என் மலர்tooltip icon

    விளையாட்டு

    விராட் கோலி டி20 அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக இருக்கும் நிலையில், அடுத்த கேப்டன் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது.
    விராட் கோலி மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். வேலைப்பளு காரணமாக டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

    இதனால் அடுத்த கேப்டன் யார்? என்ற விவாதம் எழுந்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் ரோகித் சர்மா அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில் வெங்சர்க்கார் விராட் கோலி விலகல் குறித்து கூறுகையில் ‘‘ரோகித் சர்மா அடுத்த கேப்டன் பதவிக்கு தகுதியானவர். ஏனென்றால், அவருக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம், மிகவும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். 2018-ல் அவரது தலைமையின் கீழ் இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிகவும் அபாரமாக செயல்பட்டுள்ளார்.

    விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவு நான் எதிர்பார்த்ததுதான். 8 வருடங்களாக இந்திய அணியை நம்பர் ஒன் அணியாக வழி நடத்திச் சென்றுள்ளார். ஒவ்வொரு முறையும் பேட்டிங் செய்ய செல்லும்போது, அவருக்கு மிகப்பெரிய அளவில் நெருக்கடி உண்டாகிறது. தற்போது அவர் முடிவு எடுத்துள்ள நேரம் சரியானத. அவர் டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்து கேப்டன் பதவியில் இருந்து விலகுவார் என நம்புகிறென். டி20 கேப்டனாக கடைசி வெற்றி இதுவாக இருக்கனும்’’ என்றார்.
    நியூசிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிராக இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருந்த நிலையில், தொடரை ரத்து செய்துள்ளது.
    நியூசிலாந்து அணி நீண்ட காலத்திற்குப் பிறகு பாகிஸ்தான் சென்று மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட முடிவு செய்தது.

    அதன்படி நியூசிலாந்து வீரர்கள் வங்காளதேசம் தொடரை முடித்துக் கொண்டு பாகிஸ்தான் சென்றனர். பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இன்று மதியம் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடங்க இருந்தது.

    இந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு சற்றுமுன் பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக நியூசிலாந்து அணி பாகிஸ்தானை தொடரில் விளையாட முடியாது என அறிவித்தது. இதனால் தொடரை கைவிடப்பட்டுள்ளது.

    நியூசிலாந்து அணி வீரர்கள்

    நியூசிலாந்து அரசாங்கத்தின் பாதுகாப்பு எச்சரிக்கையை முன்னிட்டு, வீரர்களின் நலன்தான் முக்கியம் என்ற அடிப்படையில் நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு இந்த முடிவு எடுத்துள்ளது.

    ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ராவல் பிண்டியிலும், டி20 கிரிக்கெட் தொடர் லாகூரிலும் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.
    பாகிஸ்தானில் நடக்க இருக்கும் உள்நாட்டு போட்டிக்கான ஒப்பந்தத்தில் முகமது அமீரின் பெயரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சேர்த்துள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர். இவர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

    அவர் பாகிஸ்தான் அணிக்கு 36 டெஸ்ட், 61 ஒருநாள் போட்டி மற்றும் 50 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் முகமது அமீர், பாகிஸ்தான் பிரீமியர் லீக் மற்றும் மற்ற நாடுகளில் நடக்கும் 20 ஓவர் போட்டித்தொடரில் விளையாடி வருகிறார்.

    இந்தநிலையில் பாகிஸ்தானில் நடக்க இருக்கும் உள்நாட்டு போட்டிக்கான ஒப்பந்தத்தில் முகமது அமீரின் பெயரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சேர்த்துள்ளது.

    இந்த ஒப்பந்தத்தை முகமது அமீர் ஏற்க மறுத்துள்ளார். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று அதில் விளையாடவில்லை என்றால் உள்நாட்டு கிரிக்கெட்டில் இடம்பெறுவதன் பயன் என்ன? இந்த ஒப்பந்தத்தை தருவதன் மூலம் அவர்கள் என்னை கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். ஆனால் அது நடக்காது.

    உள்நாட்டு ஒப்பந்த பட்டியலில் எனது பெயரை சேர்ப்பதற்கு முன்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்னை தொடர்பு கொண்டிருக்க வேண்டும். கிரிக்கெட் வாரியத்தில் உள்ளவர்கள் தங்கள் தரத்தில் நன்கு படித்தவர்களை கொண்டுள்ளனர்.

    ஆனால் அவர்கள் இன்னும் அறியாமையுடன் நடந்துகொள்கிறார்கள். ஒரு இளம் கிரிக்கெட் வீரருக்கு எனது ஒப்பந்தம் வழங்கப்பட்டால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன். ஒரு இளம் வீரருக்கு எனது இந்த ஒப்பந்தத்தை வழங்கி உதவ வேண்டும்.

    நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறேன் என்ற உண்மையை அவர்கள் ஏற்கவில்லை. அதனால் தான் அவர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். நான் லீக் கிரிக்கெட்டில் விளையாடுவதை ரசித்து மீதமுள்ள நேரத்தை எனது குடும்பத்துடன் செலவிடுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முகமது அமீருக்கு 29 வயது தான் ஆகிறது. அதற்குள் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்தார். கிரிக்கெட் வாரியத்தில் உள்ள சில நிர்வாகிகள் மற்றும் சில வீரர்களுடன் அவருக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

    பணிச்சுமையை குறைக்க வேண்டி இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.

    லண்டன்:

    இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளிலும் கேப்டனாக விராட் கோலி இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபி எமிரேட்சில் தொடங்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பிறகு 20 ஓவர் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி நேற்று திடீரென்று அறிவித்தார்.

    டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி அணிக்கு கேப்டனாக தொடருவேன் என்று தெரிவித்துள்ளார். பணிச்சுமையை குறைக்க வேண்டி இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    விராட்கோலியின் இந்த முடிவை முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டி உள்ளார்கள். இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி கூறும்போது, இந்திய அணியின் எதிர்கால நலனை மனதில் கொண்டு விராட் கோலி இந்த முடிவை எடுத்துள்ளார். வருகிற 20 ஓவர் உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் டுவிட்டரில் கூறும்போது,” விராட்கோலியின் இந்த முடிவு மிகவும் சுயநலமற்றதாகும். அனைத்து அழுத்தங்களிலும் இருந்து சிறிது ஓய்வு எடுக்க உங்களுக்கு நல்ல இடத்தை அளிக்கும் இந்த முடிவுக்கு பாராட்டு” என்று கூறி உள்ளார்.

    இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத்காம்ப்ளி கூறியதாவது:-

    தற்போது 20 ஓவர் அணி கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி விலக இருக்கிறார். அவரது இந்த முடிவு அதிர்ச்சி அளித்தது. ஆனால் அவர் தற்போது நிம்மதியாக உணர்வார். நாம் விராட்கோலியை ஒரு பேட்ஸ்மேனாக பார்க்க போகிறோம். ஏனென்றால் அவர் நெருக்கடி இல்லாமல் இருப்பார். விராட்கோலி தனது முழு திறமையுடன் எந்த நெருக்கடி இல்லாமல் விளையாடுவார். அவர் சுதந்திரமாக விளையாடவே நான் விரும்புகிறேன்.

    அடுத்த கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு இருக்கும் என்று நினைக்கிறேன். 20 ஓவர் உலக கோப்பை போட்டி முடிந்த பிறகு ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பு ஏற்பார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பல கோப்பைகளை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி சிறப்பாக செயல்பட வாழ்த்துகள் என்று சவுரவ் கங்குலி கூறி உள்ளார்.
    கங்குலி

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.

    கோலியின் முடிவு குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், ‘விராட் கோலி இந்திய கிரிக்கெட்டின் உண்மையான சொத்து. தேவையான தருணத்தில் அணியை தன்னம்பிக்கையோடு வழிநடத்தக்கூடியவர். மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் வெற்றிகரமான கேப்டன்களில் அவரும் ஒருவர். இந்திய அணியின் எதிர்கால நலனை மனதில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளார்.

    20 ஓவர் அணியின் கேப்டனாக இந்திய அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி. வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள். அதன் பிறகும் அவர் இந்தியாவுக்காக நிறைய ரன்கள் குவிப்பார் என்று நம்புகிறேன்’ என்றார்.

    துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், ‘இந்திய 20 ஓவர் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக விராட் கோலி அளித்த பங்களிப்பு மகத்தானது. அதை ஒரு போதும் மறக்க முடியாது. கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது அவரது தனிப்பட்ட முடிவு. அதை நாங்கள் மதிக்கிறோம். அவரது தலைமையில் இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பையை வெல்லும் என்று நம்புகிறேன்’ என்றார்.
    எதிர்காலத்தில் புதிய கேப்டனாக நியமிக்கப்படக் கூடியவர் என்று இந்திய அணி எதிர்பார்த்தால் அது ராகுலாகதான் இருக்க முடியும் என முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இந்திய அணியின் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி விலகுவதாக அறிவித்ததையடுத்து அடுத்த கேப்டன் யார்? என்ற விவாதம் நடைபெற்று வருகிறது.

    இதில் ரோகித் சர்மாவுக்கு தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. அவர் இந்திய அணியின் 20 ஓவர் கேப்டனாக நியமிக்கப்பட இருக்கிறார். ரோகித் சர்மா தற்போது துணை கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதையடுத்து அடுத்த துணை கேப்டன் யார் என்று விவாதிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் 20 ஓவர் அணியின் துணை கேப்டனாக லோகேஷ் ராகுலை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    எதிர்காலத்தில் புதிய கேப்டனாக நியமிக்கப்படக் கூடியவர் என்று இந்திய அணி எதிர்பார்த்தால் அது ராகுலாகதான் இருக்க முடியும். அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தற்போது கூட இங்கிலாந்தில் அவரது பேட்டிங் அருமையாக இருந்தது.

    50 ஓவர் போட்டி மற்றும் ஐ.பி.எல். போட்டிகளில் நன்கு விளையாடி வருகிறார். அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும்.

    ஐ.பி.எல். போட்டியில் அவர் கேப்டன் பொறுப்பில் மிகவும் ஈர்க்க கூடிய வகையில் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். கேப்டன்ஷிப் சுமை அவரது பேட்டிங்கை பாதிக்க ராகுல் அனுமதிக்கவில்லை. சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரவிசாஸ்திரி, பரத் அருண், ஸ்ரீதர் ஆகியோர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு நன்றாக உள்ளனர். தனிமைப்படுத்துதலில் இருந்தும் வெளியே வந்து விட்டனர்.
    புதுடெல்லி:

    இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, உதவி பயிற்சியாளர்கள் பரத் அருண், ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

    லண்டனில் புத்தக வெளியீட்டு விழாவில் முககவசம் எதுவும் அணியாமல் கலந்து கொண்டதன் மூலம் இவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மர் கொரோனாவில் சிக்கியதால் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இந்திய வீரர்கள் கலக்கமடைந்தனர். இதைத் தொடர்ந்து இந்தியா-இங்கிலாந்து இடையே மான்செஸ்டரில் நடக்க இருந்த 5-வது டெஸ்ட் ரத்தானது. இந்திய வீரர்கள் அனைவரும் அங்கிருந்து ஐ.பி.எல். போட்டி நடக்க உள்ள அமீரகம் சென்று விட்டனர்.

    இதற்கிடையே இங்கிலாந்தில் 10 நாட்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறையை முடித்து விட்ட இந்திய பயிற்சி குழுவினர் எப்போது தாயகம் அனுப்பப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ‘ரவிசாஸ்திரி, பரத் அருண், ஸ்ரீதர் ஆகியோர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு நன்றாக உள்ளனர். தனிமைப்படுத்துதலில் இருந்தும் வெளியே வந்து விட்டனர். ஆனால் அங்குள்ள சுகாதார நடைமுறைப்படி விமானத்தில் செல்வதற்கு சி.டி. ஸ்கேன் ஸ்கோர் 38-க்கு மேல்இருந்தால் (கொரோனாவால் ஒருவரது நுரையீரல் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு அதில் இருந்து தேறி இருக்கிறார் என்பதை சுட்டிகாட்டுவது) தான் விமான பயணத்துக்கு தகுதியுடன் இருக்கிறார் என்பதற்கான சான்றிதழ் கிடைக்கும். அந்த சான்றிதழுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். எல்லாம் சரியாக நகர்ந்தால் அடுத்த 2 நாட்களில் அவர்கள் தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்’ என்று இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
    சி.பி.எல். கிரிக்கெட் போட்டியில் செயின்ட் கிட்ஸ் அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
    செயின்ட் கிட்ஸ்:

    கரீபியன் பிரீமியர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரின் இறுதி ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் பேட்ரியாட்ஸ்-செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் மோதின.

    இதில் முதலில் பேட் செய்த செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரகீம் கார்ன்வால், ரோஸ்டன் சேஸ் தலா 43 ரன்கள் எடுத்தனர். 

    பிராவோ

    அடுத்து ஆடிய செயின்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி பரபரப்பான ஆட்டத்தில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்து முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    கிறிஸ் கெய்ல் (0), இவின் லீவிஸ் (6 ரன்), கேப்டன் வெய்ன் பிராவோ (8 ரன்) சொதப்பினாலும், இளம் வீரர் டோமினிக் டிராக்ஸ் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக ஆடி கதாநாயகனாக ஜொலித்ததுடன் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து இலக்கை கடக்க வைத்தார். அவர் 24 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 48 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதைக் கைப்பற்றினார். தொடர் நாயகன் விருது ரோஸ்டன் சேசுக்கு அளிக்கப்பட்டது.
    என்.சி.சி. அமைப்பை மறுசீரமைப்பு செய்வதற்கான ஆய்வு குழுவை மத்திய பாதுகாப்புதுறை அமைச்சகம் அமைத்துள்ளது. அதில் எம்.எஸ். டோனி பெற்றுள்ளார்.
    இந்திய வரலாற்றில் 74 ஆண்டுகள் பழமையான அமைப்பான என்.சி.சி.யை தற்போது இருக்கும் நவீன காலச் சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.  இதனடிப்படையில்,  உயர் மட்டக்குழு ஒன்றை முன்னாள் எம்.பி. பைஜயந்த் பாண்டா தலைமையில் மத்திய பாதுகாப்பு துறை அமைத்தது.

    இந்தக் குழுவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, எம்.பி. விநய் சஹஸ்ரபுத்தே , மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஆகியோரை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் அமர்த்தியுள்ளது.  இவர்கள் என்.சி.சி.யை மறுசீரமைப்பு செய்வதற்கான ஆலோசனைகளை வழங்குவார்கள் எனக் கூறப்படுகிறது.

    இந்திய ராணுவத்தின் பாராசூட் பிரிவில் ஒருமாதம் தங்கியிருந்து பயிற்சி பெற்றதால் தோனி இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, இந்திய முன்னாள் கேப்டனான டோனிக்கு ராணுவத்தில் கவுரவ லெஃப்டினென்ட் கர்ணல் பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
    நான் கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும் ஒரு பேட்ஸ்மேனாக டி20 அணிக்கு எனது பங்களிப்பை முழுமையாக கொடுப்பேன் என்று விராட் கோலி கூறியுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி, டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, 

    இந்தியாவுக்காக விளையாடியது மட்டுமல்லாமல், இந்திய அணியை வழிநடத்தியது எனக்கு கிடைத்த மிகப் பெரிய அதிர்ஷ்டம். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நான் இருந்த நேரத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. என்னுடைய அணி வீரர்கள், அணி நிர்வாக குழு, தேர்வுக் குழு, பயிற்சியாளர்கள் மற்றும் நாங்கள் வெற்றிபெற வேண்டும் என நினைத்த ஒவ்வொரு இந்தியருக்கும் நன்றி. அவர்கள் இல்லாமல் நான் இதை செய்திருக்க முடியாது. 

    வேலைப் பளு என்பது மிக முக்கியமான விஷயம் என்பதை புரிந்துகொள்கிறேன். கடந்த 8 முதல் 9 ஆண்டுகளாக நான் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருவதால் அதிக வேலைப் பளு இருப்பதை உணர்கிறேன். அதேபோல கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக அணியின் கேப்டனாக செயல்பட்டு வருவதாலும் வேலைப் பளு அதிகமாக உள்ளது. எனவே இந்திய அணியை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வழிநடத்த எனக்கு சற்று வேலை குறைப்புத் தேவைப்படுவதாக நினைக்கிறேன். அதன் பொருட்டு அக்டோபர் மாதம் துபாயில் நடக்கும் டி20 உலகக்கோப்பை தொடருடன் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன். நான் கேப்டன் பதவியிலிருந்து விலகினாலும் ஒரு பேட்ஸ்மேனாக டி20 அணிக்கு எனது பங்களிப்பை முழுமையாக கொடுப்பேன்.

    இவ்வாறு கோலி தெரிவித்துள்ளார். 

    ஐ.பி.எல். போட்டிகள் தொடங்க இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த் காயம் காரணமாக விலகியுள்ளார்.
    ஐ.பி.எல். தொடர் வரும் செப்டம்பர் 19-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளரான மணிமாறன் சித்தார்த்  இடம் பெற்றுள்ளார்.  டெல்லி அணி ஏலத்தில் அவரை ரூ. 20 லட்சத்துக்கு எடுத்து இருந்தது.

    அதுமட்டுமல்லாமல் கடந்த வருடம் நடக்க இருந்த முஷ்டாக் அலி கோப்பைப் போட்டி இந்த வருடம் ஜனவரி மாதம் நடந்தது. இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் 4/20 எனச் சிறப்பாகப் பந்துவீசி தமிழக அணி கோப்பையை வெல்ல மணிமாறன் சித்தார்த் முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

    இந்நிலையில்  மணிமாறன் துபாயில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போது, அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால்,  ஐ.பி.எல். போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது, மணிமாறனுக்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் குல்வந்த் கெஜ்ரோலியாவை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.
    இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நடித்துள்ள படம் நாளை ரிலீஸ் ஆகும் நிலையில், திரைப்படக் குழுவினற்கு சுரேஷ் ரெய்னா தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    ஜே.பி.ஆர்.-  ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கியுள்ள படம் 'பிரண்ட்ஷிப்'. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது.  இதில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடித்துள்ளார்.  இப்படத்தில் அர்ஜுன், சதீஷ், லாஸ்லியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    'பிரண்ட்ஷிப்'  திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதல்முறையாக கதாநாயகனாக நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான பல எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரர் சுரேஷ் ரெய்னா ஹர்பஜன் சிங் மற்றும் படக்குழுவினருக்கு தமிழில் டுவீட் செய்து வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘பஜ்ஜி பா ஹர்பஜன் சிங் என் அண்ணாத்த! பிரண்ட்ஷிப் டிரைலர், டீஸர் எல்லாம் வலிமையா இருக்கு, படம் கண்டிப்பா பீஸ்டா இருக்கும். பிரண்ட்ஷிப் படகுழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்களே நீங்க எல்லோரும் நாளைக்கு தியேட்டர்ல படம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க’’ என்று பதிவிட்டுள்ளார்.
    ×