என் மலர்
புதுச்சேரி
- அனைத்து துறைகளும் அவரவர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- அனைத்து அரசு பள்ளிகளும் நிவாரண மையங்களாக செயல்படும்.
புதுச்சேரி:
மோன்தா புயல் 28ந்தேதி இரவுக்குள் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை மாநில ஏனாம் பிராந்தியம் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே உள்ளது. இதனால் ஏனாமிலும் பலத்த காற்றுடன் கடும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் ஏனாமில் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மண்டல நிர்வாகி அங்கீத் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புயல் தாக்கம் காரணமாக ஏனாமில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 29-ந்தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து துறைகளும் அவரவர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. நிவாரண பணிகளை ஈடுபட 24 மணி நேரமும் ஊழியர்கள் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை குழு ஏனாம் பகுதிக்கு இன்று வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் நிவாரண மையங்கள் செயல்பட தயாராக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அரசு பள்ளிகளும் நிவாரண மையங்களாக செயல்படும். புயலை கருத்தில் கொண்டு ஏனாமில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 27-ந் தேதி முதல் 29-ந்தேதி வரை 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா படகு இல்லம் மூடப்பட்டுள்ளது. மின்வெட்டு ஏற்படும்போது ஜெனரேட்டரை செயல்பாட்டில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் ஆற்றில் இருந்து வெள்ள நீர் கரையோர பகுதிகளுக்கு புகுவதை தடுக்க மணல் மூட்டைகள் தயாராக வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மழை வெள்ள நீரை வெளியேற்ற பம்பு செட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஒரு வாரத்திற்கு தேவையான மருந்துகள் மற்றும் மளிகை பொருட்களை சேமித்து வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதியில் இருப்பவர் நிவாரண முகாமுக்கு வர தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- காரைக்கால் கிளை பல்கலைக்கழக பேராசிரியர் அந்தமானுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- காரைக்காலில் ஒரு பேராசிரியர் மீது சம்பந்தப்பட்ட மாணவியிடம் இருந்து புகார் வரவில்லை.
புதுச்சேரி:
காரைக்காலில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழக கிளையில் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
மேலும் புதுச்சேரி பல்கலைக்கழகத்திலும் மாணவிகளிடம் பேராசிரியர்கள் பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதில் தொடர்புடைய பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புதுச்சேரியில் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர்.
மேலும் மாணவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனை கண்டித்து புதுச்சேரி அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர்களுடன் அமைச்சர் நமச்சிவாயம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பல்கலைக்கழக உள் புகார் குழு விசாரித்து பேராசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் புதுச்சேரி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் புகாருக்கு உள்ளான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மாணவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெறவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 3 பேராசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் காரைக்கால் கிளை பல்கலைக்கழக பேராசிரியர் அந்தமானுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை புதுச்சேரி பல்கலைக்கழக துணை பதிவாளர் மகேஷ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த வாரம் 3 பேராசிரியர்கள் மீது வந்த புகாரை, பெண் பேராசிரியர் தலைமையிலான உள் புகார் குழு விசாரித்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் 3 பேராசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இந்த 3 புகார்கள்தான் எங்களுக்கு நேரடியாக வந்தது.
காரைக்காலில் ஒரு பேராசிரியர் மீது சம்பந்தப்பட்ட மாணவியிடம் இருந்து புகார் வரவில்லை. இருப்பினும் குற்றச்சாட்டின் பேரில், காரைக்காலில் உள்ள மாவட்ட அளவிலான புகார் குழு விசாரித்து வருகிறது. அந்த குழுவிற்கு எந்த இடையூறும் இல்லாமல் இருக்க சம்மந்தப்பட்ட பேராசிரியர் அந்தமான் நிக்கோபார் தீவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
குற்றம் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அவரை சஸ்பெண்டு செய்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் புகார் முறையாக வந்ததால், உள்புகார் குழுவால் விசாரித்து நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆனால் காரைக்காலில் அப்படி இல்லை. கலெக்டர் விசாரணையை தொடங்கி உள்ளார்.
அவரது விசாரணைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும். யாரையும் பாதுகாக்கவும் இல்லை. மறைக்கவும் இல்லை. புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம், பாலியல் சம்மந்தமான குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான நிலைபாட்டில் உள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அக்டோபர் 3-ந்தேதி அரசு விடுமுறையாக அறிவித்ததற்கு ஈடாக நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்குகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் சனிக்கிழமையான நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அரசு தெரிவித்துள்ளது.
ஆயுத பூஜைக்கு அடுத்த நாள் அதாவது அக்டோபர் 3-ந்தேதி அரசு விடுமுறையாக அறிவித்ததற்கு ஈடாக நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்குகிறது.
- புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த வாரம் பெருமளவில் குறைந்தது.
- பிரீமியம் மதுபானங்களின் விலை கடுமையாக உயர்ந்திருந்ததால் அதை வாங்க யாரும் முன் வரவில்லை.
புதுச்சேரி:
புதுவையில் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகைக்கு மது விற்பனை அதிகளவில் நடைபெறும்.
ஒவ்வொரு ஆண்டும் கடந்த ஆண்டைவிட தீபாவளி மது விற்பனை அதிகரித்து வந்துள்ளது. இந்த ஆண்டு வார விடுமுறையையொட்டி தீபாவளி பண்டிகை வந்தது. இதனால் மது விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடந்த ஆண்டைவிட மது விற்பனை 5 முதல் 10 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதற்கு கடந்த 3 மாதம் முன்பு அரசின் வருவாயை உயர்த்த மதுபானங்களின் வரியை உயர்த்தியதே காரணம் என தெரிய வந்துள்ளது.
அதோடு வழக்கமாக தீபாவளியை கொண்டாட புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த வாரம் பெருமளவில் குறைந்தது. இதற்கு கனமழை எச்சரிக்கையும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.
வழக்கமாக சுற்றுப்புறங்களான தமிழக மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் புதுவைக்கு வந்து மதுபானங்களை வாங்கி செல்வார்கள். ஆனால் பிரீமியம் மதுபானங்களின் விலை கடுமையாக உயர்ந்திருந்ததால் அதை வாங்க யாரும் முன் வரவில்லை. அதேநேரத்தில் குறைந்த விலையில் உள்ள உள்ளூர் மதுபானங்கள் அதிகளவில் விற்பனையாகி உள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் மட்டுமே மதுபான விற்பனை நடக்கிறது. இதனால் மாவட்ட வாரியாகவும், ஒட்டுமொத்தமாகவும் எத்தனை கோடிக்கு மதுபானம் விற்பனையானது என உடனடியாக தெரிந்து விடும். ஆனால் புதுவையில் தனியார் மொத்த மதுபான விற்பனை நிலையம், சில்லரை விற்பனை நிலையம், சுற்றுலா மதுபான விடுதிகள், ரெஸ்டோ பார்கள் என பல விதமாக விற்பனை நடப்பதால் ஒட்டுமொத்த விற்பனை தொகையை கண்டறிய முடியவில்லை.
இருப்பினும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மதுவிற்பனை வெகுவாக குறைந்துள்ளது என மதுபான விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- கனமழையால் கருவடிக்குப்பம் பிள்ளையார் கோவில் குளம் முழு கொள்ளளவில் ஏறத்தாழ 90 சதவீதம் நிரம்பியது.
- கணபதிசெட்டிகுளம் ராஜகோபால் நகர், ஜான்சி நகர் இணைப்பு ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.
புதுச்சேரி:
புதுவையில் நேற்று இரவு கனமழை பெய்தது. அதிகபட்சமாக புதுவை காலாபட்டில் சுமார் 25 செ.மீ. வரை மழை பதிவானது. இந்த பகுதியில் சின்ன காலாப்பட்டு மீனவ கிராமத்தில் மேட்டுப்பகுதியில் இருந்து மழை நீர் வெள்ளம் போல் கடல் நோக்கி வந்தது.
இதனால் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன. இதேபோல் மீன்பிடி வலைகளும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. நள்ளிரவு முதல் அதிகாலை வரை மீனவர்கள் போராடி படகுகளை மீட்டனர்.
இருப்பினும் 5-க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குள் சென்றன. 50-க்கும் மேற்பட்ட படகுகள் பழுதாகி உள்ளதாகவும், ரூ.1 கோடி மதிப்பிலான வலைகள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
கனமழையால் கருவடிக்குப்பம் பிள்ளையார் கோவில் குளம் முழு கொள்ளளவில் ஏறத்தாழ 90 சதவீதம் நிரம்பியது. இதனால் குளக்கரையின் ஒரு பகுதி சரிந்தது.
இதனை இன்று காலை காலாப்பட்டு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுப்பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு மேலும் மண் சரிவு ஏற்படாதவண்ணம் பணிகளை உடனடியாக தொடங்க உத்தரவிட்டார்.
கணபதிசெட்டிகுளம் ராஜகோபால் நகர், ஜான்சி நகர் இணைப்பு ஆகிய பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. மேலும் கணபதிசெட்டிக்குளம் பிள்ளையார் கோவில் குளம் முழுவதும் நிரம்பியுள்ள நிலையில் சாலையோரத்தில் மண் அரிப்பால் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
பாதிப்பு குறித்து அரசு கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும், இந்த பகுதியில் நிரந்தரமாக தூண்டில் முன் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஒட்டுமொத்தமாக 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 14.7 செ.மீ. மழை பதிவாகியது.
- பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. கிளைகள் முறிந்து விழுந்தன.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கடந்த 16-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது.
நேற்று முன்தினம் முதல் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்தது. பகல் பொழுதில் மட்டும் 2.86 செ.மீ. மழை பதிவாகியது. மதியத்துக்கு பின் மழை பெய்யவில்லை.
ஆனால் இரவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. 7 மணிக்கு மேல் சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரெங்கும் சாலைகளில் மழைநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கிய குளம் போல நின்றது.
கடலூர் சாலை நயினார் மண்டபம், சுதானா நகர், இந்திராகாந்தி சிலை சதுக்கம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் போல சாலைகள் காட்சியளித்தது. தாழ்வான பகுதிகளான ரெயின்போ நகர், வெங்கட்டாநகர், கிருஷ்ணாநகர், பூமியான் பேட், பாவாணர் நகர், முதலியார்பேட்டை புவன்கரே வீதி, முத்தியால் பேட்டை டி.வி. நகர், பெரியார் நகர், முத்தியால் பேட்டை பகுதிகளில் 100-க்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதனால் அந்த பகுதி மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். கிராமப்புறங்களிலும் சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை பொதுமக்கள் வாரி இறைத்து வெளியேற்றினர். தொடர்ந்து இரவு முழுவதும் அவ்வப்போது மழை கொட்டியது. இரவில் மட்டும் 11 செ.மீ. மழை பதிவானது.
ஒட்டுமொத்தமாக 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 14.7 செ.மீ. மழை பதிவாகியது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. கிளைகள் முறிந்து விழுந்தன. மழையினால் புதுச்சேரி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மழை பாதிப்புகளை அறிந்த முதல்-மந்திரி ரங்கசாமி, நகரின் பல்வேறு இடங்களுக்கு காரில் சென்று மழை பாதிப்புகளை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மழைநீரை வெளியேற்றவும், பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இன்று அதிகாலை முதல் மழை இல்லை. இதனால் பெரும்பாலான சாலைகள், தாழ்வான பகுதிகளில் இருந்து மழை நீர் வெளியேறியது.
வானம் வெறிச்சோடி காணப்பட்டு லேசான வெயில் அடிக்க தொடங்கியது. ஆனாலும் அவ்வப்போது மேகங்கள் திரண்டு, இருண்டு மீண்டும் மழை பெய்வதற்கான சூழலும் நிலவுகிறது.
இதனிடையே புதுச்சேரிக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் அறிவித்திருந்தது. இதனால் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.
கிராம பகுதிகளிலும் மழை கொட்டியது. பாகூர், திருக்கனூர், வில்லியனூர், செல்லிப்பட்டு, பத்துக்கண்ணு, அரியாங்குப்பம், தவளக்குப்பம், சேதராப்பட்டு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்தது. பாகூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் விளை நிலங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
- புதுச்சேரி, காரைக்காலில் அதி கனமழை பெய்யக்கூடும்.
- காரைக்காலில் நாளை கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வரும் 24-ந்தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி, காரைக்காலில் அதி கனமழை பெய்யக்கூடும்.
புதுச்சேரியில் நாளை அதிகனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட், காரைக்காலில் நாளை கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என புதுவை மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
- முதலமைச்சர் ரங்கசாமிக்கும், கவர்னர் கைலாஷ்நாதனுக்கும் இடையே உள்ள மோதல் போக்கு நீடித்து வருகிறது.
- முதலமைச்சர் டெல்லிக்கு சென்று முக்கிய தலைவர்களை சந்தித்தால் மட்டுமே புதுச்சேரிக்கு புதிய திட்டங்களை கொண்டு வந்து வாக்காளர்களை கவர முடியும்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு அரசு துறைகளில் நடவடிக்கை எடுக்க அதிகாரங்கள் இருந்தாலும், உச்சபட்ச அதிகாரம் கவர்னருக்கே உள்ளது.
அதனால்தான் புதுச்சேரியில் ஒவ்வொரு முறையும் ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர்கள் மாநில அந்தஸ்து வேண்டும் என கோரிக்கை விடுப்பதும் அதனை மத்தியில் உள்ள ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதும் தொடர்கதையாக உள்ளது.
தற்போது என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் ரங்கசாமிக்கும், கவர்னர் கைலாஷ்நாதனுக்கும் இடையே நிர்வாக ரீதியாக உரசல்கள் நீடித்து வருகிறது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு பட்டாசு மற்றும் இனிப்புகள் வழங்கும் கோப்புக்கு கவர்னர் அனுமதி அளிக்கவில்லை. அதேபோல் மத்திய அரசும் தீபாவளி இனிப்பு மற்றும் பட்டாசுகளை எம்.எல்.ஏ.க்கள் தங்களது சொந்த செலவிலேயே வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது.
இதற்கிடையே கட்டிட தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் கோப்புக்கும் கவர்னர் கைலாஷ்நாதன் இதுவரை அனுமதி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் முதலமைச்சர் ரங்கசாமிக்கும், கவர்னர் கைலாஷ்நாதனுக்கும் இடையே உள்ள மோதல் போக்கு நீடித்து வருகிறது.
என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணியின் தலைவராக உள்ள முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டம் உள்ளிட்ட எந்த கூட்டங்களிலும் பங்கேற்காததும், பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை சந்திக்காததே கவர்னரின் ஒத்துழையாமைக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
முதலமைச்சர் ரங்கசாமி அவ்வப்போது டெல்லி சென்று பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை சந்தித்தாலே கவர்னரின் நிலைப்பாடு தலைகீழாக மாறியிருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு கடும் சவாலை ஏற்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றால் முதலமைச்சர் டெல்லிக்கு சென்று முக்கிய தலைவர்களை சந்தித்தால் மட்டுமே புதுச்சேரிக்கு புதிய திட்டங்களை கொண்டு வந்து வாக்காளர்களை கவர முடியும் என பா.ஜ.க.வினர் கூறுகின்றனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி தீபாவளி பண்டிகையையொட்டி கவர்னர் கைலாஷ்நாதனை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். இது மரியாதை நிமித்தமானது என்றாலும் இருவருக்கும் உள்ள மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
- புதுச்சேரி நகர சேவைக்காக தனியார் பங்களிப்புடன் மொத்தம் 25 எலெக்ட்ரிக் பஸ்கள் வாங்கப்பட்டுள்ளது.
- புதிய பஸ்களை முதலீடு செய்து வாங்குதல், அதனை பராமரித்தல், இயக்குதல் அனைத்தும் தனியார் நிறுவனம் மேற்கொள்கிறது.
புதுச்சேரி:
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுச்சேரி நகர சேவைக்காக தனியார் பங்களிப்புடன் மொத்தம் 25 எலெக்ட்ரிக் பஸ்கள் வாங்கப்பட்டுள்ளது. இதில் 10 'ஏசி' பஸ்களும் அடங்கும்.
இந்த எலெக்ட்ரிக் பஸ்களுக்கு ரூ.4 கோடி மதிப்பில் சார்ஜிங் ஸ்டேஷன் புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில், தாவரவியல் பூங்கா எதிரில் உள்ள நகராட்சி இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பஸ்களை முதலீடு செய்து வாங்குதல், அதனை பராமரித்தல், இயக்குதல் அனைத்தும் தனியார் நிறுவனம் மேற்கொள்கிறது.
அரசு அதற்கான தொகையை தனியார் நிறுவனத்திற்கு வழங்குகிறது. டிக்கெட் வசூல் செய்யும் பணியை புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் செய்கின்றனர்.
இந்த 25 இ-பஸ்களின் சேவை வருகிற 24-ந் தேதி முதல் புதுச்சேரி நகர பகுதியில் இயக்கப்பட உள்ளது.
அன்றே நகராட்சி சார்பில் மகளிர் சுயஉதவி குழு பெண்களுக்கு 38 எலெக்ட்ரிக் ஆட்டோவும் வழங்கப்படவுள்ளது.
- போலி ஆவணங்களை தயார் செய்து மோசடியை அரங்கேற்றி வருவதாக கூறப்படுகிறது.
- சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியை மையமாக வைத்து பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களின் கிட்னிக்கு சில லட்சம் கொடுத்து விட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வாயிலாக பல கோடி ரூபாயை சுருட்டிய கும்பல் கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழகத்தில் சிக்கியது.
இச்சம்பவத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை அதிகாரிகள், ஊழியர்கள், ஏஜெண்டுகளுக்கு தொடர்பு உள்ளதாகவும், தனியார் மருத்துவமனைகளை நடத்தும் அரசியல்வாதிகளும், இதன் பின்புலத்தில் உள்ளதாகவும் புகார் எழுந்தது.
அதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களிடம் நடத்தப்பட்ட கிட்னி திருட்டு வெளிச்சத்திற்கு வந்ததால் திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் 2 தனியார் மருத்துவமனைகளுக்கு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரியில் புறநகர் பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சையில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வரும் 'பகீர்' தகவல் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கும்பல், தமிழகத்தை போல புதுச்சேரியிலும் கிட்னி தானம் கொடுப்பவர், பெறுபவரின் உறவினர் என போலி ஆவணங்களை தயார் செய்து மோசடியை அரங்கேற்றி வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தை சேர்ந்த மோசடி மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியை மையமாக வைத்து பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் கிட்னி மோசடி கும்பலும் இணைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
- தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட நினைக்கும் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
இதனிடையே, பண்டிகையை கொண்டாடிவிட்டு மீண்டும் வேலைக்கு திரும்புவோரின் நலனை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள்(21-ந்தேதி) ஒரு நாள் மட்டும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 25-ந்தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை நாளாக அறிவித்து புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் 21-ந்தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நோணாங்குப்பத்தின் ஆற்றின் இருகரையோரங்களில் இருப்பவர்களுக்கு புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- ஆற்றில் இறங்குவது மீன்பிடிப்பது, விளையாடுவது, நீந்துவது, செல்பி எடுப்பது போன்ற எந்தவிதமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் வீடூர் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி 28 அடியை எட்டியது. மேலும் தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையொட்டி சங்கராபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் புதுச்சேரியை சேர்ந்த மணலிப்பட்டு, கொடாத்தூர், செட்டிப் பட்டு, கூனிச்சம்பட்டு, சுத்துக்கேணி, கைக்கிலப்பட்டு, தேத்தாம்பாக்கம், குமாரப்பாளையம், வம்புப்பட்டு, செல்லிப்பட்டு, பிள்ளையார்குப்பம், கூடப்பாக்கம் (கோனேரிக்குப்பம்), வில்லியனூர் (ஆரியப்பாளையம், புதுநகர் பிளாட்-2) பொறையாத்தமன் நகர், கோட்டைமேடு, மங்கலம், உறுவையாறு, திருக்காஞ்சி, ஒதியம்பட்டு மற்றும் புதுச்சேரி தாலுகாவில் இருக்கும் என்.ஆர்.நகர், நோணாங்குப்பத்தின் ஆற்றின் இருகரையோரங்களில் இருப்பவர்களுக்கு புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வருவாய்த்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நேரத்தில் ஆற்றில் இறங்குவது மீன்பிடிப்பது, விளையாடுவது, நீந்துவது, செல்பி எடுப்பது போன்ற எந்தவிதமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.






