என் மலர்
புதுச்சேரி
- புதுவையில் நேற்று இரவு முதல் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
- கரையில் நின்று செல்பி மற்றும் ரீல்ஸ் எடுத்து இளம் தம்பதியினர் மகிழ்ந்தனர்.
புதுச்சேரி:
வங்க கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புதுவையில் நேற்று இரவு முதல் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் விடுமுறை நாளான இன்று இருள் விலகாத அதிகாலையிலேயே சூரிய உதயத்தை காண கடற்கரைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஆனால் காலை வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சூரிய உதயம் தெரியவில்லை. இதனால் சூரிய உதயத்தை காண வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் கடலில் இறங்கி சிலர் குளித்தனர்.
அப்போது அங்கு வந்த போலீசார் ஆபத்தான கடல் பகுதி என்பதால் கடலில் குளிக்க தடை உள்ளதை சுட்டிகாட்டி சுற்றுலா பயணிகளை அப்புறப்படுத்தினார்கள். சூரிய உதயத்தை பார்க்க முடியவில்லை, கடலில் குளிக்கவும் அனுமதியில்லை என சுற்றுலா பயணிகள் கவலை அடைந்தனர். இருப்பினும் கரையில் நின்று செல்பி மற்றும் ரீல்ஸ் எடுத்து இளம் தம்பதியினர் மகிழ்ந்தனர்.
- அரசியலமைப்பு சட்டப்படி எந்த கட்சியும் சாராமல் இருக்க வேண்டிய கவர்னர் பாஜக கைக்கூலியாக செயல்படுவது வேதனை தருகிறது.
- புதுவையில் முன்பு இருந்த கவர்னர்கள் போல சி.பி.ராதாகிருஷ்ணனும் புதுவை அரசு நிர்வாகத்தில் தலையிடுகிறார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்கட்ட தேர்தல் முதல் 6-ம் கட்ட தேர்தல் வரை மோடி 10 ஆண்டு பிரதமராக என்ன செய்தார்? என பிரசாரத்தில் பேசவில்லை.
பிரதமர், அமித் ஷா, பா.ஜனதா தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்களை வசைபாடுவதும், காங்கிரஸ் கட்சியை தரம்தாழ்ந்து பேசுவதும், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களை சிறையில் தள்ளும் வேலையைத்தான் செய்கின்றனர்.
அயோத்தி கோவிலை இடிக்கும் கட்சி காங்கிரஸ் என பிரதமர் பொய் பிரசாரம் செய்கிறார். பிரதமர் தன்னை அவதார புருஷன் என பேசி வருகிறார். அவரது பேச்சில் இருந்து பா.ஜ.க. படுதோல்வி அடையும் என தெரிகிறது. இந்தியா கூட்டணி மிகப்பெரும் அளவில் எம்.பி. தொகுதிகளை கைப்பற்றும்.
பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் 200 இடங்களை தாண்டாது. இந்தியா கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும். புதுவையில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கம் அமோக வெற்றி பெறுவார். தமிழகம், புதுவையில் 40 தொகுதியிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். ஒரு இடத்தில்கூட பா.ஜனதா வெற்றி பெற வாய்ப்பு இல்லை. அ.தி.மு.க.வும் படுதோல்வி அடையும்.
தமிழ்நாடு கவர்னராக ரவி பொறுப்பேற்றது முதல் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகிறார். அவர் அதிகார மீறல், ஜனநாயகத்தை மதிக்கவில்லை என சுப்ரீம்கோர்ட் சாடியும் திருந்தவில்லை. தமிழக தி.மு.க. ஆட்சிக்கு தொல்லை கொடுப்பது, கோப்புகளை நிராகரிப்பது, திருப்பி அனுப்புவது என அவர் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார்.
தமிழக கவர்னர் ரவி திருவள்ளுவர் விழாவை கவர்னர் மாளிகையில் கொண்டாடியுள்ளார். திருவள்ளுவர் எந்த காலத்திலும் காவி உடை அணிந்தது இல்லை. அவர் படங்கள், சிலைகளில் வெள்ளை உடையுடன் இருப்பார். வேண்டுமென்றே பிரச்சனையை உருவாக்க, தமிழ்நாட்டில் தமிழ் மொழியை கொச்சைப்படுத்த, தமிழக அரசுக்கு தொல்லை கொடுக்க சர்ச்சை வேலையை கவர்னர் செய்துள்ளார்.
இதற்கு கவர்னர் மட்டும் பொறுப்பல்ல, அவரை ஊக்குவிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடியும்தான் பொறுப்பு.
கவர்னர் மூலம் எதிர்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வெகு விரைவில் வரும்.
கவர்னர் தமிழக மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் தனது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்ததை படிப்படியாக தமிழ்நாட்டில் நுழைக்கும் வேலையை பார்க்கிறார். அரசியலமைப்பு சட்டப்படி எந்த கட்சியும் சாராமல் இருக்க வேண்டிய கவர்னர் பாஜக கைக்கூலியாக செயல்படுவது வேதனை தருகிறது.
புதுவையில் முன்பு இருந்த கவர்னர்கள் போல சி.பி.ராதாகிருஷ்ணனும் புதுவை அரசு நிர்வாகத்தில் தலையிடுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவர் ஜெகதீஷ், நடிகர் பாலா ஏழை கல்லூரி மாணவருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கிய சம்பவத்தை கலை நயமிக்க ஒரு பொம்மையாக கடந்த மார்ச் 22-ந்தேதி உருவாக்கினார்.
- வில்லியனூர் தனியார் கல்லூரி விழாவிற்கு வந்த பாலா மாணவன் ஜெகதீஷை அழைத்து பாராட்டி அவர் உருவாக்கிய பொம்மையை பெற்றார்.
புதுச்சேரி:
சின்னத்திரை வாயிலாக லட்சக்கணக்கானோர் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் பாலா.
இவரது சமூக சேவை பணிகள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் மேல்மருவத்தூரில் கல்லூரியில் படித்துக்கொண்டே பெட்ரோல் பங்க்கில் வேலை பார்க்கும் இளைஞரின் வறுமையை உணர்ந்து அந்த மாணவனுக்கு புதிய மோட்டார் சைக்கிளை பரிசாக வழங்கினார்.
இந்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது. இதனை ஒரு செய்தியாக கடந்து விடாமல் புதுச்சேரி சேலியமேடு கிராம அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர் ஜெகதீஷ் பொம்மையாக தயார் செய்தார்.
பள்ளியின் நுண்கலை ஆசிரியர் உமாபதி கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களுக்கு கிராமங்களில் கிடைக்கும் பயனற்ற தேங்காய் குருமி, தென்னை நார், சுரக்காய் குடுவை போன்றவற்றைக் கொண்டு பொம்மைகளை உருவாக்கும் பயிற்சி அளித்து வந்தார்.
இதில் பயிற்சி பெற்ற மாணவர் ஜெகதீஷ், நடிகர் பாலா ஏழை கல்லூரி மாணவருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கிய சம்பவத்தை கலை நயமிக்க ஒரு பொம்மையாக கடந்த மார்ச் 22-ந்தேதி உருவாக்கினார்.
இந்த பொம்மையை பாலாவுக்கு பரிசாக தர விரும்புவதாகவும் தான் சென்னைக்கு செல்ல இயலாது என்பதால் புதுச்சேரிக்கு பாலா எப்போது வருகிறாரோ அப்போது தருவதற்கு தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் வில்லியனூர் தனியார் கல்லூரி விழாவிற்கு வந்த பாலா மாணவன் ஜெகதீஷை அழைத்து பாராட்டி அவர் உருவாக்கிய பொம்மையை பெற்றார்.
இதற்கெல்லாம் நான் தகுதியானவனா என தெரியவில்லை. இருப்பினும் தம்பி உருவாக்கிய பொம்மையை மகிழ்ச்சியுடன் பெற்று செல்கிறேன். இதுவரை பெரிதாக உதவி எதுவும் செய்யவில்லை. இன்னும் நிறைய செய்ய வேண்டும்.
இவ்வாறு பாலா கூறினார்.
- மதுபோதையில் அவர்கள் போடும் ஆட்டத்துக்கு அளவில்லாமல் போவதால் கடற்கரைக்கு வருபவர்கள் நிம்மதியை இழக்கின்றனர்.
- நகரப்பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக வந்தவர்களை மடக்கி எச்சரிக்கை செய்தனர். சிலருக்கு அபராதமும் விதித்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரிக்கு வார இறுதி விடுமுறை நாட்களில் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
அவர்களில் பலர் மது குடித்து விட்டு ரகளையில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக புதுவை பழைய துறைமுக பகுதியில் இடிந்த நிலையில் உள்ள ஆபத்தான பாலத்தின் தூண்களில் அமர்ந்து மது குடிப்பது, கடற்கரையில் கொட்டப்பட்டுள்ள பாறாங்கற்களில் அமர்ந்து மது குடித்துவிட்டு பாட்டில்களை பாறைகளில் வீசி உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதனால் மதுபாட்டில்களின் கண்ணாடி சிதறல்கள் கடற்கரைக்கு வருபவர்களின் பாதங்களை பதம் பார்க்கின்றன. மேலும் கும்பலாக வரும் இளைஞர்கள் குடித்து விட்டு ரகளையிலும் ஈடுபடுகின்றனர். இதனால் கடற்கரைக்கு குடும்பத்தோடு வருபவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். வயதுக்கு வந்த பெண்களோடு வரும் பெற்றோர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர். மதுபோதையில் அவர்கள் போடும் ஆட்டத்துக்கு அளவில்லாமல் போவதால் கடற்கரைக்கு வருபவர்கள் நிம்மதியை இழக்கின்றனர்.
இந்த நிலையில் போலீசார் பழைய துறைமுக பகுதியில் அதிரடி ஆய்வினை மேற்கொண்டனர். அங்கு குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட சுற்றுலா பயணிகளையும் மதுபாட்டில்களை பாறையில் வீசி உடைத்து ரகளையில் ஈடுபட்டவர்களையும் விரட்டியடித்தனர். பின்னர் எச்சரிக்கை செய்து அங்கிருந்து வெளியேற்றினர்.
மேலும் நகரப்பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக வந்தவர்களை மடக்கி எச்சரிக்கை செய்தனர். சிலருக்கு அபராதமும் விதித்தனர்.
- தங்கத்தின் விலையில் மாற்றமாகி கொண்டு விலை ஏறிக்கொண்டே இருக்கும்.
- நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படும். வடமாநிலங்களில் வெள்ள பாதிப்பு அதிகரிக்கும்.
புதுச்சேரி:
சூரியன், புதன், குரு, சுக்கிரன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளனர். 25-ந்தேதி புதன் ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
ஜூன் மாதம் 3-ந்தேதி திங்கட்கிழமை ஒரே நேர்கோட்டில் இந்த 4 கிரகணங்களும் வருகிறது. இந்த நேர்கோட்டு கிரகணங்கள் அமைப்பால் ஜூன் 9-ந் தேதி வரை பலன்கள் கிடைக்கும்.
இந்த 4 கிரகணங்கள் ஒரே நேர்கோட்டு அணிவகுப்பால் பல்வேறு பலன்கள் கிடைக்கிறது. அதே போல் சில பாதிப்புகளும் ஏற்படும் என்று ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரபல ஜோதிடர் ஒருவர் கூறியதாவது:-
சூரியன், புதன், குரு, சுக்கிரன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றனர். இந்த 4 கிரகணங்களும் ஒரே வீட்டில் இருப்பதால் எதிர்க்கட்சிகளுக்கு போட்டியான காலமாக இது அமைகிறது.
இந்த கிரகணங்களின் நேர் கோட்டு சஞ்சரிப்பு ஆளுங்கட்சிக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி தரும். அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும். கிரகணங்கள் பெயர்ச்சி ஆவது போல் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களின் இடமாறுதல் பெயர்ச்சியும் உண்டாகலாம்.
வெயில் தாக்கம் அதிகரிக்கும். தென்மேற்கு பருவமழை நிதானமாக உற்பத்தியாகி வெயில் தாக்கத்தை குறைக்கும். ஜூன் 15-ந் தேதிக்கு மேல் வெயிலின் உக்கிரம் குறையும். மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ கல்வி படிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.

பொதுவாக சிலருக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஏற்படும். தங்கத்தின் விலையில் மாற்றமாகி கொண்டு விலை ஏறிக்கொண்டே இருக்கும். நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படும். வடமாநிலங்களில் வெள்ள பாதிப்பு அதிகரிக்கும்.
கேதார்நாத், பத்ரிநாத், ஹரித்துவார், ரிஷிகேஷ் ஆகிய இடங்களில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும். கேதார்நாத்தில் பனிப்பொழிவு அதிகரிக்கும். பத்ரிநாத்தில் உறைபனி ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொதுமக்கள் தங்களுடைய கட்டிட கழிவுகள், பழைய கட்டுமானப் பொருட்கள் எதையும் சாலைகளில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.
- அனைத்து முக்கிய வீதிகளிலும் உள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணித்து தவறு செய்பவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரி உள்ளாட்சித்துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் குப்பை கொட்டுவதால் ஏற்படும் சிரமங்களை போக்கவும், அழகை பராமரிக்கவும் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகள், உள்ளாட்சித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு பகுதியில் புதிய கட்டிடம் கட்டுபவர்கள் பழைய கட்டிட கழிவுகளை பொறுப்பற்ற முறையில் சாலையோரங்களில் தேக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய செயல்களால் சாலையில் நடப்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாவதுடன் விபத்துகளும் நடக்கின்றன.
எனவே பொதுமக்கள் தங்களுடைய கட்டிட கழிவுகள், பழைய கட்டுமானப் பொருட்கள் எதையும் சாலைகளில் கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் சாலையோரங்களில் உணவுக் கடைகள் வைத்திருப்போர் உணவுக் கழிவுகளை அருகில் உள்ள குப்பை தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும் அல்லது குப்பை அகற்றும் ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதுமற்ற வணிக நிறுவனங்களுக்கும் பொருந்தும். பொது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்காத வண்ணம் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். தவறுவோர் மீது நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து விதிகளின்படி அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும்.

இதுதவிர பொது இடங்களில் குப்பை கொட்டும் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரை அபராதமும், கட்டுமான பொருட்களையோ கழிவுகளையோ வீடு மற்றும் வணிக நிறுவனங்கள் முன் அல்லது பொதுவெளியில் கொட்டுபவர்களுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து முக்கிய வீதிகளிலும் உள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணித்து தவறு செய்பவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் விதித்தும் எச்சரிக்கையை மதிக்காமல் செயல்படுவோர் மீது பிரிவு எண்.133 குற்றவியல் சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரெயில்களில் சோதனை நடத்தி போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
- ரூ.2 கோடி மதிப்பிலான போதைப் பொருள் புதுச்சேரியை சேர்ந்த ஒருவரது முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
புதுச்சேரி:
புதுவைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தும் அதை கட்டுப்படுத்த முடியவில்லை.
ஆனாலும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி இருப்பதுடன் மாநில எல்லைகள் மற்றும் ரெயில்களில் சோதனை நடத்தி போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் வெளி நாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ. 22 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் ரூ.2 கோடி மதிப்பிலான போதைப் பொருள் புதுச்சேரியை சேர்ந்த ஒருவரது முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், புதுச்சேரி போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன்படி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் மற்றும் போலீசார் புதுச்சேரி சாரம் பாலாஜி நகரில் உள்ள தனியார் கூரியர் நிறுவன குடோனில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு போதைப் பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.
இருப்பினும் அங்கிருந்த ஊழியர்களிடம், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஏதாவது பார்சல் வந்தால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
- பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
- மின் அலங்காரத்தில் சாமி வீதியுலா நடந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி திருக்கனூர் அடுத்த வம்புப்பட்டு கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் செடல் உற்சவம் அய்யப்பனாரப்பன் கோவிலில் ஊரணி பொங்க லடன் தொடங்கியது. முத்து மாரியம்மன் கரகம் வீதியுலா, சாகை வார்த்தல் நடந்தது. நேற்று இரவு 8 மணிக்கு கோவில் வளாகத்தில் சிவன், பார்வதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தில் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் நலன் கருதி, வித்தியாசமான முறையில் பழ வகைகளுக்கு பதிலாக விவசாயிகள் மூலம் நேரடியாக கிடைக்கக்கூடிய தேங்காய், மாங்காய், எலுமிச்சை, கொய்யா, நெல்கதிர், நுங்கு, வாழைக்காய், நார்த்தங்காய், பப்பாளி, ஈச்சங்காய் உள்ளிட்டவை சீர்வரிசை தட்டில் வைக்கப்பட்டிருந்தன.
வம்புப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
நிகழச்சியில் பாம்பு போல நடனமாடி திருக்கல்யாண மாலையை இரு பூசாரிகள் எடுத்து சென்று சாமிகளுக்கு அணிவித்தனர். இதனை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர். தொடர்ந்து, மின் அலங்காரத்தில் சாமி வீதியுலா நடந்தது.
- மக்களுக்கு சுகாதாரம், உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்குவதற்கான நடை முறை சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் குப்பை கழிவுகளால் பரவும் நோய் களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கவர்னர் மாளிகையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி பேசியதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் யானைக்கால் நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வேலைசெய்ய வரும் பணியாளர்களுக்கு கால முறையில் யானைக்கால நோய் பாதிப்பு மற்றும் தொற்று நோய் அறிகுறிகள் குறித்து பரிசோதனைகள் நடத்த எற்பாடு செய்ய வேண்டும். அவர்களுக்கு மருத்துவ அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.
மருத்துவர்களும் வல்லுநர்களும் சுழற்சி முறையில் கிராமப்புறங்களுக்கு சென்று கிராமப்புற மக்களின் சுகாதாரமான சூழ்நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். புதுச்சேரி அரசு சுகாதாரத் துறையில் பணியாற்றும் அலுவலர்கள் ஊழியர்க ளுக்கு சுழற்சி முறையில் பயிற்சி அளிக்க கோரிமேடு நோய் ஒழிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.
மக்களுக்கு சுகாதாரம், உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பள்ளி-கல்லூரி மாணவர்களிடையே தூய்மை மற்றும் சுகாதாரமான சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை எற்படுத்த வேண்டும்.
மக்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உடல்பருமன், சர்க்கரை நோய் போன்ற வாழ்வியல் நோய்களைக் கட்டுப்படுத்தவும் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி விளையாட்டு மைதானங்களை மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு ஏதுவாக திறந்து விடுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய வேண்டும்.
புதுச்சேரியில் யானைக் கால் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்குவதற்கான நடை முறைசாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஜோதியாத்திரை வழியனுப்பும் விழா ரெட்டியார்பாளையம் தனியார் ஓட்டலில் நடந்தது.
- பா.ஜனதாவுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர்.
புதுச்சேரி:
மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி நினைவுதினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. ராஜீவ் நினைவுதினத்தையொட்டி ஆண்டுதோறும் கர்நாடக மாநில காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு சார்பில் ராஜீவ்காந்தி ஜோதி யாத்திரை நடைபெறும்.
இந்த ஆண்டு யாத்திரை கடந்த 15ம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொடங்கியது. யாத்திரையை கர்நாடகா முதல் மந்திரி சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
யாத்திரை பெங்களூருவில் தொடங்கி, மாணடியா, மைசூரு, கோயம்புத்தூர், பாலக்காடு, திருச்சூர், கொச்சின், திருவனந்தபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக புதுவையை அடைந்தது.
புதுவைக்கு நேற்று இரவு வந்த யாத்திரையை ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் பாலாஜி வரவேற்றார். யாத்திரை ஸ்ரீபெரும்புதூர் சென்றடைகிறது.
ஜோதியாத்திரை வழியனுப்பும் விழா ரெட்டியார்பாளையம் தனியார் ஓட்டலில் நடந்தது.

மாநில ஐ.என்.டி.யூ.சி.தலைவர் பாலாஜி தலைமை வகித்தார். மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன், சீனியர் தலைவர் தேவதாஸ், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு உள்ளிட்டோர் ஜோதி யாத்திரையை வணங்கி வழியனுப்பி வைத்தனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
பிரதமர் மோடி பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் தன் ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளை பற்றி தெரிவிக்கவில்லை.
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப்போகிறோம்? என்பதையும் சொல்லவில்லை. ஆனால் பிரசாரம் தோறும் காங்கிரசை தாக்கி பேசுகிறார். தனக்கு எதிராக உள்ள எதிர்கட்சியினர் மீது பொய்வழக்குகள் போட்டு சிறையில் தள்ளுகிறார்.
பா.ஜனதாவுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டனர். எனவே பாராளுமன்ற தேர்தலில் அதிக எம்.பி இடங்களை கைப்பற்றி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும். ராகுல்காந்தி பிரதமர் ஆவார்.
புதுவையில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சியில் ஊழல் மலிந்துபோயுள்ளது. 2026 தேர்தலில் மக்கள் ஆதரவோடு காங்கிரசை ஆட்சியில் அமர்த்த சபதமேற்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- இருளஞ்சந்தை, குருவிநத்தம், கரிக்கலாம்பாக்கம் மற்றும் அதனையொட்டிய தமிழக பகுதியிலும் அறுவடை பணிகள் மும்முரமாக நடக்கிறது.
- நெற்பயிர்கள் பசுமையாக பூ வைத்த நிலையில் உள்ள கதிர்களில் அண்மையில் பெய்த மழையால் பூச்சிகள் பாதிப்பு அதிகமாகும்.
புதுச்சேரி:
புதுவையின் நெற்களஞ்சியமான பாகூர் பகுதியில் தாளடி நவரை பருவத்தில் சுமார் ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
ஏ.டி.டி-51, என்.எல்.ஆர். ரக நெற்பயிர்களை அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
பயிர்களில் கதிர்பிடித்து தற்போது நெல்மணிகள் வளர்ந்துள்ளன. அடுத்த ஒருவாரத்தில் அறுவடை செய்ய விவசாயிகள் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் பாகூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.
23-ந் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அவ்வாறு பலத்த மழை பெய்தால் விளைந்த நெற்பயிர்கள் மடிந்து சேதமடையும்.
எனவே அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் மற்றும் சற்று பசுமையாக உள்ள நெற்பயிர்களை விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை செய்து வருகின்றனர். இருளஞ்சந்தை, குருவிநத்தம், கரிக்கலாம்பாக்கம் மற்றும் அதனையொட்டிய தமிழக பகுதியிலும் அறுவடை பணிகள் மும்முரமாக நடக்கிறது.
இதுகுறித்து பாகூர் பகுதி விவசாயிகளிடம் கேட்டபோது, மழை பெய்து வருவதால் முன்கூட்டியே அறுவடை செய்தால் ஓரளவாது நஷ்டம் ஏற்படாமல் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் முன்கூட்டியே அறுவடை நடந்து வருகிறது.
ஏற்கனவே பெய்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக இருப்பதால், செயின் போட்ட அறுவடை எந்திரம் மூலம் பணிகள் நடக்கிறது.
நெற்பயிர்கள் பசுமையாக பூ வைத்த நிலையில் உள்ள கதிர்களில் அண்மையில் பெய்த மழையால் பூச்சிகள் பாதிப்பு அதிகமாகும். இதனால் மகசூல் பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறினர்.
- அடையாளம் தெரியாத 5 பேர் சேர்ந்து கார்த்திக்வினோவை தாக்கி துப்பாக்கி காட்டி மிரட்டினர்.
- 12 பிரிவுகளின் கீழ் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி பிருந்தாவனம் முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக்வினோ (வயது36) காங்கிரஸ் பிரமுகர்.
இவருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 15-ந் தேதி இரவு சென்னை ஆலந்தூர் வருண்குமார், (35) என்பவர் கார்த்தி வினோவை காரில் கடத்தி சென்று அரியாங்குப்பம் பகுதியில் உள்ள வீட்டில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது.
அங்கு வருண்குமாருடன் வந்த இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளர் ஜோஸ்வா ஜெரால்டு (37) புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் பாபுநடராஜன் (35) கண்ணன் (35) சுரேஷ்(35) மற்றும் அடையாளம் தெரியாத 5 பேர் சேர்ந்து கார்த்திக்வினோவை தாக்கி துப்பாக்கி காட்டி மிரட்டினர்.
மேலும் அவரை நிர்வா ணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டி அரியாங்குப்பத்தில் இருந்து திண்டிவனம் அழைத்து சென்று அங்கு அவர் அணிந்திருந்த 1½ பவுன் மோதிரம், கைச்சங்கி லியை பறித்தும், வங்கி கணக்கில் இருந்து ரூ.89 ஆயிரம் பணம், கையில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணம் பெற்று கொண்டு ரூ.10 லட்சம் கடன் பெற்ற தாக மிரட்டி கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து கார்த்திக் வினோ திண்டிவனம் போலீசில் முதலில் புகார் தெரிவித்தார். ஆனால் கடத்தல் அரியாங்குப்பத்தில் நடந்ததால் அரியாங்குப்பம் போலீசில் புகார் அளிக்க அனுப்பினர்.
அரியாங்குப்பம் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கார்த்திக் வினோ கடத்தி சென்றதாக கூறிய இடங்களில் உள்ள சி.சி.டி.வி. கேமரா உள்ளிட் டவற்றை ஆய்வு செய்து விசாரித்தபோது பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது. இதனால் வழக்கு பதிவு செய்ய தாமதம் ஆனது.
இதையடுத்து கார்த்திக் வினோ புதுச்சேரி கோர்ட்டில் தன்னுடைய புகார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க மனு தாக்கல் செய்தார். அந்த புகார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து வருண்குமார், ஜோஸ்வா ஜெரால்டு, ஆனந்த்பாபு நடராஜன், கண்ணன், சுரேஷ் மற்றும் அடையாளம் தெரியாத 5 பேர் உட்பட 10 பேர் மீது கடத்தல், தாக்குதல், துப்பாக்கி முனையில் மிரட்டல் என 12 பிரிவுகளின் கீழ் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






