என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இன்னும் 3 சிக்சர் விளாசினால் டி20 கிரிக்கெட்டில் 400 சிக்சர்கள் விளாசிய முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைக்க இருக்கிறார் ரோகித் சர்மா.
    இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மா. இவர் சிக்ஸ் அடிப்பதில் வல்லவர். களத்தில் சிறிது நேரம் நின்று விட்டால் வாணவேடிக்கை நிகழ்த்திவிடுவார்.

    அப்படிப்பட்ட ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் இதுவரை 397 சிக்சர்கள் விளாசியுள்ளார். இன்று ஐ.பி.எல். போட்டிகள் தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மூன்று சிக்சர்கள் விளாசினால் டி20 கிரிக்கெட்டில் 400 சிக்சர்கள் விளாசிய முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைப்பார்.
    1997-ம் ஆண்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் கருதி இலங்கைக்கு செல்ல பிற நாடுகள் தயங்கிய நிலையில் நாங்கள் இலங்கை சென்று விளையாடினோம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் கூறியுள்ளார்.

    கராச்சி:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றது.

    இரு அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த நிலையில் நியூசிலாந்து அணி தொடரை ரத்து செய்தது.

    பாதுகாப்பு காரணங்களுக்காக அந்நாட்டு அரசு அறிவுறுத்தியதன் பேரில் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் திடீரென இந்த முடிவை எடுத்தது. உடனடியாக நியூசிலாந்து அணி அந்த நாட்டில் இருந்து விளையாடாமலேயே திரும்பியது.

    நியூசிலாந்தின் இந்த முடிவால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் அதிர்ச்சி அடைந்தது. இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) புகார் செய்ய பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. அந்நாட்டு முன்னாள் வீரர்கள் பலரும் நியூசிலாந்து கிரிக்கெட்டை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

    இந்த நிலையில் நியூசிலாந்து தொடரை ரத்து செய்த விவகாரம் தொடர்பாக ஐ.சி.சி. தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம்- உல்-ஹக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நியூசிலாந்து செய்ததை எந்த நாடும் மற்ற நாட்டிற்கு செய்யாது. பாகிஸ்தான் எப்போதும் பிற நாடுகளுக்கு ஆதரவாக இருக்கும். 1997-ம் ஆண்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் கருதி இலங்கைக்கு செல்ல பிற நாடுகள் தயங்கின. ஆனால் நாங்கள் இலங்கை சென்று விளையாடினோம்.

    இந்த விவகாரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலையிட வேண்டும். பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல் இருந்தால் நியூசிலாந்து அதற்கான ஆதரத்தை காட்ட வேண்டும். ஆதாரத்தை காண்பிக்க மறுப்பது ஏன்?

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் ஆதாரத்தை காட்டவில்லை என்றால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவிக்கலாம்.

    எங்களுடைய பிரதமர் இது தொடர்பாக பேசி நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு உறுதியும் அளித்தார்.

    பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தால் முன்பே தெரிவிக்க வேண்டும். போட்டிக்கு முந்தைய நாள் இதுபற்றி நியூசிலாந்து தெரிவிக்கிறது. குறைந்தபட்சம் என்ன பிரச்சினை என்றாவது நியூசிலாந்து கூறி இருக்க வேண்டும். நியூசிலாந்தின் இந்த முடிவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

    இவ்வாறு இன்சமாம்- உல்-ஹக் கூறி உள்ளார்.

    இதற்கிடையே பாகிஸ்தானில் இருந்து ஐ.பி.எல்லில் விளையாடும் நியூசிலாந்து வீரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றனர்.

    ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஆடுகளங்கள் மெதுவாக இருக்கும் என்பதால் சென்னை மற்றும் பெங்களூரூ அணிகளுக்கு கடுமையான சிக்கல் ஏற்படலாம் என ஷேவாக் கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியின் 2-வது கட்ட ஆட்டங்கள் 4 மாதங்களுக்கு பிறகு துபாயில் இன்று தொடங்குகிறது.

    14-வது ஐ.பி.எல். போட்டியில் எந்த அணி சாம்பியன் பட்டம் பெறும் என்பது தொடர்பாக முன்னாள் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஐ.பி.எல். போட்டியின் 2-வது கட்ட போட்டிகள் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவுக்கு மாற்றப்பட்டதால், டெல்லி, மும்பை அணிகளுக்கு வாய்ப்பு இருப்பதாக நான் கருதுகிறேன். இதில் மும்பை இந்தியன்ஸ்சுக்குதான் ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்ற கூடுதலான வாய்ப்பு இருக்கிறது.

    ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஆடுகளங்கள் மெதுவாக இருக்கும். இதனால் சென்னை மற்றும் பெங்களூரூ அணிகளுக்கு கடுமையான சிக்கல் ஏற்படலாம்.

    ஐ.பி.எல். முதல்கட்டத்தில் அதாவது இந்திய மைதானங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சராசரி ஸ்கோர் 201 ஆகும். ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்சில் அவர்களது பேட்டிங் திறன் பாதிக்கப்படலாம்.அதிரடியாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் பற்றாக்குறையாகவே இருக்கிறது.

    ஐ.பி.எல். போட்டியில் ஒரு அணியை தேர்வு செய்ய சொன்னால் என்னை பொறுத்தவரை அது மும்பை இந்தியன்சாக இருக்கும்.

    ஒவ்வொரு அணிக்கும் இனி 7 ஆட்டங்கள் உள்ளன. இனி வரும் ஆட்டங்களில் திறமையை நிரூபிக்கும் வீரர்களுக்கு உலக கோப்பை அணியில் இடம்பெற இன்னும் வாய்ப்பு இருக்கிறது. அக்டோபர் 10-ந் தேதி வரை அணிகளை மாற்றம் செய்ய ஐ.சி.சி. அனுமதி வழங்கி உள்ளது.

    இவ்வாறு ஷேவாக் கூறி உள்ளார்.

    ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் சார்ஜா மைதானத்திற்கு செல்ல 16 வயதுக்கு உட்பட்ட ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
    துபாய்:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் கட்ட ஆட்டங்கள் இன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டிகளை ரசிகர்கள் நேரில் கண்டுகளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. 

    இந்நிலையில், ரசிகர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, துபாய் மைதானத்திற்கு செல்லும் ரசிகர்கள் கொரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்ற சான்றிதழ் கொண்டு செல்ல தேவையில்லை. ஆனால், கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றுவதுடன், கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தியிருப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை, மும்பை அணிகளின் கேப்டன்கள்

    சார்ஜா மைதானத்தைப் பொருத்தவரை, 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழுடன், 48 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை சான்றிதழை கொண்டு வரவேண்டும்.

    இதேபோல் அபுதாபி மைதானத்திற்கு வரும் ரசிகர்களில் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ், கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். 12 முதல் 15 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் தேவையில்லை, ஆனால், கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வரவேண்டும். 12 வயதிற்கு உட்பட்டவர்கள், 21 வயதுக்கு மேற்பட்ட ஒருவரின் துணையுடன் வரவேண்டும். 
    நாளை நடக்கவுள்ள ஆட்டத்தின் போது பெங்களூரு அணியினர் வழக்கமான சிவப்பு நிற சீருடைக்கு பதிலாக நீல நிற உடை அணிந்து விளையாட உள்ளனர்.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நாளை நடக்கும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சை அபுதாபியில் சந்திக்கிறது. இந்த ஆட்டத்தின் போது பெங்களூரு அணியினர் வழக்கமான சிவப்பு நிற சீருடைக்கு பதிலாக நீல நிற உடை அணிந்து விளையாட உள்ளனர். ஆட்டம் முடிந்ததும் இந்த சீருடை ஏலம் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியை இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பணிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய சீருடையை அறிமுகப்படுத்திய பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பின்னர் கூறியதாவது:-

    எங்கள் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மாற்று வீரர்களாக சிலர் சேர்க்கப்பட்டுள்ளனர். முதலாவது பகுதியில் ஆடிய கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளனர். அவர்களுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள இலங்கை பவுலர்கள் ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா இலங்கையில் அதிக அளவில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள். அங்குள்ள ஆடுகளங்களும், அமீரகத்தில் உள்ள ஆடுகளங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். அதனால் இங்கு எப்படி பந்து வீச வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். அவர்களது திறமை அணிக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். சில வீரர்கள் விலகினாலும் நாங்கள் வலுவாக இருப்பதாகவே உணர்கிறோம். புதிய வீரர்கள் வருகை, எங்களுக்கு புதிய பரிமாணத்தை கொடுத்துள்ளது. முதல் பாதியில் எப்படி விளையாடினோமோ அதே வேட்கை, மனஉறுதியுடன் 2-வது கட்டத்திலும் விளையாட வேண்டியது முக்கியம்.

    இவ்வாறு கோலி கூறினார்.
    கொரோனா வைரஸ் ஊடுருவலால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று மீண்டும் தொடங்குகிறது. துபாயில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன.
    துபாய்:

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்த நிலையில் 4 அணிகளைச் சேர்ந்த சில வீரர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானதால் மே 3-ந்தேதியுடன் ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. அதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்திருந்தது.

    இந்த நிலையில் மீதமுள்ள 31 ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களுக்கு மாற்றப்பட்டு 4 மாதங்களுக்கு பிறகு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. இதில் பங்கேற்றுள்ள நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். இதன்படி ஒவ்வொரு அணிகளும் தலா 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் 2-வது கட்ட பகுதியில் துபாயில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் (அதாவது 30-வது லீக் ஆட்டம்) 5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சுடன் மல்லுகட்டுகிறது.

    புள்ளி பட்டியலில் 5 வெற்றி, 2 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ள சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மறுபடியும் முதலிடத்துக்கு முன்னேறி விடலாம். இவ்விரு அணிகளும் ஏற்கனவே டெல்லியில் சந்தித்த லீக்கில் சென்னை அணி 218 ரன்கள் குவித்த போதிலும், அதை கீரன் பொல்லார்ட்டின் (34 பந்தில் 8 சிக்சருடன் 87 ரன்) அதிரடியால் மும்பை அணி கடைசி பந்தில் எட்டிப்பிடித்தது. அந்த தோல்விக்கு பழிதீர்த்து அமீரக சீசனை சென்னை அணி வெற்றியோடு தொடங்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

    சென்னை அணியில் அங்கம் வகிக்கும் இங்கிலாந்து ஆல்- ரவுண்டர் சாம் கர்ரனுக்கு 6 நாள் தனிமைப்படுத்துதல் நிறைவடையாததால் அவர் இன்று களம் இறங்க வாய்ப்பில்லை. இதே போல் வெஸ்ட் இண்டீசில் நடந்த கரிபியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் விளையாடிய போது இடுப்பு பகுதியில் காயமடைந்த பேட்ஸ்மேன் பாப் டு பிளிஸ்சிஸ் அதில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. இதனால் அவருக்கு இடம் கிடைக்காது என்றே தெரிகிறது. முதல் 7 ஆட்டங்களில் 4 அரைசதத்துடன் 320 ரன்கள் சேர்த்திருந்த பிளிஸ்சிஸ்சின் காயம் நிச்சயம் சென்னை அணிக்கு கொஞ்சம் பின்னடைவு தான். இருப்பினும் சுரேஷ் ரெய்னா, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, அம்பத்தி ராயுடு என்று திறமையான பேட்டிங் பட்டாளத்துடன் சென்னை அணி அடியெடுத்து வைக்கிறது.

    மும்பை அணி 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணியில் பொல்லார்ட், டி காக், ஹர்திக் பாண்ட்யா, கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் என்று அனைத்து முன்னணி பேட்ஸ்மேன்களும் இணைந்து விட்டனர். பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, டிரென்ட் பவுல்ட், ராகுல் சாஹர் மிரட்ட காத்திருக்கிறார்கள். அமீரக ஆடுகளங்கள் மெதுவான (ஸ்லோ) தன்மை கொண்டவை என்பதால் சுழற்பந்து வீச்சின் தாக்கமும் முக்கிய பங்கு வகிக்கும்.

    மொத்தத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பலம் வாய்ந்த அணிகளின் யுத்தத்தோடு ஐ.பி.எல். சரவெடி தொடங்குவதால் ரசிகர்களின் ஆவல் எகிறியுள்ளது. 2019-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக கணிசமான ரசிகர்களும் அனுமதிக்கப்படுவதால் களத்தில் உற்சாகம் ஆர்ப்பரிக்கும். அது மட்டுமின்றி இதே இடத்தில் தான் அடுத்த மாதம் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க இருப்பதால் நட்சத்திர வீரர்கள் கூடுதல் உத்வேகத்துடன் வரிந்து கட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    சென்னை: ருதுராஜ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ, டோனி (கேப்டன்), ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், நிகிடி அல்லது ஹேசில்வுட்.

    மும்பை: ரோகித் சர்மா (கேப்டன்), குயின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, ஆடம் மில்னே அல்லது நாதன் கவுல்டர்-நிலே, ஜெயந்த் யாதவ் அல்லது ராகுல் சாஹர், டிரென்ட் பவுல்ட், பும்ரா.

    இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    இந்தியாவுக்கு இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்று கொடுக்கவில்லை என்ற விமர்சனம் கேப்டன் விராட் கோலி மீது வைக்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். ஆனாலும், இந்தியாவுக்கு இதுவரை ஒரு ஐசிசி கோப்பையை கூட வென்று கொடுக்கவில்லை. விராட் கோலி கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக பேட்டிங்கில் சோபிக்க முடியாமல் திணறி வருகிறார்.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பைக்கு பிறகு டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என விராட் கோலி அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அவரால் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த முடியும் என்று அவரது சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக பேசிய ராஜ்குமார் ஷர்மா, டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதன் மூலம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரால் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த முடியும்.

    புதிய கேப்டன் புதிய யோசனைகளைக் கொண்டு வருவார். இந்திய கேப்டனுக்கு எம்எஸ் தோனி உதவி செய்வதுபோல் கோலி அவருக்கு உதவுவார். டி20 உலகக் கோப்பையை வெல்வதில் கோலி அதிக உறுதி, கவனத்துடன் இருப்பார்.

    இது ஒரு சிந்தனைக்குரிய முடிவு. இதைப் பற்றி அவர் என்னுடன் விவாதித்தார். மூன்று வடிவங்களில் கேப்டன் செய்வது ஒரு வீரரை அழுத்தத்தில் ஆழ்த்துகிறது. அதனால் அவர் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்தார். இது ஒரு பெரிய பிரச்சினை என்பதால் நாங்கள் அதைப்பற்றி விவாதித்தோம் என தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றிருந்தபோது, 5வது டெஸ்ட் கொரோனா அச்சத்தால் ரத்துசெய்யப்பட்டது.
    புதுடெல்லி:

    இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 4 போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    இரு அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், டெஸ்ட் போட்டிகளின் போது இந்திய வீரர்கள் சிராஜ் மற்றும் பும்ராவை இங்கிலாந்து வீரர்கள் வம்புக்கு இழுத்தது குறித்து வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குர் மனம் திறந்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது இரு அணி வீரர்களும் வார்த்தைப் போர்களில் ஈடுபட்டிருந்தனர். முதலில் சிராஜ் - ஆண்டர்சன், ஆண்டர்சன் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோருக்கு இடையிலான பிரச்சினை, ஒட்டுமொத்த அணி மோதலாக மாறிவிட்டது.

    ஆண்டர்சன்

    டெய்ல் எண்டர்களாகிய நாங்கள் வெளிநாட்டு மைதானங்களில் பேட்டிங் செய்யும்போது பெரிதும் சிரமங்களைச் சந்திக்கிறோம். ஆஸ்திரேலியாவில் கூட எங்கள் அணியின் கடைசி வீரரான நடராஜனுக்கு எதிராக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் கம்மின்ஸ் மற்றும் மிட்சல் ஸ்டார்க் ஆகியோர் கடுமையான பவுன்சர்களை வீசினர். அப்படி நாங்கள் எதிர்கொண்டதை தான் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக செய்தோம். 

    அயல்நாட்டு வீரர்கள் எங்களுக்கு எதிராக ஆக்ரோஷமாக பந்துகளை வீசுவது சரி என்றால், அதையே நாங்கள் திருப்பிச் செய்தால் தவறா ? நாங்கள் ஏன் பவுன்சர் பந்துகளை வீசக்கூடாது? நாங்கள் யாரையும் திருப்திப்படுத்த விளையாடவில்லை. வெற்றி பெறவே விளையாடுகிறோம் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
    டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அக்டோபர் 24ஆம் தேதியன்று பாகிஸ்தான் அணியுடன் முதல் லீக் ஆட்டத்தில் விளையாடவுள்ளது.
    புதுடெல்லி:

    அடுத்தடுத்த தொடர்களால் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பிசியாக உள்ளனர். இந்திய அணி வீரர்கள் தற்போது ஐபிஎல் போட்டிகளுக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் முகாமிட்டுள்ளனர்.  14-வது ஐ.பி.எல். சீசனின் இரண்டாவது கட்ட ஆட்டங்கள் நாளை (செப் 19-ந்தேதி) தொடங்கி அக்டோபர் 15-ந் தேதி வரை நடக்கிறது. 

    இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது.  இந்த போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ம் தேதி தொடங்க உள்ளது. இந்திய அணி அக்டோபர் 24ஆம் தேதியன்று பாகிஸ்தான் அணியுடன் முதல் லீக் ஆட்டத்தில் விளையாடவுள்ளது. இப்போட்டிக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. 

    இந்த போட்டியில் விளையாடுவதற்கு முன்னதாக, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. வீரர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    அக்டோபர் 18ஆம் தேதி இங்கிலாந்துடனும், அக்டோபர் 20ஆம் தேதி ஆஸ்திரேலியாவுடனும் இந்தியா பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளது.  
    துபாயில் நாளை நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    துபாய்:

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் மாதம் 9-ந் தேதி இந்தியாவில் தொடங்கியது. மே 2-ந் தேதி 29 ஆட்டங்கள் முடிந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

    ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்கள் கொரோனா தொற்றால் இந்தியாவில் நடத்தப்படவில்லை. ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இந்தப் போட்டிகள் மாற்றப்பட்டது.

    14-வது ஐ.பி.எல். சீசனின் 2-வது கட்ட ஆட்டங்கள் நாளை (19-ந்தேதி) தொடங்கி அக்டோபர் 15-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. எஞ்சிய 27 லீக் ஆட்டங்கள் மற்றும் 4 பிளே ஆப் போட்டிகள் ஆக மொத்தம் 31 ஆட்டங்கள் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

    துபாயில் 13 , சார்ஜா 10, அபுதாபியில் 8 ஆட்டங்களும் நடக்கிறது. அக்டோபர் 8-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. முதல் குவாலிபையர் அக்டோபர் 10-ந் தேதியும், எலிமினேட்டர் 11-ந் தேதியும், 2-வது குவாலிபையர் 13-ந் தேதியும், இறுதிப்போட்டி அக்டோபர் 15-ந் தேதி துபாயிலும் நடக்கிறது.

    29 ஆட்டங்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் 6 வெற்றி, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகியவை 5 வெற்றி, 2 தோல்வியுடன் தலா 10 புள்ளிகள் பெற்று முறையே 2-வதுமற்றும் 3-வது இடங்களில் உள்ளன. மும்பை இந்தியன்ஸ் 8 புள்ளியுடன் 4-வது இடத்தில் இருக்கிறது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் (6 புள்ளி), பஞ்சாப் கிங்ஸ் (6 புள்ளி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (4 புள்ளி), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (2 புள்ளி ) ஆகிய அணிகள் முறையே 5 முதல் 8-வது இடங்களில் உள்ளன. லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் “பிளே ஆப்” சுற்றுக்கு முன்னேறும்.

    துபாயில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சென்னை அணி, மும்பையை வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அதே நேரத்தில் மும்பை அணி 5-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. சென்னை அணியில் காயம் காரணமாக டூபெலிசிஸ், சாம்கரண் விளையாடுவது சந்தேகம்.

    முன்னாள் இந்திய வீரர்கள் 2 பேரை புதிய பயிற்சியாளராக இருக்குமாறு கிரிக்கெட் வாரியம் கேட்க உள்ளதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி உள்ளார். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு பிறகு அவரது பதவிக்காலம் முடிவடைகிறது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடக்கிறது.

    ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைவதால் அவரது இடத்தில் புதிய பயிற்சியாளராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட், பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவர் இந்திய ‘ஏ’ மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிக்கு பயிற்சியாளராக இருந்து சிறந்த இளம் வீரர்களை உருவாக்கி வருகிறார். தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராகவும் உள்ளார்.

    இந்தநிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்காக முன்னாள் கேப்டன் கும்ப்ளே, முன்னாள் பேட்ஸ்மேன் வி.வி.எஸ். லட்சுமணன் ஆகியோரை கிரிக்கெட் வாரியம் அணுகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    வி.வி.எஸ். லட்சுமணன் - கும்ப்ளே

    பயிற்சியாளராக இருக்குமாறு இருவரிடமும் கிரிக்கெட் வாரியம் கேட்க உள்ளதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது.

    இதில் கும்ப்ளே ஏற்கனவே இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்து உள்ளார். விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரால் பயிற்சியாளர் பதவியில் நீடிக்க முடியவில்லை.

    வி.வி.எஸ். லட்சுமணன் கிரிக்கெட் ஆலோசனை குழுவில் உறுப்பினராக இருந்து உள்ளார். இருவருமே 100 டெஸ்டுக்கு மேல் விளையாடி உள்ளனர். நல்ல அனுபவம் வாய்ந்த இவர்கள் பயிற்சியாளர்கள் பதவிக்கு தகுதியானவர்கள் என்று கிரிக்கெட் வாரியம் கருதுகிறது.

    வெளிநாட்டை சேர்ந்தவரை பயிற்சியாளராக நியமிப்பது என்பது 2-வது கட்ட கருத்தாகவே உள்ளது.

    நியூசிலாந்து அணியின் இந்த முடிவு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் கூறியுள்ளார்.

    இஸ்லாமாபாத்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றது.

    கொரோனா பாதிப்பு காரணமாக மைதானத்தில் 25 சதவீத ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து இருந்தது. பாகிஸ்தான் சென்ற நியூசிலாந்து அணி இந்த போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தது.

    முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடைபெற இருந்தது.

    இந்தநிலையில் பாகிஸ்தான் தொடரை பாதுகாப்பு காரணங்களுக்காக நியூசிலாந்து அணி ரத்து செய்தது. அந்நாட்டு அரசு எச்சரிக்கை வெளியிட்டதால் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் திடீரென இந்த முடிவை எடுத்தது. அந்நாட்டில் இருந்து நியூசிலாந்து அணி உடனடியாக நாடு திரும்புகிறது.

    நியூசிலாந்து அணி திடீரென தொடரை கைவிட்டதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிகுந்த கோபம் அடைந்து உள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான ரமீஸ் ராஜா கூறியதாவது:-

    நியூசிலாந்து அணியின் முடிவு சிறுபிள்ளைதனமானது. வெறும் பாதுகாப்பு மிரட்டல் தொடர்பாக தொடரில் ஆடாமல் வெளியேறுவது எங்களுக்கும், ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக உள்ளது.

    நியூசிலாந்து தன்னிச்சையாக இந்த முடிவை அறிவித்து உள்ளது. போட்டிகளின் போது பலத்த பாதுகாப்புக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்து இருந்தது. எங்கள் பிரதமர் இம்ரான்கானும் இது தொடர்பாக நியூசிலாந்து அரசுடன் பேசினார். நியூசிலாந்து அணிக்கு பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை என விளக்கினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் கூறும்போது, “நியூசிலாந்து அணியின் இந்த முடிவு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது” என்றார்.

    இதற்கிடையே தொடரை விளையாடாமலேயே ரத்து செய்த நியூசிலாந்து அணி மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளிக்கிறது.

    நியூசிலாந்து அணியின் இந்த முடிவை பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளனர்.

    இதற்கிடையே இங்கிலாந்து அணி பாகிஸ்தான் பயணம் குறித்து 48 மணி நேரத்தில் தனது முடிவை அறிவிக்கிறது. அந்த அணி அக்டோபர் 13 மற்றும் 14-ந் தேதிகளில் இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாட திட்டமிட்டு உள்ளது.

    நியூசிலாந்து வழியில் இங்கிலாந்தும் தொடரை ரத்து செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×