என் மலர்
புதுச்சேரி
- அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம்.
- கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.
புதுச்சேரி:
தமிழ்நாட்டில் அம்மன் கோவில்களில் ஆடி மாதம் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.
இதே போல் ஆந்திராவில் அங்குள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். தெலுங்கு நாட்காட்டிபடி சிரவண மாதம் ஆகஸ்டு 3-ந் தேதி தொடங்கி, செப்டம்பர் 3-ந் தேதி முடிகிறது. இந்த நாட்களில் அங்குள்ள அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கம்.
ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவை ஒட்டியுள்ள புதுவையின் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. இதில் ரூபாய் நோட்டுக்களால் மாலை செய்து அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
500 ரூபாய், 200 ரூபாய், 100 ரூபாய், 50 ரூபாய்,20 ரூபாய், 10 ரூபாய் ஆகியவற்றைக் கொண்டு ரூ.16 லட்சம் மதிப்பிலான நோட்டுக்களால் அம்மனுக்கு மாலையும், அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
12 ஆண்டுகளாக இதே பகுதியை சேர்ந்த வனக்கால நரேந்திரா என்ற பக்தர் அம்மனுக்கு ஆண்டுதோறும் ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்து கடைசி நாளில் பக்தர்களுக்கு அந்த நோட்டுகளை பிரசாதமாக வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
- விரக்தி அடைந்த பாலசுப்பிரமணியன் மனைவியை சுட்டுக்கொன்று தற்கொலை செய்தது தெரியவந்தது.
புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது39). இவர் அமெரிக்கா ஒஹாயோவில் உள்ள சிறையில் வார்டனாக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கும் கடலூர் பகுதியை சேர்ந்த சவுமியா (31) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 21-ந் தேதி கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் தான் வைத்திருந்த கைதுப்பாக்கியால், மனைவி சவுமியாவை சுட்டு கொலை செய்தார். பின்னர் அவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விசாரணையில் திருமணத்துக்கு முன் சவுமியா, கடலூரை சேர்ந்த உறவுக்கார வாலிபரை காதலித்து வந்ததும், திருமணத்திற்கு பின்னரும் இருவரும் சந்தித்து பேசி வந்ததும் பாலசுப்பிரமணியனுக்கு தெரியவந்தது.
இதனால் விரக்தி அடைந்த பாலசுப்பிரமணியன் மனைவியை சுட்டுக்கொன்று தற்கொலை செய்தது தெரியவந்தது.
இதற்கிடையே பாலசுப்பிரமணியன், சவுமியா ஆகியோர் கடைசியாக பேசிய ஆடியோ மற்றும் சவுமியா வேறொரு நபருடன் இணைந்து எடுத்த புகைப்பட மும் சமூக வலைதளத்தில் வெளியானது.
அந்த ஆடியோவில் பாலசுப்பிரமணியம், சவுமியாவிடம் எப்போது அந்த வாலிபரை பிடிக்க ஆரம்பித்தது என்று கேட்டுள்ளார். அப்போது சவுமியா அழுது கொண்டு, சில மாதங்களுக்கு முன்பு எனவும், ஓட்டலில் கள்ளக்காதலனுடன் புகைப்படம் எடுத்துகொண்டதை ஒப்புக்கொண்டார். மேலும் பிரச்சனை நடைபெறும் போது கள்ளக்காதலன் தனக்கு ஆறுதல் கூறாமல் சென்றதாகவும், தொடர்ந்து தங்களுக்கு நான் நல்ல தோழியாக இருப்பதாகவும், மேலும் குழந்தைகளிடம் நடந்ததை கூறிவிட்டு, தனித்தனியாக வாழலாம் என்று சவுமியா கூறியுள்ளார். ஆனால் பாலசுப்பிரமணியன் இன்னொருவரை விரும்பிய மனைவி தனக்கு தேவையில்லை என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
இந்த ஆடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
இதற்கிடையே பாலசுப்பிரமணியன் குடும்பத்தினர் புதுவை கலெக்டர் குலோத்துங்கனிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் தங்களது மகன் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், மேலும் தங்களது பேர குழந்தைகளையும் அங்கேயே அரசு தயவில் வளர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.
இதுபோல் சவுமியாவின் தாயார் தங்களது மகள் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவும்படி கடலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
- அனைத்து மாநிலங்களிலும் டாக்டர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
- ஜிப்மர் டாக்டர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
புதுச்சேரி:
கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அனைத்து மாநிலங்களிலும் டாக்டர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
புதுவை ஜிப்மரில் பணிபுரியும் டாக்டர்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கடந்த 13-ந் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். டாக்டர்களின் இந்த தொடர் போராட்டத்தால் வெளிபுற சிகிச்சை அளிக்கப்படவில்லை இதனால் நோயாளிகள் பெரும் அவதியடைந்தனர்.
இந்த நிலையில் போராட்டத்தை விலக்கிக்கொள்ளும்படி சுப்ரீம்கோர்ட்டு டாக்டர்களுக்கு அறிவுறுத்தியது. இதனால் ஜிப்மர் டாக்டர்கள் நேற்று மாலை போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இதையடுத்து ஜிப்மரில் உள்ள அனைத்து புறநோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்குகள், ஆய்வகங்கள் மற்றும் சி.டி., எம்.ஆர்., ஸ்கேன் சேவைகள் அனைத்து சேவை பிரிவுகளும் முழுமையாக இயங்கும் என, ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் அறிவித்தார்.
இதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) டாக்டர்கள் பணிக்கு திரும்பினர். ஜிப்மரில் அனைத்து மருத்துவ சேவைகளும் வழக்கம் போல இயங்கின.
- சமூக அமைப்பினரின் இந்த போராட்டம் புதுச்சேரி குடிமைப்பணி அதிகாரிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- முதலமைச்சர் ரங்கசாமியை அரசு அதிகாரிகள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் அரசிதழ் பதிவு பெறாத குரூப் 'பி' பணியிடங்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு இந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போதைய இந்த அறிவிப்புக்கு அரசு சார்பு செயலாளர்கள் 2 பேர் தான் காரணம் என்று கூறி அவர்களது வீடுகளை சமூக அமைப்பினர் முற்றுகையிட்டு ஒப்பாரி போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
சமூக அமைப்பினரின் இந்த போராட்டம் புதுச்சேரி அரசு குடிமைப்பணி அதிகாரிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தனிப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுவது குறித்து அவர்கள் ஒருவருக்கொருவர் அதிருப்தி தெரிவித்துக்கொண்டனர்.
இந்த நிலையில் குடிமைப்பணி அதிகாரிகள் சங்க தலைவரான தொழில் துறை இயக்குனர் ருத்ர கவுடுவுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது இதுதொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து முறையிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கோரிமேட்டில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு முதலமைச்சர் ரங்கசாமியை முற்றுகையிட்டனர்.
அப்போது முதலமைச்சர் ரங்கசாமியிடம் அரசின் அறிவிப்புக்காக தனிப்பட்ட அதிகாரிகளின் வீட்டு முன்பு போராட்டம் நடத்துவது என்பது அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், அதிகாரிகளின் குடும்பத்தினர் மிகவும் மன உளைச்சலுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
ஓய்வு பெற குறுகிய காலமே உள்ள அதிகாரிகள் இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் விருப்ப ஓய்வு பெறும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும் கூறினார்கள். தங்களுக்கும் குழந்தைகள் இருப்பதால் அவர்களும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
எனவே அதிகாரிகள் வீடுகள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஜாமீனில் வர முடியாத பிரிவில் வழக்கு தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
இதையடுத்து முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகள் வீடுகள் முன்பு போராட்டம் நடத்தியவர்கள் குறித்து போலீசாரை அழைத்து பேசுவதாகவும், அதிகாரிகளுக்கு எப்போதும் அரசு பாதுகாப்பாக இருக்கும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார். முதலமைச்சர் ரங்கசாமியின் உறுதிமொழியை ஏற்று அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
முதலமைச்சர் ரங்கசாமியை அரசு அதிகாரிகள் முற்றுகையிட்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- குறட்டை விடுவதன் மூலம் ஆக்சிஜன் அளவு குறைகிறது.
- ஆய்வகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
குறட்டை விடுவதன் மூலம் ஆக்சிஜன் அளவு குறைகிறது. அதனால், நுரையீரல், இருதய நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
இதையடுத்து புதுச்சேரி சுகாதாரத்துறை மூலம் இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை பிரிவின் கீழ் உறக்கத்தின்போது, குறட்டை ஏற்படும் பிரச்சனையை கண்டறிய நவீன ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரூ.35 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட இந்த ஆய்வகம் மூலம் உறக்கத்தின்போது ஏற்படும் குறட்டை மற்றும் மற்ற குறைபாடுகளை கண்டறிந்து, அதற்கான சிகிச்சைகளை சிறப்பாக அளிக்க முடியும்.
மேலும், உறக்கத்தின்போது, ஏற்படும், மூச்சடைப்பு, மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள், நோயின் தன்மையை பற்றி தெரிந்து கொள்ளலாம். குறட்டை பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆய்வகத்தில் இலவசமாக சோதனை செய்து, காது, மூக்கு, தொண்டை, மருத்துவரை அணுகலாம்.
- அரசின் எந்த நியமனமும் இடஒதுக்கீட்டு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.
- லேட்டரல் எண்ட்ரி நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லாதது கவலை அளிக்கிறது.
மத்திய அரசின் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் போன்ற முக்கிய பதவிகளை ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற யுபிஎஸ்சியில் தேர்ச்சி பெற்றவர்களையும், குரூப் ஏ சேவை அதிகாரிகள் மூலமே நிரப்பப்பட்டு வந்தன.
ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் லேட்டரல் என்ட்ரி என்ற அரசுப் பணியில் அல்லாத துறை சார்ந்த வல்லுநர்களை கொண்டு மத்திய அமைச்சகத்தின் முக்கிய பதவிகளில் நியமனம் செய்யும் முறையை பாஜக அரசு தொடங்கியது. இந்தத் திட்டத்தில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், லேட்டரல் என்ட்ரி முறையில் மத்திய அமைச்சகங்களில் காலியாகவுள்ள 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள் / துணைச் செயலாளர்கள் பதவிகளை நிரப்புவதற்கான விளம்பரத்தை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அவர், "அரசின் எந்த நியமனமும் இடஒதுக்கீட்டு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் நானும், என் கட்சியும் உறுதியாக உள்ளோம். லேட்டரல் எண்ட்ரி நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லாதது கவலை அளிக்கிறது. இதில் எங்கள் கட்சி முற்றிலுமாக உடன்படவில்லை" என்று தெரிவித்தார்.
பாஜக அரசின் அறிவிப்பிற்கு பாஜக கூட்டணியில் உள்ள லோக் ஜனசக்தி கட்சி தலைவர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக இந்த லேட்டரல் என்ட்ரி முறைக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது எக்ஸ் பதிவில், "லேட்டரல் என்ட்ரி என்பது தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகள் மீதான தாக்குதல் ஆகும். பாஜகவின் திரிக்கப்பட்ட ராம ராஜ்ஜியம், அரசியலமைப்பை அழிக்கவும், தாழ்த்தப்பட்டோரிடம் இருந்து இடஒதுக்கீட்டை பறிக்கவும் முயல்கிறது" என பதிவிட்டுள்ளார்.
- பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
- அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்.
புதுச்சேரி :
புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த கொடூரமான சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக ஜிப்மர் மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஜிப்மரின் வெளிப்புற நோயாளி பிரிவுகளில் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு போராட்டங்கள் முடிவுக்கு வரும் வரை, திங்கட்கிழமை (19.08.2024) முதல் வெளிப்புற நோயாளி பிரிவுகள் காலை 08:00 முதல் 10:00 மணி வரை மட்டுமே இயங்கும்.
இந்த நேரத்தில் அவசரமற்ற அல்லது நீண்டகால நோய் சிகிச்சை பெறுவோர் வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதனால் மருத்துவர்கள் அவசர சிகிச்சை தேவைப்படும் நோய்களைக் கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்த முடியும். இன்னும் சில நாட்களில் போராட்டம் முடிவுக்கு வரும் என நம்புகிறோம். அதனைத் தொடர்ந்து முழு வெளிப்புற பிரிவு சேவைகள் வழக்கம்போல் இயங்கும் என்ற அறிவிப்பு பொதுமக்களுக்கு செய்தித்தாள் மற்றும் ஊடகங்களின் மூலம் தெரிவிக்கப்படும்.
இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இருப்பினும், மருத்துவ பராமரிப்பு அவசியமாக தேவைப்படும் நபர்களின் கவனிப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இது மேற்கொள்ளப்படுகிறது.
அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். மேலும் உயிர்காக்கும் பராமரிப்பு தேவைப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதை உறுதிசெய்கிறோம்.
நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக சுகாதார சேவைகளை தொடர்ந்து வழங்குவதில் ஜிப்மர் அர்ப்பணிப்புடன் உள்ளது.
இந்த இக்கட்டான நேரத்தில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள், ஒத்துழைப்பையும் உதவியையும் அளிப்பதன் மூலம் அத்தியாவசிய மற்றும் அவசரமான சேவைகளை அதிகபட்சமாக முடிந்தவரை வழங்க இயலும் என்பதை ஜிப்மர் நிறுவனம் அறிவுறுத்துகிறது. பொதுமக்களின் இந்த ஒத்துழைப்பிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புதுச்சேரி சுதந்திரம் அடைந்தாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் யூனியன் பிரதேசமாக உள்ளது.
- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும் என்பதாகும்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு சார்பில் சுதந்திரத் தினத்தை முன்னிட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு தேநீர் விருந்து அளிக்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடந்தது.
விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி தியாகிகளுக்கு சால்வை அணிவித்து, பரிசுப் பொருட்களை வழங்கினார். விழாவையொட்டி நடந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஜவகர் சிறுவர் இல்ல மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
புதுச்சேரி சுதந்திரம் அடைந்தாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் யூனியன் பிரதேசமாக உள்ளது. இதனால் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பொதுமக்கள் விரும்புவது புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து முழு அதிகாரம் வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும் என்பதாகும். இதன் மூலம் புதுச்சேரிக்கு மேலும் வளர்ச்சியை கொண்டுவர முடியும்.
அதற்காக தான் மாநில அந்தஸ்து, முழு அதிகாரம் வேண்டும் என்று சட்டசபையில் ஆண்டு தோறும் தீர்மானம் கொண்டு வந்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கிறோம். பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை சந்தித்து வலியுறுத்தி வருகிறோம்.
இப்போது புதுச்சேரியில் முழு அதிகாரம் கவர்னருக்கு தான் உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழு அதிகாரம் தேவை. மாநில அந்தஸ்து பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் தற்போது புதுச்சேரிக்கு உள்ளது. மாநில அந்தஸ்து கிடைத்தால் புதுச்சேரிக்கு கூடுதல் வளர்ச்சியை கொண்டு வர முடியும்.
புதுச்சேரியில் தியாகிகளுக்கான பென்ஷன் தொகை ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். மேலும் தியாகிகளுக்கு மனை பட்டா வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- உடலை கைபற்றி பிரேதபரி சோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி வீராம்பட்டினத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருவிழா மிக சிறப்பாக நடைபெறும். 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை காண புதுச்சேரி பகுதிமட்டுமின்றி கடலூர்-விழுப்புரம் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் குடும்பத்துடன் வீராம்பட்டினத்தில் தங்கி விழாவை கண்டுகளிப்பது வழக்கம்.
அதுபோல் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புவனகிரியை அடுத்த கீரப்பாளையம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த வள்ளிமலை (வயது 60) என்பவர் வீராம்பட்டினம் திருவிழாவில் சாமி வேடம் அணிந்து பக்தர்களிடம் யாசகம் பெறுவார்.
அதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பே வள்ளி மலை வீராம்பட்டினத்திற்கு வந்திருந்தார். அவர் சாமி வேடம் அணிந்து விழாவை காணவரும் பக்தர்களிடம் யாசகம் பெற்று வந்தார். நேற்று இரவு கோவில் எதிரே ஆடல்பாடல் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த வேளையில் வீராம்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் ரோட்டில் வள்ளிமலை சாமியாடி பக்தர்களிடம் யாசகம் பெற்றுக்
கொண்டிருந்தார்.
அப்போது வள்ளிமலை திடீரென அவ்வழியே சென்ற ஒரு போதை வாலிபர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் விழா பந்தலில் கரும்பு ஜூஸ் வியாபாரத்திற்காக குவித்து வைத்திருந்த கரும்பை எடுத்து வள்ளி
மலையை தலை மற்றும் உடலில் பல இடங்களில் சரமாரியாக தாக்கினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் வள்ளிமலை கீழே சரிந்தார். இதனை பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து சென்று விட்டார்.
அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அருகில் விழாவுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டனர்.
இதையடுத்து உடலை கைபற்றி பிரேதபரி சோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முதியவர் வள்ளிமலையை அடித்து கொலை செய்தது வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த அஜித் குமார் என்ற வாலிபர் என்பது தெரிய வந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் விழாவில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியிலும் விழாவைகாண வந்த பக்தர்கள் மத்தியிலும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கவர்னர் தேநீர் விருந்தை தொடர்ந்து நாங்கள் புறக்கணிக்கவில்லை.
- என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை வைத்துக்கொண்டு அவரால் மாநில அந்தஸ்து கண்டிப்பாக பெற முடியாது.
புதுச்சேரி:
புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னர் தேநீர் விருந்தை தொடர்ந்து நாங்கள் புறக்கணிக்கவில்லை. முன்பு இருந்த கவர்னர்கள் கிரண்பேடி, தமிழிசை ஆகியோர் அரசியல் செய்தனர். அதற்குத்தான் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அதிகாரியாக இருந்த கைலாஷ்நாதன், பா.ஜனதா முதலமைச்சர்களிடம் வேலை செய்திருந்தாலும், தற்போது அவர் கவர்னர்.
அவர் நடுநிலையோடு செயல்படுவார் என நம்புகிறோம். அப்படி செயல்பட்டால் அவருடன் சேர்ந்து செயல்படுவோம். காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் அரசியல் செய்து அந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கின்றனர்.
புதுவை கவர்னர் அரசியல் செய்தால் அதையும் எதிர்ப்போம்.
புதுவைக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. மத்திய அரசிடம் வாங்குவது ரூ.2 ஆயிரத்து 300 கோடிதான். புதுவைக்கு ரூ.5 ஆயிரம் கோடி வரை கிடைக்க வேண்டும்.
எனவே மாநில அந்தஸ்து பெற வேண்டியது அவசியம். புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் டெல்லிக்கும் கொடுக்க வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவால் இதை கேட்பார் என்பதால் மத்திய அரசு புதுவையை புறக்கணித்து வருகிறது.
முதலமைச்சராக ரங்கசாமி இருக்கும் வரை அவரால் மாநில அந்தஸ்து வாங்க முடியாது. அவர் புதுவை எல்லையை தாண்டி டெல்லி செல்லாதவர். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதவர். முதலமைச்சர் மாநாட்டில் பங்கேற்காதவர். அவர் பா.ஜனதாவில் சேர்ந்தால் மட்டுமே புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை வைத்துக்கொண்டு அவரால் மாநில அந்தஸ்து கண்டிப்பாக பெற முடியாது. பா.ஜனதா தனியாக ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால் அப்போது வழங்குவார்கள். மத்திய மோடி அரசு புதுவையில் அரசியல் விளையாட்டு செய்கிறது. ரங்கசாமியை ஏமாற்றுகின்றனர். மாநில அந்தஸ்து பெற பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்த ரங்கசாமி, ஏன் எந்த கூட்டணியை விட்டு வெளியேறவில்லை?
அவருக்கு முதலமைச்சர் நாற்காலி வேண்டும். அதற்காக அவர் கட்சியை, எம்.எல்.ஏ.க்களை தியாகம் செய்வார். மாநில அந்தஸ்து பெற ராகுல்காந்தி, எதிர்கட்சி எம்.பிக்கள், பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் திறந்து எத்தனால் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
- கூட்டுறவு நூற்பாலையையும் தனியார் பங்களிப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசினர்.
அப்போது வளர்ச்சி திட்டங்களில் உள்ள குறைபாடுகள், தொகுதிக்கு தேவையான திட்டங்கள், அரசின் செயல்பாடுகள் ஆகியவற்றை சுட்டிகாட்டியும் கோரியும் பேசினர்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் பதில் அளித்து பேசினர்.
இதையடுத்து முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் தங்கள் துறைகளில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டனர். அதில் பிரதான அம்சங்கள் வருமாறு:-
குடிசை மாற்று வாரியத்தின் மூலம் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். பிரதமர் கல்வீடு கட்டும் திட்டத்திலும் மத்திய அரசு உயர்த்தி அளித்துள்ள, ரூ.2¼ லட்சத்துடன், சேர்த்து ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
சட்டமன்றத்திற்கான அடிக்கல் நாட்டி கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்படும். கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் திறந்து எத்தனால் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் கூட்டுறவு நூற்பாலையையும் தனியார் பங்களிப்புடன் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நெல்லுக்கான ஊக்கதொகை கிலோவுக்கு ரூ.2 அதிகரிக்கப்படும். கால்நடை விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் மாட்டு தீவனம் ஆண்டு முழுவதும் வழங்கப்படும்.
மாணவர்களின் ஊட்டச்சத்து அதிகரிக்க வாரம் 5 நாட்களும் சிறுதானிய பிஸ்கட், சிறுதானியம், வேர்க்கடலை, எள், பொட்டு கடலை மிட்டாய் ஆகியவை மாலை சிற்றுண்டியாக வழங்கப்படும்.
பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், கலை, அறிவியல், வேளாண், சட்டம் போன்ற பிற பிரிவுகளில் சென்டாக் மூலம் சேரும் மாணவர்களுக்கு காமராஜர் நிதியுதவி திட்டம் விரிவுபடுத்தப்படும்.
அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 10 சதவீத அரசு பள்ளி இடஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ். படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு அளிக்கப்படும்.
- ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்தில் டாக்டர்கள் பங்கேற்றனர்.
- வெளிப்புற நோயாளிகள் பிரிவும் தடையின்றி இயங்கியது.
புதுச்சேரி:
கொல்கத்தாவில் பெண் டாக்டர் பலாத்காரம் படுகொலை செய்யப்பட்டார்.
பெண் டாக்டர் படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 6 மணி முதல் 8 மணி வரை 2 மணி நேரம் பணியை புறக்கணித்து டாக்டர்கள் போராட்டம் நடைபெற்றது.
ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்தில் 100-க்கணக்கான டாக்டர்கள் பங்கேற்றனர். டாக்டர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும், பெண் படுகொலைக்கு வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும்,
தவறுக்கு பொறுப்பானவர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும், அனைத்து மருத்துவ அவசர சிகிச்சை பிரிவுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும், பணி செய்யும் இடத்தில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
2 மணி நேரம் நடந்த போராட்டத்தை தொடர்ந்து டாக்டர்கள் பணிக்கு திரும்பினர்.
போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடுகளை டாக்டர்கள் செய்திருந்தனர். வெளிப்புற நோயாளிகள் பிரிவும் தடையின்றி இயங்கியது. சீனியர் டாக்டர்கள்பணியில் இருந்தனர்.
தொடர்ந்து இன்று மாலை கடற்கரை சாலையில் புதுச்சேரியில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் டாக்டர்கள் பங்கேற்கும் அமைதிப் பேரணி காந்தி சிலை நோக்கி நடைபெற உள்ளது.






