என் மலர்
இந்தியா
- பா.ஜ.க. சார்பில் சர்பானந்த சோனோவால் விவாதத்தை தொடங்கி பேசவுள்ளார்.
- இந்த விவாதத்திற்காக மொத்தமாக 18 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் (ஜன. 28) குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரு அவைகளிலும் உரையாற்றினார்.
2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று (பிப். 1) தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்த விவாதம் இன்று (பிப். 2) மக்களவையில் தொடங்குகிறது. இந்த விவாதம் பாராளுமன்றத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

பா.ஜ.க. சார்பில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால், இந்த விவாதத்தை தொடங்கி பேசவுள்ளார். அவரை தொடர்ந்து, தேஜஸ்வி சூர்யா இந்த நன்றி தீர்மானத்தை ஆதரித்து உரையாற்ற உள்ளார்.
இந்த விவாதத்திற்காக மொத்தமாக 18 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்களவைச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை முன்வைக்கவுள்ளனர்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகிற பிப்ரவரி 4ஆம் தேதி பதிலளிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஜனாதிபதி மாளிகையைச் சுற்றிலும் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
- முன்பதிவு அடிப்படையில் பொதுமக்கள் மாளிகையைச் சுற்றிப் பார்க்கலாம்.
புதுடெல்லி:
ஜனாதிபதி மாளிகையை சுற்றிலும் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தில் பல்வேறு வகையிலான மரங்கள், பூச்செடிகள், அழகு தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.
ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே உள்ள இந்த தோட்டத்தில் வளர்க்கப்படும் செடிகளில் பூக்கள் பூத்துக்குலுங்கும் மிகவும் ரம்மியமான காட்சியை அளிக்கும். இது அமிர்த தோட்டம் என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை நாளை (பிப்ரவரி 3) முதல் மார்ச் 31-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு அடிப்படையில் பொதுமக்கள் மாளிகையைச் சுற்றிப் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஜனாதிபதி மாளிகையின் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜனாதிபதி மாளிகையில் உள்ள அமிர்த தோட்டம் பிப்ரவரி 3 முதல் மார்ச் 31 வரை பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படுகிறது. வாரத்தில் 6 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்தத் தோட்டத்தைப் பார்வையிடலாம்.
பராமரிப்புப் பணிகளுக்காக ஒவ்வொரு திங்கட்கிழமையும், ஹோலி பண்டிகையை முன்னிட்டு மார்ச் 4-ம் தேதியும் தோட்டம் மூடப்படும்.
தோட்டத்துக்கு அனுமதி இலவசம். https://visit.rashtrapatibhavan.gov.in/ என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம். நேரடியாக வருபவர்களுக்காக நுழைவாயிலுக்கு அருகில் பதிவு மையங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சம்பல்பூர் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட தயாராக இருந்தது.
- முன்பதிவு செய்த ஏசி கோச் இல்லாததைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மகாராஷ்டிராவின் நான்டேட் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று புறப்பட தயாராக பிளாட்பார்ம் வந்தடைந்தது.
அப்போது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏசி கோச் ஒன்று இல்லாததைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு சிறிது குழப்பம் நிலவியது.
இதுகுறித்து கிழக்கு கடற்கரை ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், எக்ஸ்பிரஸ் ரெயில் நடைமேடையை அடைந்தபோது முன்பதிவு செய்யப்பட்ட 3 அடுக்கு ஏசி பெட்டியில் முன்பதிவு செய்த 57 பயணிகளுக்கு அவர்களின் பெட்டியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் குழப்பம் ஏற்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முன்பதிவு செய்யப்பட்ட BE2 ஏசி கோச்சை ரெயிலில் இணைக்க முடியவில்லை. இதனால் முன்பதிவு செய்த பயணிகளை ரெயிலில் காலியாக உள்ள மற்ற பெர்த்களில் டிக்கெட் பரிசோதகர்கள் தங்க வைத்தனர் என தெரிவித்தனர்.
- மக்கள் நலனுக்கான நிதி ஒதுக்கீடு என்று வரும்போது ஒடிசா முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது
- பௌத்தச் சுற்றுலா வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தில் ஒடிசா முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகவும் குழப்பமளிக்கிறது.
ஒடிசாவின் இயற்கை வளங்களை வெளியே கொண்டு செல்வதற்கான பணிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
"ஒன்றிய அரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட் மீதான எனது ஏமாற்றத்தை இங்கு வெளிப்படுத்துகிறேன். இந்த பட்ஜெட் ஒடிசா மாநிலத்திற்கும், அதன் மக்களுக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகள் எதையும் வழங்கவில்லை.
இரட்டை என்ஜின் அரசு, உள்கட்டமைப்பு வசதிகள், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றில் கவனம் செலுத்தி வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் என்று ஒடிசா மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மாநிலத்திற்கு மிகக் குறைந்த அளவே கிடைத்துள்ளது.
ஒடிசாவில் அரிய மண் தாது வழித்தடத்தை அமைப்பதற்கான முன்மொழிவை நான் வரவேற்கிறேன். ஒடிசா பல முக்கிய கனிமங்களை உற்பத்தி செய்வதில் முன்னணி மாநிலமாக உள்ளது. மேலும் தனது வளமான இயற்கை வளங்கள் மூலம் தேசத்தை கட்டியெழுப்பும் பணிகளில் எப்போதும் தனது பங்களிப்பை வழங்கும்.
கனிம வளம் நிறைந்த பகுதிகள் மற்றும் தொழில் மையங்களைத் துறைமுகங்களுடன் இணைக்க தேசிய நீர்வழிகளை அமைப்பதாக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பே இது அறிவிக்கப்பட்டதுதான். தற்போது வரை காகித அளவில் மட்டும்தான் இருக்கிறது. களத்தில் எந்த பணியும் நடக்கவில்லை.
ஏழு அதிவேக ரயில் வழித்தடங்களை உருவாக்கும் அறிவிப்பில் ஒடிசா இடம்பெறாதது ஒடிசா மக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. ஒடிசா பாஜக ஏற்கனவே புவனேஸ்வர் மெட்ரோ திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டது; மக்களின் தேவைகளைப் புறக்கணிப்பது வழக்கம் போல இப்போதும் தொடர்கிறது.
எங்களது டைமண்ட் ட்ரையாங்கிள் உள்ளிட்ட மிக முக்கியமான பல பௌத்தத் தலங்கள் இருந்தபோதிலும், பௌத்தச் சுற்றுலா வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தில் ஒடிசா முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகவும் குழப்பமளிக்கிறது.
மத்திய பட்ஜெட்டை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஒடிசாவின் இயற்கை வளங்களை வெளியே கொண்டு செல்வதற்கான பணிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; ஆனால், மக்கள் நலனுக்கான நிதி ஒதுக்கீடு என்று வரும்போது ஒடிசா முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.
மாநில பாஜக அரசு ஒடிசா மக்களுக்கான பொறுப்பை ஏற்க வேண்டிய நேரமிது; மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். ஒன்றிய பட்ஜெட்டில் ஒடிசாவும் அதன் மக்களும் இன்னும் சிறப்பான திட்டங்களை பெற தகுதியுடையவர்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- மத்திய அரசின் தொடர்ச்சியான பாகுபாடு மற்றும் கேரள மீதான புறக்கணிப்பை அம்பலப்படுத்துகிறது
- கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இந்தப் புறக்கணிப்பு குறித்துப் பதிலளிக்க வேண்டும்
2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, மத்திய அரசின் தொடர்ச்சியான பாகுபாடு மற்றும் கேரள மீதான புறக்கணிப்பை அம்பலப்படுத்துகிறது என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவும் இந்தியாவின் வரைபடத்தில் இருப்பதை நிர்மலா சீதாராமன் மறந்துவிட்டதாகவும், வேண்டுமென்றே புறக்கணித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் "கேரளாவின் நீண்ட கால கோரிக்கைகளான எய்ம்ஸ் மருத்துவமனை, 7 அதிவேக ரயில் வழித்தடங்கள் மற்றும் விழிஞ்சம் துறைமுகத்திற்கான சிறப்புத் தொகுப்புத் திட்டம் ஆகியவை முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன" என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு 41 சதவீதத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது கூட்டாட்சித் தத்துவத்தைச் சீர்குலைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவும், சாதாரண மக்களை வறுமையில் தள்ளும் வகையிலும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இந்தப் புறக்கணிப்பு குறித்துப் பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- அரசும், நிதி அமைச்சரும் 2025-26-க்கான பொருளாதார ஆய்வறிக்கையை படித்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை.
- அமெரிக்கா விதித்துள்ள வரிகள் உற்பத்தியாளர்களுக்கு, குறிப்பாக ஏற்றுமதியாளர்களுக்கு அழுத்தத்தை உருவாக்கியுள்ளன.
மத்திய அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
"அரசும், நிதி அமைச்சரும் 2025-26-க்கான பொருளாதார ஆய்வறிக்கையை படித்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் அதைப் படித்திருந்தால், அதை முழுமையாகத் நிராகரித்துவிட்டு, வழக்கமாக மக்களுக்கு புரியாத வார்த்தைகளை, குறிப்பாக சுருக்கப்பெயர்களை வீசியெறியும் தங்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கிற்குத் திரும்பியதாக தெரிகிறது.
பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் பல அறிவுசார் வல்லுநர்களால் அடையாளம் காணப்பட்ட குறைந்தது 10 சவால்களை என்னால் எண்ணிச் சொல்ல முடியும். அமெரிக்கா விதித்துள்ள வரிகள் உற்பத்தியாளர்களுக்கு, குறிப்பாக ஏற்றுமதியாளர்களுக்கு அழுத்தத்தை உருவாக்கியுள்ளன. வளர்ந்து வரும் வர்த்தகப் பற்றாக்குறை, குறிப்பாக சீனாவுடனான வர்த்தகம், இந்தியாவிற்குள் வரும் அந்நிய நேரடி முதலீட்டின் நிச்சயமற்ற போக்கு மற்றும் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து வெளியேறி வரும் அந்நிய நிறுவன முதலீடு இவை எதையுமே நிதி அமைச்சரின் உரை கையாளவில்லை.
எனவே, கைதட்டல்கள் கடமைக்காக இருந்ததிலும், பெரும்பாலான பார்வையாளர்கள் விரைவிலேயே அதிலிருந்து கவனத்தைத் திருப்பியதிலும் ஆச்சரியமில்லை. சன்சத் டிவி ஒளிபரப்பு கூட சில முறை துண்டிக்கப்பட்டது. ஒரு கணக்காளரின் தரப்பிலிருந்து பார்த்தால் கூட, 2025-26 நிதி நிர்வாகத்தைப் பற்றிய மிக மோசமான அறிக்கையாகவே இது இருந்தது..." என தெரிவித்துள்ளார்.
- ஜவுளி மேம்பாடு திட்டம் திருப்பூர், கரூர் போன்ற பகுதிகளுக்கு பயனளிக்கும்.
- சிறு, குறு தொழில் அதிக அளவில் உள்ள தமிழ்நாடு பட்ஜெட்டில் பயன்பெறும்.
மத்திய அரசின் 2026-2027-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மத்திய பட்ஜெட் குறித்து பாஜகவினர் வரவேற்பு அளித்துவரும் நிலையில், எதிர்க்கட்சியினர் வெற்று பட்ஜெட் என விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், தே.ஜ.கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக கட்சியின் பொதுச்செயலாளருமான இபிஎஸ் மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில்,
"இந்திய நாட்டின் 2025-2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அறிக்கை கடந்த 29.1.2026 அன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், 2026-2027-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் இன்று (1.2.2026 - ஞாயிற்றுக் கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 2025-2026-ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கை, உலக அளவில் போர் போன்ற பதற்றத்தால் உள்ள உறுதியற்ற சூழ்நிலையிலும், இந்திய பொருளாதார வளர்ச்சி 2025-2026-க்கு 6.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயரும் என்றும், 2026-2027-ல் 6.8 முதல் 7.2 சதவீதமாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பொருளாதார நிலையில் இந்தியா வலுவான நிலையில் உள்ளதைக் காட்டுகிறது.
இந்த சூழ்நிலையில் 2026-2027-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை, நிதிநிலை மேலாண்மையை வலுப்படுத்தும் வகையில் நிதிப் பற்றாக்குறையையும், பொருளாதார உற்பத்தி மதிப்பில் கடன் அளவைக் குறைக்க எடுத்துள்ள முயற்சிகள் வரவேற்கத்தக்கது. இது வருங்கால பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும்.
இறக்குமதியை குறைக்க, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, ஆராய்ச்சி, உற்பத்தி, உயர் தொழில்நுட்பம் சார்ந்த கட்டமைப்புகள் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு, மின்னணுசார் உற்பத்தி, மருந்துகள், ஜவுளி, கண்டெய்னர் உற்பத்தி போன்ற துறைகளில் உற்பத்தியை ஊக்குவிக்க பூங்காக்கள், உயிரி மருத்துவ பூங்கா, உற்பத்தி மண்டலங்கள் போன்ற பல முயற்சிகளை இந்த நிதிநிலை அறிக்கையில் முன்மொழிந்துள்ளதை பாராட்டுகிறேன். இதற்கான நிதி ஆதாரங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜவுளி மேம்பாடு திட்டம் திருப்பூர், கரூர் போன்ற பகுதிகளுக்கு பயனளிக்கும்.
சரக்கு வேக வழித்தடப் பாதைகள், வேக ரயில் பாதைகள், நீர் வழிப் பாதைகள் மேம்பாடு போன்றவை, போக்குவரத்துத் துறையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆயுர்வேதம், கால்நடை துறை முதலியவற்றுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளதைப் பாராட்டுகிறேன்.
சிறு, குறு தொழில் மேம்பாட்டுக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக. நிதி ஆதாரம் பெறுவதை உறுதி செய்ய ரூபாய் 2000 கோடி, மற்றும் சிறு, குறு தொழில் வளர்ச்சி நிதியாக ரூபாய் 10,000 கோடி ஒதுக்கீடு போன்றவை மிக உதவியாக இருக்கும். சிறு, குறு தொழில் அதிக அளவில் உள்ள தமிழ்நாடு இதனால் பயன்பெறும்.
இந்த நிதிநிலை அறிக்கை இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி வகுப்பதோடு, உலக அளவில் இந்தியா பொருளாதார நிலையில் வலுவான நாடாக உயர்வதற்கு வழிவகுக்கும் என்பதால், பிரதமர் மோடிக்கும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- 17 முக்கிய புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- பங்குகளை வாங்குதல் மற்றும் விற்றலுக்கான செலவு இனி அதிகரிக்கும்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2026-27 மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதில் சுங்க வரி மற்றும் பிற வரிகளில் செய்துள்ள மாற்றங்களால் சில பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
விலை குறையும் பொருட்கள்:
செல்போன்கள் மற்றும் அவற்றின் உதிரிபாகங்கள் இறக்குமதி மீதான வரி குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை குறையும்.
தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் உள்ளிட்ட அரிய உலோகங்களின் மீதான இறக்குமதி வரி கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
17 முக்கிய புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிர்காக்கும் 7 மருந்துகளுக்கு வரிவிதிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தோல் பொருட்கள் மற்றும் காலணிகள் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.
தனிநபர் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுங்க வரி 20%-லிருந்து 10%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு உபகரணங்கள் இறக்குமதி வரி குறைப்பால் விளையாட்டுப் பொருட்களின் விலை குறையும்.
சோலார் பேனல்கள், லித்தியம் பேட்டரி பாகங்கள், சிவிலியன் பயிற்சி விமான பாகங்கள், நீரிழிவு தொடர்பான மருந்துகள் ஆகியவற்றின் வரி குறைகிறது.
சர்வதேச கடற்பரப்பில் இந்திய மீனவர்களால் பிடிக்கப்படும் மீன்கள், அணு மின் திட்டங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், மைக்ரோவேவ் அடுப்புகள் ஆகியவற்றுக்கு அடிப்படை சுங்க வரி (BCD) விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிற்குப் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு நிம்மதி தரும் விதமாக, கல்விக்கான பணம் அனுப்புதல் மற்றும் சுற்றுலா தொடர்பான TCS வரி விகிதம் 20%-லிருந்து 2% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது வெளிநாட்டுப் படிப்புச் செலவைக் கணிசமாகக் குறைக்கும்.
விலை உயரும் பொருட்கள்:
சிகரெட் மற்றும் பீடி, பான் மசாலா, குட்கா உள்ளிட்ட இதர புகையிலை பொருட்கள் மீதான NCCD வரி உயர்த்தப்பட்டுள்ளதால் அவற்றின் விலை உயரும். இரும்பு, நிலக்கரி, உப்பு போன்ற கனிமங்கள் ஆகியவை விலையும் உயருகின்றன.
இறக்குமதி செய்யப்படும் சில வகை மதுபானங்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் சில குறிப்பிட்ட ஆடம்பர இறக்குமதி பொருட்களின் விலை உயரக்கூடும்.
பங்குச் சந்தை வர்த்தகத்தில் பத்திர பரிவர்த்தனை வரி (STT) அதிகரிக்கப்பட்டுள்ளதால், பங்குகளை வாங்குதல் மற்றும் விற்றலுக்கான செலவு இனி அதிகரிக்கும்.
- எதிர்கால ஒப்பந்தங்கள் மீதான வரி 0.02%-லிருந்து 0.05%-ஆகவும், ஆப்ஷன்ஸ் மீதான வரி 0.15%-ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.
- பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறையாகும்.
இந்தியாவில் கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பின் ஞாயிற்றுக்கிழமையான இன்று மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். இந்நிலையில் இன்று இந்தியப் பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துள்ளது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச்சந்தைகளுக்கு விடுமுறையாகும். ஆனால் பட்ஜெட்டை ஒட்டி இன்று பங்குச்சந்தைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் பிற்பகலுக்கு பின் நடைபெற்ற வர்த்தகத்தின் போது, மும்பை பங்குச்சந்தையின் 30 முக்கிய பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 1,600 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் முன்னணி 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 500 புள்ளிகளுக்கு மேல் சரிவைக் கண்டது.
பட்ஜெட் உரை முடிந்தவுடன் தற்போது சென்செக்ஸ் 1546 புள்ளிகள் சரிவுடனும், நிஃப்டி 495 புள்ளிகள் சரிவுடனும் வர்த்தகம் முடிந்தது. இந்த சரிவிற்கு காரணம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பங்குச்சந்தை பரிவர்த்தனை வரி. பங்குகள் பரிவர்த்தனை வரியை உயர்த்தி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டநிலையில் இந்த சரிவு நிகழ்ந்துள்ளது. இதன்படி, எதிர்கால ஒப்பந்தங்கள் மீதான வரி 0.02%-லிருந்து 0.05%-ஆகவும், ஆப்ஷன்ஸ் மீதான வரி 0.15%-ஆகவும் உயர்த்தப்பட உள்ளது.
- வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
- தைப்பூசத் திருநாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
தமிழ் நாடு முழுக்க இன்று தைப்பூச திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. காலை முதலே மாநிலும் முழுவதிலும் உள்ள முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தைப்பூச திருநாளை ஒட்டி அரசியல் தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், பிரதமர் நரேந்திர மோடி தைப்பூச திருநாளுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! புனிதமான தைப்பூசத் திருநாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்குக் கிடைக்கட்டும். நல்ல ஆரோக்கியம், வெற்றி மற்றும் வளத்துடன் அனைவரும் ஆசீர்வதிக்கப்படட்டும்," என தெரிவித்துள்ளார்.
- சிறுபான்மை சமூகங்களுக்கு எந்த ஆதரவையும் வழங்கவில்லை.
- திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் விளைவு என்ன?
மத்திய பட்ஜெட் 2026 பல்வேறு பிரச்சனைகளுக்கு எந்த தீர்வையும் வழங்கவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள X தள பதிவில்,
"மோடி அரசாங்கத்திடம் யோசனைகள் தீர்ந்துவிட்டன. பட்ஜெட் 2026 இந்தியாவின் பல பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சவால்களுக்கு ஒரு தீர்வையும் வழங்கவில்லை.
"திட்டச் செயல்பாடு முறை" இப்போது "சவாலான பாதை" ஆகிவிட்டது.
"சீர்திருத்த விரைவு ரயில்" எந்த "சீர்திருத்த" சந்திப்பிலும் அரிதாகவே நிற்கிறது.
இறுதி விளைவு: கொள்கை தொலைநோக்கு பார்வை இல்லை, அரசியல் உறுதிப்பாடு இல்லை.
நமது அன்னமிடும் விவசாயிகள் இன்னும் அர்த்தமுள்ள நலத்திட்ட ஆதரவு அல்லது வருமான பாதுகாப்பு திட்டத்திற்காக காத்திருக்கிறார்கள்.
சமத்துவமின்மை பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் காணப்பட்ட நிலைகளை தாண்டிவிட்டது, ஆனால் பட்ஜெட் அதை பற்றி குறிப்பிடக்கூட இல்லை. பட்டியல் சாதி, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு எந்த ஆதரவையும் வழங்கவில்லை.
நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை மேலும் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள மாநில அரசுகளுக்கு அவை எந்த நிவாரணத்தையும் வழங்குவதாக தெரியவில்லை. கூட்டாட்சித் தத்துவம் பலியாகிவிட்டது," என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய பட்ஜெட்டில் என்னென்ன இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் பட்டியலிட்டு விளக்கியுள்ளார்.
அதில், "- உற்பத்தித் துறை: புத்துயிர் பெறுவதற்கான உத்தி இல்லை; 13% என்ற நிலையிலேயே தேங்கி நிற்கிறது. "மேக் இன் இந்தியா" எங்கே?
- வேலைவாய்ப்புகள்: நமது இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனுக்காகவோ அல்லது பணியிடங்களில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்காகவோ எந்த ஒரு தீவிர திட்டமும் இல்லை. முந்தைய பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் விளைவு என்ன?
- ஏற்றுமதி/வர்த்தகம்: ஏற்றுமதி சரிவு, கட்டண அபாயங்கள், வர்த்தக பற்றாக்குறை, சுருங்கி வரும் உலகளாவிய பங்கு ஆகியவற்றிற்கு எந்த பதிலும் இல்லை. வீழ்ச்சியடைந்து வரும் ரூபாய்க்கு ஏதேனும் திட்டம் உள்ளதா?
- ஏழை மற்றும் நடுத்தர வர்க்கம்: பணவீக்கத்திலிருந்து நிவாரணம் இல்லை; சேமிப்பு குறைகிறது, கடன் அதிகரிக்கிறது, ஊதியம் தேக்கமடைந்துள்ளது. நுகர்வோர் தேவையை மீண்டும் தூண்டுவதற்கு ஏன் எந்த யோசனையும் இல்லை?
- தனியார் முதலீடு: நம்பிக்கைக்குரிய சமிக்ஞை இல்லை - அந்நிய நேரடி முதலீடு மற்றும் ஊதிய தேக்கம் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ஏன் சிறிய மாற்றங்கள் மட்டும், கட்டமைப்பு சீர்திருத்தங்கள் இல்லை?
- உள்கட்டமைப்பு: வாக்குறுதிகள் மீண்டும் மீண்டும் கூறப்படுகின்றன, செயல்பாடு இல்லை - நகரங்கள் இன்னும் வாழத் தகுதியற்றவையாகவே உள்ளன. எப்போது நமக்கு "ஸ்மார்ட் சிட்டிகள்" அல்லது வாழ தகுதியான நகரங்கள் கிடைக்கும்?
- சமூக பாதுகாப்பு: சமூக பாதுகாப்பு, நலத்திட்டங்கள் குறித்து ஒரு குறிப்பிடத்தக்க அறிவிப்பும் இல்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு பதிலாக வந்த புதிய சட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஒரு வார்த்தைகூட இல்லை. ஏன்?
இந்த பட்ஜெட் எந்தத் தீர்வுகளையும் வழங்கவில்லை, கொள்கையின்மை மறைக்க முழக்கங்களை கூட வழங்கவில்லை!" என குறிப்பிட்டுள்ளார்.
- மத்திய பட்ஜெட் குறித்து மோடி பெருமிதம்.
- மத்திய பட்ஜெட் வளர்ந்த இந்தியா திட்டத்திற்கு அடித்தளமாக அமைந்துள்ளது.
2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்று இருந்த நிலையில், பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, "மத்திய பட்ஜெட் 140 கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். 2047 வளர்ந்த இந்தியா திட்டத்திற்கு அடித்தளமாக அமைந்துள்ளது. அருமையான பட்ஜெட்டை அளித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சாதனை படைத்துள்ளார். இளைஞர்களின் திறமையை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் பட்ஜெட்," என தெரிவித்துள்ளார்.
மேலும், "இன்றைய பட்ஜெட் ஒரு வரலாற்று சிறப்புமிக்கது, ஏனெனில் இது பெண் சக்திக்கு—இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. ஒரு பெண் நிதியமைச்சராக, நிர்மலா ஜி தொடர்ந்து 9ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.
இந்த பட்ஜெட் பல துறைகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த எதிர்கால நோக்கமுடைய பட்ஜெட் இந்தியாவை செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களின் மையமாக மாற்றும்," என்றார்.






