search icon
என் மலர்tooltip icon

    உண்மை எது

    • கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு போஸ்டிற்கு 26.78 கோடி ரூபாய் பெறுவதாக தகவல்
    • மெஸ்சி 21.15 கோடி ரூபாய் பெறுகிறார்

    இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தை உலகம் முழுவதும் 235 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள். அதில் பிரபலங்களை கோடிக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள். பிரபலங்களின் கணக்குகளில் விளம்பர பதிவை வெளியிட நிறுவனங்கள் விரும்புகின்றன.

    இதற்காக அவர்களுக்கு நிறுவனங்கள் கட்டணம் வழங்குகின்றன. இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் தளத்தில் விளம்பர பதிவுகள் ஈட்டும் முதல் 100 பிரபலங்கள் பட்டியலை இங்கிலாந்தின் ஹாப்பர் எச்.கியூ. நிறுவனம் வெளியிட்டது.

    முதலிடத்தில் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். அவர் ஒரு பதிவுக்கு ரூ. 26.78 கோடி பெறுகிறார். அவரை 60 கோடி பயனர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள். 2-வது இடத்தில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சி (ரூ.21.15 கோடி) உள்ளார்.

    இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் ஈட்டும் இந்தியராக கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளார். அவர் ஒரு பதிவுக்கு ரூ.11.45 கோடி வருமானம் ஈட்டுகிறார்.

    அவர் மொத்த பட்டியலில் விராட் கோலி 14-வது இடத்தில் உள்ளார். விளையாட்டு வீரர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார். விராட் கோலியை 25.60 கோடி பேர் பின் தொடருகிறார்கள். பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் (ரூ.9.45 கோடி) ஒட்டுமொத்த பட்டியலில் 19-வது இடத்திலும், விளையாட்டு வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்திலும் உள்ளார்.

    முதல் 100 பிரபலங்கள் பட்டியலில் விராட் கோலி, நடிகை பிரியங்கா சோப்ரா, இன்ஸ்டாகிராம் பிரபலம் ரியாஸ் அலி ஆகிய மூன்று இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    பிரியங்கா சோப்ரா ஒரு பதிவுக்கு ரூ.4.4 கோடி வருமானம் ஈட்டி 29-வது இடத்தில் உள்ளார்.

    இந்த தகவலை பார்த்து, விராட் கோலி இவ்வளவு தொகை பெறுகிறாரா...! என ரசிகர்கள் வாயடைத்து போனர். ஆனால், இந்த தகவல் குறித்து விராட் கோலி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், ''நான் பெறும் அனைத்திற்கும் நன்றியுள்ளவனாகவும், கடமைப்பட்டுள்ளவனாகவும் இருக்கும்போது, சமூக வலைத்தளங்கள் மூலம் நாம் பெறும் வருமானம் குறித்து பரவி வரும் செய்தி உண்மையல்ல'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    என்றாலும், விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருவது உண்மை என்பதில் சந்தேகம் இருக்கமுடியாது.

    • மகளிர் உரிமை தொகை தர போதுமான நிதி திரட்ட அரசு பல வழிகளில் திட்டமிடுவதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
    • தமிழ்நாடு அரசோ, தமிழ்நாடு காவல்துறையோ இது போன்ற எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

    தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

    மகளிர் உரிமைத்தொகை வழங்க மாஸ்டர் பிளான் என்ற தலைப்பில் வெளியான செய்தி உண்மைக்கு மாறானது. மகளிர் உரிமை தொகை தர போதுமான நிதி திரட்ட அரசு பல வழிகளில் திட்டமிடுகிறது எனவும், அந்த வகையில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனும் வாகன ஓட்டிகளிடம் தலா ரூ.1 லட்சம் அபராதம் வசூல் செய்ய வேண்டும் என்று மறைமுக உத்தரவு போட்டிருப்பதாகவும் செய்தி வெளிவந்துள்ளது.

    தமிழ்நாடு அரசோ, தமிழ்நாடு காவல்துறையோ இது போன்ற எந்த ஒரு உத்தரவும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிறப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு இலக்கு வைத்து எவ்வித அபராதமும் தமிழக காவல்துறை வசூல் செய்வது இல்லை. இதுபோல், பொய்யான தகவல் பரப்புவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.

    • திட்டத்தின் மொத்த ஒதுக்கீட்டில், பட்டியலினத்தவருக்கென தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • ஆதி திராவிடர் துணைத் திட்டத்தின் நிதியை பிற திட்டங்களுக்காக பயன்படுத்தபடுகிறது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது.

    சென்னை:

    ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்த ஆதிதிராவிடர் துணைத் திட்டங்களின் நிதியை பயன்படுத்தியுள்ளதாக தேசிய பட்டியல் இனத்தினருக்கான ஆணையத்தில் ஒரு தனிநபர் புகார் அளித்துள்ளதாக அண்மையில் ஊடகங்களில் சில செய்திகள் வெளிவந்துள்ளன.

    ஆதிதிராவிடர் துணைத் திட்டம் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு முறையைப் பற்றிய தவறான புரிதலின் காரணமாக தான் இந்த புகாரும், அதனை பற்றிய செய்திகளும் எழுந்துள்ளன.

    பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் பயன்கள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு, அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப கிடைப்பதை உறுதி செய்வதே, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களின் நோக்கமாகும். இந்தத் திட்டங்களின் கீழ் இப்பிரிவு மக்கள் மட்டுமே பயன்பெறத்தக்க திட்டங்களும், பொதுத் திட்டங்களின் கீழ் இப்பிரிவு மக்கள் பயன்பெறும் திட்டங்களும் உள்ளன.

    இந்த முறையின்படி, பொதுத் திட்டத்தின் ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில், பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பயன்களுக்கு நிதி தனியாக ஒரு தலைப்பின் கீழ் ஒதுக்கப்படுகிறது. இத்தலைப்பின் கீழ் ஒதுக்கப்படும் நிதியை அப்பிரிவு மக்களுக்கு மட்டுமே செலவிட இயலும். இந்தத் தனி ஒதுக்கீடு முறையை தான் ஒன்றிய அரசும், பிற மாநிலங்களும் பின்பற்றுகின்றன. ஒன்றிய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம், இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் (நகர்ப்புரம்), அனைவருக்கும் கல்வி இயக்கம், தேசிய சுகாதார இயக்கம் மற்றும் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) போன்ற முக்கிய திட்டங்களுக்கு இந்த முறையில் தான் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.

    இதுபோன்றே, தமிழ்நாடு அரசு நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப் பெண் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம், இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் மற்றும் இலவச சீருடை போன்ற மாநில அரசின் திட்டங்களுக்கும் இதே முறையில் தான் பட்டியலினத்தவருக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    இதே போல் தான் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2023-24 வரவு செலவு திட்டத்தில் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 7000 கோடி ரூபாயில், பட்டியல் இனத்தவர்க்கென 1540 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில அரசு செயல்படுத்தும் இந்த மகத்தான புதிய திட்டத்தில் பட்டியலினத்தவர் விடுபடாமல், திட்டத்தின் பயன்கள் அவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய,

    திட்டத்தின் மொத்த ஒதுக்கீட்டில், பட்டியலினத்தவருக்கென தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, ஒதுக்கப்பட்ட 1540 கோடி ரூபாயை பட்டியலினத்தவருக்கு மட்டும் தான் செலவிட இயலும்.

    இது மட்டுமன்றி, கடந்த 2020-21 ஆம் ஆண்டு 13680 கோடி ரூபாயாக இருந்த பட்டியலின மக்களுக்கு பயனளிக்கக் கூடிய ஆதி திராவிடர் துணைத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு, 2023-24 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 17076 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடித்தளமாக கொண்டுள்ள இந்த அரசு, பட்டியலினத்தவரின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு புதிய திட்டங்களை கொண்டுவந்துள்ளது. பட்டியலினத்தவர் / பழங்குடியின தொழில் முனைவோர்களின் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்க 'அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம்' 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் தொடங்கப்பட்டுள்ளது. ஊரக மற்றும் நகர்புர பகுதிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய, 5 ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் ஒட்டுமொத்த ஒதுக்கீட்டுடன், 'அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்' அறிவிக்கப்பட்டுள்ளது.

    பட்டியலினத்தவர் / பழங்குடியின சமூகத்தினரின் புத்தொழில்களில் முதலீட்டு செய்வதற்கு, 'தமிழ்நாடு ஆதி திராவிடர் / பழங்குடியினர் புத்தொழில் நிதி' 50 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் இந்த ஆண்டில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டங்கள் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினரிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

    மேலும், இவ்வாண்டு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களின் நிதியை சிறப்பாக செயல்படுத்திட ஒரு சிறப்பு சட்டம் இயற்றப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கென பல்வேறு தரப்பினருடன் கலந்தாலோசனைகள் நடைபெற்று வருகின்றன. பட்டியல் இன மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேறும் விதமாக இச்சட்டம் மிக விரைவில் நிறைவேற்றப்படும்.

    ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் செலவினத்தை சிறப்பாக கண்காணிக்க நிதி துறையில் ஒரு சிறப்பு பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது.

    எனவே, ஆதி திராவிடர் துணைத் திட்டத்தின் நிதியை பிற திட்டங்களுக்காக பயன்படுத்தபடுகிறது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது. பட்டியலினத்தவரின் நலன் மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் இந்த அரசு உறுதியாக உள்ளது. பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகின்ற இவ்வரசு இந்த நோக்கங்களை அடைய தொடர்ந்து செயல்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜூலை 22 அன்று உத்தர பிரதேசத்தில் உள்ள தாகுர்கஞ்ச் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
    • குற்றம் சாட்டப்பட்ட சிறுவனும், இறந்துபோன சிறுவனும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள்.

    சமீபத்தில் ஒரு இந்து சிறுவன், முஸ்லிம் சிறுவன் ஒருவனை குளத்தில் தள்ளி கொன்றதாக கூறி ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டது.

    "இந்துக்களுக்கும் இந்து தீவிரவாதிகளுக்கும், முஸ்லிம்களின் மேல் உள்ள வெறுப்பு கற்பனை செய்து பார்க்க முடியாதது. லக்னோ நகரில் கிஷோர் எனும் இந்து சிறுவன் ஒருவன், 7-வயதான அப்துல் சமத் எனும் முஸ்லிம் சிறுவனை வீட்டிலிருந்து அழைத்துச் சென்று, குழியில் தள்ளி கொலை செய்துள்ளான். இக்கொலை கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டு, 6 பேர் மேல் கொலை குற்றம் சாட்டப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்." எனும் செய்தியுடன் ஒரு பயனரால் இந்த வீடியோ பகிரப்பட்டது.

    ஆனால் கடந்த ஜூலை 24ஆம் தேதி வெளிவந்த அதிகாரப்பூர்வ செய்திகளின்படி, இறந்த குழந்தையின் தந்தை அகமது சஃபி என்பவர், முஸ்லிம் மதத்தை சேர்ந்த தனது அண்டை வீட்டுக்காரர்களான ஹ்யூமா, அதிக், சைக்கா, அரிஃப், கலித் மற்றும் அந்த குழந்தையை தள்ளி விட்ட சிறுவன் ஆகியோர் மீது கொலை குற்றம் சாட்டி காவல்துறையிடம் புகாரளித்தார்.

    "எங்கள் இரு குடும்பங்களுக்குமிடையே இருந்த பகையின் காரணமாக, அவர்கள் அந்த சிறுவனை அனுப்பி என் மகனை கொலை செய்திருக்கின்றனர்" என அப்புகாரில் அகமது தெரிவித்திருக்கிறார்.

    ஜூலை 22 அன்று உத்தர பிரதேசத்தில் உள்ள தாகுர்கஞ்ச் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. காலா பாஹத் எனும் பகுதியில் ஒரு நீர்நிலையில் இறந்த சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

    "இந்த குற்றத்தில் எந்த மத சம்பந்தமும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள்" என லக்னோ மேற்கு பிராந்திய காவல்துறை துணை ஆணையர் சிரஞ்சீவ் நாத் சின்ஹா தெரிவித்தார்.

    ஆக, முஸ்லிம் இனத்தை சேர்ந்த இரு குடும்பங்களின் விரோதத்தால் நிகழ்ந்த ஒரு சோக சம்பவத்திற்கு, மத சாயம் பூசும் முயற்சியுடன் இந்த பொய்யான தகவலுடன் வீடியோ பகிரப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

    • ஓசாயா என்பது தாய்லாந்து நாட்டை சேர்ந்த தேநீர் நிறுவனம்.
    • போலி வீடியோவில் உள்ள பெட்ரோல் பங்க் மற்றும் ஹோண்டா ஷோ ரூம் இரண்டும் இந்த அசல் வீடியோவில் தெரிகிறது.

    தாய்லாந்து சம்பவத்தை இந்தியாவில் நடந்ததாக சித்தரிக்கும் போலி வீடியோ

    "இந்தியாவில் புதிதாக கட்டப்பட்ட மெட்ரோ பாலம் ஒன்று இடிந்ததாக" சமீபத்தில் ஒரு வீடியோ வைரலானது. குறைவான நேரமே ஓடும் இந்த வீடியோவில் மேல்நிலை பாலம் ஒன்று உடைவது தெரிந்தது.

    ஆனால், இது பொய்யான செய்தி என தெரிய வந்துள்ளது. நாடு முழுவதிலிருந்து எங்கும் பாலம் இடிந்ததாகவோ, உடைந்ததாகவோ செய்தி ஏதும் வரவில்லை.

    அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த போது "பிடிடி ஸ்டேஷன்" (Ptt station) எனும் எழுத்துக்கள் மற்றும் ஒரு பெட்ரோல் பங்க் வாசலில் "ஒசாயா" (Ochaya) எனும் பெயர் கொண்ட பலகையும் தெரிந்தது.

    ஓசாயா என்பது தாய்லாந்து நாட்டை சேர்ந்த தேநீர் நிறுவனம். எனவே இது தாய்லாந்து நாட்டு வீடியோ என ஊர்ஜிதமானது.

    விசாரணையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் லுவாங் ஃபேங்க் (Luang Phaeng) சாலையில் 2020லிருந்து கட்டப்பட்டு வந்துள்ள லாட் கிராபாங் (Lat Krabang) மேம்பாலம் இடிவதும், அதில் 2 பேர் பலியானதும், 11 பேர் காயமடைந்ததும் தெரிய வந்துள்ளது.

    ஒரு மிகப்பெரிய கான்கிரீட்டை தூக்கிச்சென்ற இயந்திரம் கோளாறானதில் இச்சம்பவம் நடந்துள்ளது. போலி வீடியோவில் உள்ள பெட்ரோல் பங்க் மற்றும் ஹோண்டா ஷோ ரூம் இரண்டும் இந்த அசல் வீடியோவில் தெரிகிறது.

    இதன்மூலம், இந்தியாவின் மெட்ரோ குறித்து வெளியான பொய் வீடியோ, தாய்லாந்தின் கட்டுமானம் நிறைவடையாத ஒரு மேம்பால சாலையில் நடைபெற்ற விபத்து என தெரிய வந்துள்ளது.

    • பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் உள்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
    • பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதே எனது முயற்சி.

    பாட்னா:

    அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் ஆலேசானை கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் நடந்தது.

    அதை தொடர்ந்து, 2-வது கூட்டம் கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் உள்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    கூட்டம் முடிந்த பிறகு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். ஆனால் இதில் நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை.

    இதுகுறித்து பேசிய பா.ஜ.க. தலைவர் சுஷில் மோடி, எதிர்க்கட்சிகள் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக தன்னை அறிவிக்காததால் நிதிஷ் குமார் அதிருப்தி அடைந்ததாகவும், அதனாலேயே அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்வில்லை எனவும் கூறினார்.

    ஆனால் நிதிஷ் குமார் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுப்பற்றி அவர் கூறுகையில், "எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது, முடிவில் நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். உடனடியாக பாட்னாவுக்கு வர வேண்டியிருந்ததால், கூட்டத்துக்கு பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பதே எனது முயற்சி. இப்போது அது வடிவம் பெற்றுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பாஜக அழிந்துவிடும்" என கூறினார்.

    • அந்த வீடியோவில் ராகுல் காந்திக்கு பின்புறம் "அல் ஜவஹர்" எனும் உணவகத்தின் பெயரும் தெரிந்தது.
    • காங்கிரஸ் தலைவரும் உணவு பத்திரிக்கையாளரும் நீல நிற சட்டை மற்றும் கருப்பு சட்டை அணிந்திருப்பதை காணலாம்.

    இந்து நாட்காட்டியில் ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை வரக்கூடிய மாதம், இந்துக்களுக்கு புனிதமான ஷ்ரவண அல்லது சாவன் மாதம். பெரும்பாலான இந்துக்கள் இந்த மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். ஆனால், இந்த புனித மாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அசைவ உணவு சாப்பிட்டதாக கூறி ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. ஒரு உணவகத்தில் ராகுல் காந்தி அசைவ உணவை உண்பதாக அந்த வீடியோவை பதிவிட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.

    "ராகுல் காந்தி சாவன் மாதத்தில் அசைவம் சாப்பிட உணவகம் வந்தார். அதனால்தான் மக்கள் அவரை சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் இந்து பக்தர் என்று சொல்கிறார்கள்" என்ற தகவலுடன் அந்த வீடியோ வலம் வருகிறது.

    அந்த வீடியோவில் ராகுல் காந்திக்கு பின்புறம் "அல் ஜவஹர்" எனும் உணவகத்தின் பெயரும் தெரிந்தது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்த தேடலில், பழைய வீடியோவை பொய்யான தகவலுடன் ஷேர் செய்தது தெரியவந்தது.

    குறிப்பாக இந்த வீடியோவை பூம் (BOOM) ஆய்வு செய்ததில் இது உண்மையல்ல என தெரிய வந்துள்ளது.

    இந்த ஆண்டு ஏப்ரல் 19, 2023 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தி குறிப்பில், டெல்லியின் புகழ் பெற்ற சாந்தினி சௌக் பகுதிக்கு ராகுல் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள "அல் ஜவஹர்" உணவகத்திற்கும் சென்றிருந்தார். "சாட்" மற்றும் "கோல் கப்பே" போன்றவற்றை விரும்பி உண்டார். உணவு மற்றும் உணவகங்களை குறித்த சிறப்பு செய்திகளை வெளியிடும் பத்திரிக்கையாளர் குணால் விஜயகருடன் சேர்ந்து உணவு உண்டார். அப்போது ராகுல் காந்தி உணவருந்திய போது ஒரு வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறது. ரம்ஜானைக் கொண்டாடுவதற்காக தர்பூசணி மற்றும் ரோஸ் சிரப்பின் சுவைகள் கொண்ட பிரபலமான கோடைகால பானமான "மொஹபத் கா ஷர்பத்" போன்றவற்றையும் அவர் ருசித்து பார்த்திருக்கிறார். ராகுல் காந்தி வெளியிட்ட வீடியோவை வைரலான வீடியோவுடன் ஒப்பிடும் போது, காங்கிரஸ் தலைவரும் உணவு பத்திரிக்கையாளரும் நீல நிற சட்டை மற்றும் கருப்பு சட்டை அணிந்திருப்பதை காணலாம். ஆனால், இது நடந்தது ரம்ஜான் மாதமான ஏப்ரல் மாதமே தவிர, ஜூலை மாதம் அல்ல.

    இதிலிருந்து வைரல் வீடியோ வெளியிட்டிருக்கும் செய்தி உண்மையல்ல என தெரிய வருகிறது.

    • சிலர் மத்திய அரசுக்கு எதிரான விமர்சனத்தையும் முன்வைத்தனர்.
    • வெளியான தகவல் போலியானது என்பதை பிஐபியின் உண்மை சரிபார்ப்பு பிரிவும் டுவிட்டரில் தெரிவித்தது.

    பல சமயங்களில் சாலையில் திடீரென நின்றுபோன வாகனங்களை பலர் பின்னால் ஒன்றுகூடி தள்ள, என்ஜின் ஸ்டார்ட் ஆவதை பார்த்திருக்கிறோம். அதேபோன்று ரெயிலை தள்ளுவதுபோன்ற ஒரு வீடியோ கடந்த இரு நாட்களுக்கு முன்பாக சமூக ஊடகங்களில் வைரலானது. அதில் ராணுவ வீரர்கள், போலீஸ் குழுக்கள், ரெயில்வே ஊழியர்கள், உள்ளூர்வாசிகள் மற்றும் பயணிகள் அனைவரும் சேர்ந்து ஒரு ரெயிலை தள்ளுவது தெரிந்தது.

    பல ஊடகங்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த வீடியோவை பகிர்ந்ததால் டுவிட்டரில் குறிப்பிடத்தக்க கவனம் பெற்றது. நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றி சென்ற இந்திய ரெயில்வேயின் ரெயில் எதிர்பாராதவிதமாக நடுவழியில் நின்றுவிட்டதாகவும், அதன் பயணத்தைத் தொடர அனைவரும் தள்ளவேண்டியிருந்ததாகவும் வீடியோவை பகிர்ந்தவர்கள் கருத்து பதிவிட்டனர். சிலர் மத்திய அரசுக்கு எதிரான விமர்சனத்தையும் முன்வைத்தனர்.

    இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து இணையத்தில் தேடியபோது அந்த வீடியோவுக்கும் பரப்பப்படும் தகவலுக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது.

    பயணிகளுடன் சென்ற அந்த ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. ரெயிலின் மற்ற பெட்டிகளில் தீ பரவாமல் தடுப்பதற்காக அனைவரும் செய்த முயற்சியைத்தான் திரித்து பொய் செய்தியாக பரப்பியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

    ஜூலை 7, 2023 அன்று, ஹவுரா-செகந்திராபாத் வழித்தடத்தில் ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 5 பெட்டிகள் தீப்பிடித்தன. மற்ற பெட்டிகளுக்கு தீ பரவாமல் தடுக்க, 3 பெட்டிகள் கொண்ட பின்பகுதியை உடனடியாக ரெயில்வே ஊழியர்கள் மற்றும் உள்ளூர் போலீசாரால் பிரிக்கப்பட்டு அனைவரும் சேர்ந்து தள்ளி நகர்த்தி உள்ளனர். இதன் மூலம் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.

    பாதிக்கப்பட்ட பெட்டிகளில் இருந்து மற்ற பெட்டிகளை பிரிக்க, மக்கள் ரெயிலை தள்ளுவதைத்தான் வீடியோ காட்டுகிறது. வீடியோவில் உள்ளவர்கள் மற்றொரு இயந்திரம் வரும் வரை காத்திருந்து நேரத்தை வீணாக்காமல், தீ பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

    நின்றுபோன ரெயிலை ராணுவ வீரர்கள் இறங்கி தள்ளி ஸ்டார்ட் செய்ததாக வெளியான தகவல் போலியானது என்பதை பிஐபி-யின் உண்மை சரிபார்ப்பு பிரிவும் டுவிட்டரில் தெரிவித்தது.

    இது குறித்து பேசிய ரெயில்வே அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அமிதாப் ஷர்மா, "ஜூலை 7 ஆம் தேதி ரெயில் எண் 12703 தீ விபத்தின் போது ரெயிலின் பின்பக்க பெட்டிகளை தீயிலிருந்து காக்க, ரெயில்வே பணியாளர்களும் உள்ளூர் போலீசாரும் கைகோர்த்து பிரித்தனர். உடனடியாக செயலில் ஈடுபட்ட காவல்துறையினருக்கும் அனைவருக்கும் எங்கள் நன்றி"என கூறினார்.

    இதே கருத்தை வெளியிட்டு தெற்கு மத்திய ரெயில்வே நிர்வாகம் உண்மையை தெளிவுபடுத்தியுள்ளது.

    எனவே, நின்று விட்டதால் ரெயிலை தள்ளி ஸ்டார்ட் செய்ததாகப் பரவும் செய்தி உண்மையல்ல என்பது தெரியவந்துள்ளது.

    • பருவழை காரணமாக வடஇந்தியாவில் கனமழை
    • இமாச்சல பிரதேசம், உத்தரகாண்டில் நிலச்சரிவு எற்பட்டு சேதம்

    இடைவிடாத கனமழையால் இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை, மாநிலங்கள் முழுவதும் குறைந்தது 19 பேர் இயற்கையின் சீற்றத்திற்கு பலியாகியுள்ளனர்.

    எல்லா நேரங்களிலும், வட இந்திய மாநிலங்களில் இயற்கையின் சீற்றம் குறித்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இதில் 2 நிலச்சரிவு குறித்த வீடியோக்கள் தவறானவை என தெரிய வந்துள்ளது.

    "இமாச்சல பிரதேசம் மணாலியில் பேரழிவு போன்ற நிலச்சரிவு" என்ற வார்த்தைகளுடன் பகிரப்பட்ட முதல் வீடியோ, மலைப்பாதையில் ராட்சத பாறைகள் கீழே விழுவதைக் காட்டியது.

    ஆனால் இது ஜூலை 28, 2019 அன்று பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோ என்பது ஆய்வில் தெளிவாகியிருக்கிறது.

    அதேபோல், இரண்டாவது வீடியோவும் பாறைகள் மலையிலிருந்து கீழே விழுவதைக் காட்டியது. பாறைகள் இடிந்து விழுந்ததில் மக்கள் உயிருக்கு பயந்து ஓடுவதையும் காண முடிந்தது. இந்த சம்பவம் உத்தரகாண்டில் நடைபெற்றது போல் பதிவிடப்பட்டிருந்தது.

    ஆனால் இது ஏப்ரல் 2, 2023 அன்று வெளியான ஒரு பழைய நிகழ்வு குறித்த வீடியோ என தெளிவாகியுள்ளது.

    எனவே, இந்த இரு வீடியோக்களிலும் இமாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவை குறித்த எந்த தகவலும் இல்லை.

    ஏற்கனவே, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முன்னதாக ஏற்பட்ட நிலச்சரிவு குறித்த வீடியோக்களாகும் எனத் தெரியவந்துள்ளது.

    • விமானத்தில் சென்ற டோனி, கேண்டி க்ரஷ் கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.
    • இதனால் டுவிட்டரில் கேண்டி க்ரஷ் கேம் இன்று காலையில் இருந்து டிரெண்ட் ஆனது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்எஸ் டோனியின் வீடியோ ஒன்று நேற்று வைரலானது. அதில் அவர் விமானத்தில் பயணம் செய்த போது அந்த விமானத்தில் பணிப்பெண்ணாக இருந்த ஒருவர் டோனிக்கு பரிசு கொடுப்பது போன்று இருந்தது. இந்த வீடியோ நேற்றில் இருந்து வைரலானது.

    அந்த வீடியோவில் டோனி, கேண்டி க்ரஷ் கேம் விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் டுவிட்டரில் கேண்டி க்ரஷ் கேம் இன்று காலையில் இருந்து டிரெண்ட் ஆனது.

    இந்நிலையில் 3 மணி நேரத்தில் 3 மில்லியன் வரை இந்த கேம் டவுன்லோட் ஆனதாக தகவல் வெளியானது. கேண்டி க்ரஷ் கேம் என்ற பெயரிலான டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியான அந்த தகவலில், டோனிக்கு நன்றி தெரிவிக்கபட்டிருந்தது. ஆனால் அந்த டுவிட்டர் கணக்கு கேண்டி கிரஷ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கணக்குதானா? என்பது உறுதி செய்யப்படவில்லை. எனவே, கேண்டி க்ரஷ் அந்த அளவுக்கு டவுன்லோடு ஆனதா? என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

    எனினும், டோனியின் பெயருடன் இந்த தகவல் வைரலாக பரவி வருகிறது.

    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் -2’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக நேற்று தகவல் வெளியானது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.



    இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் சில பகுதிகள் சென்னை விமான நிலையத்தில் படமாக்கப்படுகின்றன. தேவையான இடங்களில் படப்பிடிப்பு நடத்த தயாரிப்பு நிறுவனம் அனுமதி பெற்று, ஜிஎஸ்டி உட்பட ரூ.1.24 கோடி கட்டணமாக விமான நிலைய நிர்வாகத்திடம் செலுத்தியுள்ளதாக தெரிகிறது.



    அங்கு இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்றது. விமானம் புறப்படும் பகுதியில் மட்டுமே படமெடுக்க அனுமதி வழங்கப்பட்டதாகவும், படக்குழுவினர் விமான நிலையத்தின் மற்ற சில பகுதியில் ஒரு காட்சியை படமாக்கியுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் விமான நிலைய அதிகாரிகள் முறையான அனுமதி இல்லை எனக் கூறி படப்பிடிப்பை நிறுத்தும்படி உத்தரவிட்டதாகவும் இதனால் நேற்று படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது.



    இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனம் இந்தியன் 2 படக்குழுவிடம் விமான நிலையத்தில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட தகவல் குறித்த விளக்கம் கேட்டது. இதற்கு பதிலளித்த படக்குழு முறையான அனுமதியின்றி விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த முடியாது என்று தெரிவித்தது. மேலும் படப்பிடிப்பு நிறுத்தப்படவில்லை என்றும் விளக்கமளித்தது.

    • சிபிஐ விசாரணைக்கு அனைத்து ஊழியர்களும் அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அதிகாரி கூறினார்.
    • பாலசோர் மாவட்டம் பஹனாகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம் தேதி இந்த விபத்து நிகழ்ந்தது.

    ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரெயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து தொடர்பாக, பஹனாகா ரெயில் நிலைய ஜூனியர் சிக்னல் என்ஜினீயர் அமிர் கானிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நேற்று ஜூனியர் என்ஜீனியர் வசித்து வந்த வாடகை வீட்டிற்கு அதிகாரிகள் சென்றபோது, அவர் வீட்டில் இல்லை. இதையடுத்து அந்த வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    எனவே, அந்த ஜூனியர் என்ஜினீயர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்டதாக தகவல் பரவியது. விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஊழியர் தலைமறைவாகிவிட்டதாக ஊடகங்களில் செய்திகளும் வெளியாகின.

    பஹனாகா ரெயில் நிலைய ஊழியர் தலைமறைவானதாக வெளியான செய்திகள் உண்மையல்ல என தென்கிழக்கு ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி அதித்ய குமார் சவுத்ரி மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார். சிபிஐ விசாரணைக்கு அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

    பாலசோர் மாவட்டம் பஹனாகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம் தேதி இரவு 7 மணியளவில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது. மேற்கு வங்காளத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பஹனாகா பஜார் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, மாற்று தண்டவாளத்தில் ஏற்கெனவே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளன. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில், தடம்புரண்டு கிடந்த ரெயில் பெட்டிகள் மீது அதிவேகத்தில் மோதியது. இவ்விபத்தில் 292 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    ×