என் மலர்
திருநெல்வேலி
- வழக்கமாக ரூ. 2 கோடி வரை விற்பனை நடைபெறும் நிலையில் பண்டிகை, திருவிழா நேரங்களில் ரூ. 6 முதல் ரூ. 7 கோடி வரை விற்பனை நடைபெறும்.
- மேலப்பாளையம் வாரச்சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாடுகள் கொண்டுவரப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட மேலப்பாளையத்தில் கால்நடை சந்தை நடைபெற்று வருகிறது.
ஆடு, மாடுகளுடன், கோழி, கருவாடு உள்ளிட்டவைகளும் விற்பனை செய்யப்படுவதால் தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்றாக இது திகழ்கிறது.
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாடு விற்பனையும், செவ்வாய்கிழமைகளில் ஆடு விற்பனையும் நடைபெற்று வருகிறது.
இந்த சந்தையில் விற்பனைக்கு வரும் ஆடு, மாடுகளை வாங்க நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் அதிகளவில் வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களது ஆடு, மாடுகளை சந்தைக்கு கொண்டு வந்து நல்ல விலைக்கு விற்பனை செய்கின்றனர். இந்த சந்தையில் பொங்கல், தீபாவளி, ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் உட்பட முக்கிய பண்டிகை காலங்களில் ஆடு, மாடு விற்பனை அதிகளவில் காணப்படும். வழக்கமாக ரூ. 2 கோடி வரை விற்பனை நடைபெறும் நிலையில் பண்டிகை, திருவிழா நேரங்களில் ரூ. 6 முதல் ரூ. 7 கோடி வரை விற்பனை நடைபெறும்.
இந்நிலையில் ரம்ஜான் பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் இன்று மேலப்பாளையம் சந்தையில் ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளுடன் திரண்டனர்.
இதற்காக மேலப்பாளையம் வாரச்சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாடுகள் கொண்டுவரப்பட்டது. அவற்றை வாங்க ஏராளமான வியாபாரிகள், பொது மக்களும் குவிந்தனர்.
- நயினார் நாகேந்திரன் உள்பட 25 பேர் மீது வழக்குப்பதிவு.
- விதிகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்ததாக புகார்.
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பிரதான கட்சியான பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நேற்று ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை. இந்நிலையில் நேற்று ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம், இருக்கன்துறை உள்ளிட்ட பகுதிகளில் இரவு 10 மணிக்கு மேல் அவர் நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக தகவல் அறிந்த பறக்கும்படை அதிகாரி தினேஷ்குமார் பழவூர் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 25 பேர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணக்குகளை சமர்ப்பிக்காத நிலையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- மொத்தம் 23 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள் மட்டுமே தாக்கல்.
நெல்லை மக்களவை தொகுதியில் போட்டியிடும் 14 வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவின பார்வையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
தேர்தல் செலவு கணக்குகளை இன்று மாலை 5 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கணக்குகளை சமர்ப்பிக்காத நிலையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கணக்கு தாக்கல் செய்ய தவறினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அனைத்து அனுமதிகளும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 23 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள் மட்டுமே செலவு கணக்கை முழுமையாக தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- எந்தவிதமான வாக்குறுதியும் நிறைவேற்றாமல் எப்படி ஓட்டு கேட்க பா.ஜனதாவினர் வருகிறார்கள் என்று தெரியவில்லை.
- பண மதிப்பிழப்பு செய்தது வேடிக்கையான ஒன்று.
நெல்லை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லைக்கு வரும் ராகுல் காந்தி ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் இறங்குகிறார். அங்கிருந்து கார் மூலமாக பெல் பள்ளி மைதானத்திற்கு வந்து சேர்கிறார். அப்போது ரோடு-ஷோ நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளது.
நெல்லை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான சென்னையில் உள்ள ஓட்டல்களில் பறக்கும் படை சோதனை மற்றும் ரெயில் நிலையத்தில் சிக்கிய ரூ.4 கோடி விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அந்த பணத்தை திருப்பி கொடுத்து விடுவார்கள். அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்ய மாட்டார்கள்.
சாதாரண வேட்பாளர்களை, நோஞ்சான் வேட்பாளர்களை தான் துன்பப்படுத்துவார்கள். அதுதான் பா.ஜ.க.வின் ஸ்டைல்.
எந்தவிதமான வாக்குறுதியும் நிறைவேற்றாமல் எப்படி ஓட்டு கேட்க பா.ஜனதாவினர் வருகிறார்கள் என்று தெரியவில்லை. இதனால் தான் தற்போது ஓட்டு கேட்க வரும்போது பா.ஜ.க.வினர் கூனி குறுகி போய் நிற்கின்றனர்.
பண மதிப்பிழப்பு செய்தது வேடிக்கையான ஒன்று. தமிழர்களின் உரிமைகளை பா.ஜ.க பறித்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பா.ஜ.க.வுடன் கொல்லைப்புறமாக அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.
பா.ஜ.க.வினரின் சர்வாதிகாரம் மேலோங்கி நிற்கிறது. பாசிசம் ஒழிய வேண்டும். ஜனநாயகம் மலர வேண்டும். சர்வாதிகாரம் வீழ வேண்டும். அதற்கு இந்த தேர்தல் பதில் சொல்லும் என்று நம்புகிறோம். இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாக்காளர்கள் பூர்த்தி செய்த பின்னர் படிவங்களை உதவி தேர்தல் அலுவலர்கள் மூலம் சேகரிக்கப்பட்டது.
- முதற்கட்டமாக இன்றும், நாளை மறுநாளும் (8-ந் தேதியும்) தபால் வாக்குகள் பெறும் பணி நடக்கிறது.
நெல்லை:
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலுக்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்குச் சாவடிக்கு நேரில் வந்து வாக்கு அளிக்க இயலாத 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏதுவாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று, அவர்கள் விருப்பப்பட்டால் தபால் வாக்கு அளிக்கலாம் என்ற விபரத்தை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து கடந்த மாதம் 20-ந் தேதி முதல் 5 நாட்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களும் தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்களிடம் நேரில் சென்று அவர்களது விருப்பத்தை கேட்டனர். மேலும் வீட்டிலிருந்தே வாக்களிக்க விரும்புபவர்களுக்கு 12 டி விண்ணப்ப படிவத்தை வழங்கினர். அதனை வாக்காளர்கள் பூர்த்தி செய்த பின்னர் படிவங்களை உதவி தேர்தல் அலுவலர்கள் மூலம் சேகரிக்கப்பட்டது.
நெல்லை பாராளுமன்ற தொகுதியை பொருத்தவரை 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2,521 மூத்த குடிமக்கள், 1146 மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்திருந்தனர்.

அந்த வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடி வாக்களிக்கும் விதமாக அவர்களிடம் தபால் வாக்குகளை பெறும் பணி நெல்லை மாவட்டத்தில் இன்று முதல் தொடங்கியது. தபால் வாக்குச்சீட்டு வழங்குவதற்கு மண்டல அலுவலர்கள் தலைமையிலான வாக்குச்சாவடி குழு அமைக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்த மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களிடம் வாக்குகளை பெற்றனர். பின்னர் அதனை அந்த பெட்டியில் போட்டு சீல் வைத்தனர். இந்த பணிகள் அனைத்தும் நுண் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. முதற்கட்டமாக இன்றும், நாளை மறுநாளும் (8-ந் தேதியும்) தபால் வாக்குகள் பெறும் பணி நடக்கிறது.
இதனையொட்டி மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் இன்று காலை 7 மணிக்கு தொகுதி முழுவதும் உள்ள ஒவ்வொரு தாலுகா அலுவலகத்தில் இருந்தும் தனி வாகனத்தில் தேர்தல் ஊழியர்கள் அடங்கிய குழு புறப்பட்டு சென்றது. அவர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளை பெற்று தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த பணியானது நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மானூர், சேரன்மகாதேவி, அம்பை, நெல்லை, பாளை, நாங்குநேரி, வள்ளியூர், திசையன்விளை, ராதாபுரம், ஆலங்குளம், கடையம் உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களில் இருந்து இன்று தொடங்கியது.
இந்த பணியில் மண்டல அலுவலர் தலைமையில் மண்டல உதவியாளர், சப்-இன்ஸ்பெக்டர் தரத்திலான காவல்துறையினர், உதவியாளர், நுண்பார்வையாளர், வீடியோகிராபர் ஆகிய 6 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேற்கண்ட 2 நாட்களிலும் தபால் வாக்கு செலுத்த முடியாதவர்களுக்கு வாய்ப்பாக வருகிற 10-ந் தேதி மீண்டும் இதே போல் ஊழியர்கள் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு சென்று வாக்கை பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிகள் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. முன்னதாக அனைத்து தாலுகா அலுவலகங்களில் இருந்தும் தபால் வாக்குகளை பெறுவதற்காக எடுத்து செல்லும் பெட்டி அரசியல் கட்சியினரின் முன்னிலையில் திறந்து காண்பிக்கப்பட்டது.
- சோதனையானது சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக இன்று காலையும் தொடர்ந்து வருகிறது.
- சோதனையில் கிடைத்த சில ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெல்லை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அரசியல் கட்சியினர் மூலம் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக அரசு ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்கள் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்துள்ளதாகவும், அதனை அரசியல் கட்சியினருக்கு நன்கொடையாக வழங்க திட்டமிட்டிருப்பதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் வருவமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறையின் டெண்டர்களை எடுக்கும் அரசு ஒப்பந்ததார் ஆர்.எஸ்.முருகன் என்பவருக்கு சொந்தமான நாங்குநேரி அருகே உள்ள விஜயநாராயணத்தில் அவரது பண்ணை வீட்டில் நேற்று மதியம் வருமானவரித்துறை அதிகாரிகள் 6 பேர் குழுவினர் சோதனையை தொடங்கினர்.
தொடர்ந்து பாளை பெருமாள்புரத்தில் உள்ள ஆர்.எஸ்.முருகனின் அலுவலகத்திலும், என்.ஜி.ஓ. காலனியில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இதில் என்.ஜி.ஓ. காலனி வீட்டில் சுமார் 2 மணி நேரம் மட்டுமே சோதனை நடத்தப்பட்ட நிலையில், விஜயநாராயணம் பண்ணை வீட்டில் இன்று காலை வரையிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனையானது சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக இன்று காலையும் தொடர்ந்து வருகிறது. சோதனையில் கிடைத்த சில ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெருமாள்புரம் அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு 11 மணி வரையிலும் சோதனை நடத்தப்பட்ட நிலையில் அதன் பின்னர் வருமான வரித்துறையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அதே நேரத்தில் அந்த அலுவலகத்தை வருமான வரித்துறையினர் தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளனர்.
அங்கு அதிகாரி ஒருவர் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேறு யாரும் அந்த அலுவலகத்திற்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் தி.மு.க. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் தற்போது அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.
- நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.
- நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படையினரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் அதிரடி சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பிரபல அரசு ஒப்பந்ததாரர் ஒருவரது வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வள்ளியூர் அருகே உள்ள விஜயநாராயணம் பகுதியில் ஒப்பந்ததாரரின் பண்ணை வீட்டில் இந்த சோதனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படையினரும், வருமான வரித்துறை அதிகாரிகளும் அதிரடி சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று பிரதான கட்சி ஒன்றின் பிரமுகராக இருந்து வரும் அரசு ஒப்பந்ததாரர் ஒருவரது வீட்டில் நடத்தப்படும் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளரை அதரித்து தேர்தல் பணி மேற்கொண்டு வருகிறார்.
- அலுவலகத்தில் இருந்து பணம் ஏதும் கைப்பற்றவில்லை என ஆவுடையப்பன் விளக்கம்.
திமுக கூட்டணியில் திருநெல்வேலி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் ப்ரூஸ் நிறுத்தப்பட்டுள்ளார். இவரை ஆதரித்து திமுக தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பனும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ்க்கு வாக்குகள் திரட்டி வருகிறார்.
இந்த நிலையில் ஆவுடையப்பன் அலுவலகத்தில் நேற்று திடீரென வருவமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த தகவல் அறிந்து அவரது ஆதராவளர்களும், திமுகவினர் அலுவலம் முன் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
வருமானவரித்துறை உதவி ஆணையர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தி பாக முகவர்கள், வட்ட செயலாளர்களுக்கு பணம் வழங்கியதற்கான ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக தகவல் வெளியாகின.
அதேசமயத்தில் தன்னுடைய அலுவலகத்தில் பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை எனத் தெரிவித்த ஆவுடையப்பன், தன்னை பிரசாரம் செய்ய விடாமல் சுமார் இரண்டு மணி தடுத்து வைத்தனர் எனக் குற்றம்சாட்டினார்.
- நாகலெட்சுமி உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
நெல்லை:
தென்காசி பண்பொழியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகள் நாகலெட்சுமி (வயது18).
இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். இதனால் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் விடுதியில் தங்கி இருந்து நாகலெட்சுமி படித்தார்.
இந்நிலையில் நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்ற நாகலெட்சுமி, விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை அந்த அறையில் தங்கியிருந்த சக தோழிகள் இன்று காலை எழுந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் கல்லூரி விடுதி வார்டனுக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து பாளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக கல்லூரிக்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் தலைமையிலான போலீசார், நாகலெட்சுமி உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சமீபத்தில் செமஸ்டர் தேர்வு முடிவு வெளியான நிலையில் அதில் நாகலெட்சுமி சில பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் விரக்தியில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனால் தேர்ச்சி பெறாத விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- தி.மு.க.வினர் தேர்தல் பணிகளில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்யவேண்டும் என கண்டித்தார்.
நெல்லை:
நெல்லை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டு அவர் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.
இந்த தொகுதி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் மிகவும் எதிர்பார்த்த நிலையில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் மிகுந்த ஏமாற்றம் அடைந்த தி.மு.க.வினர் தேர்தல் பணிகளில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூசும் தி.மு.க.வினருக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருந்து வருவதாகவும், இதனால் தேர்தல் வேலைகளில் சுணக்கம் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்து வந்தது. அதே நேரத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் நெல்லை தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு அவர் கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றியடைய செய்வதற்காக பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார்.
அதேநேரத்தில் வேட்பாளரான ராபர்ட் புரூஸ், சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்திக்காமல் இருந்ததாக கூறி அவரது ஆதரவாளர்கள் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்துள்ளனர். இதையடுத்து ராபர்ட் புரூஸ் அகில இந்திய காங்கிரஸ் மேலிடத்தில் புகார் கூறியுள்ளார். உடனடியாக மேலிடத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்பு கொண்டு காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்யுமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து நெல்லை தொகுதியின் நிலவரத்தை கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோஷ்டி பூசல் உள்ளிட்ட எந்த பிரச்சனைகளுக்கும் இடம் கொடுக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்யவேண்டும் என கண்டித்தார். மேலும் தேர்தல் பணிகளில் எவ்வித சுணக்கமும் இல்லாமல் இருக்கும் விதமாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனை நெல்லை பாராளுமன்ற தொகுதி கூடுதல் பொறுப்பாளராக அறிவித்துள்ளார்.
இதையடுத்து கடந்த 2 நாட்களாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், நெல்லை மாவட்டத்தில் முகாமிட்டு ராதாபுரம் தொகுதி கடற்கரை கிராமங்களில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். தொடர்ந்து இன்று ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் அம்பை சட்டமன்ற தொகுதிகளில் முகாமிட்டு தி.மு.க.வினரை தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட முடுக்கி விடும் பணியில் களம் இறங்கி உள்ளார்.
தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட கூடங்குளம், கூடுதாழை, கூட்டப்பனை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் இன்று மாலை சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டிகளையும் ஒட்டினர்.
- வீடுகள் தோறும் மீண்டும் கறுப்பு கொடி கட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மானூர் யூனியனுக்குட்பட்ட பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள புனை வெங்கப்பன் குளத்தின் நீர் புறம்போக்கு பகுதியில் அருந்ததியினர் மற்றும் பிற சமுதாயத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இதில் நெல்லை மாநகராட்சி வார்டு 18-க்கு உட்பட்ட பகுதிகளும் எம்.ஜி.ஆர்.நகரில் வருகிறது. இங்குள்ள தங்கம்மன் கோவில் தெருவில் கடந்த 56 ஆண்டுகளாக 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தாங்கள் வீடு கட்டியுள்ள நிலத்திற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு முறையாக வரி செலுத்தி வருவதாகவும், இருப்பினும் தங்களுக்கு பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர்.
மேலும் தங்கம்மன் கோவில் தெருவில் வசிக்கும் அருந்ததியர்களில் பெரும்பாலானோர் தூய்மை பணியாளர்கள். அவர்கள் கொரோனா காலத்தில் அயராது அச்சமின்றி பணியாற்றினர். அவர்களுக்கு பட்டா வழங்காமல் இருப்பது என்ன நியாயம் என கூறி பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து பேசினர்.
இதனை தொடர்ந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக கடந்த 14-ந்தேதி வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி திறந்தவெளியில் பந்தல் அமைத்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மேலும் தேர்தல் புறக்கணிப்பு சுவரொட்டிகளையும் ஒட்டினர்.
தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் இன்று அந்த பகுதியில் மீண்டும் ஒரு பேனரை பொதுமக்கள் வைத்துள்ளனர். அதில் வருகிற 4-ந்தேதி முதல் வீடுகள் தோறும் மீண்டும் கறுப்பு கொடி கட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் பட்டா வழங்கவும், அடிப்படை வசதிகள் செய்து தரவும் நடவடிக்கை எடுக்கும் வரை தேர்தலை புறக்கணிக்கபோவதாகவும், தீர்வு கிடைக்கும் வரை அரசியல் வேட்பாளர்கள் யாரும் உள்ளே வர அனுமதி இல்லை எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
- பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து திசையன்விளை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
திசையன்விளை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரமேஷ் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.5 லட்சத்து 82 ஆயிரத்து 245 இருந்தது. அந்த வாகனத்தில் வந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் திசையன்விளையை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் ராஜதுரை (வயது 29) என்பது தெரிய வந்தது.
சிகரெட் வியாபாரியான அவர் விற்பனையை முடித்துவிட்டு அதற்கான பணத்தை பெற்று வந்ததாக தெரிவித்தார். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதனால் அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து திசையன்விளை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடியை அடுத்த கக்கன் நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக ஒரு காரில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அவரது காரில் சுமார் 35 பவுன் தங்கநகை, 140 செட் பரிசு பொருட்கள் மற்றும் ஏராளமான சேலைகள் இருந்தன. அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
காரில் வந்த நபர் திசையன்விளை அருகே உள்ள அழகியவிளையை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 48) என்பதும், தற்போது ஈரோடு மாவட்டம் பவானியில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் சொந்த ஊரில் நடைபெறும் அய்யா கோவில் திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்குவதற்காக பரிசு பொருட்கள் எடுத்து செல்வதாகவும், 35 பவுன் தங்க நகைகள் தனது குடும்பத்தினருடையது என்றும் கூறினார்.
ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் முறையாக இல்லை என்பதால் பறக்கும் படையினர் அதனை பறிமுதல் செய்து நாங்குநேரி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.






