search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா இலங்கை தொடர்"

    • விராட் கோலி 166 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார்.
    • விராட் கோலி 46வது சதமடித்து அசத்தினார்.

    திருவனந்தபுரம்:

    இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 390 ரன்கள் குவித்தது. விராட் கோலி 166 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷுப்மன் கில் 116 ரன் எடுத்தார். ரோகித் சர்மா 42 ரன், ஸ்ரேயாஸ் அய்யர் 38 ரன்னில் அவுட்டாகினர்.

    இதையடுத்து 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிய இலங்கை 73 ரன்னில் சுருண்டது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் சாதனைகளை விராட் கோலி முறியடித்துள்ளார்.

    சொந்த மண்ணில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 21 சதம் விளாசி அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். இதற்கு முன்பு சச்சின் 20 சதம் அடித்திருந்தார்.

    சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 46-வது சதத்தை 452- வது இனனிங்சில் தான் அடித்தார். ஆனால் விராட் கோலி 259-வது இன்னிங்சில் இந்த சாதனையை படைத்திருக்கிறார்.

    மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 5வது இடத்தை பிடித்தார்.

    • அபாரமாக ஆடிய விராட் கோலி 166 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
    • வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஓவரை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் தடுமாறினர்.

    திருவனந்தபுரம்:

    இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய விராட் கோலி 166 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஷூப்மன் கில் 116 ரன்கள் குவித்தார்.

    இதையடுத்து 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. குறிப்பாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஓவரை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். முன்னணி பேட்ஸ்மேன்கள் அவிஷ்கா பெர்னாண்டோ (1), குசால் மெண்டிஸ் (4), நுவனிது பெர்னாண்டோ (19) ஆகியோர் சிராஜ் ஓவரில் விக்கெட்டை இழந்தனர்.

    டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களைத் தொடர்ந்து மற்ற வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் சனகா(11) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். 50 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டை இழந்தது. 22 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை அணி 73 ரன்களில் சுருண்டது. இதனால் இந்தியா 317 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஷமி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா ஏற்கனவே வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி உள்ளது.

    • கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
    • விராட் கோலி, ஷூப்மன் கில் பார்ட்னர்ஷிப்பில் இந்திய அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது.

    திருவனந்தபுரம்:

     இந்தியா, இலங்கை அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது.

    இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா-ஷூப்மன் கில் களமிறங்கினர். அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இலங்கை வீரர் கருணாரத்னே வீசிய 16-வது ஓவரில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

    அதனைத் தொடர்ந்து விராட் கோலியுடன் ஷூப்மன் கில் ஜோடி சேர்ந்தார். இவர்களது பார்ட்னர்ஷிப்பில் இந்திய அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. 89 பந்துகளில் சதம் அடித்த ஷுப்மன் கில், 116 ரன்கள் சேர்த்த நிலையில், இலங்கை வீரர் ரஜிதாவின் பந்துவீச்சில் போல்ட் ஆனார். அதேபோல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலியும் சதம் அடித்து அசத்தினர். சர்வதேச போட்டிகளில் விராட் கோலி அடிக்கும் 46-வது சதம் இதுவாகும்.

    • முதலில் ஆடிய இலங்கை அணி, 215 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • 44வது ஓவரின் 2வது பந்தில் குல்தீப் யாதவ் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

    இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி, 215 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நுவனிது பெர்னாண்டோ அரை சதம் அடித்தார். குஷால் மெண்டிஸ் 34 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ், சிராஜ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். உம்ரான் மாலிக் 2 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், அதிரடியாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 17 ரன்களும், ஷூப்மான் கில் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். விராட் கோலி 4 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஸ்ரேயாஸ் அய்யர் (28), ஹர்திக் பாண்ட்யா (36), அக்சர் பட்டேல் (21) ஆகியோர் தங்கள் பங்களிப்பை வழங்க, கே.எல்.ராகுல் நிதானமாக ஆடி ரன் ரேட்டை உயர்த்தி, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    93 பந்துகளில் 3 பவுண்டரியுடன் அரை சதம் கடந்த ராகுல், தொடர்ந்து முன்னேறினார். மறுமுனையில் ராகுலுடன் இணைந்த குல்தீப் யாதவின் ஹெல்மெட்டில் அடிபட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை. கே.எல்.ராகுலுக்கு தொடர்ந்து கம்பெனி கொடுத்த அவர், 44வது ஓவரின் 2வது பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

    இந்திய அணி 40 பந்துகள் மீதமிருந்த நிலையில், 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 64 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றி உள்ளது. 3வது போட்டி 15ம் தேதி திருவனந்தபுரத்தில் பகலிரவு ஆட்டமாக நடக்கிறது.

    • இலங்கை அணியில் அதிகபட்சமாக நுவனிது பெர்னாண்டோ 50 ரன்கள் சேர்த்தார்.
    • இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ், சிராஜ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்தியா, இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    துவக்க வீரர் அவிஸ்கா பெர்னாண்டே 20 ரன்களில் வெளியேறிய நிலையில், நுவனிது பெர்னாண்டோ-குஷால் மெண்டிஸ் ஜோடி நிதானமாக விளையாடி ரன் சேர்த்தது. அணியின் ஸ்கோர் 102 ஆக இருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. மெண்டிஸ் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.

    அடுத்து வந்த தனஞ்செயா டக் அவுட் ஆனார். நுவனிது பெர்னாண்டோ அரை சதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின்னரும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய, இலங்கை அணி 215 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ், சிராஜ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். உம்ரான் மாலிக் 2 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    • இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • மது சனங்கா, பதும் நிசங்கா இலங்கை அணியில் இடம் பெறவில்லை.

    கொல்கத்தா:

    இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கவுகாத்தியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் இடம் பெற்றுள்ளார். இலங்கையில் 2 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மது சனங்கா, பதும் நிசங்காவுக்கு பதிலாக நுவனிது பெர்னாண்டோ அறிமுகமானார் மற்றும் லஹிரு குமார மீண்டும் அணிக்கு திரும்பினார்.

    போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

    இந்தியா:

    ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ்.

    இலங்கை:

    நுவனிது பெர்னாண்டோ, அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் மென்டிஸ், சாரித் அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, தசுன் ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, வெல்லாலகே, சமிகா கருணாரத்னே, கசுன் ரஜிதா, லாஹிரு குமாரா.

    • முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

    கொல்கத்தா:

    இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

    முதலில் நடைபெற்ற டி20 தொடரை இலங்கை அணி 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.

    இந்தியா, இலங்கை இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல இந்திய அணி முனைப்பு காட்டும். முதல் போட்டியில் கிடைத்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கை அணி முனைப்பு காட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

    • 2010-ம் ஆண்டு நடந்த போட்டியில் சேவாக் 99 ரன்னில் கடைசி வரை களத்தில் இருந்தார்.
    • ஒரு ரன் தேவைப்படும் போது நோபால் போட்டதால் அவர் சதத்தை எட்டமுடியவில்லை.

    இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியில் பெரிய இலக்கை துரத்திய இலங்கை ஆரம்பத்திலேயே முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கிய போது வழக்கம் போல கேப்டன் சனாகா அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார்.

    அதே வேகத்தில் சதத்தை நெருங்கிய அவர் கடைசி ஓவரில் 98 ரன்களில் இருந்த போது 4-வது பந்தில் இந்திய வீரர் முகமது ஷமி மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். நடுவர் தீர்ப்பு வழங்குவதற்காக 3வது நடுவரை நாடினார்.

    இருப்பினும் அந்த சமயத்தில் கேப்டன் ரோகித் சர்மா அதற்கு மறுப்பு தெரிவித்து ஷமியை சமாதானப்படுத்தி அவரது வாயாலேயே அவுட்டை வாபஸ் பெற வைத்தார். மேலும் மிகச் சிறப்பாக விளையாடி 98 ரன்களை எடுத்த சனாக்காவை அவுட் செய்வதற்கு அது சரியான வழியல்ல என்றும் போட்டியின் முடிவில் ரோஹித் சர்மா தெரிவித்தது அனைவரது நெஞ்சங்களை தொட்டு பாராட்ட வைத்தது. அதனால் நெகிழ்ச்சியடைந்த இலங்கை கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த நிகழ்வின் புகைப்படத்தை பதிவிட்டு பாராட்டியது.

    அதே போல் ஜெயசூர்யா, ஏஞ்சலோ மேத்யூஸ் போன்ற நிறைய முன்னாள் இலங்கை வீரர்களும் ரசிகர்களும் ரோகித் சர்மா மற்றும் இந்தியாவின் அந்த செயலை மனதார பாராட்டினார்கள். ஆனால் அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் 2010-ம் ஆண்டு இலங்கை அணியினர் செய்த காலத்திற்கும் அழிக்க முடியாத நிகழ்வை நினைவு கூர்ந்து பதிலடி கொடுத்தனர்.

    அதாவது கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் தம்புலாவில் நடைபெற்ற 3-வது போட்டியில் இலங்கை 170 ரன்கள் எடுத்தது. இதனை துரத்திய இந்தியாவுக்கு வழக்கம் போல அதிரடியாக விளையாடிய சேவாக் 11 பவுண்டரி 2 சிக்சருடன் 99* (100) ரன்கள் விளாசி வெற்றியை உறுதி செய்தார்.

    குறிப்பாக கடைசி நேரத்தில் வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்ட போது வழக்கம் போல சிக்சரைப் பறக்க விட்ட சேவாக் ஆசையுடன் பேட்டை உயர்த்தி சதத்தை கொண்டாடினார். ஆனால் அந்த பந்தை அம்பையர் நோ-பால் என்று அறிவித்ததால் கடைசியில் 99* ரன்கள் மட்டுமே எடுத்த அவர் சதத்தை புள்ளிவிவரங்களின் படி எட்ட முடியாமல் ஏமாற்றத்தை சந்தித்தார்.

    அதை விட அந்தப் பந்தை ரிப்ளையில் பார்க்கும் போது அதை வீசிய சுராஜ் ரண்டிவ் வேண்டுமென்றே சதமடிக்க கூடாது என்பதற்காக வெள்ளை கோட்டை விட வெகு தூரம் காலை வைத்து நோ-பால் வீசியதும் அதற்கு இலங்கையின் ஜாம்பவானாக கருதப்படும் கேப்டன் குமார் சங்ககாரா பந்தை வீசுவதற்கு முன்பாகவே திட்டம் போட்டுக் கொடுத்ததும் அம்பலமானது.

    அப்படி சதமடிக்க விடக்கூடாது என்பதற்காக வேண்டுமென்றே தீட்டப்பட்ட திட்டத்தை நேற்று நினைத்திருந்தால் இந்தியா நடுவர்களின் அனுமதியுடன் செய்திருக்கலாம்.

    ஆனால் செய்யாத நாங்கள் தான் இந்தியர்கள் இன்றும் இதுதான் எங்களுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்றும் இலங்கைக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள். மேலும் இனிமேலாவது அது போன்ற செயலை மீண்டும் செய்ய வேண்டாம் என்றும் இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    • இலங்கை அணி கேப்டன் சனகா 98 ரன்களில் இருந்த போது முகமது ஷமியால் மன்கட் முறையில் ரன் அவுட் செய்யப்பட்டார்.
    • பல கேப்டன்கள் இதைச் செய்ய மாட்டார்கள் என இலங்கை முன்னாள் வீரர் மேத்யூஸ் பாராட்டி உள்ளார்.

    இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 373 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து 374 என்ற கடினமான இலக்கை துரத்திய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் எடுத்தது.

    இந்த போட்டியில் இலங்கை அணி கேப்டன் சனகா 98 ரன்களில் இருந்த போது முகமது ஷமியால் மன்கட் முறையில் ரன் அவுட் செய்யப்பட்டார். அதை சோதிப்பதற்காக நடுவரும் 3-வது நடுவரை அணுகினார். அந்த சமயத்தில் வேகமாக ஓடி வந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா சிரித்த முகத்துடன் முகமது சமியிடம் சென்று பேசி இப்படி அவுட் தேவையில்லை என தெரிவித்தார்.

    அவரது வார்த்தைகளை புரிந்து கொண்ட முகமது ஷமி நடுவரிடம் சென்று தாம் முன்வைத்த அவுட்டை வாபஸ் பெறுவதாக கூறினார். இதனால் அடுத்த 2 பந்துகளில் பவுண்டரி மற்றும் சிக்சர் விளாசி தனது 2-வது சதத்தை பதிவு செய்தார்.

    சனாகாவுக்கு எதிரான மன்கட் அவுட்டை வாபஸ் பெற்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை இலங்கை ஜாம்பவான் பாராட்டி உள்ளார்.


    இந்நிலையில் அவர் கூறியதாவது:-

    நடுவரிடம் ரன் அவுட்டை வாபஸ் பெற்ற ரோகித் சர்மா ஸ்போர்ட்மேன்ஷிப்பின் உண்மையான வெற்றியாளர். அவரின் செயலுக்கு தலை வணங்குகிறேன்.

    மேலும் ஒரு இலங்கை அணியின் முன்னாள் வீரர் கூறியதாவது:-


    பல கேப்டன்கள் இதைச் செய்ய மாட்டார்கள். விதிமுறை சொன்னாலும் மேல்முறையீட்டை வாபஸ் பெற்றதற்காக சிறந்த விளையாட்டுத்திறனை வெளிப்படுத்துகிறது. ஹேட்ஸ் ஆஃப் ரோகித் சர்மா.

    இவ்வாறு கூறினார்கள்.

    • இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா 83 ரன்கள் எடுத்தார்.
    • இலங்கை அணியின் கேப்டன் தசுன் சனகா அதிரடியாக விளையாடி சதம் அடித்து அசத்தினார்.

    இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை 2 - 1 (3) என்ற கணக்கில் இந்தியா வென்றது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதது.

    அதன்படி களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 7 விக்கெட்டுகளை இழந்து 373 ரன்கள் குவித்தது. விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 45வது சதத்தை விளாசி 113 (87) அவுட்டானார். அதைத்தொடர்ந்து 374 என்ற கடினமான இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு பெர்னாண்டோ 5, குசல் மெண்டிஸ் 0, அசலங்கா 23 என முக்கிய வீரர்கள் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இருப்பினும் மிடில் ஆர்டரில் வழக்கம் போல கேப்டன் தசுன் சனாக்கா சவாலை கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்து அரை சதம் கடந்து வெற்றிக்கு போராடினார். நேரம் செல்ல செல்ல அதிரடியை அதிகப்படுத்திய அவர் வெற்றி பறிபோனாலும் குறைந்தபட்சம் சதத்தை நெருங்கி கடைசி ஓவரில் 98 ரன்களில் பேட்டிங் செய்தார்.


    கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி 4-வது பந்தில் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறினார் என்பதற்காக சனக்காவை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். அதன் காரணமாக போட்டியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டதுடன் சனாக்கா ஏமாற்றமடைந்த நிலையில் அதை சோதிப்பதற்காக நடுவரும் 3வது நடுவரை அணுகினார்.

    இருப்பினும் அப்போது வேகமாக ஓடி வந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு போராடும் அவரை சதமடிக்க விடாமல் அவுட்டாவதற்கு இது சரியான வழியல்ல என்று சிரித்த முகத்துடன் முகமது சமியிடம் பேசி சமாதானப்படுத்தினார்.

    அவரது வார்த்தைகளை புரிந்து கொண்ட முகமது ஷமி தாமாகவே நடுவரிடம் சென்று தாம் முன்வைத்த அவுட்டை வாபஸ் பெறுவதாக கூறினார். அதை தொடர்ந்து கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்த பவுண்டரிகளுடன் 12 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்த சனாக்கா 108* (88) ரன்கள் குவித்த போதிலும் 50 ஓவர்களில் இலங்கை 306/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இலங்கை கேப்டனை சதமடிக்க விடாமல் தடுக்க நேரடியாக அவுட் செய்ய முடியாமல் மன்கட் முறையில் அவுட் செய்த முகமது ஷமியின் செயலுக்கு நிறைய இந்திய ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக வெற்றி இரு பக்கத்திற்கும் சமமாக இருக்கும் போது மன்கட் செய்திருக்க வேண்டும் அல்லது சனாக்கா 60, 70 போன்ற ரன்களில் இருந்த போது மன்கட் செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் இந்திய ரசிகர்கள் வெற்றி உறுதியான பின்பு சதமடிக்க விடக்கூடாது என்ற எண்ணத்துடன் இவ்வாறு செய்வது சரியல்ல என சமூக வலைத்தளங்களில் சமியை விமர்சிக்கிறார்கள்.

    அதையே போட்டியின் முடிவில் "சிறப்பாக விளையாடிய சனாக்காவை நாங்கள் அந்த வழியில் அதுவும் 98 ரன்னில் அவுட் செய்ய விரும்பவில்லை" என்று ரோகித் சர்மா தெரிவித்தார். அந்த வகையில் வெற்றி பறிபோனாலும் தனி ஒருவனாக போராடி தகுதியான சதத்தை நெருங்கிய சனாகாவுக்கு எதிரான மன்கட் அவுட்டை வாபஸ் பெற்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை ரசிகர்கள் மனதார பாராட்டுகிறார்கள்.

    • நெருக்கடிக்கு மத்தியில் அசராமல் நின்று ஆடிய கேப்டன் தசுன் சனகா சதம் அடித்தார்.
    • இந்தியா தரப்பில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்

    கவுகாத்தி:

    இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. முதலில் ஆடிய இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய விராட் கோலி, 113 ரன்கள் குவித்தார். ரோகித் சர்மா 83 ரன்களும், ஷூப்மான் கில் 70 ரன்களும் விளாசினர்.

    இதையடுத்து 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின், துவக்க வீரர் பதும் நிசங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தார். ஆனால் மறுமுனையில் விக்கெட்டுகள் நிலைக்கவில்லை. அவிஸ்கா பெர்னாண்டோ 5 ரன்னிலும், குஷால் மெண்டிஸ் ரன் எடுக்காமலும், அசலங்கா 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அதிரடியாக ஆடிய தனஞ்செயா டி சில்வா 9 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் வலுவான நிலையில் இருந்த பதும் நிசங்கா, 72 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.

    ஹசரங்கா டி சில்வா (16) துனித் வெல்லாலகே (0), கருணாரத்னே (14) என பின்கள வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். நெருக்கடிக்கு மத்தியில் அசராமல் நின்று ஆடிய கேப்டன் தசுன் சனகா சதம் அடித்தார். எனினும், 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்களே சேர்த்தது. எனவே இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கடைசி வரை போராடிய கேப்டன் தசுன் சனகா 108 ரன்களுடனும், ரஜிதா 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிராஜ் 2 விக்கெட் எடுத்தார்.

    இந்த வெற்றியின்மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இரண்டாவது போட்டி 12ம்தேதி (நாளை மறுநாள்) நடக்கிறது.  

    • துவக்க வீரர்கள் ஷூப்மான் கில், கேப்டன் ரோகித் சர்மா ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்
    • மூன்றாவது வீரராக களமிறங்கிய விராட் கோலி, சர்வதேச போட்டிகளில் 73வது சதம் அடித்தார்.

    கவுகாத்தி:

    இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

    இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஷூப்மான் கில், கேப்டன் ரோகித் சர்மா ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்தனர். ரோகித் சர்மா 83 ரன்களும், ஷூப்மான் கில் 70 ரன்களும் சேர்த்தனர்.

    3வது வீரராக களமிறங்கிய விராட் கோலியும் அதிரடியில் மிரட்டினார். அவருடன் இணைந்த ஸ்ரேயாஸ் அய்யர் 28 ரன்களும், கே.எல்.ராகுல் 39 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பந்துகளை பவுண்டரிகளாக பறக்கவிட்ட விராட் கோலி, சர்வதேச போட்டிகளில் 73வது சதம் அடித்து அசத்தினார். 80 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அவர் இந்த இலக்கை எட்டினார். அவர் 113 ரன்கள் எடுத்த நிலையில், விக்கெட்டை இழந்தார். முன்னதாக அக்சர் பட்டேல் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    50 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் குவித்தது. முகமது ஷமி (4), சிராஜ் (7) ஆகியோர் களத்தில் இருந்தனர். இலங்கை தரப்பில் கசுன் ரஜிதா 3 விக்கெட் கைப்பற்றினார். தில்சன் மதுசங்கா, கருணாரத்னே, தசுன் சனகா, தனஞ்செய டி சில்வா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்குகிறது.

    ×