என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி
    X
    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி

    புதுவையில் இன்று இரவு முதல் 31-ந்தேதி வரை ஊரடங்கு: முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

    புதுவை மக்கள் நலன் கருதி இன்று இரவு 9 மணி முதல் வரும் 31-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலாகிறது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    நேற்றைய தினம் மக்கள் ஊரடங்கை புதுவை மக்கள் 100 சதவீதம் கடைபிடித்தனர். பிறமாநில மக்களுக்கு முன்னுதாரணமாக புதுவை மக்கள் திகழ்ந்தனர். ஊரடங்கை தொடர்ந்து நேற்று இரவு 9 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் மக்கள் நடமாட்டம் குறையவே இல்லை.

    கொரோனாவை கட்டுப்படுத்த ஒவ்வொரு நபரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்துவதை தவிர வேறு மருந்துகள் இல்லை. ஆனால் புதுவை மக்கள் மிகவும் அலட்சியமாக உள்ளனர். இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 700 பேர் இறந்துள்ளனர்.

    சீனாவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதற்கு காரணம் ராணுவத்தின் மூலம் மக்களை வீடுகளில் கட்டுப்படுத்தியதுதான். எனவே புதுவை மக்கள் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    வெளிநாடு- வெளி மாநிலங்களில் இருந்து புதுவைக்கு 6 ஆயிரம் பேர் வந்துள்ளனர். 300 விடுதிகளில் தங்கிய 90 சதவீதத்தினர் திரும்பிச்சென்றுவிட்டனர். அவர்களுக்கு பணிவிடை செய்தவர்கள், தொடர்பில் இருந்த 515 பேர் கண்டறியப்பட்டனர். இவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளோம்.

    புதுவை மக்கள் நலன் கருதி சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று இரவு 9 மணி முதல் வரும் 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலாகிறது. தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருக்கும். வாகனங்கள் அனுமதிக்கப்படாது. இருசக்கர வாகனங்களில் செல்வதைக்கூட போலீசார் தடுத்து நிறுத்துவர். அத்தியாவசிய பணிகளின்றி யாரும் வெளியில் நடமாடக்கூடாது.

    31-ந் தேதி வரை சில்லறை, மொத்த வியாபார மதுபான கடைகள் அனைத்தும் மூடப்படுகிறது. 31-ந்தேதி வரை நடைபெற இருந்த திருமணங்களை ரத்து செய்ய கேட்டுக்கொள்கிறோம். துக்க நிகழ்ச்சிகளை 3 மணிநேரத்திற்குள் முடித்துக் கொள்ள வேண்டும். அத்தியாவசிய தேவைகளான பால், கியாஸ், பெட்ரோல், மருந்தகம், மருத்துவமனைகள் உள்ளிட்டவை மட்டுமே செயல்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×