என் மலர்tooltip icon

    இந்தியா

    • மத்திய பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
    • வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 46 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பீகார் சட்டசபைக்கு கடந்த 6 மற்றும் 11-ந்தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் பீகாரில் அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும்.

    வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், 'விவிபாட்' எனப்படும் ஒப்புகை சீட்டு எந்திரங்களும் 'சீல்' வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நிறைந்த பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு அறைகளுக்கு இரட்டை பூட்டுப்போடப்பட்டது.

    இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியானது தொடங்கியது. மத்திய பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 46 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள் தேவை.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இதெல்லாம் நம்ப முடியாதது, மகா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று அக்கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

    எனவே, பீகாரில், தொடர்ந்து 5-வது தடவையாக நிதிஷ்குமார் ஆட்சியை பிடிப்பாரா? அல்லது எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்று இன்று தெரிந்துவிடும்.

    • பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
    • 243 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட பீகாரில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை.

    பாட்னா:

    பீகார் சட்டசபை தேர்தல் கடந்த 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெற்றது.

    மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளில் கடந்த 6-ம் தேதி முதல் கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. இதுவரை இல்லாத அளவாக 65.08 சதவீத வாக்குகள் பதிவாகின.

    மீதமுள்ள 122 சட்டசபை தொகுதிகளுக்கு 11-ம் தேதி 2-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது. மொத்தம் 69 சதவீத வாக்குகள் பதிவாகின. இது, முதல்கட்ட தேர்தலில் பதிவான வாக்கு சதவீதத்தை விட அதிகம் ஆகும்.

    அதிக அளவாக, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே மாவட்டமான கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் 76.23 சதவீத வாக்குப்பதிவு நடந்தது.

    தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என தெரிவித்தன.

    இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.

    காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகளும், அதனை தொடர்ந்து மின்னணு வாக்குகளும் எண்ணப்படுகின்றன. 243 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட பீகாரில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை.

    பீகாரில் புதிதாக ஆட்சி அமைப்பது யார் என்பது குறித்து இன்று பகல் 12 மணிக்குள் தெரிய வரும்.

    மாநிலம் முழுவதும் வாக்கு எண்ணிக்கைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் முடித்துள்ளது. கிட்டத்தட்ட 38 மாவட்டங்களில் 57 எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு மையத்திலும் சிசிடிவி கண்காணிப்பு மற்றும் மின்தளத்தில் (EVM) தரவு சரிபார்ப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    தேர்தல் முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் results.eci.gov.in என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் நேரடியாக வெளியிடப்படும். மாலைக்குள் இறுதி முடிவுகள் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • பீஜப்பூரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டை நடத்தினர்.
    • இந்த என்கவுன்டரில் நக்சல்கள் 6 பேர் கொல்லப்பட்டனர்.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்திராவதி தேசிய பூங்காவிற்குள் உள்ள காடுகளில் நக்சல்கள் பதுங்கி உள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, பீஜப்பூர் டிஆர்ஜி, தண்டேவாடா டிஆர்ஜி, எஸ்டிஎப் மற்றும் பிற பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    இந்த நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. இதில் நக்சல்கள் 6 பேர் கொல்லப்பட்டனர்.

    என்கவுன்டருக்குப் பிறகு 3 பெண்கள் உட்பட 6 மாவோயிஸ்டுகளின் இறந்த உடல்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன.

    இதுதொடர்பாக, பீஜப்பூர் போலீஸ் அதிகாரி ஜிதேந்திர யாதவ் கூறுகையில், சத்தீஸ்கர் என்கவுன்டரில் ரூ.27 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல்கள் 6 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே-47, எல்எம்ஜி, ஐஎன்எஸ்ஏஎஸ் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களும் மீட்கப்பட்டன. பீஜப்பூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 144 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டுள்ளனர், 499 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 560 பேர் சரணடைந்துள்ளனர்.மாவோயிஸ்ட் அமைப்பு முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    • 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • ஒரு கார் லாரிக்கும், முன்னால் சென்ற கண்டெய்னர் லாரிக்கும் இடையில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று மாலை நவாலே பாலத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

    பாலத்தில் 8 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து காவல்துறை கூறுகையில், சத்தாராவில் இருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று, பிரேக் செயலிழந்ததால் நவாலே பாலத்தின் சரிவில் மாலை 5.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்தது.

    அந்த லாரி வழியில் பல வாகனங்களை மோதியது. இதில் ஒரு கார் லாரிக்கும், முன்னால் சென்ற கண்டெய்னர் லாரிக்கும் இடையில் சிக்கி  தீப்பிடித்து எரிந்தது

    இதனையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை அணைத்து, சேதமடைந்த கார் மற்றும் கண்டெய்னரில் இருந்து சடலங்களை மீட்டனர்.

    உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்துள்ளது.

    கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இதே பகுதியில் பிரேக் பிடிக்காத லாரி ஒன்று 48 வாகனங்களை இடித்து விபத்தை ஏற்படுத்திய விபத்தில் 20 பேர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

    • குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர்.
    • எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.

    டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கடந்த திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர். இதில் காயமடைந்து, எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.

    சம்பவம் நடந்த அன்றைய இரவு டெல்லி முதல்வர் ரேகா குப்தா மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்தார்.

    இதற்கிடையே பூட்டானில் இருந்து திரும்பியவுடன் நேற்று எல்என்ஜேபி மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர் மோடி, காயமடைந்தவர்களை சந்தித்தார். இதன் புகைப்படங்கள் வெளியாகின.

    இந்நிலையில் ரேகா குப்தா சந்தித்தபோது காலில் கட்டு போடப்பட்டிருந்த நோயாளிக்கு நேற்று மோடி சந்திக்கும்போது கூடுதலாக கையில் கட்டுபோடப்பட்டிருந்தது.

    இந்த புகைப்படங்களை பகிர்ந்த ஆம் ஆத்மி மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ் இரு புகைப்படங்களிலும் உள்ள வேற்றுமையை குறிப்பிட்டு இது அவசர அவசரமாக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் தான் என்று விமர்சித்துள்ளார். 

    • இந்த விபத்தில் விமானத்தில் இருந்த மற்றும் வெளியே இருந்த 260 பேரும் உயிரிழந்தனர்.
    • சர்வதேச நிபுணர்களைக் கொண்ட தொழில்நுட்பக் குழுவை நியமிக்கக் கோரியிருந்தார்.

     ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணை யாரையும் பழிவாங்கும் முயற்சி அல்ல என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமான நிலையம் அருகே உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த மற்றும் வெளியே இருந்த 260 பேரும் உயிரிழந்தனர். ஒரு பயணி அதிசயமாக உயிர் தப்பினார்.

    இந்த விபத்துக்கு விமானி மீது குற்றம்சாட்டப்படுவதாக விமான விபத்தில் இறந்த கேப்டன் சுமித் சபர்வாலின் தந்தை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

    விசாரணையில் விமானிகள் மீது குற்றம் சாட்ட வாய்ப்புள்ளதாகக் குற்றம் சாட்டிய தந்தை, விசாரணை நடத்த சர்வதேச நிபுணர்களைக் கொண்ட தொழில்நுட்பக் குழுவை நியமிக்கக் கோரியிருந்தார்.

    இது தொடர்பாக மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்த நோட்டீஸுக்கு மத்திய அரசு தற்போது இவ்வாறு பதிலளித்துள்ளது.

    இந்நிலையில் நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜெயமல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுபோன்ற விசாரணையின் நோக்கம், துயரத்திற்கான காரணத்தைக் கண்டறிவதும், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் தடுப்பதும் ஆகும் என்றும், தனிநபர்கள் மீது பழி சுமத்துவதோ அல்லது யார் தவறு செய்தார்கள் என்று சொல்வதோ அல்ல என்றும் கூறியது.

    மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து தரத்தின்படி விசாரணை நடத்தப்படுவதாகவும், விசாரணை யாரையும் பழிவாங்க முற்சிக்கவில்லை என்றும் தெரிவித்தார். 

    • தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.
    • நாளை வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    பீகார் மாநிலத்தில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடந்தது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. தலா 101 தொகுதிகள், லோக் ஜனசக்தி - ராம் விலாஸ் - 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 6 தொகுதிகளில் போட்டியிட்டன.

    இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61, இந்திய கம்யூனிஸ்ட் - எம்எல் 20, விஐபி 15, இந்திய கம்யூனிஸ்ட் 9, மார்க்சிஸ்ட் 4 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின.

    தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.

    121 தொகுதிகளுக்கு நடந்த முதல் கட்ட தேர்தலில் 65 சதவீத வாக்குகளும், 122 தொகுதிகளுக்கு நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 68.8 சதவீத வாக்குகளும் பதிவாகி வரலாற்று சாதனை படைத்தது. இந்தத் தேர்தலில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என கூறப்படுகிறது. நாளை வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வென்றுவிட்டால் அரசியலை விட்டே விலகுவதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

    தனியார் ஊடகத்தின் நேர்காணலில் கருத்துக்கணிப்பு முடிவுகள் பற்றி பிரசாந்த் கிஷோரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பதிலளித்த அவர், `தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வென்றிருந்தால் என்னிடம் வந்து கூறுங்கள். நான் உறுதியாகச் சொல்கிறேன் 25 இடங்களுக்கு மேல் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெறாது.

    இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இதுவொரு சாவல், இந்தத் தேர்தலோடு ஐக்கிய ஜனதா தளம் முடிந்துவிட்டது என்றுதான் பார்க்கிறேன்" என்று தெரிவித்தார். 

    • அகமதாபாத் ஏர் விமான விபத்தில் மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
    • விமானத்தின் தலைமை விமானியாக இருந்த சுமித் சபர்வாலும் விபத்தில் இறந்தார்.

    கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து, மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.

    விமானத்தின் தலைமை விமானியாக இருந்த சுமித் சபர்வாலும் விபத்தில் இறந்தார். விமானி எரிபொருள் ஸ்விட்சை அணைத்ததே விபத்துக்கு காரணம் என அமெரிக்க ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கூறப்பட்டு வந்தது.

    மேலும் இந்த ஆண்டு ஜூலை மாதம் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (ஏஏஐபி) வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இரண்டு என்ஜின்களுக்கும் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

    இரண்டு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் விரைவாக "கட்ஆஃப்" நிலைக்குச் சென்றதாக அறிக்கை கூறியது. சுமார் 10 வினாடிகளுக்குப் பிறகு, சுவிட்சுகள் மீண்டும் இயக்கப்பட்டன, ஆனால் என்ஜின்கள் ஏற்கனவே அணைந்து விமானம் விபத்துக்குள்ளானது என்று அறிக்கை கூறியது.

    இந்த அறிக்கையை எதிர்த்து சுமித் சபர்வால் தந்தை புஷ்கராஜ் சபர்வால் மற்றும் இந்திய விமானிகள் கூட்டமைப்பு (எஃப்ஐபி) இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

    அவர்களின் மனுக்களை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இன்றைய விசாரணையில், ஏஏஐபி அறிக்கையுடன் உடன்படவில்லை என்றும் விமானியை குறை சொல்ல முடியாது என்றும் தெரிவித்தது.

    மேலும் இதுகுறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (டிஜிசிஏ) உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

    இந்நிலையில், அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானி காரணம் அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    முதற்கட்ட விசாரணையில் இத்தகவல் தெரியவந்துள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. 

    • கார் குண்டுவெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது.

    டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந் தேதி கார் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது.

    'டெல்லியில் நடந்தது பயங்கரவாத தாக்குதல்' என்றும் அதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து பேசிய ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, "அனைத்து ஜம்மு காஷ்மீர் மக்களும் பயங்கரவாதிகள் கிடையாது. சிலர் மட்டும் தான் இங்கு எப்போதும் அமைதியையும் சகோதரத்துவத்தையும் கெடுத்து வருகிறார்கள். ஜம்மு-காஷ்மீரின் ஒவ்வொரு மக்களையும், ஒவ்வொரு காஷ்மீர் முஸ்லிமையும் ஒரே சித்தாந்தத்துடன் பார்த்து, அவர்கள் ஒவ்வொருவரையும் பயங்கரவாதிகள் என்று நினைக்கும் போது, மக்களை சரியான பாதையில் கொண்டு செல்வது கடினம். மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு தான் இந்த குண்டுவெடிப்புக்கு காரணம்" என்று தெரிவித்தார். 

    • ஒரு நாள் வீதம் ஆண்டுக்கு 12 நாட்கள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை.
    • மாதவிடாய் விடுமுறைக்கு மருத்துவ சான்றிதழ் எதுவும் தாக்கல் செய்ய தேவை இல்லை.

    கர்நாடக அரசு மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்க அமைச்சரவையில் முடிவு செய்தது.

    அமைச்சரவை கூட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, மாதவிடாய் விடுமுறை கொள்கை 2025-ம் ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதில், பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒரு நாள் வீதம் ஆண்டுக்கு 12 நாட்கள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை அரசு, தனியார் நிறுவனங்கள் கட்டாயம் வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

    அதன்படி கர்நாடக அரசு, அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுமுறை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    இந்த உத்தரவு அரசு, தனியார் நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்களில் நிரந்தர, ஒப்பந்த, வெளிகுத்தகை உள்பட எந்த ரீதியில் பணியாற்றினாலும் அந்த பெண் ஊழியர்களுக்கு பொருந்தும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவு நடைமுறைக்கு முன்னதாக மாதவிடாய் விடுமுறை வழங்குவது குறித்து பேராசிரியை சப்னா கிறிஸ்ட் தலைமையில் 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழு மாதவிடாய் விடுமுறை ஆண்டுக்கு 6 நாட்கள் வழங்கலாம் என்று அரசுக்கு பரிந்துரை செய்தது.

    பின்னர், அந்த குழு அதை 12 நாட்களாக அதிகரித்து பரிந்துரைத்தது. ஒருவேளை குறிப்பிட்ட மாதத்தில் அந்த விடுமுறையை எடுக்காவிட்டால், அதை சேர்த்து வைத்து அடுத்த மாதம் அந்த விடுமுறையை எடுக்க முடியாது.

    மாதவிடாய் விடுமுறைக்கு மருத்துவ சான்றிதழ் எதுவும் தாக்கல் செய்ய தேவை இல்லை. இந்த மாதவிடாய் விடுமுறை 18 வயது முதல் 52 வயது வரையுள்ள பெண் ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    • தெருநாய்களுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்டார்.
    • மனைவியால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த அவர் கடந்த 2007-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தப்பி ஓடினார்.

    தெருநாய்கள் பிரச்சனையால் குஜராத்தை சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் மனைவியிடம் இருந்து எனக்கு விவாகரத்து வாங்கி தாருங்கள் என புலம்பி வருகிறார். கடந்த 2006 -ம் ஆண்டு திருமணமானதில் இருந்து அவர் மனைவியின் செல்லப்பிராணி பாசத்தால் பல கொடுமைகளை அனுபவித்து வருவதாக கூறி வருகிறார்.

    திருமணம் முடிந்த கொஞ்சநாளில் அவரது மனைவி ஒரு தெரு நாயை தனது வீட்டுக்கு கொண்டு வந்தார். அவர் வசித்து வந்த அடுக்கு மாடிக்குடியிருப்பில் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய போதும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் தெருவில் சுற்றி திரியும் நாய்களை வீட்டுக்கு எடுத்து வந்தார்.

    தன் கணவருக்கு சமைக்கிறாரோ இல்லையோ. அந்த தெருநாய்களுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்டார். அதோடு அந்த நாய்களை கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தார். இரவு நேரம் அந்த நாய்களுடன் தூங்கினார். மனைவியின் இந்த செயல் கணவரை எரிச்சல் படுத்தியது. பக்கத்தில் வசித்து வந்த பொதுமக்களும் அப்பெண் மீது போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் விலங்குகள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்த அவர் பொதுமக்கள் மீது குற்றம் சாட்டினார். இதனால் அந்த பெண்ணின் கணவரும் போலீஸ் நிலையத்துக்கு அலைந்தார். மனைவியால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த அவர் கடந்த 2007-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தப்பி ஓடினார். இருந்த போதிலும் கணவரை அவர் தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். மேலும் தெருநாய்களை திருமணம் செய்து கொண்டது போல புகைப்படத்தை காட்டி தன்னை வெறுப்பேற்றுவதாகவும், இதன் காரணமாக மன அழுத்தத்தால் தனது ஆண்மை இழந்து விட்டதாகவும் அவர் புலம்ப ஆரம்பித்தார்.

    இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற அவர் தெரு நாய்களுடன் வாழ்க்கை நடத்திய மனைவியுடன் இனியும் குடும்பம் நடத்த முடியாது என கருதி தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனக்கோரி அகமதாபாத் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    மனைவிக்கு ரூ. 15 லட்சம் ஜீவனாம்சம் கொடுப்பதாக தெரிவித்தார். ஆனால் அவரது மனைவியோ கணவரின் குடும்பத்தினர் வெளிநாட்டில் ரிசார்ட் நடத்தி வருவதால் தனக்கு ரூ. 2 கோடி வேண்டும் என கேட்டுள்ளார்.

    இது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 1-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

    • தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.
    • போலீசாரும் தீயணைப்பு படையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்ததனர்.

    டெல்லியில் கடந்த திங்கள்கிழமை மாலை செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே ஏற்பட்ட கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை போலீஸ் அவசர எண்ணுக்கு ஒரு பெண் அழைத்தார்.

    குருகிராம் சென்று கொண்டிருந்தபோது மஹிபால்பூர் பகுதியில் உள்ள ராடிசன் ஹோட்டலுக்கு அருகில் வெடிப்பு சத்தம் கேட்டதாக அவர் கூறினார்.

    போலீசாரும் தீயணைப்பு படையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்ததனர்.

    இருப்பினும், அங்கு எந்த சந்தேகத்திற்கிடமான சம்பவமும் நடக்கவில்லை என்று தெரியவந்தது.

    உள்ளூர்வாசிகள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் விசாரித்தபோது டெல்லி போக்குவரத்துக் கழக பேருந்து அந்த வழியாகச் சென்றபோது பின்புற டயர் வெடித்து பலத்த சத்தம் ஏற்பட்டது என்று தெரியவந்தது.

    பின்னர் சுற்றியுள்ள பகுதிகளை ஆய்வு செய்து வெடிப்பு எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர். 

    ×