கோவில் விழாவில் முதியவர் அடித்து கொலை

உடலை கைபற்றி பிரேதபரி சோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் விழாவில் முதியவர் அடித்து கொலை
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி வீராம்பட்டினத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருவிழா மிக சிறப்பாக நடைபெறும். 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை காண புதுச்சேரி பகுதிமட்டுமின்றி கடலூர்-விழுப்புரம் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் குடும்பத்துடன் வீராம்பட்டினத்தில் தங்கி விழாவை கண்டுகளிப்பது வழக்கம்.

அதுபோல் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே புவனகிரியை அடுத்த கீரப்பாளையம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த வள்ளிமலை (வயது 60) என்பவர் வீராம்பட்டினம் திருவிழாவில் சாமி வேடம் அணிந்து பக்தர்களிடம் யாசகம் பெறுவார்.

அதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பே வள்ளி மலை வீராம்பட்டினத்திற்கு வந்திருந்தார். அவர் சாமி வேடம் அணிந்து விழாவை காணவரும் பக்தர்களிடம் யாசகம் பெற்று வந்தார். நேற்று இரவு கோவில் எதிரே ஆடல்பாடல் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த வேளையில் வீராம்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் ரோட்டில் வள்ளிமலை சாமியாடி பக்தர்களிடம் யாசகம் பெற்றுக்

கொண்டிருந்தார்.

அப்போது வள்ளிமலை திடீரென அவ்வழியே சென்ற ஒரு போதை வாலிபர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் விழா பந்தலில் கரும்பு ஜூஸ் வியாபாரத்திற்காக குவித்து வைத்திருந்த கரும்பை எடுத்து வள்ளி

மலையை தலை மற்றும் உடலில் பல இடங்களில் சரமாரியாக தாக்கினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் வள்ளிமலை கீழே சரிந்தார். இதனை பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து சென்று விட்டார்.

அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அருகில் விழாவுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டனர்.

இதையடுத்து உடலை கைபற்றி பிரேதபரி சோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முதியவர் வள்ளிமலையை அடித்து கொலை செய்தது வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த அஜித் குமார் என்ற வாலிபர் என்பது தெரிய வந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் விழாவில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியிலும் விழாவைகாண வந்த பக்தர்கள் மத்தியிலும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com