என் மலர்
விளையாட்டு
துபாய்:
மும்பை இந்தியன்ஸ் 5-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வென்றது குறித்து அந்த அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
இந்த தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வீரர்களின் பங்களிப்பு அபாரமாக இருந்தது.
இதைப்போல அணியின் பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் என அனைவரும் உதவியாக இருந்தார்கள். ஒட்டுமொத்த அணியாக இந்த வெற்றியை பெற்று இருக்கிறோம்.
சூர்யகுமார் யாதவ் முதிர்ச்சி அடைந்த வீரர். அவர் தனது விக்கெட்டை எனக்காக தியாகம் செய்தார். நான் ரன் அவுட் ஆவதை விரும்பாமல் அவர் ரன் அவுட் ஆகி தியாகத்தை வெளிப்படுத்தினார்.
அணிக்கு சமநிலை ஏற்படுத்துவதற்காகவே ஜெயந்த் யாதவ் இறுதிப்போட்டியில் சேர்க்கப்பட்டார்.
இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.
தோல்வி குறித்து டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஷ் அய்யர் கூறியதாவது:-
நாங்கள் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்தோம். இதனால் வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த தொடர் மிகவும் கடினமான ஒன்றாகும். எனவே இறுதிப் போட்டிக்கு நுழைந்ததே மிகப்பெரிய சாதனை ஆகும். ஆனால் கோப்பையை வெல்ல முடியாமல் போய்விட்டது.
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியிலும் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம். கோப்பையை கைப்பற்ற முயற்சிப்போம். எங்களது சிறப்பான செயல்பாட்டுக்கு பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் முக்கிய பங்கு வகித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான போட்டி தொடர் வருகிற 27-ந் தேதி தொடங்கி ஜனவரி 19-ந் தேதி வரை நடக்கிறது. இரு அணிகள் இடையே 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் அரங்கேறுகின்றன. இதற்காக இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இன்று புறப்பட்டு ஆஸ்திரேலியா செல்கிறது. இந்த போட்டி தொடரில் உள்ளூர் மாநில அரசின் வழிகாட்டுதலுக்கு தகுந்தபடி ரசிகர்கள் போட்டியை நேரில் கண்டு களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு கிரிக்கெட் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறையாகும். கொரோனா மருத்துவ பாதுகாப்பு நடைமுறையின் படி முன்னதாக நடந்த அனைத்து போட்டி தொடர்களும் ரசிகர்கள் அனுமதியின்றி பூட்டிய ஸ்டேடியத்தில் தான் நடந்தது. ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் ஸ்டேடியத்தின் மொத்த இருக்கை வசதியில் 50 சதவீத ரசிகர்களையும், முதலாவது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டிக்கு 50 சதவீத ரசிகர்களையும், 2-வது டெஸ்ட் போட்டிக்கு 25 சதவீத ரசிகர்களையும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு 75 சதவீத ரசிகர்களையும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி டெஸ்ட் போட்டிக்கு தினசரி சுமார் 25 ஆயிரம் ரசிகர்கள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். போட்டி நடைபெறும் சமயத்தில் நிலவும் சூழ்நிலைக்கு தகுந்தபடி ரசிகர்களின் அனுமதிக்கான எண்ணிக்கை அதிகரிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் முதல் ஜனவரி வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதலாவது ஒருநாள் போட்டி சிட்னியில் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இந்திய அணியின் கேப்டன் விராட்கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு ஜனவரி முதல் வாரத்தில் குழந்தை பிறக்க இருப்பதால் அவர் அடிலெய்டில் டிசம்பர் 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டி முடிந்ததும் நாடு திரும்புகிறார்.
அடுத்த 3 டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கருத்து தெரிவிக்கையில், ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டியில் விராட்கோலி விளையாடமாட்டார் என்பது லேசான ஏமாற்றமும், ஆச்சரியமும் அளிக்கிறது. இந்த தொடர் விராட்கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது என்றாலும் குடும்பத்திற்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். விராட்கோலி இல்லாதது டெஸ்ட் போட்டி தொடரில் விறுவிறுப்பை குறைக்கக்கூடும். 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித் இல்லாத போது இந்திய அணி வெற்றி பெற்றதை போன்று தான் இருக்கும். குறிப்பாக இதுபோன்ற பெரிய போட்டி தொடரில் நீங்கள் சிறந்த அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும்’ என்றார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி தொடரை இழந்ததை தொடர்ந்து டெஸ்ட் அணியின் கேப்டனான 35 வயது அசார் அலி மாற்றம் செய்யப்படுவார் என்று செய்திகள் வெளியாயின. இந்த நிலையில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அசார் அலி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக 26 வயதான பாபர் அசாம் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
20 ஓவர் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனான பாபர் அசாம் இனிமேல் 3 வகையான (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர்) போட்டிக்கும் கேப்டனாக இருப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. அடுத்த மாதம் இறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து சென்று 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குரிய இந்த தொடரின் முதலாவது ஆட்டம் மவுன்ட்மாங்கானுவில் டிசம்பர் 26-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பாபர் அசாம் டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க இருக்கிறார்.






