்தவில்லை. எங்களுக்கு சொந்தமான இடத்தில் பள்ளி தொடங்கப்போவதாக அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டது.

    அந்தப் பள்ளி இன்னுமும் செயல்பட கூட தொடங்கவில்லை. எங்களது இடத்தில் பள்ளியை தொடங்க உள்ளார்கள் என்பதால் எனது பெயரை பயன்படுத்தியுள்ளனர்.

    அண்ணாமலை நாகரிக அணுகுமுறையை தவிர்த்துவிட்டு எது வேண்டுமானாலும் பேசலாம் என பேசுகிறார். மாணவர்கள் மீது அண்ணாமலைக்கு அக்கறை இருந்தால் மத்திய அரசிடமிருந்து நிதி பெற்றுத்தரட்டும்.

    போஸ்ட்மெட்ரிக் ஸ்காலர்ஷிப் விஷயத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இயக்குனர் பாரதி ராஜா அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பாரதி ராஜா அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் நட்டி, ரியோராஜ், சாண்டி, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் ரீகன் இசையமைத்துள்ளார். சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது. திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்த நிலையில் படத்தின் கதாப்பாத்திர போஸ்டர்களை படக்குழு சில நாட்களாக வெளியிட்டது. படத்தின் ரங்கம்மா பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×