என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீரரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான மான்டி பனேசர் தெரிவித்துள்ளார்.

    லண்டன்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வருகிற 2-ந் தேதி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்திய அணி முதலில் நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த போட்டி ஜூன் 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை சவுத்தாம்ப்டனில் நடக்கிறது.

    அதன் பிறகு விராட்கோலி அணி இங்கிலாந்துடன் 5 டெஸ்டில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஆகஸ்டு 4-ந்தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 14-ந்தேதி வரை இந்த டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.

    ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டத்துக்காக இந்த டெஸ்ட் தொடரை முன்னதாக முடிக்க வேண்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

    இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீரரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான மான்டி பனேசர் தெரிவித்துள்ளார்.

    ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் நிலவும் தட்பவெட்ப நிலை இந்திய வீரர்களுக்கு சாதகமாக இருக்கும்.

    இந்தியா 2 சுழற்பந்து வீரர்களுடன் களம் இறங்கலாம். தற்போது உள்ள இந்திய அணி 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தும் தகுதி உள்ளது. குக்கின் ஓய்வுக்கு பிறகு இங்கிலாந்து டாப் ஆர்டர் பேட்டிங் வரிசை சிறப்பாக இல்லை. ஒருவேளை இந்திய அணி ஒயிட்வாஷ் செய்தால் அன்னிய மண்ணில் வெற்றியாக அது அமையும்.

    உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியில் சுழற்பந்து வீரர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். இந்த போட்டிக்கு ஐ.சி.சி எப்படி ஆடுகளம் அமைக்கப்போகிறது என்று தெரியவில்லை.

    இந்த தொடரில் ஆல்ரவுண்டர் ஜடேஜா வெற்றிக்கு கை கொடுப்பார். சமீபத்தில் ஐ.பி.எல். தொடரில் அவரது செயல்பாடு சிறப்பாக இருந்தது. ஒருவேளை இந்தியா ஒரு சுழற்பந்து வீரருடன் களம் இறங்க விரும்பினால் ஜடேஜாவை தேர்வு செய்யலாம். ஏனென்றால் அவர் பேட்டிங்கிலும் நம்பிக்கை அளிக்கிறார்.

    இவ்வாறு மான்டி பனே சர் கூறியுள்ளார்.

    ஏற்கனவே இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து இருந்தார். தற்போது மான்டி பனேசர் இந்தியாவுக்கு வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளார். 

    ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை டோக்கியோவில் நடக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.

    கடைசியாக 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் நடந்தது.

    2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

    தற்போது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை டோக்கியோவில் நடக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுகிறது.

    தற்போது ஜப்பானில் அவசர நிலை இருந்தாலும் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று போட்டி அமைப்புக் குழு தெரிவித்துள்ளது.

    இந்தநிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றவர்கள் உள்பட 148 இந்திய விளையாட்டு வீரர்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா கூறியதாவது:-

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 148 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் 17 பேர் 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டுள்ளனர். 131 பேர் முதல் டோசை செலுத்திக்கொண்டுள்ளனர்.

    மேலும் இவர்களை தவிர பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றவர்களில் 13 பேர் முதல் டோஸ் செலுத்திக்கொண்டனர். இருவர் 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர்.பாரா ஒலிம்பிக் போட்டி ஆகஸ்டு 24-ந்தேதி தொடங்குகிறது.

    பாரா தடகள வீரர்களை சேர்த்து இதுவரை மொத்தம் 163 வீரர்கள் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அதே நேரம் ஒலிம்பிக் தொடர்பான பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளில் 87 பேர் முதல் டோசும், 23 பேர் இரண்டாவது டோசும் செலுத்திக்கொண்டனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இதுவரை 90-க்கும் மேற்பட்ட இந்திய வீரர் வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.

    ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி முதல் டோஸ் தடுப்பூசியை நேற்று செலுத்திக்கொண்டார்.

    சுஷில் குமார் நாட்டை விட்டு தப்பி செல்ல முடியாத வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்தனர்.
    புதுடெல்லி:

    ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், மல்யுத்த போட்டியின் முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் ராணா (வயது 23) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த 4ந்தேதி டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. சாகர் ராணா கடுமையாக தாக்கப்பட்டார். பலத்த காயமடைந்த அவரை, அவரது நண்பர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி சாகர் உயிரிழந்தார். இது தொடர்பாக  சாகர் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

    மல்யுத்த வீரர் சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட சிலரை போலீசார் தேடி வந்த நிலையில் சுஷில் குமார் தலைமறைவானார். சாகர் உயிரிழந்ததையடுத்து, இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றினர். சுஷில் குமார் தொடர்ந்து தனது இடத்தை மாற்றிக்கொண்டே வந்ததால், அவர் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தனர். 

    இந்நிலையில், சுஷில் குமாரை டெல்லி தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இத்தகவலை போலீஸ் அதிகாரி நிரஜ் தாக்கூர் இன்று உறுதி செய்துள்ளார்.

    சுஷில் குமார் நாட்டை விட்டு தப்பி செல்ல முடியாத வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்திருந்தனர். சுஷில் குமார் மற்றும் அவரது நண்பர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் டெல்லி கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்தது. அவரை பிடிப்பதற்கு பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த வீரர் வினோத் தன்வாருக்கு (49 கிலோ) கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் கடைசி நேரத்தில் இந்த போட்டியில் இருந்து விலகினார்.
    புதுடெல்லி:

    ஆசிய குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க இந்திய அணி துபாய் போய் சேர்ந்தது.

    ஆசிய குத்துச்சண்ைட சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நாளை (திங்கட்கிழமை) முதல் 31-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றுள்ள அமித் பன்ஹால் (52 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69 கிலோ), ஆஷிஷ் குமார் (75 கிலோ) உள்பட 10 வீரர்கள், ஆறு முறை உலக சாம்பியனான மேரிகோம் (51 கிலோ), லவ்லினா போர்கோஹைன் (69 கிலோ), சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), பூஜா ராணி (75 கிலோ) உள்பட 10 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். இந்த போட்டிக்கான இந்திய குத்துச்சண்டை அணி நேற்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் துபாய் போய் சேர்ந்தது. முன்னதாக, இந்திய அணியினர் சென்ற விமானம் தரை இறங்குவதற்கான அனுமதி நடைமுறையில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் விமானம் வானத்தில் வட்டமடிக்க வேண்டியதானது. அதன் பிறகு அனுமதி கிடைத்ததும் அவசரமாக தரைஇறங்கியது. நிர்வாக நடைமுறைகள் அனைத்தும் முடிந்து இந்திய அணியினர் 2 மணி நேர தவிப்புக்கு பிறகு தான் விமானத்தில் இருந்து வெளியேற முடிந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரத்துகக்கு விமானங்கள் வர அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதனால் அனுமதி பெற்று தான் அந்த நாட்டுக்கு இந்திய விமானங்கள் செல்ல முடியும். அந்த அனுமதி விஷயத்தில் ஏற்பட்ட குழப்பம் தான் விமானம் தரை இறங்குவதில் ஏற்பட்ட தாமதத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    இந்திய அணியினர் இரண்டு கொரோனா பரிசோதனை முடிந்து துபாய் ஓட்டலுக்கு சென்று விட்டதாகவும், அனைத்து அனுமதிகளும் முறையாக பெற்று தான் இந்திய அணியினர் சென்ற விமானம் துபாய் போனதாகவும் விளக்கம் அளித்துள்ள இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி பங்கேற்க ஒப்புதல் கிடைப்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் உதவிய இந்திய தூதரகம், ஆசிய குத்துச்சண்டை கூட்டமைப்பு, ஐக்கிய அரபு அமீரக அரசு ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த வீரர் வினோத் தன்வாருக்கு (49 கிலோ) கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் கடைசி நேரத்தில் இந்த போட்டியில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக மாற்று வீரர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை. 23 வயதான வினோத் தன்வார் 2019-ம் ஆண்டில் நடந்த தெற்காசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார்.
    கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தால் இந்தியாவிலேயே 20 ஓவர் உலக கோப்பையை நடத்துவது என்று கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து உள்ளது.

    துபாய்:

    ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் நடந்த முதல் போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

    கடந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த போட்டி 2022-ம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

    இதுவரை ஆறு 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெற்று உள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் 2 முறையும்(2012, 2016), இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இங்கிலாந்து (2010), இலங்கை (2014) ஆகிய நாடுகள் தலா ஒரு முறையும் உலக கோப்பையை கைப்பற்றி உள்ளன.

    7-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறுகிறது. சென்னை, பெங்களூர், ஐதராபாத், அகமதாபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, டெல்லி, தர்மசாலா ஆகிய இடங்களில் இந்த போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    போட்டிக்கான தேதி, இடம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. மொத்தம் 45 ஆட்டங்களை கொண்டது.

    இதற்கிடையே இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருப்பதால் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. திட்டமிட்டபடி இந்தியாவில் இந்த போட்டி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்தநிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி குறித்து ஆலோசனை நடத்துகிறது. இந்த கூட்டத்தில் இந்தியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடத்த முடியுமா என்பது குறித்து முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படுகிறது.

    முன்னதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு 29-ந் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தில் 20 ஓவர் உலக கோப்பை மற்றும் ஐ.பி.எல்.லின் எஞ்சிய ஆட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு தொடர்பாக ஐ.சி.சி. தனது கூட்டத்தில் ஆலோசிக்கும்.

    கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தால் இந்தியாவிலேயே 20 ஓவர் உலக கோப்பையை நடத்துவது என்று கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து உள்ளது. ஆனால் அதற்காக ஜூன் இறுதி வரை காத்திருக்கிறது.

    அதே நேரத்தில் ஐ.சி.சி. இதை ஏற்றுக்கொள்ளுமா என்று தெரியவில்லை. ஒருவேளை இந்தியாவில் போட்டி நடைபெறாவிட்டால் மாற்று இடமாக ஐக்கிய அரபு எமிரேட்சை கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 2 அணிகள் வெவ்வேறு நாடுகளில் விளையாட உள்ளது.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வருகிற 2-ந் தேதி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 6 டெஸ்டில் விளையாடுகிறது.

    நியூசிலாந்துடன் முதலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியாட்டத்தில் (ஜூன் 18-22) ஆடுகிறது. அதைத்தொடர்ந்து இங்கிலாந்துடன் 5 டெஸ்டில் விளையாடுகிறது. ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14-ந் தேதி வரை இந்த டெஸ்ட் தொடர் நடைபெறும்.

    இந்த காலகட்டத்தில் மற்றொரு இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. ஜூலை 13 முதல் 27-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறும்.

    விராட் கோலி, ரோகித் சர்மா, ரி‌ஷப்பண்ட் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாத அணி இலங்கையில் விளையாட உள்ளது. தவான் இந்த அணிக்கு கேப்டனாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஹர்திக் பாண்ட்யா, பிரித்வி ஷா உள்ளிட்ட திறமையான வீரர்கள் இலங்கையில் ஆட இருக்கிறார்கள்.

    இந்திய அணி ஜூலை 5-ந் தேதி இலங்கை புறப்பட்டு செல்லும் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. விரைவில் இதற்கான இந்திய அணி அறிவிக்கப்படும்.

    தேர்வு செய்யப்படும் வீரர்கள் கொரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பார்கள். இந்த தனிமை காலம் முடிந்தபிறகு அவர்கள் இலங்கை செல்வார்கள்.

    இலங்கை தொடருக்கான இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இடது கை வேகப்பந்து வீச்சாளர் வீசும் இன்சுவிங் பந்து வீச்சுக்கு ரோகித் சர்மா தடுமாறுவார் என பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் கூறி உள்ளார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் அணியின் முன்னனி வேகப்பந்து வீரர்களில் ஒருவர் முகமது அமீர். 2010-ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இவர் ஸ்பாட் பிக்சிங் என்னும் சூதாட்டத்தில் சிக்கினார்.

    இதையொட்டி அவருக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. தடைக்கு பிறகு 2016-ல் மீண்டும் அணிக்கு திரும்பினார். 27 வயதில் அவர் டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் இதை அறிவித்தார்.

    பின்னர் தான் மீண்டும் விளையாட தயாராக இருப்பதாக முகமது அமீர் கூறினார். 28 வயதான அவர் பாகிஸ்தான் அணிக்காக 36 டெஸ்ட், 61 ஒருநாள் போட்டி மற்றும் ஐம்பது 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடி உள்ளார்.

    இந்தநிலையில் ரோகித்சர்மா, விராட் கோலியை விட ஸ்டீவ் சுமித்துக்கு பந்து வீசுவது சவாலானது என்று இடது கை வேப்பந்து வீரரான முகமது அமீர் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    முகமது அமீர்

    விராட் கோலி, ரோகித் சர்மா ஆகிய இருவருக்கும் பந்து வீசிய போது எனக்கு சிரமம் ஏற்படவில்லை. ரோகித் சர்மாவுக்கு பந்து வீசுவது எனக்கு சுலபமானது. இரு வழிகளிலும் என்னால் அவரை அவுட் செய்ய முடியும்.

    இடது கை வேகப்பந்து வீச்சாளர் வீசும் இன்சுவிங் பந்து வீச்சுக்கு அவர் தடுமாறுவார். அதேபோல தொடக்கத்தில் பந்து ஆப்சைட் பக்கம் செல்லும் போது ரோகித் சர்மாவிடம் தடுமாற்றம் இருந்தது.

    விராட் கோலிக்கு பந்து வீசுவது ஓரளவு சிரமமானது. அழுத்தமான சூழ்நிலையில் அவர் நன்றாக விளையாடுபவர். மற்றப்படி இருவருக்கும் பந்து வீசியபோது எனக்கு கடினமாக இருந்ததில்லை.

    ஆனால் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் சுமித்துக்கு பந்து வீசுவது எளிதல்ல. அவர் ஆடும் விதத்தால் பந்து வீசுவது கடினமாக இருக்கும். அவுட்சுவிங் வீசினால் பேட்டை மேலே தூக்கி அடிக்காமல் விட்டு விடுவார். கால்காப்பு பக்கம் வீசினால் ரன்களை எடுப்பார்.

    இவ்வாறு முகமது அமீர் கூறியுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான புவனேஷ்வர் குமாரின் தந்தை கிரண் பால் சிங் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார்.

    மீரட்:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான புவனேஷ்வர் குமாரின் தந்தை கிரண் பால் சிங் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார்.  கிரண் பால் சிங் உத்தரப்பிரதேச காவல்துறையில் பணியாற்றியவர். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த கிரண் பால் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை எடுத்து வந்த கிரண் பால் சிங், உடல் நிலை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மோசமானது. இதையடுத்து மீரட்டில் உள்ள மருத்துவமனையில் கிரண் பால் சிங் அனுமதிக்கப்பட்டார்.  எனினும், சிகிச்சை பலனளிக்காமல் கிரண் பால் சிங் உயிரிழந்தார்.   புவனேஷ்வர்குமாரின் தந்தை மறைவுக்கு சக வீரர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    இந்திய ஒயிட்-பால் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்களில் விளையாட இருக்கிறது.
    இந்திய கிரிக்கெட் அணி கடந்த வருடம் இலங்கை சென்று ஒயிட்-பால் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.

    இதை ஈடுகட்டும் வகையில் ஜூலை மாதம் இந்திய அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. கடந்த வருடம் சர்வதேச போட்டிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால் இலங்கை கிரிக்கெட் போர்டுக்கு அதிகப்படியான இழப்பு ஏற்பட்டுள்ளது.

    தற்போது கூடுதல் போட்டிகள் நடத்தினால் டெலிவிசன் உரிமை மூலம் கூடுதல் வருமானத்தை ஈட்ட முடியும். இதனால் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கூடுதல் போட்டியில் விளையாட இலங்கை கேட்டுக்கொண்டது. இந்தியாவும் சம்மதம் தெரிவித்துள்ளது.

    இதனால் இலங்கை- இந்தியா தொடரில் கூடுதலாக இரண்டு போட்டிகள் நடத்தபட இருக்கிறது. 

    தென்ஆப்பிரிக்கா அணி ஆகஸ்ட் மாதமும், ஸ்காட்லாந்து செப்டம்பர் மாதமும், ஆப்கானிஸ்தான் நவம்பர் மாதமும் இலங்கை சென்று விளையாட இருக்கிறது. அப்போதும் கூடுதல் போட்டியில் விளையாட வலியுறுத்துவோம் என இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.
    அஷ்வின்- ஜடேஜா ஜோடிக்குப்பிறகு ஒயிட் பால் கிரிக்கெட்டில் சாஹல்- குல்தீப் யாதவ் ஜோடி நீண்ட காலமாக இணைந்து விளையாடியது.
    இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா ஆகியோர் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி வந்தனர். இடையில் இருவருடைய பந்து வீச்சிலும் தொய்வு ஏற்பட்ட சாஹல்- குல்தீப் யாதவ் ஜோடி ஒயிட்-பால் கிரிக்கெட்டிற்கான அணியில் இடம் பிடித்தனர்.

    இங்கிலாந்தில் 2019-ம் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இருவரும் இணைந்து விளையாடினார்கள். ஒரு போட்டியில் சாஹல் 10 ஓவரில் 88 ரன்களும், குல்தீப் யாதவ் 72 ரன்களும் விட்டுக்கொடுத்தனர். அதன்பின் இருவரும் இணைந்து விளயாடவில்லை. மேலும் ஹர்திக் பாண்ட்யா காயம் அடைய, ஜடேஜா மீண்டும் ஒயிட்-பால் அணிக்கு திரும்பினார். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியில் நிரந்தரமாக இடம் பிடித்தார்.

    இந்த நிலையில் சாஹலிடம் குல்தீப் யாதவ் உடன் இணைந்து விளையாடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சாஹல் பதில் அளிக்கையில் ‘‘நானும், குல்தீப் யாதவும் அணியில் விளையாடும்போது, ஹர்திக் பாண்ட்யா அணியில் இருந்தார். அவர் பந்து வீசுவார். 2018-ல் ஹர்திக் பாண்ட்யா காயம் அடைந்தபோது, ஜடேஜா மீண்டும் ஒயிட்-பால் கிரிக்கெட் அணிக்கு திரும்பினார். அவர் ஆல்ரவுண்டராக, 7-வது இடத்திலும் பேட்டிங்கும் செய்வார். துரதிருஷ்டவசமாக அவர் சுழற்பந்து வீச்சாளராக இருந்துவிட்டார். அவர் மிதவேகப் பந்து வீச்சாளராக இருந்திருந்தால் நாங்கள் இருவரும் இணைந்து விளையாடியிருக்கலாம். அது அணிக்கு தேவையாக இருந்தது.

    சாஹல்- குல்தீப் யாதவ்

    குல்தீப் யாதவும் நானும் ஒரு தொடரில் 50-50 என்ற அளவில் போட்டிகளில் விளையாடியிருப்போம். சில நேரம் அவர் 5 போட்டியில் 3 போட்டிகளில் விளையாடியிருப்பார். நான் வாய்ப்பு பெற்றிருப்பேன். அணிக்கு காம்பினேசன் தேவை. 11 வீரர்கள் அணியை உருவாக்க முடியும். குல்சா (Kulcha) அணியை உருவாக்க முடியாது. ஹர்திக் பாண்ட்யா இருக்கும் வரை எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அணிக்கு 7-வது இடத்தில் ஆல்-ரவுண்டர் தேவைப்பட்டது. நான் அணிக்காக விளையாட வில்லை என்றாலும், அணி வெற்றி பெறுவதால் மகிழ்ச்சி அடைகிறேன்.

    சாஹல்- குல்தீப் யாதவ் ஜோடியை குல்சா என செல்லமாக அழைப்பார்கள்.
    எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு நடத்திவிட வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக உள்ளது.

    புதுடெல்லி:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வருகிற 2-ந் தேதி இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது.

    இந்திய அணி முதலில் நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த போட்டி ஜூன் 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை சவுத்தம்டனில் நடக்கிறது.

    அதன் பிறகு இந்திய அணி இங்கிலாந்துடன் 5 டெஸ்டில் ஆடுகிறது. ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14-ந் தேதி வரை இந்த டெஸ்ட் தொடர் நடைபெறும்.

    முதல் டெஸ்ட் நாட்டிங்காமிலும் (ஆக4-8), இரண்டாவது டெஸ்ட் லண்டனிலும் (ஆக.12-16), மூன்றாவது டெஸ்ட் லீட்சிலும் (ஆக 25-29), நான்காவது டெஸ்ட் லண்டனிலும் (செப் 2-6), கடைசி டெஸ்ட் மான் செஸ்டரிலும் (செப் 10-14) நடக்கிறது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டத்துக்காக டெஸ்ட் போட்டி அட்டவணையை மாற்றி அமைக்குமாறு இங்கிலாந்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளது.

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கியது. வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஐ.பி.எல் போட்டி பாதியில் தள்ளி வைக்கப்பட்டது. 29 ஆட்டங்கள் முடிந்த நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது.

    எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு நடத்திவிட வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரமாக உள்ளது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்த போட்டி நடக்கிறது. இதனால் ஐ.பி.எல். ஆட்டங்களை செப்டம்பரில் நடத்திவிட வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

    ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இங்கிலாந்திலும் நடத்தலாமா? என்ற யோசனை இருக்கிறது. ஏனென்றால் வீரர்கள் அனைவரும் அந்த நேரத்தில் இங்கிலாந்தில் இருப்பார்கள்.

    இதன் காரணமாகவே போட்டி அட்டவணையை மாற்றுமாறு இங்கிலாந்துக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. ஆகஸ்ட் 4-ல் தொடங்கும் டெஸ்டை முன்னதாக ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. அதாவது செப்டம்பர் 14-ந் தேதி முடிவடையும் டெஸ்ட் தொடரை செப்டம்பர் 7ந் தேதிக்குள் முடிக்குமாறு வலியுறுத்தப்பட்டு உள்ளது.

    அப்படி மாற்றினால் ஐ.பி.எல் ஆட்டத்தை நடத்துவது எளிதாக இருக்கும் என்று கிரிக்கெட் வாரியம் கருதுகிறது. இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

    ஆனால் விரைவில் தனது பதிலை தெரிவிக்கும். போட்டி அட்டவணையை மாற்றினால் தங்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளை தெரிவிக்கலாம். அதே நேரத்தில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவும் அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

    ஐ.பி.எல். போட்டி தொடரில் மீதமுள்ள ஆட்டங்களை மீண்டும் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவை தவிர்த்து வெளிநாட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சவுத்தம்டன்:

    கடந்த மாதம் இந்தியாவில் தொடங்கிய 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரின்போது சில வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

    இதையடுத்து ஐ.பி.எல். போட்டி தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக கடந்த 4-ந்தேதி இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

    ஐ.பி.எல். போட்டி தொடரில் மீதமுள்ள ஆட்டங்களை மீண்டும் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவை தவிர்த்து வெளிநாட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டி தொடரை ஒத்திவைத்தது சரியான முடிவு என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் சில வி‌ஷயங்கள் (கொரோனா) மிக விரைவாக அதிகரித்தன. நாங்கள் விளையாடியபோது கொரோனா கட்டுப்பாட்டில் இருந்தோம். அது மிக சிறப்பாக இருந்தது. அந்த கட்டுப்பாட்டில் நாங்கள் நன்றாக கவனிக்கப்பட்டோம். ஆனால் சில மீறல்களும் இருந்தன.

    இதனால் போட்டியை தொடர முடியவில்லை. ஐ.பி.எல். போட்டி தொடரை ஒத்திவைத்தது சரியான முடிவுதான்.

    கொரோனா வைரஸ் விரைவாக அதிகரிப்பதற்கு முன்னதாகவே ஐ.பி.எல். போட்டியில் பெரும் பகுதியில் நாங்கள் கண்காணிக்கப்பட்டு வந்தோம்.

    ஒரு நாடு மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் சில மீறல்கள் போன்றவை மிகவும் துன்பகரமான மற்றும் வெளிப்படையான சவாலான நேரங்கள் அவர்களுக்கு விரைவாக ஏற்பட்டு விட்டது.

    எங்களை பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்துச் செல்ல அல்லது நாங்கள் எங்கு செல்ல வேண்டும் என்று நிறைய பேர் அதற்கான பணியில் ஈடுபட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×