என் மலர்
திருவண்ணாமலை
- இடிபாடுகளில் சிக்கியவர்கள் வீட்டிற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
- 7 பேர் வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கி உள்ளதாக தெரிகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் புயல் மழை காரணமாக நேற்று மிக கனமழை பெய்தது. அதிகபட்சமாக 37 சென்டிமீட்டர் மழை பதிவானது. சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நிலையில் திருவண்ணாமலை வ. உ. சி. நகர் பகுதியில் மகா தீப மலையின் சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்து திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அங்கிருந்து ராட்சத பாறை ஒன்றும் உருண்டது. மலைப்பகுதியில் இருந்த ராஜ்குமார் என்பவருடைய வீடு மண் சரிவில் முற்றிலுமாக புதைந்தது. வீட்டில் இருந்த 7 பேர் வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கி உள்ளதாக தெரிகிறது.
அந்த வீட்டுக்குள் வசித்தவர்கள் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக மாறிவிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் சேறும் சகதியுமாக மாறியது.
இது குறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கனமழை நின்ற பிறகு அந்த பகுதிக்கு செல்ல முடிந்தது.

தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டதால் இடிபாடுகளில் சிக்கியவர்கள் வீட்டிற்கு அருகே செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தீயணைப்பு துறையினர் இரவு 8 மணிக்கு அங்கு சென்றனர்.
மண் சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர். அப்போது உள்ளே ஆட்கள் இருப்பது போல மோப்பநாய் அடையாளம் காட்டியது. இதனை தொடர்ந்து அந்த இடத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.
போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மழை பெய்ததாலும் மண் சரிவு ஏற்பட்டதாலும் இரவில் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. அரக்கோணம் பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.
மீட்பு படை வீரர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் தீயணைப்பு துறையினர் எந்திர உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இன்று காலையில் தொடர்ந்து மீட்பு பணி நடந்தது.
அப்போது மழை பெய்ததால் மகா தீப மலையில் இருந்து மழை நீர் மீட்பு பணி நடந்த இடத்திற்கு வந்தது. இதனால் மேலும் மண்சரிவு ஏற்படாத வண்ணம் மீட்பு பணியை மேற்கொண்டனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்பதால் அந்த பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர்.
இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில்:-
மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து பாறைகள் உருண்டு விழும் ஆபத்தான நிலை இருப்பதால் இரவில் மீட்பு பணியை மேற்கொள்வது சிக்கலாக இருந்தது.
இன்று காலையில் அரக்கோணம் பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 30 பேர், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மண்ணில் புதைந்த வீட்டில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் இருந்ததாக தெரிவித்துள்ளனர். மலை அடிவாரப் பகுதியில் மழை வெள்ளத்தால் சில வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பொது மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளோம்.
மீட்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு 7 பேர் கதி என்ன என்பது தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவண்ணாமலையில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மண்சரிவில் சிக்கி உள்ளவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
- அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறம் உளள் மலையிலிருந்து சரிந்த பாறைகள் வீடுகள் மீது விழுந்தது.
- பாறையுடன் மண்ணும் சரிந்து வீடுகளை மூழ்கடித்தன.
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. புயல் கரையை கடந்த நிலையிலும் தொடர் கனமழையால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.
மீட்புப் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையிலிருந்து சரிந்த பாறைகள் வீடுகள் மீது விழுந்தன. பாறைகளுடன் மண்ணும் சரிந்ததால் வீடுகள் மண்ணிற்குள் புதைந்துள்ளன.
மண்ணில் புதைந்த வீட்டிற்குள் 5 குழந்தைகள், இரண்டு பெண்கள் என 7 பேர் உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கலெக்டர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மீட்புப்பணிக்கான NDRF வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தனர். அவர்கள் தற்போது மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்வதால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
- அணையில் நீர்வரத்து அதிகரிப்பால், மொத்த உயரமான 119 அடியில் முழுவதும் நிரம்பியது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்வதால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, சாத்தனூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பால், மொத்த உயரமான 119 அடியில் முழுவதும் நிரம்பியது.
இதனால் அணையில் இருந்து சுமார் 1.68 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், தென்பண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- பாறை உருண்டு விழுந்ததில் அங்கிருந்த வீடுகள் அப்படியே பூமிக்குள் புதைந்துள்ளன.
- வீட்டிற்குள் பெண்கள், குழந்தைகள் என 7 பேர் வரை சிக்கியிருக்கலாம் என தகவல்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த தொடர் மழையால் திருவண்ணாமலையின் மலை அடிவாரத்தின் கீழ் உள்ள வீடுகள் மீது பாறை உருண்டு விழுந்துள்ளது.
இதில், அங்கிருந்த வீடுகள் அப்படியே பூமிக்குள் புதைந்துள்ளன.
அந்த வீட்டிற்குள் பெண்கள், குழந்தைகள் என 7 பேர் வரை சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன், மாவட்ட எஸ்பி சுதாகர் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையினா அங்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதைந்த வீடுகளுக்கு மேல் பெரிய பாறை ஒன்று இருப்பதால், மீட்புப் பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
- திருவண்ணாமலையில் நேற்றில் இருந்து இன்று வரை 370 மி.மீ. மழை பெய்துள்ளது.
- பெஞ்சல் புயல் திருவண்ணாமலை வழியாக திருப்பத்தூர், தர்மபுரிக்கு சென்று கன மழையை கொடுக்கும்.
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்த நிலையில் அது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக் கொண்டுள்ளது.
அதன்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் வழியாக மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயலினால் இதனையடுத்து தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வெதர்மென் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "திருவண்ணாமலை நகரத்தில் ஃபெங்கல் மையம் கொண்டுள்ளது. அதனால் திருவண்ணாமலையில் பலத்த மழை பெய்துள்ளது. நேற்றில் இருந்து இன்று வரை அம்மாவட்டத்தில் 370 மி.மீ. மழை பெய்துள்ளது.
இனி ஃபெஞ்சல் புயல் திருவண்ணாமலை வழியாக திருப்பத்தூர், தர்மபுரிக்கு சென்று கன மழையை கொடுக்கும். பின்னர் கர்நாடகாவுக்கு சென்று கன மழையை கொடுக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
- பிளாஸ்டிக் கவரில் உணவு இருப்பதாக நினைத்து பூனை அதனுள் தலையை விட்டது.
- பொதுமக்கள் பூனையை காப்பாற்ற நினைத்து அதனை பிடிக்க முயன்றனர்.
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அச்சரப்பாக்கம் சாலையில் பூனை ஒன்று சுற்றி திரிந்தது.
அப்போது யாரோ ஒருவர் உணவை வாங்கி சாப்பிட்டுவிட்டு மீதம் உள்ளதை சாலையில் வீசி சென்றுள்ளார். தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் கவரில் உணவு இருப்பதாக நினைத்து பூனை அதனுள் தலையை விட்டது. இதில் பூனையின் தலை சிக்கியது.
இதனால் பிளாஸ்டிக் கவருடன் சாலையில் அங்கும் இங்கும் ஓடியது. பூனை சாலையில் ஓடியதால் விபத்தில் சிக்கும் இறக்கும் நிலை ஏற்பட்டது. இதனை கண்ட பொதுமக்கள் பூனையை காப்பாற்ற நினைத்து அதனை பிடிக்க முயன்றனர்.
ஆனால் யாரிடமும் சிக்காமல் ஆட்டம் காட்டியது. இந்த நிலையில் சிறுவன் ஒருவன் சாலையில் ஓடிய பூனையை லாவகமாக பிடித்து தலையில் சிக்கிய பிளாஸ்டிக் கவரை அகற்றினான். பிளாஸ்டிக் கவரை எடுத்தவுடன் நிம்மதியுடன் மூச்சு விட்ட பூனை மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓடியது. சிறுவனை அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டினர்.
- கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் டிசம்பர் 4-ந் தேதி நடக்கிறது.
- நெய் காணிக்கையையும் செலுத்தலாம்.
வேக்கிங்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் டிசம்பர் 4-ந் தேதி நடக்கிறது. விழாவின் முக்கிய உற்சவங்களில் ஒன்றான மகாதேரோட்டம் டிசம்பர் 10-ந்தேதி நடைபெற உள்ளது.
டிசம்பர் 13-ந் தேதி அதிகாலை பரணி தீபமும், அன்று மாலை மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
மகா தீபம் ஏற்றுவதற்கு 3 ஆயிரத்து 500 கிலோ நெய், 1000 மீட்டர் திரி (காடா துணி) பயன்படுத்துவது வழக்கம். தீபத் திருவிழாவிற்கான விரிவான ஏற்பாடுகள் கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றது.
அதன் தொடர்ச்சியாக மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள யானை வளாகம் முன்பு சிறப்பு கவுண்டர் திறக்கப்பட்டு உள்ளது.
இதில் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் நெய் காணிக்கைக்காக பணம் செலுத்தி வருகின்றனர். பணம் செலுத்தும் பக்தர்களுக்கு அதற்கான ரசீது உடனுக்குடன் வழங்கப்படுகிறது.
இதில் ஒரு கிலோ நெய் ரூ.250, அரை கிலோ ரூ.150, கால் கிலோ ரூ.80 என்ற அடிப்படையில் நெய் காணிக்கையை செலுத்தலாம்.
அதேபோல் வெளியூர் பக்தர்கள் ஆன்லைனில் நெய் காணிக்கை செலுத்தலாம். பக்தர்கள், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் நெய் காணிக்கை என்ற இணையத்தில் சென்று செலுத்தலாம்.
காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு தீபத் திருவிழாவை தொடர்ந்து ஆருத்ரா தரிசனம் முடிந்து 'மை' பிரசாதம் வழங்கப்படும்.
கவுண்டரில் பணம் செலுத்தும் பக்தர்களுக்கு நேரடியாகவும், ஆன்லைனில் பணம் செலுத்தும் பக்தர்களுக்கு தபால் மூலமும் பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ந்தேதி நடைபெறுகிறது.
- இணையதளம் வாயிலாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும்.
திருவண்ணாமலை:
மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ந்தேதி நடைபெறுகிறது.
விழாவில், அன்னதானம் வழங்க விரும்பும் தனி நபர்கள், நிறுவன்ங் www.foscos.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
இதுதவிர, திருவண்ணாமலை - செங்கம் சாலை, பழைய அரசு மருத்துவமனையில் இயங்கும் உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் இன்று முதல் வருகிற 4-ந்தேதி வரை நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளித்து அனுமதி பெறலாம்.
விண்ணப்பத்துடன் கடவுச் சீட்டு அளவு புகைப்படம் முகவரிக்காக ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட சான்றின் நகல் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடம் நாள், நேரத்தில் மட்டுமே அன்ன தானம் வழங்க வேண்டும். அனுமதி பெறாமல் அன்னதானம் வழங்கக்கூடாது.
பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் கிரிவலப் பாதையில் இருந்து 100 மீட்டர் உள்புறம் அன்னதானம் வழங்க வேண்டும். நோய்த்தொற்று உள்ளவர்கள் அன்னதானம் சமைக்கவோ, வழங்கவோ அனுமதிக்கக் கூடாது.
வாழை இலையில் மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். உணவுப் பொருள்கள் தரமானதாக, தூய்மையானதாக, கலப்படம் இல்லாமல் இருக்க வேண்டும்.
இந்த வழிகாட்டு முறைகளை பின்பற்றாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற் கொள்ளப்படும். மேலும், விவரங்களுக்கு 044-237416, 9047749266, 9865689838 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பழக்கடைகள், பூக்கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
- 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செஞ்சி திண்டிவனம் தேசிய நெடுஞ் சாலையில் நங்கிலிகொண்டான அருகே புதிய சுங்கச்சாவடி சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.
இதில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்தபடி சுங்கச்சாவடி சுற்றி 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளவர்களுக்கு இலவச அனுமதி வழங்க வேண்டும் என செஞ்சி சேம்பர் ஆப் காமர்ஸ் தலைமையில் அனைத்து சங்கங்கள் இன்று செஞ்சி நகரில் கடையடைப்பு மற்றும் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் என அறிவித்திருந்தனர்.
அதன்படி செஞ்சி நகரில் டீக்கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. 10 மணி அளவில் செஞ்சியில் இருந்து வாகனங்களுடன் ஊர்வலமாக சென்று சுங்கச்சாவடி முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.
இதனால் செஞ்சி நகரம் மற்றும் சுங்கச்சாவடி வரை செஞ்சி டி.எஸ்.பி. செந்தில்குமார் மேற்பார்வையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- அண்ணன், தம்பிகளுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
செங்கம்:
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல் செங்கம் குப்புசாமி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 50) விவசாயி. இவரது மனைவி காமாட்சி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
முதல் மகன் சக்திவேல் கூலி வேலையும், இளைய மகன் மணிகண்டன் டிராக்டரும் ஓட்டி வந்தார். அண்ணன், தம்பிகளுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் சக்திவேல் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த மணிகண்டனிடம், சக்திவேல் தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி அண்ணன், தம்பி இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
ஆத்திரம் அடைந்த சக்திவேல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது தம்பி என்றும் பாராமல் மார்பு, வயிறு உள்ளிட்ட பல இடங்களில் மணிகண்டனை சரமாரியாக குத்தினார்.
இதில் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மேல் செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் கொலை செய்யப்பட்டு கிடந்த மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ஐப்பசி மாத பவுர்ணமி நேற்று காலை 5.40 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 3.33 மணிக்கு நிறைவு பெற்றது.
- சுமார் 15 லட்சம் பக்தர்கள் அருணாசலேஸ்வரர் வலம் வந்து வழிபட்டனர்.
வேங்கிக்கால்:
ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்வதற்கு பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்ததால் நகரமே திக்கு முக்காடியது. ஐப்பசி மாத பவுர்ணமி நேற்று காலை 5.40 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 3.33 மணிக்கு நிறைவு பெற்றது.
14 கிலோ மீட்டர் தூரம் உள்ள திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை வலம் வருவதற்காகவும், அருணாசலேஸ்வரர் தரிசிக்கவும் நேற்று முன்தினம் இரவு முதலே பக்தர்கள் வரத்தொடங்கினர். வெயிலின் தாக்கம் இல்லாமல் அவ்வப்போது சாரல் மழையுடன் கூடிய இதமான சூழல் நிலவியது.
இதனால் நேற்று காலை முதலே பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் குடும்பம் குடும்பமாக அருணாசலேஸ்வரர் வலம் வந்தும், அருணாசலேஸ்வரரை கோவிலில் சாமி தரிசனம் செய்தும் சென்றனர்.
பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க இரவு கிரிவலப் பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் சுமார் 15 லட்சம் பக்தர்கள் அருணாசலேஸ்வரர் வலம் வந்து வழிபட்டனர்.
கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தில் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமிதரிசனம் செய்ய சுமார் 6 முதல் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.
பக்தர்களின் தரிசன வரிசை கோவில் வளாகத்தை கடந்து பெரிய தெரு வரை நீண்டிருந்ததால் பக்தர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை என சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் இனி வரும் பவுர்ணமி நாட்களிலாவது கோவில் வளாகத்தில் உள்ள காலி இடங்களில் மேற்கூரை அமைத்து சாமி தரிசனம் செய்வதற்கான தரிசன வரிசையை அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர்.
- மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.
- அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர்.
ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி திதி நேற்று தொடங்கி இன்று இரவு 3.42 மணிவரை இருக்கிறது. எனவே நேற்று இரவு முதலே பவுர்ணமி தொடங்கியதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.
இதனால் கிரிவல பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.
பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
அன்னாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு இன்று பக்தர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை காத்திருந்திருந்தனர்.
இறைவனுக்கு எத்தனையோ அபிஷேகம் செய்யப்பட்டாலும் அன்னாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. சிவலிங்கத்தை அன்னத்தினால் முழுமையாக மூடி ஆராதனைகள் செய்வதையே அன்னாபிஷேகம் என்கிறோம்.
இந்த அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம் என தெரிவித்தனர்.






