என் மலர்
திருவள்ளூர்
- பழவேற்காடு கடலில் படகு சவாரி மற்றும் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
- கடற்கரையில் ஆபத்தான பகுதி கண்டறியப்பட்டு அதில் சிவப்பு நிற அபாய கொடி நடப்பட்டுள்ளது.
பொன்னேரி:
காணும் பொங்கல் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சுற்றுலா தலங்கள் மற்றும் பூங்காக்கள், கடற்கரைக்கு பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று சமைத்து கொண்டு சென்ற உணவை சாப்பிட்டு உற்சாகமாக பொழுதை கழிப்பது வழக்கம். அதன்படி நாளை வண்டலூர் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, மெரினா, பெசன்ட் நகர், மாமல்லபுரம் கடற்கரையில் திரளானோர் குவிவார்கள். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் பழவேற்காடு கடற்கரையிலும் ஏராளமானோர் நாளை காலை முதல் மாலை வரை குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடற்கரைக்கு வருபவர்கள் அங்குள்ள டச்சு கல்லறை, நிழல் கடிகாரம், பழமை வாய்ந்த சிவன் கோவில், ஆதிநாராயண பெருமாள் கோவில், பழமை வாய்ந்த மசூதி, பழவேற்காடு ஏரி, பழவேற்காடு பறவைகள் சரணாலயம், உள்ளிட்டவைகளை பார்த்து ரசிப்பார்கள்.
இதையொட்டி பழவேற்காடு பகுதியில் உதவி ஆணையாளர் வீரக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் காளிராஜ், குணசேகரன், சாம் வில்சன், வேலுமணி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பொன்னேரி அடுத்த ஆண்டார்மடம், மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளி ஆகிய 2 இடங்களில் போலீசார் சோதனை சாவடி அமைத்து உள்ளனர். வாகனங்களை நிறுத்த தனியிடம் ஒதுக்கி உள்ளனர்.
பழவேற்காடு கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு முன்னதாகவே வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்து உள்ளனர். அங்கிருந்து கடற்கரை பகுதிக்கு நடந்து செல்ல வேண்டும்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, பழவேற்காடு கடலில் படகு சவாரி மற்றும் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளோடு வருபவர்கள் பத்திரமாக குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நகை, பணம் மற்றும் பொருட்களை பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும். சாலைகளில் பைக் ரேசில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
வனத்துறையினர் கூறும்போது, வனத்துறையினர் 5 பேர் கடற்கரையில் ரோந்து செல்வார்கள். வழிமாறி ஊருக்குள் சென்று கடற்கரைக்கு வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும். பழவேற்காடு தன்னார்வலர்கள் மூலமாக 25 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, படகில் ரோந்து செல்லப்படும். கடற்கரையில் ஆபத்தான பகுதி கண்டறியப்பட்டு அதில் சிவப்பு நிற அபாய கொடி நடப்பட்டுள்ளது என்றனர்.
- ஏரிக்கு 450 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
- 1000 கனஅடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
திருவள்ளூர்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.
வடகிழக்கு பருவமழையால் குடிநீர் வழங்கும் ஏரிகளில் சோழவரம் ஏரியை தவிர மற்ற ஏரிகள் அனைத்தும் நிரம்பின. முழு கொள்ளளவை எட்டியதால் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் இருந்து ஏற்கனவே உபரி நீர் திறந்துவிடப்பட்டது.
தற்போது பூண்டி ஏரியில் இருந்து மட்டும் 1000 கனஅடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஆனால் சோழவரம் ஏரிக்கு மட்டும் எதிர்பார்த்த அளவு தண்ணீர் வரத்து இல்லாமல் இருந்தது. இதனால் சோழவரம் ஏரியில் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்தது.
இந்த நிலையில் தற்போது சோழவரம் ஏரி 10 மாதங்களுக்கு பிறகு 50 சதவீதம் நிறைந்து உள்ளது. மொத்த கொள்ளளவான 1080 மில்லியன் கனஅடியில் 503 மில்லியன் கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரிக்கு 450 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
கடந்த ஆண்டு இதே நாளில் சோழவரம் ஏரியில் 770 மி.கனஅடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பூண்டி ஏரியில் மொத்த உயரமான 35 அடியில் 34.93 அடியும், புழல் ஏரியில் 21 அடியில் 19.99 அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 24 அடியில் 23.15 அடிக்கும் தண்ணீர் உள்ளது. ஏரிகளில் தண்ணீர் இருப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
- வீட்டு வரி,தொழில் வரி உள்ளிட்ட வரி உயர்வுகள் ஏற்படும்.
- பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
பெரியபாளையம்:
சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்டது மல்லியங்குப்பம் ஊராட்சி. இங்கு சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மல்லியங்குப்பம் ஊராட்சியை ஆரணி பேரூராட்சியுடன் இணைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்நிலையில், மல்லியங் குப்பம் ஊராட்சியை ஆரணி பேரூராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலை திட்டம் பறிபோகும். வீட்டு வரி,தொழில் வரி உள்ளிட்ட வரி உயர்வுகள் ஏற்படும்.
இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
நேற்று மதியம் மல்லியங்குப்பம் ஊராட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் புதுவாயல்-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் ஆரணி மார்க்கெட் பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.
இதைத்தொடர்ந்து மல்லியங்குப்பம் கிராமமக்கள் தங்களது கிராமத்தை ஆரணி பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபு சங்கர் மற்றும் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் பரணி ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது கலெக்டர் பிரபுசங்கர் கூறும்போது, பிப்ரவரி 9-ந் தேதிக்குள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வருவாய் துறை கருத்து கேட்பு கூட்டம் உள்ளிட்ட நடைமுறை விதிகள் மேற்கொள்ளப் படும். உங்களது கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
- புதிதாக தடுப்பணைகள் கட்டஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- ஆந்திர அரசு தமிழகத்துக்கு வருடம் தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு தமிழகத்துக்கு வருடம் தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி. எம். சி. என மொத்தம் 12 டி. எம். சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும். அதன்படி கடந்த செப்டம்பர் 22 -ந்தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
இதற்கிடையே புயல் மற்றும் வடகிழக்கு பருவ மழை காரணமாக பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்ததால் பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவான 35 அடியை எட்டியது. ஏரியின் பாதுகாப்பை கருதி கடந்த மாதம் 12-ந்தேதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. அப்போது முதல் தொடர்ந்து உபரி நீர் வீணாக கடலில் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியதும் உபரி நீர் இப்படி வீணாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. ஆனால் கோடை காலங்களில் பூண்டி ஏரி முழுவதுமாக வறண்டு பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.
கொசஸ்தலை ஆற்றின் மீது ஆற்றம்பாக்கம், திருக்கண்டலம், அணைக்கட்டு பகுதிகளில் தடுப்பு அணைகள் உள்ளன. மேலும் கூடுதல் தடுப்பணைகள் கட்டினால் பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்க்கலாம். இதனைக் கருத்தில் கொண்டு புதிதாக தடுப்பணைகள் கட்டஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தற்போது பூண்டி ஏரியில் மொத்த உயரமான 35 அடியில் 34.93 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கனஅடியில் 3124 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. ஏரிக்கு வரும் 1000 கனஅடி தண்ணீர் அப்படியே உபரிநீராக கொசஸ்தலை ஆற்றில் திறந்த விடப்படுகிறது. வழக்கமாக கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும். தற்போது பூண்டி ஏரி நிரம்பி உள்ள நிலையில் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.
இதனால் பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கும் தண்ணீரை திறந்து விட முடியாத நிலை உள்ளது. எனவே கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரை தண்ணீர் பெறுவதை தற்போது நிறுத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். புழல் ஏரியில் மொத்த உயரமான 21 அடியில் 20.16 அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த உயரமான 24 அடியில் 23.25 அடியும் தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதுமான தண்ணீர் உள்ளதால் இந்த ஆண்டு தட்டுப்பாடின்றி சென்னையில் குடிநீர் வினியோகிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- காரை நிறுத்தி விட்டு ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களை மூட்டை மூட்டையாக மர்ம நபர்கள் ஏற்றி செல்கிறார்கள்.
- ரேசன் கடை ஊழியரிடம் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ரேசன் அரசி உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்து ஆந்தி மாநிலத்திற்கு கடத்தப்படுவது அதிகரித்து உள்ளது. பஸ், ரெயில்களில் கடத்தப்படும் ரேசன் அரிசி மூட்டைகளை அவ்வப்போது அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ரேசன் கடையில் இருந்து இரவு நேரத்தில் மூட்டை,மூட்டையா ரேசன் அரசி கடத்தப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் அடுத்த உளுந்தை கிராமத்தில் ரேசன் கடை உள்ளது. இந்த ரேசன் கடையில் இரவு நேரத்தில் கடையின் முன்பு காரை நிறுத்தி விட்டு ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்களை மூட்டை மூட்டையாக மர்ம நபர்கள் ஏற்றி செல்கிறார்கள். இதனை அவ்வழியே சென்ற ஒருவர் தனது செல்போனில் வீடியே எடுத்து வெளியிட்டு உள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இரவு நேரத்தில் ரேசன் கடை பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக குறிப்பிட்ட ரேசன் கடை ஊழியரிடம் விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். அந்த ரேசன் கடையில் பொதுமக்களுக்கு பொருட்கள் சரிவர வழங்குவதில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த விவகாரத்தில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- தூத்துக்குடி, திரேஸ்புரம் கடற்கரையில் மீனவர்கள் கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
- பழவேற்காடு கடற்கரையிலும் மக்கள் கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தமிழகத்தில் சுனாமி தாக்கி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.
எத்தனை ஆண்டுகளானாலும் சுனாமி தந்த வடு மாறாது. வான் உயரத்துக்கு எழுந்த ராட்சத அலைகள் வாரிச்சுருட்டிச் சென்ற உயிர்கள், சொத்துகளின் எண்ணிக்கையை சொல்லி மாளாது. பலர் தங்களது உறவுகளை இழந்து மாறாத சோகத்துடன் இன்றும் கண்ணீருடன் வாழ்கிறார்கள்.
இந்நிலையில் 20-வது ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கடலூர் சிங்காரத்தோப்பு கடற்கரையில் சுனாமியில் உயிர் நீத்தவர்களை எண்ணி ஏராளமான மக்கள் கடலில் பாலை ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல் தூத்துக்குடி, திரேஸ்புரம் கடற்கரையில் மீனவர்கள் கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பழவேற்காடு கடற்கரையிலும் மக்கள் கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
- எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்குவதற்காக பா.ஜ.க. செயல்பட்டு வந்தது.
- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மாநில உரிமைகளை பறிக்கும் செயல்.
திருவள்ளூர்:
திருவள்ளூரில் காங்கிரஸ் எம்.பி.சசிகாந்த் செந்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வரலாறு காணாத வகையில் குளிர் கால பாராளுமன்ற கூட்டத் தொடர் நடந்து முடிவடைந்தது. கூட்டத்தொடர் ஆரம்பித்த தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்குவதற்காக பா.ஜ.க. செயல்பட்டு வந்தது.
அதானி தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசினால் பா.ஜ.க.வுக்கு ஒரு வித பயம் உருவாவதை பார்த்தோம். ஜனநாயகம் அரசியல் வரலாறு உள்ள நாட்டில் அதானி என்ற ஒரு மனிதனுக்காக பா.ஜ.க. இறங்கி போகிறது.
பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் பா.ஜ.க. அம்பேத்கரை பற்றி பேசுவதற்கான கருத்தை உருவாக்கி வைத்துள்ளது. பா.ஜ.க. இதுவரை அம்பேத்கரை பற்றியும், அரசியலமைப்பு சட்டத்தை பற்றியும் பேசியதை நான் பார்த்ததில்லை. பா.ஜ.க.வின் உண்மையான வெறுப்பு, கோபம் எல்லாமே அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது இருந்து வருகிறது.
ஒரு தேர்தலையே ஒரே பகுதியாக வைத்து நடத்த முடியாத நிலையில் எப்படி ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த முடியும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மாநில உரிமைகளை பறிக்கும் செயல். அடிப்படை ஜனநாயக தவறு.
சென்னைக்கு அடுத்த படியாக முக்கிய ரெயில் நிலையமாக திருவள்ளூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையங்கள் உள்ளது. இந்த ரெயில் நிலையங்களில் வருங்காலத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக ரெயில்வே துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
திருவள்ளூரில் புதிய ரெயில் முனையம் அமைக்கவும் கோரிக்கை விடுத்து உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது திருவள்ளூர் தொகுதி பாராளுமன்ற பொறுப்பாளர் ஏ.ஜி.சிதம்பரம், மாநில நிர்வாகிகள் எம்.சம்பத், ஏகாட்டூர் ஆனந்தன், ஜெ.கே.வெங்கடேசன், ஆர்.சசிகுமார், ஆ.திவாகர், சதீஷ், உடன் இருந்தனர்.
- தாக்குதலில் படுகாயம் அடைந்த 5 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அம்பத்தூர்:
அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையம் அருகே மேனாம்பேடு சாலையில் நேற்று இரவு 10 மணியளவில் வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் கஞ்சா போதையில் பட்டா கத்தியை சாலையில் உரசிய படி சென்று ரகளையில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென ஆவேசம் அடைந்த அவர்கள் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த வட மாநில வாலிபர்கள் மற்றும் பொதுமக்களை ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டினர். இதனை கண்டு அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அலறியடித்து ஓடினர்.
போதை வாலிபர்கள் வெட்டியதில் திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு பகுதியை சேர்ந்த நவீன்(20), பாடியை சேர்ந்த டிரைவர் அசான் மைதீன்(35), அம்பத்தூரைச் சேர்ந்த தனசேகரன்(47), வடமாநிலத்தைச் சேர்ந்த மகேந்திர குமார்(35), தீபக் (27) ஆகிய 5 பேர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ரவுடி கும்பல் அரிவாள், பட்டாகத்தியை காட்டி மிரட்டியபடி அங்கிருந்து தப்ப சென்று விட்டனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த 5 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதில் நவீன் என்பவருக்கு தலையில் பலத்த வெட்டுகாயம் ஏற்பட்டு 22 தையல்கள் போடப் பட்டுள்ளன. அவரது இடது கையில் மோதிர விரல் துண்டானது. கட்டை விரல் தவிர்த்து மற்ற மூன்று விரல்களும் தொங்கிய நிலையில் இருந்தது. அவருக்கு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் டிரைவர் அசான் மைதீனுக்கு தலை நடுவில் 9 தையல்கள், தனசேகரனுக்கு கையில் 7 தையல்கள், வடமாநில வாலிபர்கள் மகேந்திர குமாருக்கு கழுத்தில் 6 தையல்களும், தீபக்கிற்கு தலையில் 13 தையல்களும் போடப்பட்டு உள்ளன. இதுபற்றி அறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே வடமாநில வாலிபர்கள் தாக்கப்பட்டது பற்றி அறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் நிலையத்தை வட மாநில வாலிபர்கள் 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போலீசாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
தாக்குதல் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அரிவாளால் வெட்டியது அதே பகுதியை சேர்ந்த ரவுடிகளான மங்களபுரத்தை சேர்ந்த நித்திவேல், மண்ணூர்பேட்டையை சேர்ந்த லக்கி என்கிற லோகேஷ், திருவேற்காடு அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரிந்தது. அவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கஞ்சா போதையில் அவர்கள் கெத்து காட்டுவதற்காக பொதுமக்களை மிரட்டி வெட்டியது விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவான ரவுடிகள் நித்திவேல் உள்பட 3 பேரையும் பிடிக்க அம்பத்தூர் உதவி கமிஷனர் கிரி தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- யுகேந்திரன் எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உள்ள 3-வது நடைமேடையில் நிறுத்தினர்.
- பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கி புறநகர் மின்சார ரெயில் மூலமாக சென்னைக்கு வந்தனர்.
திருவள்ளூர்:
திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி நேற்று இரவு சப்தகிரி விரைவு ரெயில் வந்து கொண்டு இருந்தது. என்ஜின் டிரைவராக யுகேந்திரன் இருந்தார்.
ரெயில் திருவள்ளூர் அருகே வந்து கொண்டு இருந்தபோது என்ஜின் டிரைவர் யுகேந்திரனுக்கு திடீரென வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரால் தொடர்ந்து ரெயிலை இயக்க முடியாத நிலை உருவானது.
இதற்குள் இரவு 9 மணியளவில் ரெயில் திருவள்ளூர் ரெயில் நிலையம் வந்தது. இதையடுத்து டிரைவர் யுகேந்திரன் எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உள்ள 3-வது நடைமேடையில் நிறுத்தினர்.
பின்னர் அவர் தனது உடல்நிலை குறித்து சென்னையில் உள்ள ரெயில்வே அதிகாரிகளுக்கும், திருவள்ளூரில் உள்ள அதிகாரிகளுக்கும் தெரிவித்தார்.
பின்னர் உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
ரெயில் நீண்டநேரம் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நின்றதால் அதில் இருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ஏராளமான பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கி புறநகர் மின்சார ரெயில் மூலமாக சென்னைக்கு வந்தனர்.
பின்னர் இரவு 10.15 மணியளவில் சென்னையில் இருந்து வந்த மற்றொரு என்ஜின் டிரைவர் நிறுத்தப்பட்ட சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை சென்னை நோக்கி ஓட்டி வந்தார்.
- கழிவு நீர் கலப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது
- புழல் ஏரியை பாதுகாக்க வேண்டும் என்றார்.
ஆவடி:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. இந்த ஏரி சுமார் 18 சதுர கி.மீ. பரப்பளவில் செங்குன்றம், புழல், பம்மது குளம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிவரை பரந்து விரிந்து உள்ளது. புழல் ஏரியின் உயரம் 21.20 அடி.3300 மில்லியன் கனஅடி தண்ணீர்சேமித்து வைக்கலாம்.
தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக புழல் ஏரி முழுவதும் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. மேலும் புழல் ஏரியில் கழிவு நீர் கலப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திருமுல்லைவாயல் மற்றும் அம்பத்தூர் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் ஏரி அருகே உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் புழல் ஏரியில் கலந்து வருகிறது.
குறிப்பாக ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயல் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் முழுவதும் புழல் எரியில் கலக்கிறது. திருமுல்லைவாயல் பகுதியில் பச்சையம்மன்கோவில் அருகே உள்ள குளக்கரை சாலை உள்ளிட்ட பகுதிகள் வழியாக வெங்கடாசலம் நகர் பகுதியில் புழல் ஏரியில் சேரும் வகையில் சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு மழைநீர்கால்வாய் உள்ளது.
இதேபோல், சி.டி.எச். சாலை அருகே சரஸ்வதி நகர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக தென்றல் நகர் பகுதியிலும் புழல் ஏரியில் கலக்கும் வகையில் சுமார் 2½ கி.மீ. தூரத்திற்கு மற்றொரு மழைநீர் கால்வாய் உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த 2 மழைநீர் கால்வாய்களில், மாசிலாமணீஸ்வரர் நகர், கமலம் நகர், வெங்கடாசலம் நகர் மற்றும் சரஸ்வதி நகர், தென்றல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் விடப்படுகிறது. இதனால் மழைநீர்கால்வாயில் கழிவு நீர் பாய்ந்து புழல் ஏரியில் கலந்து வருகிறது. ஏரி மாசடைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய்கள் மூலம் மட்டுமல்லாமல், திருமுல்லைவாயில் வெங்கடாசலம் நகர் அருகே உள்ள அனுகிரகம் நகர், கற்பகாம்பாள்நகர், சிவா கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மழைநீரோடு கழிவுநீர் புழல் ஏரியில் கலக்கிறது.
மேலும், அம்பத்தூர், திருமுல்லைவாயல் தென்றல் நகர், ஒரகடம் வெங்கடே ஸ்வரா நகர் மற்றும் பம்மதுகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளின் கழிவுநீரும் புழல் ஏரியில் சேருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புழல் ஏரியை பாதுகாக்க வேண்டும் என்றார்.
- பலத்த மழை இல்லாததால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது.
- உபரி நீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
திருவள்ளூர்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பூண்டி ஏரி முழு கொள்ளளவான 35 அடியை எட்டியது. இதையடுத்து ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த 12-ந் தேதி உபரி நீர் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் 1000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் 16, 500 கன அடிவரை உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
தற்போது பலத்த மழை இல்லாததால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரிநீர் கடந்த 2 நாட்களாக படிப்படியாக ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. நேற்று மாலை முதல் பூண்டி ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
பூண்டி ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 1810 கனஅடியாக உள்ளது. மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கனஅடியில் 2749 மில்லியன் கன அடியாக உள்ளது. மொத்த உயரமான 35 அடியில் 33.76 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பி உள்ளது.
ஏரி நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்தால் பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- நெற்பயிர்களில் நுனிக் கருகல் நோய் பரவி உள்ளது.
- கிராமங்களில் பாதிக்கப்பட்டு உள்ள நெற்பயிர்களை ஆய்வு செய்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூர், பொன்னேரி பகுதியில் சுமார் 33 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் பிபிடி-5204 ரகத்தை விவசாயிகள் நடவு செய்து உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த கன மழையால் பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. கோளூர், தேவம்பட்டு, கள்ளுர், மெதுர், திருப்பாலைவனம், தத்தைமஞ்சி, உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வயலில் 1000 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி உள்ளன.
இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்
இதற்கிடையே சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டு உள்ள நெற்பயிர்களில் நுனிக் கருகல் நோய் பரவி உள்ளது. இது குறித்து விவசாயிகள் வேளாண்மை துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கலா தேவி, வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) ரமேஷ், வேளாண் அறிவியல் நிலையம் திரூர் முனைவர். சுதாசா, மீஞ்சூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் டில்லி குமார் மற்றும் வட்டார வேளாண்மை அலுவலர்கள் கோளூர், மெதூர் ஆகிய கிராமங்களில் பாதிக்கப்பட்டு உள்ள நெற்பயிர்களை ஆய்வு செய்தனர்.
அப்போது, நெல் பயிரில் அதிகமாக தண்ணீர் தேங்கி உள்ளதால் துத்தநாக சத்து குறைபாடு காரணமாக நுனிகருகல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ யூரியா மற்றும் ஒரு கிலோ ஜிங்க் சல்பேட்டை விசைத்தெளிப்பான் மூலம் தெளிக்குமாறு விவசாயிகளிடம் பரிந்துரை செய்து உள்ளனர்.






