என் மலர்
புதுச்சேரி
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நேற்றைய தினம் மக்கள் ஊரடங்கை புதுவை மக்கள் 100 சதவீதம் கடைபிடித்தனர். பிறமாநில மக்களுக்கு முன்னுதாரணமாக புதுவை மக்கள் திகழ்ந்தனர். ஊரடங்கை தொடர்ந்து நேற்று இரவு 9 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் மக்கள் நடமாட்டம் குறையவே இல்லை.
கொரோனாவை கட்டுப்படுத்த ஒவ்வொரு நபரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்துவதை தவிர வேறு மருந்துகள் இல்லை. ஆனால் புதுவை மக்கள் மிகவும் அலட்சியமாக உள்ளனர். இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 700 பேர் இறந்துள்ளனர்.
சீனாவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதற்கு காரணம் ராணுவத்தின் மூலம் மக்களை வீடுகளில் கட்டுப்படுத்தியதுதான். எனவே புதுவை மக்கள் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
வெளிநாடு- வெளி மாநிலங்களில் இருந்து புதுவைக்கு 6 ஆயிரம் பேர் வந்துள்ளனர். 300 விடுதிகளில் தங்கிய 90 சதவீதத்தினர் திரும்பிச்சென்றுவிட்டனர். அவர்களுக்கு பணிவிடை செய்தவர்கள், தொடர்பில் இருந்த 515 பேர் கண்டறியப்பட்டனர். இவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளோம்.
புதுவை மக்கள் நலன் கருதி சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று இரவு 9 மணி முதல் வரும் 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலாகிறது. தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருக்கும். வாகனங்கள் அனுமதிக்கப்படாது. இருசக்கர வாகனங்களில் செல்வதைக்கூட போலீசார் தடுத்து நிறுத்துவர். அத்தியாவசிய பணிகளின்றி யாரும் வெளியில் நடமாடக்கூடாது.
31-ந் தேதி வரை சில்லறை, மொத்த வியாபார மதுபான கடைகள் அனைத்தும் மூடப்படுகிறது. 31-ந்தேதி வரை நடைபெற இருந்த திருமணங்களை ரத்து செய்ய கேட்டுக்கொள்கிறோம். துக்க நிகழ்ச்சிகளை 3 மணிநேரத்திற்குள் முடித்துக் கொள்ள வேண்டும். அத்தியாவசிய தேவைகளான பால், கியாஸ், பெட்ரோல், மருந்தகம், மருத்துவமனைகள் உள்ளிட்டவை மட்டுமே செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பாகூர்:
புதுவையில் கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு மது பார்களும் மூடப்பட்டுள்ளது. ஆனால், மது பாட்டில்களை வாங்கி செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டு விட்டதால் மதுபிரியர்கள் மதுபாட்டில்களை வாங்க புதுவைக்கு படையெடுத்து வருகிறார்கள்.
குறிப்பாக புதுவை எல்லை பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் மதுபாட்டில்களை வாங்க கூட்டம் அலைமோதுகிறது.
அதுபோல் தமிழக எல்லையையொட்டி புதுவை கரையாம்புத்தூரில் 4 மதுக்கடைகள் உள்ளது. இந்த மதுக்கடைகளில் மது அருந்த தடை விதிக்கப்பட்டாலும் மது பாட்டில்கள் வாங்கிச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த மதுக்கடைகளில் மதுபாட்டில் வாங்க கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கடந்த 2 நாட்களாக மது பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் கரையாம்புத்தூர் போலீசார் மது பிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மதுக்கடைகளில் வித்தியாசமான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
அதாவது மதுக்கடை வாயில்களில் ஒரு மீட்டருக்கு இடைவெளியில் கட்டம் போட்டு மது பிரியர்கள் நின்று மதுபாட்டில்களை வாங்கி செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். இதனை போலீசார் நின்று கண்காணித்து வருகின்றனர்.
அதுபோல் மதுக்கடை ஊழியர்கள் சீருடை மற்றும் முகக்கவசம் அணிந்து மதுபாட்டில்களை வினியோகம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் தினமும் சீருடை மற்றும் முக கவசத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் மதுக்கடை ஊழியர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வில்லியனூர் அருகே கீழ்சாத்தமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஞானமூர்த்தி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி உமா மகேஸ்வரி. இவர்களது மகள் ஹரிபிரியா (வயது 16).
இவர், ஏம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். தற்போது பள்ளியில் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் ஹரிபிரியா தேர்வை சரியாக எழுதவில்லை என்று தனது தந்தை ஞானமூர்த்தியிடம் கூறி வருத்தப்பட்டு வந்தார்.
அதற்கு ஞானமூர்த்தி பரவாயில்லை. பின்னர் படித்து தேர்வு எழுதலாம் என்று சமாதானம் செய்து வந்தார். ஆனாலும், இதனை ஏற்றுக்கொள்ளாத ஹரி பிரியா தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் சம்பவத்தன்று வயலுக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து விட்டார்.
இதில், மயங்கி விழுந்த ஹரிபிரியாவை அவரது பெற்றோர் மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று காலை ஹரிபிரியா பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
முத்திரையர்பாளையத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன், கட்டிட காண்டிராக்டரான இவர் மேரிஉழவர்கரை கணபதி நகர் முனீஸ்வரன் கோவில் தெருவில் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இங்கு கன்னியாகுமரியை சேர்ந்த அர்ச்சுணன் (54) என்பவர் தங்கி காவலாளியாக வேலைபார்த்து வந்தார்.
இந்த நிலையில் அர்ச்சுணன் அவர் தங்கி இருந்த மெட்டல்ஷிட் கொட்டகையில் உடல் அழுகிய நிலையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரெட்டியார்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குபதிவு செய்து அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் அர்ச்சுணன் இறந்தாரா? அல்லது நோய் கொடுமையால் இறந்து போனாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் நாளை மக்கள் ஊரடங்கிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மக்கள் ஊரடங்கு நேரத்தில் புதுவை மக்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
மிகவும் அத்தியாவசிய பணிகளை தவிர பிற பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது.
நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் தாமாக முன்வந்து ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், உள்ளாட்சி, விமானம், ராணுவம் உள்ளிட்ட பிற துறை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மணியோசை மூலமும், கைதட்டியும் நன்றி தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சாதாரண மருத்துவ சிகிச்சைக்கு மருத்துவமனை செல்வதை தவிர்க்கவும். அறுவை சிகிச்சைக்கு தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தால் முடிந்தவரை தள்ளி வைக்கவும். வீட்டு பணியாளர்கள், டிரைவர்கள், தோட்ட பணியாளர்கள், பிற பணியாளர்களுக்கு சம்பளத்தை நிறுத்தக்கூடாது. பதட்டத்துடன் பொருட்கள் வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும். வதந்திகளை நம்ப வேண்டாம்.
நாளை மறுநாள் (திங்கட் கிழமை) முதல் அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மக்கள் ஊரடங்கிற்கு வணிகர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
அரசு மற்றும் தனியார் பஸ்கள் நாளை ஓடாது. புதுவை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தந்து கொரோனாவை வெற்றிகரமாக ஒழிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முதல்-அமைச்சர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் நேரில் வரவேண்டாம் என்றும் 93453 75069 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலம் குறைகள், கோரிக்கைகளை மக்கள் வருகிற 31-ந் தேதி வரை தெரிவிக்கலாம் என்றும் முதல்-அமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாளை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதாலும், கடைகள் அடைக்கப்படுவதாலும் மற்றும் பஸ்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆட்டோக்களும், டெம்போக்களும் இயங்காது என கூறப்படுகிறது.
திருபுவனை:
திருபுவனை பேங்க் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 62). இவர் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.
இவரது மனைவி வள்ளியம்மை (56). இவர் அதே அலுவலகத்தில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இளங்கோவன் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். அதற்காக அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற் கொள்ளப்பட்டது.
ஆனாலும் மூட்டு வலி காரணமாக நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தார். இதுபற்றி அவர் அடிக்கடி மனைவியிடம் கூறி வருத்தப்பட்டு வந்தார். அவருக்கு அவரது மனைவி ஆறுதல் கூறி வந்தார்.
இந்த நிலையில் விரக்தியில் இருந்து வந்த இளங்கோவன் நேற்று மதியம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் உள்ள ஸ்டோர் ரூமில் உள்புறமாக பூட்டிக்கொண்டு தூக்கு போட்டு தொங்கினார்.
வெகு நேரமாக ஸ்டோர் ரூம் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த வள்ளியம்மை ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து கணவரை மீட்டு கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இளங்கோவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புதுவை ஆலங்குப்பம் சஞ்சீவி நகர் வீரப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் பழனி (60). வீட்டில் உள்ள ஆடு, மாடுகளை மேய்த்து வந்த இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிப்பழக்கத்தை நிறுத்த பழனி சிகிச்சை பெற்றார். இதனால் இவருக்கு உடல் பலவீனமானது. இதனால் பழனி மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை பழனிக்கும், அவரது மனைவி சுமதிக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. ஏற்கனவே மன வருத்தத்தில் இருந்து வந்த பழனி மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறி அங்குள்ள குளத்தின் அருகே உள்ள வேப்ப மரத்தில் கேபிள் வயரால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மகன் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கும் தீவிரமாக பரவி வருகிறது.
இதனை தடுக்க முக கவசத்தை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் முக கவசத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு முக கவசம், கிருமிநாசினி ஆகியவற்றை அத்தியாவசிய பொருட்களாக அறிவித்து இவற்றை பதுக்குவதோ, கூடுதல் விலைக்கு விற்பதோ சட்டப்படி குற்றம் என அறிவித்துள்ளது.
இருப்பினும் அதிக தேவையை கருதி தரமற்ற, விலை அதிகமாக முக கவசங்கள் விற்பனை நடந்து வருகிறது. இது தொடர்பாக எடை அளவு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதனையடுத்து புதுவை எடை அளவு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் பல்வேறு மொத்த விற்பனை நிலையங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் வி.வி.பி.நகர் கல்கி மெடிக்கல் நிறுவனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 313 முககவசம், அம்பலத்தடையார் மட வீதியில் உள்ள கவுதம் சர்ஜிகல்ஸ் நிறுவனத்தில் 500 முக கவசம், பாரதிவீதி வைஷ்ணவி சர்ஜிகல் நிறுவனத்தில் 70 முக கவசம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த முக கவசம் தரமற்று இருந்ததுடன், கூடுதல் விலைக்கும் விற்கப்பட்டது தெரியவந்தது. இந்த நிறுவனங்களின் உரிமம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மருந்து கட்டுப்பாட்டுத்துறைக்கு எடை அளவு கட்டுப்பாட்டுத் துறை நிர்வாகி தயாளன் கடிதம் அனுப்பியுள்ளார்.
பாகூர்:
பாகூர் மேற்கு கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் தேவநாதன். இவரது மனைவி மலர்கொடி. இவர்களுக்கு மஞ்சுமாதா (வயது18) மற்றும் வினிதா (16) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேவநாதன் இறந்து விட்டார். இதையடுத்து மலர்கொடி தனது மகள்களுடன் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு மலர்கொடி தனது மகள்களுடன் வீட்டில் தூங்கினார். மறுநாள் காலையில் பார்த்த போது வினிதாவை காணாமல் மலர்கொடி திடுக்கிட்டார். உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் வினிதா இல்லை.
இதையடுத்து மலர்கொடி தனது மகள் மாயமானது குறித்து பாகூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகள் வினிதாவை யாரோ கடத்தி கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாக கூறியுள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை நைனார்மண்டபம் கிழக்குவாசல் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி விஜயகாந்தி (வயது55). இவர் நேற்று இரவு மளிகை பொருட்கள் வாங்க காரில் புதுவை ரங்கப்பிள்ளை வீதிக்கு வந்தார். அங்குள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்கி காரில் ஏற்றிக்கொண்டு இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் காரின் கதவை காலால் எட்டி உதைத்தனர்.
இதனை விஜயகாந்தி தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி விஜயகாந்தியை சரமாரியாக தாக்கினார். இந்த தாக்குதலின் போது விஜயகாந்தி கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின் அறுந்தது. இதில் பாதிசெயின் அந்த வாலிபர்கள் கையில் சிக்கி கொண்டது. அந்த செயினுடன் வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து விஜயகாந்தி பெரியக்கடை போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவிசப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து செயினை பறித்து சென்ற மர்ம வாலிபர்களை தேடிவருகிறார்கள்.






