என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது என்று தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #SatyabrataSahoo #sivakarthikeyan

    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலின் போது நடிகர் சிவகார்த்திகேயன் வளசரவாக்கம் குட்ஷெப் பர்டு பள்ளி வாக்குச் சாவடியில் ஓட்டு போட்டார். அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை.

    அவரது பெயர் எப்படி பட்டியலில் இல்லாமல் போனது என்பது குறித்து விசாரிக்க சொல்லி இருக்கிறோம். அவரை எப்படி ஓட்டு போட அனுமதித்தார்கள் என்பது பற்றியும் அறிக்கை கேட்டு இருக்கிறோம்.

    இதில் யார் தவறு செய்தார்கள் என்பது கண்டறியப்பட்டு தவறு செய்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே சிவகார்த்திகேயன் வாக்கு அளித்த விவரத்தை தேர்தல் கமி‌ஷனுக்கு தெரிவித்து இருக்கிறோம்.

     


     

    ஓட்டு எண்ணிக்கையின் போது வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க ஒரு ஓட்டு தேவை என்ற நிலை வந்தால் இவருடைய ஓட்டு கணக்கில் எடுக்கப்படாது. இதுபோல் நடிகர் ஸ்ரீகாந்த் ஓட்டு அளித்த விவகாரம் குறித்தும் அறிக்கை கேட்டுள்ளோம்.

    மதுரையில் ஓட்டு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த அறைக்கு தாசில்தார் சென்ற விவகாரம் தொடர்பாக சிறப்பு தேர்தல் அதிகாரி பாலாஜி விரிவான அறிக்கை தந்துள்ளார். அதை தேர்தல் கமி‌ஷனுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

    மாவட்ட தேர்தல் அதிகாரியான மதுரை கலெக்டர் மீது நடவடிக்கை இருக்குமா? இல்லையா? என்பதை தேர்தல் கமி‌ஷன் தான் முடிவு செய்யும்.

    கரூர் தொகுதியிலும் ஓட்டு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு பாதுகாப்பு ஏற்பாடு சரியில்லை என காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி புகார் தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி விசாரித்து அறிக்கை தர சிறப்பு தேர்தல் அதிகாரி ராஜாராம் சென்றுள்ளார். அவர் விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பார்.

    தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்தாலும் இன்னும் பறக்கும் படை கண்காணிப்பு குழு தொகுதிக்கு ஒன்று வீதம் செயல்பட்டு வருகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் தலா 3 பறக்கும் படைகளும், கண்காணிப்பு குழுக்களும் செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #SatyabrataSahoo #sivakarthikeyan

    பாரதிய ஜனதா வேட்பாளராக கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் கவுதம் காம்பீர் தனக்கு ரூ.147 கோடிக்கு சொத்து இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். #GauthamGambhir #LoksabhaElections2019
    புதுடெல்லி:

    பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளராக கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    அவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவுடன் அவர் தனது சொத்து விவரங்கள் பட்டியலை இணைத்துள்ளார்.

    கவுதம் காம்பீர் தனக்கு ரூ.147 கோடிக்கு சொத்து இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். 2017-18-ம் ஆண்டு மட்டும் தனக்கு ரூ.12.4 கோடி வருவாய் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    அவரது மனைவிக்கு ரூ.6.17 லட்சம் வருவாய் வந்திருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் மிகவும் பணக்கார வேட்பாளர் என்ற சிறப்பை கவுதம் காம்பீர் பெற்றுள்ளார்.

    அவர் தனது வேட்புமனுவில் தன் மீது ஒரே ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு இருப்பதாக கூறி உள்ளார்.

    டெல்லி பா.ஜனதா தலைவர் மனோஜ் திவாரி தனது வேட்புனுவில் தனக்கு ரூ.24 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது அவருக்கு ரூ.4.33 கோடிக்கு தான் சொத்துக்கள் இருந்தது. கடந்த 5 ஆண்டுக்குள் அவருக்கு ரூ.20 கோடி சொத்து அதிகரித்துள்ளது.


    தெற்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் விஜேந்திர சிங் ரூ.1.37 கோடி சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் ரமேஷ் பிதுரி ரூ.18 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி ஷீலாதீட்சித் வடக்கு கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனக்கு ரூ.4.92 கோடிக்கு சொத்து இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    அதில் அவர் நிஜாமுதின் பகுதியில் ரூ.1.88 கோடிக்கு பங்களா இருப்பதாக தெரிவித்துள்ளார். 81 வயதாகும் ஷீலாதீட்சித் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் அதிக அளவு அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #GauthamGambhir #LoksabhaElections2019
    சூலூர் தொகுதி இடைத்தேர்தல் பண வினியோகத்தை தடுக்க கூடுதலாக 9 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #Election

    கோவை:

    கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்கு அடுத்த மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் எடுத்து செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நடத்தை விதிமீறல் புகார்களை பொதுமக்கள் 1800 425 4757 என்ற கட்டண மில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளனர்.

    மேலும், சூலூர் தொகுதியில் பணி வினியோகத்தை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த தொகுதியில் உள்ள பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் தவிர கூடுதலாக 9 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இடைத்தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடை பெற அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராஜா மணி கூறினார். #Election

    ஓட்டுப்பதிவு கருவியில் இருந்து பாம்பு வெளியான சம்பவம் குறித்து, மோடி அரசாங்கத்தில் எதுவும் நடக்கும் என நடிகை குஷ்பு கூறியுள்ளார். #kushboo #PMModi

    சென்னை:

    வாக்குப்பதிவின்போது ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தில் (விவிபேட்) கோளாறு ஏற்பட்டு பல பகுதிகளில் வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

    நேற்று கேரளாவின் பல பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    கண்ணூரு தொகுதிக்கு உட்பட்ட மயில் கண்டக்கை வாக்குச்சாவடியில் மக்கள் வாக்களித்துக் கொண்டு இருந்த போது திடீரென விவி பேட் இயந்திரத்தில் இருந்து சிறிய அளவிலான பாம்பு வெளியில் வந்தது. இதை பார்த்த வாக்காளர்கள் கூச்சலிட்டனர். இதனால் வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இயந்திரத்தில் இருந்து பாம்பு அகற்றப்பட்ட பின்னர் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

    விவிபேட் இயந்திரத்தில் பாம்பு இருந்தது சர்ச்சையானது. காங்கிரசின் முன்னாள் அமைச்சர் சசி தரூர் இதுபற்றிய செய்தியை பகிர்ந்ததோடு இந்திய ஜனநாயகத்தில் இதுதான் முதல் முறை என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த பதிவை தனது டுவிட்டரில் பதிந்த நடிகை குஷ்பு மோடி ஆட்சியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று பதிவிட்டார். இதற்கு சமூக வலை தளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தன.

    விவிபேட் இயந்திரத்தில் பாம்பு புகுந்ததற்கு கூடவா மோடியை விமர்சிக்க வேண்டும்? மோடி இயந்திரத்தையோ பாம்பையோ சப்ளை செய்தாரா? என்ற ரீதியில் குஷ்புவை விமர்சித்து வருகிறார்கள்.


    ஆனால் குஷ்புவோ தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி தரும் வகையில் தன்னுடைய ஒரு படத்தை பகிர்ந்து இது விமர்சகர்களுக்கான பிரத்தியேக படம் என்று குறிப்பிட்டுள்ளார். #kushboo #PMModi

    வாரணாசியில் உள்ள மெகமூர்கஞ்ச் பகுதியில் பாஜக ஊடக மையத்தை திறந்து வைத்த பின்னர் பேசிய பாஜக தேசிய தலைவரான அமித் ஷா, பாஜக தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறியுள்ளார். #AmitSha #BJP
    வாரணாசி:

    குஜராத் மாநிலத்தில் நேற்று ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இம்மாநிலத்தின் அகமதாபாத் பகுதியில் தனது குடும்பத்தினருடன் பாஜக தேசிய தலைவரான அமித் ஷா வாக்களித்தார்.

    அதன் பின்னர் பிரதமர் மோடி போட்டியிடும்  வாரணாசி தொகுதியில் உள்ள மெகமூர்கஞ்ச் பகுதியில் பாஜகவுக்கான ஊடக மையம் மற்றும் பிரதமர் மோடிக்கான தேர்தல் அலுவலகம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    இதையடுத்து செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் அமித் ஷா கூறியதாவது:

    நடந்து முடிந்த 3 கட்ட வாக்குப்பதிவினை காணும்போது, பாஜக மீண்டும் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என நம்புகிறேன். உத்தரபிரதேசத்தில் பகுஜன் - சமாஜ்வாடி கூட்டணியை விடவும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். கடந்த 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் இருந்த பாஜகவின் கணிப்பை விட தற்போது மிக தெளிவாக உள்ளது.



    வாரணாசி தொகுதியில் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளராக பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடவுள்ளார் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். வரும் 25ம் தேதி மாபெரும் ரோட்ஷோ நடைபெறும். அதன் பின்னர் பிரதமர் மோடி 26ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார். வேட்புமனு தாக்கல் செய்யும் போது பீகார் முதல்வர் நிதீஷ் குமார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உடனிருப்பார்கள்.

    மேலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  ‘இந்து பயங்கரவாதி’,  ‘பகவா பயங்கரவாதி’ என பேசியுள்ளார். நிச்சயம் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு இந்து பயங்கரவாதியாக இருக்க முடியாது. இந்து மதத்தின் கலாச்சாரம் யாரையும் காயப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டதல்ல.

    இவ்வாறு அவர் கூறினார். #AmitSha #BJP 
     
    4 தொகுதியில் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தை அ.ம.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மே 1-ந் தேதி தொடங்குகிறார். #TNAssemblyElection #TTVDhinakaran
    சென்னை:

    திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 தொகுதிகளின் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அடுத்த மாதம் (மே) 1-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன் விவரம் வருமாறு:-

    திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் ஐ.மகேந்திரனை ஆதரித்து, அந்த தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அடுத்த மாதம் 1, 2, 9 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்கிறார். அதே போல், அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளர் பி.எச்.சாகுல் ஹமீதை ஆதரித்து 3, 4, 10, 14 ஆகிய தேதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    திருப்பரங்குன்றம் மகேந்திரன் -  ஓட்டப்பிடாரம் சுந்தரராஜ்

    ஓட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளர் ஆர்.சுந்தரராஜை ஆதரித்து 5, 6, 11, 15 ஆகிய தேதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதே போல் சூலூர் தொகுதிக்குபட்ட பகுதிகளில் அ.ம.மு.க. வேட்பாளர் கே.சுகுமாருக்காக 7, 8, 12, 13 ஆகிய தேதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.

    மேற்கூறிய தகவல்கள் அ.ம.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TNAssemblyElection #TTVDhinakaran
    குஜராத் மாநிலத்தின் கிர் வனப்பகுதியில் ஒரேயொரு வாக்காளருக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி இன்று 100 சதவீதம் வாக்குப்பதிவை கண்டது. #LSpolls #GirForest #GirForestpollingbooth #100pcvote #BharatdasBapu
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் ஜுனகத் மாவட்டத்துக்குட்பட்ட கிர் வனப்பகுதியில் சிங்கங்களை பாதுகாக்கும் மிகப்பெரிய தேசிய பூங்கா அமைந்துள்ளது.

    இந்த வனப்பகுதிக்கு அருகாமையில் பாரத்தாஸ் பாப்பு என்பவர் வசித்து வருகிறார். அந்த மாவட்டத்துக்குட்பட்ட தொகுதிகளில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் பாரத்தாஸ் பாப்பு என்ற ஒரேயொரு வாக்காளருக்காக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது.

    பாரத்தாஸ் பாப்பு இன்று இங்கு வந்து வாக்களித்தார். இதனால், 2019- பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை கண்ட தனிப்பெருமை இந்த  வாக்குச்சாவடி கிடைத்துள்ளது.



    தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாரத்தாஸ் பாப்பு, ’ஒரு ஓட்டாக இருந்தாலும் வாக்குச்சாவடி அமைப்பதற்காக அரசு பணத்தை செலவிடுகிறது. என் இடத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இதேபோல் நாட்டு மக்கள் அனைவரும் அவரவர் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து அனைத்து பகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடப்பதை உறுதிப்படுத்த வேண்டும்’ என வலியுறுத்தினார். #LSpolls #GirForest  #GirForestpollingbooth  #100pcvote #BharatdasBapu
    மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில், வாக்காளர் ஒருவர் கொல்லப்பட்டார். #LokSabhaElections2019 #VoterKilled
    கொல்கத்தா:

    பாராளுமன்ற மூன்றாவது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.  பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதம் ஆனது. கோளாறு ஏற்பட்ட இயந்திரங்கள் மாற்றப்பட்டு பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியது.

    இந்நிலையில், வாக்குப்பதிவின்போது ஆங்காங்கே வன்முறை ஏற்பட்டது. குறிப்பாக மேற்கு வங்காள மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. முர்ஷிதாபாத் மாவட்டம் பாலிகிராம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதில், ஓட்டு போடுவதற்காக வரிசையில் நின்றிருந்த தியாருல் கலாம் (வயது 55) என்ற வாக்காளர் பலத்த காயமடைந்து பரிதாபமாக இறந்தார்.

    ராணி நகரில் உள்ள வாக்குச் சாவடியில் அடையாளம் தெரியாத ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்கியதால் வாக்காளர்களிடையே பீதி ஏற்பட்டது.



    மோதிகஞ்ச் பகுதியில் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. கட்சியின் முகாம் அலுவலகங்கள் சேதப்படுத்தப்பட்டன.

    பாலர்காட் தொகுதிக்குட்பட்ட தெற்கு தினஜ்பூரின் புனியாத்பூரில் தேர்தல் நடத்தும் அதிகாரி ஒருவர், அவரது வீட்டில் பிணமாக தொங்கினார். பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. #LokSabhaElections2019 #VoterKilled
    மேற்கு வங்காளம் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தேர்தலில் மேற்கு வங்காளம் பாஜகவிற்கு சிறந்த பாடம் கற்பிக்கும் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார். #MamataBanerjee #BJP
    அராம்பாக்:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் இன்று 3வது கட்டமாக நடைபெற்று வருகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு ஏப்ரல் 29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக நடைபெற உள்ளது.

    இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு அனைத்து வாக்குச்சாவடிகளிலும்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேற்கு வங்காளத்தில் 2 மணி நிலவரப்படி  52.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் நடவடிக்கைகள் குறித்து கூறியதாவது:

    மத்திய படைகள் ஒரு தலை பட்சமாக பாஜகவிற்காக மட்டுமே செயல்படுகிறது. மல்தாகா தக்‌ஷின், பலூர்காட் ஆகிய தொகுதிகளில் பாஜக தொண்டர்கள், வாக்குச்சாவடிக்கு பொது மக்கள் வாக்களிக்க வரும்போது பாஜகவிற்கு வாக்களிக்குமாறு கூறி வருகின்றனர் என தெரிய வந்தது. இதுப்போன்ற செயல்களில் ஈடுபட பாஜக வேட்பாளர்கள், ஆதரவாளர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை.



    இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையாக தெரிவித்துள்ளோம். இச்சம்பவத்தின் போது தடுப்பதற்காக போலீசார் யாரும் வாக்குச்சாவடியின் உள்ளே வரமுடியவில்லை.  ஏன் இவ்வாறு செய்கின்றனர்? மத்திய படைகள் தேர்தலின்போது மாநிலத்திற்கு வரவேண்டும். ஆனால் மாநில படைகளுக்கு உதவி செய்து விட்டு மத்திய படையினர் சென்றுவிடுகின்றனர்.

    கடந்த 2016ம் ஆண்டு நடந்த தேர்தலில் கூட இப்படி தான் செய்தார்கள். அதை நான் மறக்கவில்லை. மத்திய படைகளை பாஜக பயன்படுத்த முடியாது. மேற்கு வங்காளம் உங்களுக்கு நிச்சயம் சிறந்த பாடத்தை கற்பிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MamataBanerjee #BJP
    மெகபூபா போட்டியிடும் அனந்தநாக் தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து 11 மணி வரை ஒரு வாக்காளர் கூட வாக்களிக்கவில்லை. #LokSabhaElections2019

    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்தநாக் பாராளுமன்ற தொகுதி நாடு முழுவதும் மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா போட்டியிடுகிறார். கடந்த 2014-ம் ஆண்டு இதே தொகுதியில் வெற்றி பெற்ற அவர் மீண்டும் களம் இறங்கி உள்ளார்.

    அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில தலைவர் குலாம் அகமது போட்டியிடுகிறார். தேசிய மாநாடு கட்சி சார்பில் மசூதி போட்டியிடுகிறார். இவர் ஓய்வு பெற்ற நீதிபதி ஆவார்.

    பாரதிய ஜனதா கட்சி சார்பில் யூசுப் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் இந்த தொகுதியில் 4 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

    இந்த தொகுதி அனந்த நாக், புல்வாமா, சோபியான், குல்கம் ஆகிய 4 மாவட்டங்களில் அமைந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.

    இதன் காரணமாக அனந்தநாக் பாராளுமன்ற தொகுதி தேர்தலை 3 கட்டமாக நடத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி ஏப்ரல் 23-ந்தேதி அனந்தநாக் மாவட்டத்திலும், ஏப்ரல் 29-ந்தேதி குல்கம் மாவட்டத்திலும், மே 6-ந்தேதி புல்வாமா, சோபியான் மாவட்டங்களிலும் ஓட்டுப் பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்தியாவில் ஒரு பாராளு மன்ற தொகுதிக்கு 3 கட்டமாக தேர்தல் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். 13 லட்சத்து 95 ஆயிரத்து 272 வாக்காளர்கள் கொண்ட இந்த தொகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடை பெற்றது.

    இன்று அனந்தநாக் மாவட் டத்தில் மட்டும் நடைபெறும் ஓட்டுப்பதிவுக்கு ஆயிரத்து 842 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதியானவர்கள்.

    இவர்களை எதிர்நோக்கி நேற்று இரவு முதலே தேர்தல் பணியாளர்கள் தயாராக இருந்தனர். ஆனால் இன்று காலை ஒருவர்கூட வாக்களிக்க வரவில்லை.

    7 மணிக்கு தொடங்கி 4 மணி நேரம் கடந்த பிறகும் அதாவது பகல் 11 மணி வரை 1,842 வாக்குச்சாவடிகளிலும் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.

    வாக்காளர்கள் வருகைக்காக அதிகாரிகள் அதுவரை சும்மா காத்திருந்தனர். சில பகுதிகளில் வாக்களிக்க வருமாறு பொதுமக்களை அதிகாரிகள் அழைத்தனர். ஆனால் அவர்கள் வீடுகளை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்து விட்டனர்.

    அனந்தநாக் தொகுதியில் பொதுமக்கள் யாரும் வாக்களிக்க வரக்கூடாது என்று கடந்த சில தினங்களாக பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்தப்படி இருந்தனர். இதன் காரணமாக அங்கு ஓட்டுப்பதிவில் மந்தநிலை காணப்படுகிறது.

    பாதுகாப்பு காரணங்களுக்காக பிற்பகல் 4 மணி வரைதான் ஓட்டுப்பதிவை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதற்குள் கணிசமானவர்களை அழைத்து வந்து வாக்குப் பதிவு செய்ய அதிகாரிகள் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

    என்றாலும் அனந்தநாக் தொகுதியின் முதல் கட்ட வாக்குப்பதிவு வரலாறு காணாத வகையில் மிக மிக குறைவாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. #LokSabhaElections2019

    கேரள வாக்குப்பதிவில் காங்கிரசுக்கு ஓட்டு போட்டால் தாமரை சின்னத்திற்கு விளக்கு எரிந்ததால் வாக்குச்சாவடி மையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #LokSabhaElections2019

    கோவளம்:

    கேரள மாநிலத்தின் 20 பாராளுமன்றத் தொகுதிகளிலும் இன்று வாக்குப் பதிவு தொடங்கியது. திருவனந்தபுரம் தொகுதிக்கு உட்பட்ட கோவளம் சொவ்வரா வாக்குச் சாவடியில் 151-வது பூத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.

    முதலில் சுமார் 76 பேர் ஓட்டு போட்டனர். 77-வது நபர் காங்கிரசின் கை சின்னத்துக்கு வாக்களித்த போது தாமரை சின்னத்திற்கு அருகில் உள்ள விளக்கு ஒளிர்ந்ததாக குற்றம் சாட்டினார்.

    இதை கண்டித்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து 151-வது பூத்தில் மட்டும் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான கே.வாசுகி இந்த வாக்குச் சாவடிக்கு வருகை தந்தார்.

    வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறு நடந்ததா என்பதை பரிசோதித்து பார்ப்பது இப்போது இயலாத காரியம் என்பதால் வேறு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் மக்கள் வாக்களித்தனர். #LokSabhaElections2019

    ஒடிசாவில் சோதனை நடத்திய தேர்தல் அதிகாரிகளை தாக்கிய எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்தனர். #LokSabhaElections2019

    புவனேஸ்வர்:

    ஒடிசாவை சேர்ந்த பிஜு ஜனதா தள எம்.எல்.ஏ. பிரதீப் மகராதி. இவர் 6 தடவை தொடர்ந்து எம்.எல்.ஏ. ஆக பதவி வகித்து வருகிறார். தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் பிஜு ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

    இந்த நிலையில் இவர் வேட்பாளர்களுக்கு வழங்க பணம் மற்றும் மது பாட்டில்களை தனது பண்ணை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பூரி மாவட்டத்தில் உள்ள அவரது பண்ணை வீடு உள்ள ஹுன்கிபூர் கிராமத்துக்கு சென்றனர்.

    அங்கு சென்று சோதனை நடத்த முயன்றனர். உடனே பிரதீப் மகராதி எம்.எல்.ஏ. அவர்களை தடுத்ததுடன் தாக்குதல் நடத்தினார்.

    தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து பிரதீப் மகராதி எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்தனர். #LokSabhaElections2019

    ×