என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐ.பி.எல். போட்டியை பார்த்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஐ.பி.எல். போட்டியை விட இந்த ஆண்டு 28 சதவீதம் பேர் கூடுதலாக பார்த்து உள்ளனர்.

    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போட்டி ஆண்டுதோறும் இந்தியாவில் நடைபெற்று வந்தது.

    இந்த ஆண்டுக்கான 13-வது ஐ.பி.எல். போட்டி கொரோனா வைரஸ் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தப்பட்டது. மார்ச்-மே மாதங்களில் நடைபெற இருந்த இந்த போட்டி செப்டம்பர் முதல் நவம்பர் வரை நடத்தப்பட்டது.

    சமீபத்தில் முடிந்த இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லியை வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

    கொரோனா பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. ரசிகர்கள் டெலிவி‌ஷன், டிஜிட்டல் மூலம் இந்த போட்டியை வெகுவாக ரசித்தார்கள்.

    கொரோனா பாதிப்புக்கு இடையே ஐ.பி.எல். போட்டியை பார்த்தவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகமாக இருந்தது. டெலிவி‌ஷன் மற்றும் டிஜிட்டல் மூலம் பார்வையாளர்களில் எண்ணிக்கையில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டது.

    கடந்த ஐ.பி.எல். போட்டியை விட இந்த ஐ.பி.எல். போட்டியை 28 சதவீதம் பேர் கூடுதலாக பார்த்து உள்ளனர்.

    இதுகுறித்து ஐ.பி.எல். சேர்மன் பிரிசேஸ் பட்டேல் கூறும்போது, “ஐ.பி.எல். போட்டி எப்போதுமே உலக தரம் வாய்ந்தது. இதனால் இந்த போட்டிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த போட்டிக்கு ஆதரவு அளித்த அனைத்து விளம்பர நிறுவனங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”என்றார்.

    அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    டோக்கியோ:

    32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டில் கடந்த ஜூலை-ஆகஸ்டு மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலால் ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2021-ம் ஆண்டில் ஜூலை 23-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடக்கிறது.

    தற்போது கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு யுக்திகளை பின்பற்றி விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் விளையாட வரும் வீரர், வீராங்கனைகள் அங்கு 14 நாட்கள் முதலில் தனிமைப்படுத்தப்பட்ட பிறகே போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 14 நாள் தனிமைப்படுத்துதலை அமல்படுத்துவது மிகவும் கடினம் என்பதால் அந்த நடைமுறை பின்பற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு போட்டி அமைப்பாளர்கள் விடை அளித்துள்ளனர்.

    டோக்கியோ ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைமை செயல் அதிகாரி தோஷிரோ முட்டோ கூறுகையில், ‘ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி படைத்த வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், போட்டி தொடர்பான அலுவலர்கள் குறிப்பிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ஜப்பானுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். வெளிநாட்டு ரசிகர்களை அனுமதிப்பது குறித்து அடுத்த ஆண்டு நிலைமைக்கு தகுந்தபடி முடிவு எடுக்கப்படும். ரசிகர்களுக்கு 14 நாள் தனிமைப்படுத்துதல் என்பது சாத்தியமில்லாத ஒன்று. அதனால் அவர்கள் வருவதற்கு முன்பும், ஜப்பான் வந்த பிறகும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வது அவசியமாகும்’ என்றார்.

    வீரர், வீராங்கனைகளுக்கு 14 நாள் தனிமைப்படுத்துதல் நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் ஜப்பான் வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது. இது தொடர்பான பாதுகாப்பு வரைமுறைகள் விரைவில் வகுக்கப்படும் என்றும் போட்டி அமைப்பு குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஒலிம்பிக் விளையாட்டு திருவிழாவை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு ‘பச்சைக்கொடி’ காட்டப்படும் என்று நம்புவதாக கூறியுள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச் 3 நாள் சுற்றுப்பயணமாக அடுத்த வாரம் ஜப்பான் செல்கிறார். அப்போது ஒலிம்பிக் போட்டி ஏற்பாடுகள் குறித்தும், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் தோஷிரோ முட்டோவிடம் ஆலோசனை நடத்துகிறார்.




    அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான மரடோனாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.
    பியூனஸ் அயர்ஸ்:

    அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான 60 வயது மரடோனா உடல் நலக்குறைவு காரணமாக பியூனஸ் அயர்சில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த 2-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு ஆபரேஷன் செய்து ரத்த உறைவு அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்த மரடோனா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். தற்போது அவர் தனது மகளின் வீட்டில் தங்கி இருக்கிறார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக யூனிஸ்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
    கராச்சி:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான யூனிஸ்கான் சமீபத்தில் நடந்த இங்கிலாந்து தொடரில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தற்காலிகமாக பணியாற்றினார். அவரது செயல்பாடு சிறப்பாக இருந்ததை அடுத்து அவரை பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக கிரிக்கெட் வாரியம் நேற்று நியமனம் செய்துள்ளது. யூனிஸ்கான் 2022-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரை அந்த பதவியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வாசிம்கான் கூறுகையில், ‘இங்கிலாந்து தொடரில் யூனிஸ்கானின் செயல்பாட்டின் தாக்கம் அருமையாக இருந்ததாக அணி நிர்வாகம் தரப்பில் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக குறைந்தபட்சம் அடுத்த 2 ஆண்டுகளுக்கு அவர் பணியாற்ற இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடைய செயல் திட்டம், அர்ப்பணிப்பு, ஆட்ட அறிவு முதன்மையானதாகும். அவரது நியமனத்தின் மூலம் திறமையான பேட்ஸ்மேன்கள் பலரும் பயன் அடைவார்கள் என்று நம்புகிறேன். பாகிஸ்தான் அணிக்கு போட்டிகள் இல்லாத சமயத்தில் யூனிஸ்கானின் திறமையை உள்ளூர் பேட்ஸ்மேன்களின் திறமையை வளர்க்க பயன்படுத்தி கொள்வோம். அதாவது போட்டிகள் இல்லாத நேரத்தில் கராச்சியில் உள்ள கிரிக்கெட் உயர் திறன் மையத்தில் முகமது யூசுப்புடன் இணைந்து அவர் பணியாற்றுவார்‘ என்றார்.

    அடுத்த மாதம் தொடங்கும் நியூசிலாந்து தொடரில் இருந்து பேட்டிங் பயிற்சியாளர் பணியை தொடங்க இருக்கும் யூனிஸ்கான் கருத்து தெரிவிக்கையில், ‘பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பில் நீண்ட நாள் அடிப்படையில் இணைய இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வாய்ப்பை கவுரவமாக கருதுகிறேன். அடுத்து வரும் நியூசிலாந்து தொடரை எதிர்நோக்கி இருக்கிறேன். தேசிய அணியை தாண்டி உள்ளூர் திறமையை கண்டறிந்து வளர்க்கவும் எனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. உள்ளூர் திறமையை மேம்படுத்துவதிலும் முழுமையான ஆர்வத்தை காட்டுவேன்‘ என்றார்.

    42 வயதான யூனிஸ்கான் பாகிஸ்தான் அணிக்காக 118 டெஸ்ட், 265 ஒருநாள் மற்றும் 25 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பாகிஸ்தான் பெண்கள் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக டெஸ்ட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அர்ஷத் கான் ஒரு ஆண்டுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



    மும்பை விமான நிலையத்தில் கிரிக்கெட் வீரர் குருணால் பாண்ட்யாவை வருவாய் புலனாய்வு இயக்குனராக அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    மும்பை:

    ஐபிஎல் தொடர் நிறைவடைந்ததை அடுத்து அமீரகத்தின் பயோ பபுளில் இருந்து அனைத்து வீரர்களும் அவரவர் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். அதில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் துபாயிலிருந்து நேரடியாக ஆஸ்திரேலியா செல்கின்றனர்.

    இந்நிலையில், குருணால் பாண்ட்யா துபாயிலிருந்து மும்பை திரும்பிய நிலையில், மும்பை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு இயக்குனராக அதிகாரிகளால் திடீரென தடுத்து நிறுத்தப்பட்டார்.

    அளவுக்கு அதிகமாக தங்க நகைகள் மற்றும் விலைமதிப்புமிக்க பொருட்களை அவர் வைத்திருந்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தப்பட்டதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர். 

    அமீரகத்தில் அண்மையில் நிறைவு பெற்ற 2020-க்கான ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக  குருணால் பாண்ட்யா விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிதான் சிறந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என ஆர்சிபி வீரர் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
    ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த 13-வது ஐபிஎல் 20 ஓவர் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி 5-வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி புதிய சாதனை படைத்தது.

    இந்த நிலையில் இந்த ஐபிஎல் போட்டியில் விளையாடிய சிறந்த அணி மும்பை இந்தியன்ஸ்தான் என்று தென் ஆப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மேனும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரருமான டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஐபிஎல் கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள். இந்த ஆண்டின் சிறந்த அணி மும்பைதான். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மும்பை அணியில் கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன், குயின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், டிரென்ட் போல்ட், பும்ரா ஆகியோர் முத்திரை பதித்தனர்.
    கொரோனா வைரஸ் காரணமாக தமிழக முதல்தர கிரிக்கெட் வீரர்கள் கடந்த 7 மாதங்களாக எந்தவித பயிற்சிலும் பங்கேற்காமல் உள்ளனர்.
    தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்கள் பாதுகாப்புடன் பயிற்சியை தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கி இருந்தது. ஆனாலும் பாதுகாப்புக்கு பயந்து பயிற்சியில் பங்கேற்கவில்லை.

    இந்த நிலையில் ரஞ்சி கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி முகாமை அடுத்த வாரம் தொடங்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. தீபாவளிக்கு பிறகு பயிற்சி தொடங்கப்படும் என்று வீரர்கள் மற்றும் ஊழியர்களிடம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

    வருகிற திங்கட்கிழமை வீரர்கள் மற்றும் ஊழியர் களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த பயிற்சி முகாமில் 41 வீரர்கள் பங்கேற்கிறார்கள். அனைத்து பரிசோதனை முடிவு வந்தபிறகே பயிற்சி தொடங்கப்படும். 

    பயிற்சி நடைபெறும் நேரம் இன்னும் முடிவு செய்ய்படவில்லை. பயிற்சி முகாம் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.
    மெல்போர்ன்:

    இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் விளையாடும் ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 

    இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. 

    புதுமுக வீரர்களான புகோவஸ்கி, கேமரூன் கிரீன், மிச்சேல் சுவிப்சன், மிச்சேல் நீசர், சியான் அபோட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் டெஸ்டில் விளையாடியது கிடையாது. 

    வீரர்கள் விவரம்

    இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்:--

    டிம் பெய்ன் (கேப்டன்), மார்னஸ் லபுசேன், டேவிர் வார்னர், ஸ்டீவ் சுமித், மேத்யு வாடே, ஜோபர்னர்ஸ், கும்மின்ஸ், ஹாசல்வுட், டிரெவிஸ்ஹெட், நாதன் லயன், பேட்டின்சன், ஸ்டார்க், புகோவஸ்கி, கேமரூன் கிரீன், மிச்சேல் சுவிப்சன், மிச்சேல் நீசர், சியான் அபோட்.
    தள்ளிவைக்கப்பட்ட இந்திய அணிக்குரிய தகுதி சுற்று போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் என்று ஆசிய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தாரிலும், ஆசிய கோப்பை கால்பந்து போட்டி 2023-ம் ஆண்டு சீனாவிலும் நடைபெறுகிறது. இதற்கான தகுதி சுற்றில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் இந்த ஆண்டில் நடக்க இருந்தது. கொரோனா அச்சத்தால் தகுதி சுற்று தள்ளிவைக்கப்பட்டது. 

    இந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்ட இந்திய அணிக்குரிய தகுதி சுற்று போட்டிகள் அடுத்த ஆண்டு (2021) மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும் என்று ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் போட்டிகளுக்குரிய கமிட்டி அறிவித்துள்ளது. உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இந்திய அணி இழந்து விட்ட போதிலும் இன்னும் 3 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.
    இந்திய 20 ஓவர் போட்டிக்கான அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5-வது முறையாக கோப்பையை வென்றுத்தந்த பிறகு ரோகித் சர்மாவின் பதற்றமில்லா சாதுர்யமான கேப்டன்ஷிப் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பாக இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்காக 2 முறை கோப்பையை கைப்பற்றியவருமான கவுதம் கம்பீர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக இல்லாவிட்டால் அது இந்திய அணிக்கு இழப்பே தவிர, அவருக்கு அல்ல. சிறந்த அணியை பெற்றால் தான் ஒரு கேப்டனால் சாதிக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ஒருவர் நல்ல கேப்டனா? இல்லையா? என்பதை எதை வைத்து மதிப்பிடுவது? இதற்கான அளவுகோலும், திறன்மதிப்பீடும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரோகித் சர்மா தனது தலைமையில் 5 கோப்பைகளை வென்றுள்ளார். டோனியை ஏன் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் என்று சொல்கிறோம். அவர் இரண்டு உலக கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். அத்துடன் 3 ஐ.பி.எல். கோப்பைகளையும் வென்று சாதித்துள்ளார். இதே போல் ரோகித் சர்மா ஐ.பி.எல். வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக விளங்குகிறார். எனவே குறுகிய வடிவிலான (ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) போட்டிக்கான இந்திய அணிக்கோ, குறைந்தது 20 ஓவர் போட்டிக்கான அணிக்கோ அவரை கேப்டனாக நியமிக்க வேண்டும். இது நடக்காவிட்டால் உண்மையிலேயே துரதிர்ஷ்டவசமானதாக இருக்கும். ஒருவரால் இதைவிடவும் சாதித்துக்காட்ட முடியாது.

    கேப்டன்ஷிப்பை கோலி, ரோகித் சர்மாவுக்கு பிரித்து வழங்குவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசீலிக்கலாம். இது ஒன்றும் மோசமான யோசனை கிடையாது. வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் தனக்கும், கோலியின் கேப்டன்ஷிப்புக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசத்தை ரோகித் சர்மா காட்டியுள்ளார்.

    ஒருவர் 5 முறை ஐ.பி.எல். கோப்பைகளை வசப்படுத்தியுள்ளார். இன்னொருவர் (கோலி) இன்னும் ஒரு தடவை கூட கோப்பையை வெல்லவில்லை. அதற்காக கோலியை மோசமான கேப்டன் என்று நான் சொல்லவில்லை. இருவரும் ஒரே சமயத்தில் தான் ஐ.பி.எல். அணிகளின் கேப்டனாக பொறுப்பேற்றனர். இதில் ரோகித் சர்மா தன்னை சிறந்த கேப்டனாக நிரூபித்துள்ளார்.

    இவ்வாறு கம்பீர் கூறினார்.

    இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கேள்விக்கே இடமின்றி, இந்திய 20 ஓவர் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்க வேண்டும். வீரர்களை வழிநடத்துவதில் ஒரு அற்புதமான தலைவர். 20 ஓவர் போட்டிகளில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பது அவருக்கு முழுமையாக தெரியும். இதன் மூலம் விராட் கோலியும் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும். அத்துடன் ஒரு வீரராக நெருக்கடி இன்றி விளையாட முடியும்’ என்று குறிப்பிட்டார்.
    ரோகித் சர்மா, பொல்லார்ட் ஆகியோர் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்ற ஐந்து முறையும் அந்த அணிக்காக விளையாடியவர்கள் ஆவார்கள்.
    ஐபிஎல் கோப்பை இறுதிப் போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. டெல்லி அணியை எளிதாக வீழ்த்தி 5-வது முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ். கடந்த வருடமும் கோப்பையை வென்றிருந்தது. இதன்மூலம் அடுத்தடுத்து கோப்பையை வென்ற 2-வது அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. இதற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்தடுத்து கோப்பையை வென்றிருந்தது.

    மேலும் அந்த அணிக்கு ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். அதேபோல் ஐந்து முறையும் அணியில் இருந்த வீரர் என்ற பெருமையை பொல்லார்ட் பெற்றுள்ளார்.

    ரோகித் சர்மா 6 முறை கோப்பையை வென்ற வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
    ஐபிஎல் தொடர் முடிந்த அடுத்த நாளா இன்றே இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் ஆஸ்திரேலியா புறப்பட்டனர்.
    ஐபிஎல் 13-வது சீசன் கடந்த செப்டம்பர் 19-ந்தேதி தொடங்கி நேற்று வரை (நவம்பர் 10) நடைபெற்றது. ஐபிஎல் தொடர் முடிந்த உடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள், மூன்று டி20, நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய அணியில் இடம் பிடித்திருந்து ஐபிஎல் தொடரில் இடம் பிடித்த வீரர்களும், இடம் பெறாமல் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்தவர்களும் இன்று ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றனர்.

    ஐபிஎல் தொடர் முடிந்த மறுநாளே ஓய்வின்றி அப்படியே சென்றுள்ளனர்.
    ×