என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- இந்திய அணி ஏற்கனவே வலுவான அணியாக உள்ளது.
- அனைத்து போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடுவது கூடுதல் பலனளிக்கும் என்றார்.
சிட்னி:
சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
இந்நிலையில், இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு பெரும் நன்மை அளிக்கிறது.
அவர்கள் ஏற்கனவே வலுவான அணியாக உள்ளனர். அனைத்துப் போட்டிகளையும் ஒரே மைதானத்தில் விளையாடுவது அவர்களுக்கு கூடுதலாக பலனளிக்கும்.
எல்லா போட்டிகளையும் அங்கு விளையாடுவதன் மூலம் அவர்கள் வெளிப்படையான பலனைப் பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
- சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது.
- பாகிஸ்தானின் சமீபத்திய பார்ம் கொஞ்சம் கவலையாகத் தான் இருக்கிறது என்றார்.
புதுடெல்லி:
சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
பாகிஸ்தான் அணி தொடர்ந்து இரு போட்டிகளில் தோல்வி அடைந்ததால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறியது.
இதையடுத்து, பாகிஸ்தான் அணியை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணியின் பி டீமை வெல்லவே பாகிஸ்தான் வழி கண்டுபிடிக்க வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சுனில் கவாஸ்கர் கூறியுள்ளதாவது:
பாகிஸ்தான் அணியின் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்பதை பற்றி பார்க்கும்போது கொஞ்சம் கவலையாக தான் இருக்கிறது.
தற்போது அவர்களுடைய பார்மை வைத்துச் சொல்ல வேண்டுமெனில் நிச்சயம் அவர்களுக்கு இந்தியாவின் பி டீம் கூட சவாலாகவே இருக்கும். இந்தியாவின் சி அணியைப் பற்றிச் சொல்ல முடியாது. ஆனால் பி அணிக்கு பாகிஸ்தானை வீழ்த்த அனைத்து வாய்ப்புகளும் உள்ளது.
முகமது ரிஸ்வான் முதல் பந்தையே பவுண்டரி அடித்தார். உடனே பாகிஸ்தான் அணியின் அணுகுமுறை மாறுமோ என நினைத்தேன், ஆனால் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
பாகிஸ்தான் அணியின் தனித்திறமை அவர்களது விளையாட்டை பார்க்கும்போதே தெரியும். இந்த முறை அப்படி எதுவும் தெரியவில்லை.
பாகிஸ்தான் அணியில் இளமையான, திறமையான வீரர்கள் ஆரம்ப காலத்தை போல இணையாமல் இருப்பது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. ஆனாலும், பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி இருக்கிறது. அதன்மூலம் சிறப்பாக விளையாடும் வீரர்களை தேர்வு செய்வர் என எதிர்பார்க்கிறேன்.
வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தரமான இளம் வீரர்களை இந்திய அணி உருவாக்குவதை பார்த்திருப்பீர்கள். ஐ.பி.எல், ரஞ்சி டிராபியில் விளையாடுவதன் காரணமாகவே அவர்களுக்கு நல்ல வீரர்கள் கிடைக்கிறார்கள். எனவே அவர்களை போல பாகிஸ்தானும் நல்ல வீரர்களைத் தேர்வு செய்யவேண்டும் என தெரிவித்தார்.
- இன்னும் இரண்டு வீரர்கள் மட்டுமே அவருக்கு மேலே இருக்கிறார்கள்.
- உடல் தகுதி அடிப்படையில் அவர் சிறப்பாகவே இருக்கிறார் என்றார்.
சிட்னி:
சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார். இது அவரது 51-வது சதமாகும். இந்தப் போட்டியில் விராட் கோலி 14,000 ரன்கள் கடந்து அசத்தியுள்ளார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் விராட் கோலி மூன்றாவது இடத்தில் உள்ளார்.
இந்நிலையில், ரிக்கி பாண்டிங் விராட் கோலியின் ஆட்டம் மற்றும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பது குறித்து பேசியதாவது:
விராட் கோலியை விட ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரரை நான் பார்த்ததே இல்லை. அவர் இப்போது ஒருநாள் போட்டிகளில் என்னை முந்தி இருக்கிறார்.
இன்னும் இரண்டு வீரர்கள் மட்டுமே அவருக்கு மேலே இருக்கிறார்கள். நிச்சயமாக அவர் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரராக தனது பெயரை பார்க்க விரும்புவார்.
உடல் தகுதி அடிப்படையில் அவர் சிறப்பாகவே இருக்கிறார். அதற்காக கடினமான உழைப்பை செலுத்துகிறார்.
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவரால் முறியடிக்க முடியுமா என யோசித்துப் பார்ப்பது நமக்கு விசித்திரமான உணர்வை ஏற்படுத்துகிறது.
விராட் கோலி இத்தனை ஆண்டுகள் சிறப்பாக ஆடியும் இன்னும் சச்சினின் சாதனையை நெருங்குவதற்கு அவர் 4,000 ரன்களை குவிக்க வேண்டும்.
இது சச்சின் எந்த அளவுக்கு சிறப்பாக ஆடி இருக்கிறார் என்பதை நமக்கு காட்டுகிறது. எத்தனை ஆண்டுகள் சச்சின் இந்த விளையாட்டை விளையாடி இருக்கிறார் என்பதை நாம் இதன்மூலம் புரிந்து கொள்ளலாம். ஆனால், விராட் கோலி போன்ற ஒருவர் இந்த சாதனையை முறியடிக்க மாட்டார் என நாம் ஒதுக்கித் தள்ளி விட முடியாது.
விராட் கோலியிடம் பசி இருந்தால், நிச்சயமாக அவர் சச்சின் சாதனையை முறியடிக்க மாட்டார் என என்னால் சொல்ல முடியாது என தெரிவித்தார்.
- பாகிஸ்தான் அணியில் கடுமையான நடவடிக்கைகள் தேவை.
- 5 முதல் 6 வீரர்களை மாற்றம் செய்ய வேண்டி இருந்தால் அதை தயவு செய்து செய்யுங்கள்.
துபாய்:
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. போட்டியை நடத்தும் பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 60 ரன் வித்தியாசத்தில் தோற்றது. நேற்று முன்தினம் துபாயில் நடந்த 2-வது ஆட்டத்தில் அந்த அணி இந்தியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. நேற்று நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வங்காளதேசத்தை தோற்கடித்தது.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி வெளியேறியது. வங்காளதேசமும் வெளியேற்றப்பட்டது. இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வெளியேற்றப்பட்டதால் பாகிஸ்தான் அணி கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான போட் டியில் தோற்றதால் பாகிஸ்தான் வீரர்களை அந்நாட்டு முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஒருநாள் போட்டிகளில் வேகமான ஆட்டம் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் பழங்கால கிரிக்கெட்டையே இன்னும் ஆடுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். பாகிஸ்தான் அணியில் கடுமையான நடவடிக்கைகள் தேவை. அணியில் அதிரடியான மாற்றங்களை செய்ய வேண்டும்.
பயமில்லாத இளம் வீரர்களை அணிக்கு கொண்டு வாருங்கள். 5 முதல் 6 வீரர்களை மாற்றம் செய்ய வேண்டி இருந்தால் அதை தயவு செய்து செய்யுங்கள்.
அடுத்த 6 மாதங்களுக்கு தோல்வி ஏற்பட்டாலும் பரவாயில்லை. இப்போது இருந்தே 2026-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பைக்கு புதிய அணியை உருவாக்க தொடங்குங்கள்.
பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு மிகவும் மோசமாக இருந்தது. ஓமன், அமெரிக்கா அணிகளை விட எங்களது பந்து வீச்சு சராசரி மோசமாக இருந்தது.
கேப்டன், தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர்களை அழைத்து அவர்கள் என்ன மாதிரியான தேர்வுகளை செய்கிறார்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் தயவு செய்து கேட்க வேண்டும்.
தற்போதுள்ள பாகிஸ்தான் அணி சரியானதாக இல்லை என்று நான் பல வாரமாக சொல்லி இருந்தேன். ஆனால் இது சிறந்த அணி தான் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சொன்னார்.
சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு ஒருநாள் முன்பு 1 மணி நேரம் கூட்டம் நடத்தினார்கள். ஆனால் அதே அணியை தான் கொண்டு வந்தார்கள். கேப்டன் ரிஸ்வானும் இதற்கு காரணம். அவரது செயல்பாடு சரியில்லை.
ரிஸ்வானுக்கு எந்த மாதிரியான மேட்ச் வின்னர்கள் (ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பவர்கள்) தேவை என்றே தெரியவில்லை. இது தற்போது மிகுந்த சங்கடமாக இருக்கிறது. மைதானத்தில் இருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் வீரர்களின் ஆட்டத்தை பார்த்து அதிருப்தி அடைந்தது அவர்கள் முகத்தில் தெரிந்தது. பாகிஸ்தான் பந்து வீசும்போது 15 ஓவர்களிலேயே அவர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினார்கள்.
இவ்வாறு வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
- எம்.எஸ்.தோனிக்கு சமீபத்தில் 1230 கிராம் எடையுள்ள 4 பேட்கள் டெலிவரி செய்யப்பட்டது.
- முன்னதாக எம்.எஸ்.தோனி 1250 முதல் 1300 கிராம் வரை எடையுள்ள பேட்டை பயன்படுத்தி வந்தார்.
18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 22-ந்தேதி தொடங்கி மே 25-ந்தேதி வரை நடக்கிறது. 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் மும்பையை சந்திக்கிறது. மார்ச் 23-ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.
இந்த ஐ.பி.எல். சீசனில் 43 வயதான எம்.எஸ்.தோனி எடை குறைந்த பேட்டை பயன் படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது மட்டையின் எடையை சுமார் 10 முதல் 20 கிராம் வரை அவர் குறைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவருக்கு சமீபத்தில் 1230 கிராம் எடையுள்ள 4 பேட்கள் டெலிவரி செய்யப்பட்டது. கடந்த ஐபிஎல் சீசன் வரை எம்.எஸ்.தோனி 1250 முதல் 1300 கிராம் வரை எடையுள்ள பேட்டை பயன்படுத்தி வந்தார்.
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் டோனி ஆவார். 2 உலக கோப்பை மற்றும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வென்றுக் கொடுத்தார். ஐ.பி.எல்.லில் அவர் தலைமையில் சி.எஸ்.கே. 5 கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 351 ரன் குவித்தும் தோல்வி அடைந்தது.
- ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 102 ரன் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது.
லாகூர்:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி யின் 8-வது லீக் ஆட்டம் பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நாளை (26-ந்தேதி) நடக்கிறது. இதில் பி பிரிவில் உள்ள இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் தோற்றன. இதனால் முதல் வெற்றியை பெறப்போவது இங்கிலாந்தா? ஆப்கானிஸ்தானா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 351 ரன் குவித்தும் தோற்றது பரிதாபமே. ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்த போட்டியில் தொடர்ந்து நீடிக்கும் ஆர்வத்துடன் இங்கிலாந்து இருக்கிறது. அந்த அணியில் பென் டக்கெட், ஜோ ரூட், கேப்டன் பட்லர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.
ஹஸ்மத்துல்லா ஷகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 102 ரன் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது. அதில் இருந்து மீண்டு இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுக்கும் வேட்கையில் அந்த அணி உள்ளது.
இருஅணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள். பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.
- பார்வையாளர்கள் எண்ணிக்கையில் புதிய சாதனை.
சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டி துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததால் பாகிஸ்தான் அணி தொடரில் இருந்தே வெளியேறி உள்ளது. இந்த நிலையில், இந்தியா பாகிஸ்தான் அணிகள் போட்டியின் போது ஆன்லைன் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் புதிய சாதனை படைக்கப்பட்டது.
அதன்படி இந்த போட்டியை ஜியோ ஹாட் ஸ்டாரில் மொத்தம் 60.2 கோடி போ் ஒரே நேரத்தில் பாா்த்துள்ளனா். போட்டியின் முதல் பந்து வீசப்படும்போது 6.8 கோடியாக இருந்த பாா்வையாளா்கள் எண்ணிக்கை நேரம் செல்லச் செல்ல உயா்ந்தது. பாகிஸ்தான் ஆட்டம் முடியும்போது 32.2 கோடியாக இருந்த எண்ணிக்கை இந்தியாவின் இன்னிங்ஸ் தொடங்கும்போது 36.2 கோடியாக அதிகரித்தது.
இறுதியில் இந்தியாவின் வெற்றித் தருணத்தில் 60.2 கோடி பாா்வைகளை பெற்று ஆன்லைனில் புதிய சாதனை படைத்தது.
- வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் 5வது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. துபாயில் நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். இந்திய அணி இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
மறுப்பக்கம் பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது. இதன் காரணமாக அந்த அணி ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது. அந்த வரிசையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாகிஸ்தான் தோல்வி குறித்து காட்டமான கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "ஆம், என் அணியை நினைத்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன். ஆனால் நான் இன்று மகிழ்ச்சியாக இல்லை. யாராக இருந்தாலும் நல்ல போட்டி, கடுமையான போட்டியை பார்க்கவே விரும்புவர். ஆம், நமக்கு நம் சொந்த நாட்டு அணி வெற்றி பெறவே விருப்பம். ஆனால், இன்று நான் இந்தப் போட்டியால் முற்றிலுமாக ஏமாற்றமடைந்துள்ளேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஒரு போட்டி கூட அப்படியில்லை."
"டாஸ் தவிர்த்து, வேறு எதில் நீங்கள் வெற்றி பெற்றீர்கள்? நீங்கள் எங்கள் மனங்களை கூட வெல்லவில்லை. ஆம், போட்டிகளில் நீங்கள் வெற்றி, தோல்வியை சந்திக்கலாம், ஆனால் தோல்விகளிலும் நீங்கள் மனங்களை வெல்லும் சூழல் நிச்சயம் உருவாகும். பாகிஸ்தான் இன்று நீங்கள் அதை கூட செய்யவில்லை," என்று தெரிவித்தார்.
- பாகிஸ்தான் இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியை சந்தித்தது.
- வங்கதேசம் இன்று நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியடைந்ததால் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். ஏ பிரிவில் மொத்தம் 6 போட்டிகள் நடைபெறும்.
முதல் போட்டியில் நியூசிலாந்திடம் பாகிஸ்தான் 60 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வங்கதேசத்திற்கு எதிரான 2-வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற 3 போட்டியில் பாகிஸ்தானை இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. பாகிஸ்தான் 2 போட்டிகள் விளையாடி இரண்டிலும் தோல்வியடைந்திருந்தது.
இன்று நடைபெற்ற 4-வது போட்டியில் வங்கதேசத்தை நியூசிலாந்து வீழ்த்தியிருந்தது. இதன்மூலம் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது. அதேபோல் இந்தியாவும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
பாகிஸ்தான் தனது கடைசி மற்றும் ஏ பிரிவின் 5-வது வங்கதேசத்தை எதிர்கொள்ளும். இந்த போட்டியின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. வெற்றி பெறும் அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்ற திருப்தியோடு தொடரில் இருந்து வெளியேறும்.
இந்தியா தனது கடைசி மற்றும் ஏ பிரிவின் 6-வது போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி ஏ பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும்.
- ரச்சின் ரவீந்திரா 112 ரன்கள் விளாசினார்.
- ஐசிசி தொடரில் ரச்சின் ரவீந்திராவின் 4-வது சதம் இதுவாகும்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 6-வது போட்டி ராவல்பிண்டியில் இன்று நடைபெற்றது. இதில் வங்கதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது. தன்ஜித் ஹசன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 8.2 ஓவரில் 45 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. தன்ஜித் ஹசன் 24 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து ஷான்டோ உடன் மெஹிதி ஹசன் மிராஸ் ஜோடி சேர்ந்தார். மெஹிதி ஹசன் மிராஸ் 14 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் ஷான்டோ சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இதற்கிடையே தவ்ஹித் ஹிரிடோய் 7 ரன்னிலும், முஷ்பிகுர் ரஹிம் 2 ரன்னிலும், மெஹ்முதுல்லா 4 ரன்னிலும் வெளியேறினர்.
இதனால் 118 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டை இழந்து திணறியது. 6-வது விக்கெட்டுக்கு ஷான்டோ உடன் ஜாகர் அலி ஜோடி சேர்ந்தார். இந்த ஷோடி தாக்குப்பிடித்து விளையாடியது. என்றாலும் ஷான்டோ 110 பந்தில் 9 பவுண்டரியுடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது வங்கதேசம் 37.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின் ஜாகர் அலியுடன் ஜோடி சேர்ந்த ரிஷாத் ஹொசைன் 25 பந்தில் 26 ரன்கள் அடித்தார். ஜாகர அலி இறுதி வரை போராடி 55 பந்தில் 45 ரன்கள் அடிக்க, வங்கதேசம் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணி சார்பில் மைக்கேல் பிரேஸ்வெல் 10 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஓ'ரூர்கே 10 ஓவரில் 48 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. வில் யங், டேவன் கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசிய வில் யங் முதல் ஓவரின் கடைசி பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.
அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார். இவர் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் அவுட் ஆனார்.
3-வது விக்கெட்டுக்கு டேவன் கான்வே உடன் ரச்சின் ரவீந்திரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அணியின் ஸ்கோர் 15.4 ஓவரில் 72 ரன்னாக இருக்கும்போது கான்வே 45 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
4-வது விக்கெட்டுக்கு ரச்சின் ரவீந்திரா உடன் டாம் லாதம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நங்கூரம் பாய்ச்சி நிலைத்து நின்று விளையாடியது. ரச்சின் ரவீந்திரா 50 பந்தில் 6 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த பிறகு ஆட்டத்தில் வேகத்தை கூட்டினர்.
இதனால் 95 பந்தில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் விளாசினார். ஐசிசி தொடரில் இவரின் 4-வது சதம் இதுவாகும்.
தொடர்ந்து விளையாடிய ரச்சின் ரவீந்திரா 105 பந்தில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது நியூசிலாந்து 38.2 ஓவரில் 201 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து கிளென் பிலிப்ஸ் களம் இறங்கினார்.
மறுமுனையில் விளையாடிய டாம் லாதம் 71 பந்தில் 3 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். டாம் லாதம் 55 ரன்கள் எடுத்திருந்தபோது ரன்அவுட் ஆகி வெளியேறினார். அப்போது நியூசிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்திருந்தது.
6-வது விக்கெட்டுக்கு பிலிப்ஸ் உடன் பிரேஸ்வெல் ஜோடி சேர்ந்தார். நியூசிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியது.
- சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் உள்ளார்.
- பேட்டிங் பயிற்சியாளராக மைக் ஹசி இருந்து வருகிறார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் 2025 சீசன் முதல் போட்டியில் மார்ச் 23-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐபிஎல் 2025 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராகி வருகிறது.
அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங், பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஹசி, பந்து வீச்சு ஆலோசகராக எரிக் சைமன்ஸ் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான ஸ்ரீதரன் ஸ்ரீராம் துணை பந்து வீச்சு பயிற்சியாளரான செயல்படுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.
ஸ்ரீராம் இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு பயிற்சியாளரான இருந்துள்ளார். சென்னை அணியில் அஸ்வின், ஜடேஜா, ஷ்ரேயாஸ் கோபால், நூர் அகமது, தீப் ஹூடா, ரச்சீன் ரவீந்திரா ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
சி.எஸ்.கே. அணியில் இருந்து வெளியேறிய வெயின் பிராவோ, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஆலோசகராக இணைந்துள்ளார். இதனால் பிராவோவிற்குப் பதிலாக ஸ்ரீதரன் ஸ்ரீராம் சேர்க்கப்பட்டுள்ளார்.
2016 முதல் 2022 வரை ஆஸ்திரேலியா அணியின் துணை பயிற்சியாளராக இருந்துள்ளார். ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை தொடருக்காக வங்கதேச அணியின் ஆலோசகராக செயல்பட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி மற்றும் லக்னோ அணியிலும் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த சீசனில் 5-வது இடத்தை பிடித்து பிளே-ஆப் சுற்று வாய்ப்பை தவறவிட்டது. ரன்ரேட் அடிப்படையில் ஆர்சிபி 4-வது இடத்தை பிடித்தது.
- கேரி கிர்ஸ்டன், கில்லெஸ்பி பதவி விலகியதால் ஆகிப் ஜாவித் இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
- பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியில் மோசமாக விளையாடியதால் இவரை விடுவிக்க பிசிபி முடிவு செய்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. இந்தியா பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்ததால், இந்தியா விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது.
அதன்படி கராச்சி, லாகூர், ராவல்பிண்டி மற்றும் துபாயில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. "ஏ" பிரிவில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் இடம் பிடித்துள்ளன.
போட்டியை நடத்தும் பாகிஸ்தான் எளிதாக அரையிறுதிக்கு முன்னேறும். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 60 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் 240 ரன் மட்டுமே அடித்தது. பின்னர் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியவில்லை. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இதனால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்துள்ளது. இன்றைய போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக நியூசிலாந்து வெற்றி பெற்றால், இந்தியா மற்றும் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறிவிடும். பாகிஸ்தானில் தொடரில் இருந்து வெளியேற்றப்படும்.
முதல் இரண்டு போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், பாகிஸ்தான் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளர் மற்றும் துணை பயிற்சியாளரை என ஒட்டுமொத்தமாக அனைவரையும் பதவியில் இருந்து விடுவிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் பாகிஸ்தான் ஒயிட் பால் அணிகளுக்கு தென்ஆப்பிரிக்காவின் கேரி கிர்ஸ்டன் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். பின்னர் ஆஸ்திரேலியாவின் கில்லெஸ்பி ரெட் பால் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். இதனால் அகிப் ஜாவித் இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
பாகிஸ்தான் அணி மார்ச் 16-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரை நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின்போது புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.
வெளிநாட்டு பயிற்சியாளர்கள் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு விருப்பம் இல்லை. இதனால் முன்னாள் வீரர்களில் ஒருவரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க வாய்ப்புள்ளது.






