என் மலர்
நீங்கள் தேடியது "Minister Nirmala sitharaman"
- ஜவுளி மேம்பாடு திட்டம் திருப்பூர், கரூர் போன்ற பகுதிகளுக்கு பயனளிக்கும்.
- சிறு, குறு தொழில் அதிக அளவில் உள்ள தமிழ்நாடு பட்ஜெட்டில் பயன்பெறும்.
மத்திய அரசின் 2026-2027-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மத்திய பட்ஜெட் குறித்து பாஜகவினர் வரவேற்பு அளித்துவரும் நிலையில், எதிர்க்கட்சியினர் வெற்று பட்ஜெட் என விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், தே.ஜ.கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக கட்சியின் பொதுச்செயலாளருமான இபிஎஸ் மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில்,
"இந்திய நாட்டின் 2025-2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அறிக்கை கடந்த 29.1.2026 அன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், 2026-2027-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் இன்று (1.2.2026 - ஞாயிற்றுக் கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 2025-2026-ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கை, உலக அளவில் போர் போன்ற பதற்றத்தால் உள்ள உறுதியற்ற சூழ்நிலையிலும், இந்திய பொருளாதார வளர்ச்சி 2025-2026-க்கு 6.5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயரும் என்றும், 2026-2027-ல் 6.8 முதல் 7.2 சதவீதமாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பொருளாதார நிலையில் இந்தியா வலுவான நிலையில் உள்ளதைக் காட்டுகிறது.
இந்த சூழ்நிலையில் 2026-2027-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை, நிதிநிலை மேலாண்மையை வலுப்படுத்தும் வகையில் நிதிப் பற்றாக்குறையையும், பொருளாதார உற்பத்தி மதிப்பில் கடன் அளவைக் குறைக்க எடுத்துள்ள முயற்சிகள் வரவேற்கத்தக்கது. இது வருங்கால பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும்.
இறக்குமதியை குறைக்க, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க, ஆராய்ச்சி, உற்பத்தி, உயர் தொழில்நுட்பம் சார்ந்த கட்டமைப்புகள் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு, மின்னணுசார் உற்பத்தி, மருந்துகள், ஜவுளி, கண்டெய்னர் உற்பத்தி போன்ற துறைகளில் உற்பத்தியை ஊக்குவிக்க பூங்காக்கள், உயிரி மருத்துவ பூங்கா, உற்பத்தி மண்டலங்கள் போன்ற பல முயற்சிகளை இந்த நிதிநிலை அறிக்கையில் முன்மொழிந்துள்ளதை பாராட்டுகிறேன். இதற்கான நிதி ஆதாரங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜவுளி மேம்பாடு திட்டம் திருப்பூர், கரூர் போன்ற பகுதிகளுக்கு பயனளிக்கும்.
சரக்கு வேக வழித்தடப் பாதைகள், வேக ரயில் பாதைகள், நீர் வழிப் பாதைகள் மேம்பாடு போன்றவை, போக்குவரத்துத் துறையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆயுர்வேதம், கால்நடை துறை முதலியவற்றுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளதைப் பாராட்டுகிறேன்.
சிறு, குறு தொழில் மேம்பாட்டுக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக. நிதி ஆதாரம் பெறுவதை உறுதி செய்ய ரூபாய் 2000 கோடி, மற்றும் சிறு, குறு தொழில் வளர்ச்சி நிதியாக ரூபாய் 10,000 கோடி ஒதுக்கீடு போன்றவை மிக உதவியாக இருக்கும். சிறு, குறு தொழில் அதிக அளவில் உள்ள தமிழ்நாடு இதனால் பயன்பெறும்.
இந்த நிதிநிலை அறிக்கை இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி வகுப்பதோடு, உலக அளவில் இந்தியா பொருளாதார நிலையில் வலுவான நாடாக உயர்வதற்கு வழிவகுக்கும் என்பதால், பிரதமர் மோடிக்கும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்றார்.
- அங்கு அவர் உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.
புதுடெல்லி:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல் மந்திரியுமான எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்றார். கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சென்ற அவர் உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.
வரும் சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி அமைப்பது தொடர்பாக இருதரப்பினரும் பேசியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்தார்.
அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி உறுதி. அதற்கு வசதியாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவார் என தகவல்கள் தொடர்ந்து வெளியாகின.
இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான தம்பிதுரை இன்று சந்தித்துப் பேசினார். பாராளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
கடந்த சில நாட்களாக பா.ஜ.க-அ.தி.மு.க. தலைவர்கள் இடையேயான சந்திப்பு தொடர்ந்து வருகிறது. இதன்மூலம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது.
- நிதி குழு பரிந்துரைப்பதை தான் நான் பின்பற்றுகிறேன்.
- நிதிக்குழுவின் பரிந்துரையை தான் ஒவ்வொரு நிதியமைச்சரும் பின்பற்றுவார்கள்.
பாஜக அல்லாத மாநிலங்களுக்கு நிதி பகிர்வில் ஓரவஞ்சனை காட்டப்படுவதாக காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி குற்றம்சாட்டினார்.
இதற்கு மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது," ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட வேண்டும் என்பதை தீர்பானிப்பது நான் அல்ல, நிதி குழு தான்.
நிதி குழுவும் தாங்களாகவே, பகிர்ந்து அளிக்கப்பட வேண்டிய நிதி குறித்து முடிவு செய்வதில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் நிதிக்குழு நேரில் சென்று கலந்து ஆலோசனை செய்து அறிக்கை சமர்ப்பிக்கின்றனர்.
நிதி குழு பரிந்துரைப்பதை தான் நான் பின்பற்றுகிறேன். நிதிக்குழுவின் பரிந்துரையை தான் ஒவ்வொரு நிதியமைச்சரும் பின்பற்றுவார்கள்.
பிடித்த மாநிலம், பிடிக்க மாநிலத்திற்கு ஏற்றார் போல நிதியை மாற்றுவதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.






