என் மலர்
திருவண்ணாமலை
- அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.
- 10 நாட்கள் காலை, இரவு என இருவேளையில் சாமி மாடவீதி உலா நடைபெறுகின்றன.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் வருகிற 13-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இதனையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 1-ந் தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம், தொடர்ந்து பிடாரி அம்மன், விநாயகர் உற்சவம் நடந்தது.
இன்று காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் நடந்தது. அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் காலை 6.25 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. கொடிமரத்தின் அருகே அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இதனை தொடர்ந்து 10 நாட்கள் காலை இரவு என இருவேளையில் சாமி மாடவீதி உலா நடைபெறுகின்றன.
வருகிற 10-ந்தேதி மகா தேரோட்டம் நடைபெறும். கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்வான மகா தீபம் 13-ந்தேதி ஏற்றப்படுகிறது.
13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருள்வார். அப்போது 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
13-ந்தேதி முதல் 11 நாட்களுக்கு மலை உச்சியில் அண்ணாமலையார் ஜோதிப்பிழம்பாக காட்சி தருவார். கார்த்திகை தீபத் திருவிழாவில் சுமார் 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை நடைபெற்ற கொடியேற்று விழாவில் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- சரிந்து விழுந்திருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.
- 12 மணி நேர மீட்பு பணிக்கு பிறகு நேற்று மாலை வீட்டில் புதைந்து இருந்த 5 பேர் உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டன.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் புயல் காரணமாக வரலாறு காணாத அளவில் கனமழை பெய்தது. கடந்த 1-ந்தேதி காலை தொடங்கி விடாமல் மழைக் கொட்டியது. திருவண்ணாமலை வ.உ.சி.நகர் பகுதியில் மகாதீப மலையின் சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்து பெரிய பாறை உருண்டது.
அதனை தொடர்ந்து பயங்கர சத்தத்துடன் மண் சரிவு ஏற்பட்டது. இதில் 2 வீடுகள் முற்றிலுமாக சிக்கிக் கொண்டது. அதில் ஒரு வீட்டுக்குள் இருந்தவர்கள் ஏற்கனவே வெளியேறி விட்டதால் ஆபத்து தவிர்க்கப்பட்டது.
ஆனால் மற்றொரு வீடு கண்ணிமைக்கும் நேரத்தில் மண் சரிவில் முழுமையாக மூடியது. அதோடு பாறைகளும் அடுத்தடுத்து வீட்டின் மீது விழுந்தன.
அந்த வீட்டுக்குள் இருந்த கூலித் தொழிலாளி ராஜ்குமார் (வயது 32) அவருடைய மனைவி மீனா (26) மற்றும் அவர்களது மகன் கவுதம் (9) மகள் இனியா ( 7) உறவினர்களான சுரேஷ் என்பவரது மகள் மகா (12) சரவணன் மகள் ரம்யா (12) மஞ்சுநாதன் மகள் வினோதினி (14) ஆகிய 7 பேரும் மண்சரிவில் சிக்கினர். அவர்கள் வீட்டுக்குள் உயிரோடு புதைந்து சமாதியானார்கள்.
இதனைக்கண்டு பதறிய அந்த பகுதி பொதுமக்கள் போலீசார், மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் மற்றும் தீயணைப்பு துறையினர் நேற்று முன்தினம் மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.
அரக்கோணம் பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த வீரர்கள் 30 பேர் மாநில பேரிடர் குழுவை சேர்ந்த 50 பேர் மற்றும் தீயணைப்புத் துறையினர் உட்பட 200 பேர் மீட்பு பணியில் களமிறங்கினர். மோப்ப நாய் உதவியுடன் மீட்பு பணி நடந்தது.
சரிந்து விழுந்திருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. ஆனாலும் சேறும் சகதியுமாக வீட்டின் மீது குவிந்து கிடந்த மண்ணையும் பாறை கற்களையும் அகற்றுவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டது. மலைப்பகுதியில் பெரிய பொக்லைன் எந்திரங்களை கொண்டு செல்ல முடியவில்லை.
இதை தொடர்ந்து சிறிய பொக்லைன் எந்திரத்தை குறுகலான பாதையின் வழியே செங்குத்தாக படிப்படியாக கொண்டு செல்லும் முயற்சி நடந்தது. அதனை வைத்து மீட்பு பணியை மேற்கொண்டனர்.
12 மணி நேர மீட்பு பணிக்கு பிறகு நேற்று மாலை வீட்டில் புதைந்து இருந்த 5 பேர் உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டன.
இதில் ஒரு உடல் மண்ணில் ஆழத்தில் சிக்கியிருந்ததால் வெளியே எடுக்க முடியவில்லை. அதனை மீட்கும் பணி தீவிரமாக நடந்தது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அந்த உடல் மீட்கப்பட்டது.
மேலும் 2 பேரின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
- லேசான மலையின் போது எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை.
- மலை அருகே வீடுகள் கட்டும் பொதுமக்கள் முன்கூட்டியே என்ஜினீயர் மூலம் ஆய்வு செய்து பணிகளை தொடங்க வேண்டும்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் மண்ணில் புதைந்து பலியான மேலும் 2 பேர் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. சென்னை ஐ.ஐ.டி ஓய்வு பெற்ற வல்லுனர்கள் மோகன், நாராயண ராவ், பூமிநாதன் ஆகியோர் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை வந்தனர். அவர்கள் மீட்பு பணிக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும் மகா தீப மலையில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருவண்ணாமலை மகாதீப மலையில் தொடர் மழை பெய்தால் மீண்டும் மண் சரிவு ஏற்படும். லேசான மலையின் போது எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை. மலை அருகே வீடுகள் கட்டும் பொதுமக்கள் முன்கூட்டியே என்ஜினீயர் மூலம் ஆய்வு செய்து பணிகளை தொடங்க வேண்டும். மண் சரிவு குறித்து அறிக்கை தயார் செய்துள்ளோம்.
இதனை அரசிடம் சமர்ப்பிப்போம். இது குறித்த முழு விவரங்களை அரசு வெளியிடும் என்றனர்.
- விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் வெள்ள சேதம் ஏற்பட்டது.
- திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
வேங்கிகால்:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணைக்கு, தென்பெண்ணை ஆற்றில் இருந்து நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதனால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் வெள்ள சேதம் ஏற்பட்டது. இன்று காலை சாத்தனூர் அணைக்கு 36 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையில் இருந்து நீர் திறப்பு 36 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று காலை ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் பரலான மழை பெய்தது.
திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், பள்ளிகொண்டா, காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை லேசான சாரல் மழை பெய்தது.
- விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி மாட வீதி உலா நடைபெற உள்ளது.
- விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். மேலும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருவார்கள்.
இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்னர் 3 நாட்கள் காவல் தெய்வ வழிபாடு நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் திருவண்ணாமலை சின்னக்கடை தெருவில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதியில் உலா வந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து நேற்று கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மனுக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பு அங்காரத்தில் பிடாரி அம்மன் எழுந்தருளி கோவிலின் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் முன்பு தயார் நிலையில் இருந்த சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் அம்மன் மாட வீதி உலா நடந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அப்போது விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி மாட வீதி உலா நடைபெற உள்ளது.
தொடர்ந்து நாளை (புதன்கிழமை) காலை 6 மணியில் இருந்து 7.25 மணிக்குள் சாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலையில் மற்றும் இரவில் விநாயகர், வள்ளி- தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 2-ம் நாள் விழாவில் இருந்து 9-ம் நாள் விழா வரை காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் மாட வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி விழாவும் நடைபெற உள்ளது.
இதற்கிடையில் 10-ந் தேதி (7-ம் நாள் விழா) பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடைபெற உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 13-ந் தேதி (10-ம் நாள் விழா) விடியற்காலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அன்று இரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதி உலாவும் நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- தமிழக அரசு சார்பில் காவல், தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
- அரசு 7 பேரையும் உயிருடன் மீட்கவே முயற்சிகளை மேற்கொண்டது.
திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இடிபாடுகளில் சிக்கியுள்ள வீட்டை துணை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர், " திருவண்ணாமலையில் நடந்தது மிகவும் தயரமான சம்பவம். விபத்து நடந்த பின்பு தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில் காவல், தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அரசு 7 பேரையும் உயிருடன் மீட்கவே முயற்சிகளை மேற்கொண்டது.
அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர் தொடர்ந்து மீட்பு பணியினை ஆய்வு செய்து வருகின்றனர். ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய ரூ.2000 கோடி கேட்கப்பட்டுள்ளது.
நாளை மாலைக்குள், அவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். ஐஐடி குழுவினர் நாளை மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் அதி கனமழை பெய்தது.
- கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையை கடந்தது.
இதன் எதிரொலியால், தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. குறிப்பாக புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழையால் கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..
இந்நிலையில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் நகராட்சி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- மலைப்பகுதியில் இருந்த ராஜ்குமார் என்பவருடைய வீடு மண் சரிவில் முற்றிலுமாக புதைந்தது.
- போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் புயல் மழை காரணமாக நேற்று மிக கனமழை பெய்தது. அதிகபட்சமாக 37 சென்டிமீட்டர் மழை பதிவானது. சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நிலையில் திருவண்ணாமலை வ. உ. சி. நகர் பகுதியில் மகா தீப மலையின் சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்து திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அங்கிருந்து ராட்சத பாறை ஒன்றும் உருண்டது. மலைப்பகுதியில் இருந்த ராஜ்குமார் என்பவருடைய வீடு மண் சரிவில் முற்றிலுமாக புதைந்தது. வீட்டில் இருந்த 7 பேர் வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கினர்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கனமழை நின்ற பிறகு அந்த பகுதிக்கு செல்ல முடிந்தது.
தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டதால் இடிபாடுகளில் சிக்கியவர்கள் வீட்டிற்கு அருகே செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. மண் சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். ராஜ்குமார் (32), மீனா (26), கவுதம் (9), இனியா (7), மகா (12), வினோதினி (14), ரம்யா (12) ஆகியோர் உள்ளே சிக்கினர். கவுதம், இனியா ஆகியோர் ராஜ்குமார், மீனா தம்பதியின் குழந்தைகள் ஆவர்.
இதனை தொடர்ந்து அந்த இடத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.
போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்பு படை வீரர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் தீயணைப்பு துறையினர் எந்திர உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இன்று காலையில் தொடர்ந்து மீட்பு பணி நடந்தது.
இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்பட்டது.
இந்நிலையில், திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 7 பேரில் குழந்தைகள் உள்பட 6 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. மீதமுள்ள ஒரு நபரின் உடலை மீட்கும் பணி நடந்து வந்தது.
இந்த நிலையில், ஏழாவது நபரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரையும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மழை பெய்து கொண்டே இருப்பதால், மீண்டும் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டது.
- மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் 200 மீட்டர் தொலைவில் மேலும் ஒரு இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது.
வங்க்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்தது.
இதன் எதிரொலியால், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.
இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், திருவண்ணாமலையில் நேற்று பாறை உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்டது. இதில், வீட்டின் மீது பாறை விழுந்ததை அடுத்து அதனுள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மழை பெய்து கொண்டே இருப்பதால், மீண்டும் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டது.
அதபோல், மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் 200 மீட்டர் தொலைவில் மேலும் ஒரு இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது.
இந்நிலையில், திருவண்ணாமலை தீபமலையில் அமைந்துள்ள குகை நமச்சிவாய ஆலயத்தின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.
இதில், நல்வாய்ப்பாக யாருக்கும் உயிர்சேதம் இல்லை. அதிர்ச்சியூட்டும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- மேலும் ஒரு இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் பாறை உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்ட இடத்தை இன்று காலை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மண் சரிவு ஏற்பட்டு வீட்டினுள் சிக்கி இருக்கும் நபர்கள் குறித்து கேட்டறிந்தார். மழை பெய்து கொண்டே இருப்பதால் மீண்டும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அப்பகுதிமக்களை முகாமில் தங்குமாறு அறிவுறுத்தினார். மேலும் மீட்பு படையினரிடம் விரைந்து செயல்பட வேண்டும்.
முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் மீட்பு பணியை துரிதப்படுத்த சென்னை ஐ.ஐ.டி. வல்லுனர்கள் 2 பேர் வருகிறார்கள். அவர்கள் வருகை பெரும் உதவியாக இருக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிலையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் 200 மீட்டர் தொலைவில் மேலும் ஒரு இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. மண் சரிவில் சிக்காமல் இருப்பதற்காக பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
- தனித்தீவு போல் காட்சியளித்து வருகிறது.
- பொதுமக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.
திருக்கோவிலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து நேற்று நள்ளிரவு 1.70 லட்சம் கன அடி தண்ணீர் திறந்ததால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்துள்ளது.
இதனால் வீரபாண்டி ஏரி உடைந்து திருக்கோவிலூர்-விழுப்புரம் சாலையில் உள்ள அரகண்டநல்லூர் முற்றிலும் துண்டிக்கப்பட்டு தனித்தீவு போல் காட்சியளித்து வருகிறது.
இதனால் பொதுமக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் பாலத்தை எட்டிப்பிடிக்கும் அளவிற்கு தண்ணீர் வேகமாக செல்வதால் ஆற்றங்கரை ஓரமாக வசித்த பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வீட்டை விட்டு வெளியேறி நடுரோட்டில் நின்று என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.
மனம்பூண்டியில் உள்ள ஓம் சக்தி நகர், பெருமாள் கோவில் தெரு, அஷ்டலட்சுமி நகர், தெய்வீகன் தெரு, தேவனூர் கூட்ரோடு, பழனி நகர், அரகண்டநல்லூர், பச்சையம்மன் கோவில் பகுதி ஆசிரியர் நகர் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் புகுந்ததில் சுமார் 1000 வீடுகள் தத்தளித்து கொண்டிருக்கின்றது.
திடீரென தண்ணீர் புகுந்ததால் மக்கள் தங்கள் வீடுகளின் மாடியில் தற்சமயம் தஞ்சம் அடைந்துள்ளனர். மாடியில் தஞ்சம் அடைந்த மக்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்ற இதுவரை மோட்டார் படகு மற்றும் தீயணைப்பு வீரர்கள் யாரும் வராததால் பொதுமக்கள் உயிருக்கு பயந்து பதட்டமான நிலையில் உள்ளனர்.
மேலும், தற்போது காலை உணவு கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் முதற்கட்டமாக உணவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரகண்டநல்லூர் பகுதியில் பெருமளவு பாதிக்கப்பட்டு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பேரிடர் மேலாண்மை குழுவினர் விரைந்து வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தென்பெண்ணை ஆற்றில் அளவுக்கு அதிகமாக ஓடும் வெள்ளம் நீரை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தென்பெண்ணை ஆற்றின் மேம்பாலத்தில் நின்று வேடிக்கை பார்த்து வருவதுடன் செல்போனில் செல்பி படம் எடுத்தும் வருகின்றனர்.
ஆற்றின் வேகம் நீரின் அளவு குறித்து கொஞ்சம் கூட பயமில்லாமல் பொதுமக்கள் ஜாலியாக நின்று வேடிக்கை பார்ப்பதை போலீசாரும் அப்புறப்படுத்தவில்லை. திருக்கோவிலூர் பம்ப்ஹவுஸ் ரோட்டில் தென் பெண்ணை ஆற்றின் வெள்ளநீர் புகுந்ததால் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு திருக்கோவிலூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முகையூர் ஏரி உடைந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
கீழையூர் பகுதியில் ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நகர மன்ற தலைவர் டி. என். முருகன் ஆணையாளர் திவ்யா துணை தலைவர் உமா மகேஸ்வரி குணா மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து மாற்று ஏற்பாடு செய்து வருகின்றனர்.
- 4-ந்தேதி காலை கொடியேற்றம் நடக்கிறது.
- அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் நடந்து வருகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழா காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நேற்று இரவு தொடங்கியது.
இன்று பிடாரி அம்மன் உற்சவமும், நாளை விநாயகர் உற்சவமும் நடைபெற உள்ளன. 3 நாட்கள் நடைபெறும் எல்லை தெய்வ வழிபாட்டுக்குப் பிறகு மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் 4-ந்தேதி காலை கொடியேற்றம் நடக்கிறது. இதையடுத்து 10 நாள் உற்சவம் ஆரம்பமாகிறது.
6-ம் நாள் உற்சவத்தில் 63 நாயன்மார்கள் வீதி உலாவும் அன்று இரவு தங்கத் தேரோட்டமும் நடைபெறும். 7-ம் நாள் உற்சவத்தில் பஞ்ச ரத மகா தேரோட்டம் 10-ந் தேதி நடைபெறும்.
அன்று ஒரே நாளில் 5 தேர்கள் மாட வீதியில் வலம் வரும். ஒவ்வொரு தேரும் நிலைக்கு வந்த பிறகு அடுத்த தேரின் புறப்பாடு இருக்கும். காலையில் தொடங்கும் மகா தேரோட்டம் நள்ளிரவு வரை நடைபெறும்.
தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கார்த்திகை தீபத் திருவிழா 13-ந்தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் மூலவர் சந்நிதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும்.
மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். 11 நாட்களுக்கு மகா தீப தரிசனத்தைக் காணலாம்.
முன்னதாக அருணாசலேவரர் கோவில் தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளத் தங்க கொடிமரம் முன்பு அர்த்த நாரீஸ்வரர் காட்சி தருவார்.
இந்நிகழ்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும். இதையடுத்து 3 நாட்கள் தெப்பல் உற்சவம் நடைபெற்றதும் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெறும்.
கார்த்திகை தீப திருவிழாவில் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் நடந்து வருகிறது.






