என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • தி.மு.க.வினரின் ஆசியோடு குற்றங்கள் நடப்பதை யாராலும் மறுக்க முடியாது.
    • தற்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நாள்தோறும் அரங்கேறுகிறது.

    நெல்லை:

    தமிழகத்தை குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பற்ற மாநிலமாக தி.மு.க. அரசு மாற்றிவிட்டதாக கூறி அதனை கண்டித்தும், போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தக்கோரியும் மகளிர் தினமான இன்று நெல்லை மாநகர் மாவட்ட அ.ம.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமை தாங்கி கலந்து கொண்டு கண்டன உரையாற்றி பேசியதாவது:-

    தமிழகத்தில் பெண்கள் முதல் வயதான மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. சட்டம்-ஒழுங்கை சரி செய்யுங்கள். பால்வாடிக்கு செல்கின்ற பால் முகம் மாறாத பெண் குழந்தைகள் முதல் கல்லூரிக்கு செல்கிற மாணவிகள், பள்ளிகளுக்குச் செல்கிற சிறுமிகள், வேலைக்கு செல்கிற பெண்கள், வீட்டிலே இருக்கிற பெண்கள், மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுவதை தடுக்க ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர்.

    மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். மாதராய் பிறக்க மாதவம் செய்ய வேண்டும் என்ற பேசப்பட்ட தமிழகத்தில் பெண்களாய் பிறந்ததற்கு அச்சப்படும் நிலை உள்ளது. பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை பாதுகாக்கும் ஆசிரியர்கள் தவறு செய்கின்றனர். பாலியல் வன்கொடுமை, போதை பொருள் நடமாட்டம், கனிமவள கொள்ளை என எந்த குற்றமாக இருந்தாலும் தி.மு.க.வுக்கு நேரடி அல்லது மறைமுக தொடர்பு இருக்கிறது.

    தி.மு.க.வினரின் ஆசியோடு குற்றங்கள் நடப்பதை யாராலும் மறுக்க முடியாது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் ரவுடிகள் ஓடி ஒழிந்தார்கள். இப்போது தி.மு.க கொடி பொறித்த வண்டியில் வந்து ரவுடிசம் செய்யும் நிலை உள்ளது. பெண்கள் பாலியல் பிரச்சனையில் பாதிக்கப்பட்டால் புகார் அளிக்க கூடாது என அவர்கள் அளித்த புகார்கள் லீக் செய்யப்படுகிறது. தி.மு.க. ஆட்சியில் காவல் துறை ஏவல் துறையாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிகமான பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். அதற்கு காரணம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான். அவரது ஆட்சி காலத்தில் தான் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது.

    தற்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நாள்தோறும் அரங்கேறுகிறது.

    பாலியல் வன்கொடுமை செய்து பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். பள்ளிக்கு பெண் குழந்தைகளை அனுப்பிவிட்டு வயிற்றில் நெருப்பை கட்டிகொண்டு இருக்கும் அவலம் தற்போது தமிழகத்தில் நடந்து வருகிறது. தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சரால் பெண் முன்னேற்றத்திற்கு கொண்டு வந்த நல்ல திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் மூடுவிழா காணப்படுகிறது.

    மீதம் இருக்கும் ஓராண்டினை பாவமன்னிப்பு பெறும் ஆண்டாக எடுத்து விழித்து கொள்ளுங்கள். இந்த ஆட்சியாளர்கள் 4 ஆண்டுகளாக கமிஷனை தவிர வேறு எதன் மீதும் அக்கறை இல்லாமல் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசாக தமிழக அரசு செயல்படுவதை பார்த்து சந்தி சிரிக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • 5 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு-நாங்குநேரி சாலையில் உள்ள கடம்போடு வாழ்வு பகுதியில் நேற்று முன் தினம் இரவில் வருவாய் புலனாய்வு துறையினர் வாகன சோதனை நடத்தினர்.

    அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த களக்காடு அருகே உள்ள கடம்போடு வாழ்வு தெற்கு தெருவை சேர்ந்த சுப்பையா மகனும், ஒய்வு பெற்ற ராணுவ வீரருமான அழகியநம்பியை (வயது 44) சோதனை செய்தபோது, அவர் யானை தந்தங்களை கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை களக்காடு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில் களக்காடு வனசரகர் பிரபாகரன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் அவரிடம் விசாரணை நடத்தி, அவரது கூட்டாளிகளான ஜமீன் சிங்கம்பட்டி, பஜனை மட தெருவை சேர்ந்த ஆறுமுகம் (53). அம்பை அருகே உள்ள சிவந்திபுரம், ஆறுமுகம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த வீனஸ் ஆர்பர்ட் (45), அம்பை தெற்கு ரதவீதியை சேர்ந்த கார்த்திக் (32), வள்ளியூர் கீழத்தெருவை சேர்ந்த நம்பிநாராயணன் (32) ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 4.7 கிலோ எடையுள்ள 3 யானை தந்தங்கள், யானையின் பற்கள் கைப்பற்றப் பட்டது. இவைகளின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது.


    மேலும் 5 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து இவர்கள் யானை தந்தங்களையும், பற்களையும் விற்பனை செய்ய முயற்சி செய்ததும் தெரியவந்தது. பின்னர் 5 பேரையும் வனத்துறையினர் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

    யானை தந்தங்கள், பற்கள் இவர்களுக்கு எப்படி கிடைத்தது? யானைகளை கொன்று தந்தம், பற்கள் எடுக்கப்பட்டதா? என்பவைகள் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மேலும் சிலரையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

    • விவசாயிகளுடனான கருத்துகேட்பு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நெல்லையில் நடைபெற்றது.
    • விவசாயிகளிடம் வேளாண் துறையில் செய்யப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும், பணிகள் தொடர்பாகவும் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழக அரசு வேளாண்மைக்கு என ஆண்டுதோறும் தனி பட்ஜெட்டை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் 2025-26-ம் ஆண்டுக்கான வேளாண் தனி நிதி நிலை அறிக்கை வருகிற 15-ந் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    இதில் இடம் பெற வேண்டிய சிறப்பு அம்சங்கள் தொடர்பான விவசாயிகளுடனான கருத்துகேட்பு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நெல்லையில் நடைபெற்றது.

    பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 12 மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

    ஆண்டுதோறும் நேரடியாக விவசாயிகளை சந்தித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டு வரும் சூழலில் 5-வது வேளாண் நிதிநிலை அறிக்கைக்காக இன்று நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு கலந்துகொண்டு விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

    கூட்டத்தில், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்ட வாரியாக விவசாயிகளிடம் வேளாண் துறையில் செய்யப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும், பணிகள் தொடர்பாகவும் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

    • புலவன்பட்டி கட்ட பொம்மன் தெருவை சேர்ந்த சுரேஷ் என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
    • கடன் கொடுத்த நிதி நிறுவனத்தினர் ரேவதி வீட்டின் வாசலில் அமர்ந்து கொண்டு அவதூறாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், வி.கே.புரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் சிவந்திபுரம் அருகே உள்ள புலவன்பட்டி கட்ட பொம்மன் தெருவை சேர்ந்த சுரேஷ் (வயது 27) என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

    அவருடன் சேர்ந்து அம்பை ஊர்காடு பகுதியை சேர்ந்த அசோக்ராஜா (30), வி.கே.புரம் கம்பலத்தார் தெருவை சேர்ந்த செல்வகுமார் (21), கல்லிடைக்குறிச்சி சுப்பிரமணியபுரம் யாதவர் தெருவை சேர்ந்த சங்கர்ராஜா ஆகிய 3 பேர் நிதி நிறுவனம் நடத்தி கந்து வட்டி வசூலிப்பதாகவும், நிதி நிறுவனத்திற்கு உரிய அனுமதியை அவர்கள் பெறவில்லை எனவும் புகார்கள் எழுந்தது.

    இந்நிலையில் வி.கே.புரம் கட்டப்புளி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் என்ற கூலி தொழிலாளியின் மனைவி ரேவதி என்பவர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெறுவதற்காக நிதி நிறுவனம் நடத்தி வரும் சுரேசிடம் கடன் பெற்றுள்ளார்.

    அவர் கடன் தொகையை செலுத்த தாமதமானதால், கடன் கொடுத்த நிதி நிறுவனத்தினர் அவர் வீட்டின் வாசலில் அமர்ந்து கொண்டு அவதூறாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் மன வேதனை அடைந்த ரேவதி வி.கே.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் உரிய அனுமதியின்றி நிதி நிறுவனங்களை நடத்தியதாக கூறி சுரேஷ் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

    • நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பிரதான அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது.
    • பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக பெய்த பரவலான மழை காரணமாக மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. மேலும் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பிரதான அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 23 அடி உயர்ந்தது. நேற்று பகலில் இருந்து மழை படிப்படியாக குறைந்தது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் வரத்தும் குறைந்தது.

    பிரதான அணையான பாபநாசம் அணைக்கு நேற்று வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், மழை குறைந்துவிட்டதால் அணைக்கு வரும் நீரின் அளவு 721 கனஅடியாக குறைந்து விட்டது. எனினும் நீர் வரத்தால் அந்த அணை நீர்மட்டம் இன்று மேலும் 1 ½ அடி உயர்ந்து 87 அடியை கடந்துள்ளது.

    இதேபோல் மணிமுத்தாறு அணை பகுதியில் நேற்று காலை வினாடிக்கு 1,797 கனஅடி நீர் வந்த நிலையில், இன்று 545 கனஅடியாக குறைந்தது. அந்த அணை நீர்மட்டம் 90 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 104 அடியாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி மாநகர், புறநகர், அணைபகுதிகள் என எங்கும் மழை பெய்யவில்லை. மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட் பகுதிகளில் லேசான சாரல் பெய்தது.

    இந்த மழையால் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் 1 வாரத்திற்கும் மேலாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    கடந்த 4 நாட்களாக மழை பெய்ததால் அம்பை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, களக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆயிரக்க ணக்கான ஏக்கரில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்கதிர்கள் வயலில் சாய்ந்து நாசமாகிவிட்டது.

    தென்காசி மாவட்டத்திலும் சில நாட்களாக பெய்த தொடர் கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று மலைப்பகுதியில் மழை குறைந்ததால் தண்ணீர் வரத்தும் குறைந்தது. தொடர்ந்து சுற்றுலாப்பயணிகள் மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    அணைகளை பொறுத்தவரை தொடர் கனமழையால் கடனா, ராமநதி அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று முதல் மழை குறைந்ததன் காரணமாக நீர்வரத்து சற்று குறைந்தது. நேற்று 61 அடியாக இருந்த கடனா அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 65 அடியாக உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 52 அடியாக உள்ளது.

    • தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகளான கடனாநதி, ராமநதி உள்ளிட்ட ஆறுகளிலும் தண்ணீரின் வரத்து இயல்பை விட அதிகரித்தது.
    • கருவறை முதல் பிரகார மண்டபம் வரை தண்ணீர் புகுந்து சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்தது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்தது. இந்தத் தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகளான கடனாநதி, ராமநதி உள்ளிட்ட ஆறுகளிலும் தண்ணீரின் வரத்து இயல்பை விட அதிகரித்தது.

    மேலும் சமவெளி பகுதிகளில் உள்ள தண்ணீரும் இணைந்து தற்போது தாமிரபரணி ஆற்றில் இயல்பை விட அதிகரித்துச் செல்கிறது. எனினும் பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி தாமிரபரணி ஆற்றில் வழக்கம்போல நீராடி வருகின்றனர். டவுன் குறுக்குத்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முருகன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் கருவறை முதல் பிரகார மண்டபம் வரை தண்ணீர் புகுந்து சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. இதையடுத்து கோவில் ஊழியர்கள் மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை.
    • சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

    நெல்லை:

    மாலத்தீவு அருகே நீடித்த காற்று சுழற்சியானது வங்க கடல் ஈரப்பதத்தை தென் தமிழகத்தின் ஊடாக இழுப்பதன் காரணமாக தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று பாபநாசம், மணிமுத்தாறு, மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. தொடர்ந்து, மழை பெய்வதால் முக்கிய ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று 4-வது நாளாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாநகர பகுதிகளில் சந்திப்பு, தச்சநல்லூர், தாழையூத்து, டவுன், பாளையங்கோட்டை, கே.டி.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    மாநகர பகுதிகளின் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

    மழை காரணமாக அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மணிமுத்தாறு, நாங்குநேரி, பாபநாசம் ஆகிய பகுதிகளிலும் பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. மேலும், பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்து, கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவில் நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 88.03 அடியாகவும், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 80.80 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 93.57 அடியாகவும் உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 86.35 அடியாக இருந்த நிலையில், இன்று மேலும் 7 அடி உயர்ந்துள்ளது.

    மணிமுத்தாறு அணைப்பகுதியில் 23.8 மில்லி மீட்டரும், பாபநாசத்தில் 48 மில்லி மீட்டரும், சேர்வலாரில் 42 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    பாபநாசம் அணைக்கு வினாடிக்கு சுமார் 1,900 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. மணிமுத்தாறு அணைக்கு சுமார் 675 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் அணையில் இருந்து 1,100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    தமிழ்நாட்டில் மிக அதிகமான மழை நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டியில் 123 மில்லி மீட்டர் (12.3 சென்டி மீட்டர்) மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தேமாங்குளம் 117 மில்லி மீட்டர் மழையும், ஸ்ரீவைகுண்டத்தில் 106 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    தூத்துக்குடி, நெல்லை தென்காசி மாவட்டங்களில் 96 இடங்களில் மிதமான மழையும், 17 இடங்களில் கனமழையும், 2 இடங்களில் மிக கனமழையும் பதிவாகி உள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான ஊத்தில் 79 மில்லி மீட்டரும், நாலுமுக்கில் 74 மில்லி மீட்டரும், காக்காச்சியில் 67 மில்லி மீட்டர், மாஞ்சோலை யில் 60 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    • மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 288 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
    • மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொடங்கி இன்று வரை 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்ததது. அதன்படி 2 நாட்களாக பெய்யும் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

    நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று பகலில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. பிற்பகலில் 3 மணி அளவில் திடீரென மழை பொழிய தொடங்கியது. தொடர்ந்து கனமழை பெய்ய ஆரம்பித்தது. சில இடங்களில் மாலையில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.

    அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் வி.கே.புரம் பகுதியில் பழமையான மரம் முறிந்து விழுந்தது. அங்கு 19 மில்லிமீட்டர் மழை பெய்தது. சேரன்மகாதேவி, கன்னடியன் கால்வாய் பகுதியில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    களக்காடு சுற்றுவட்டார பகுதிகளில் அதிகபட்சமாக 36.40 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. சேரன்மகாதேவியில் 29 மில்லிமீட்டரும், நாங்குநேரி சுற்றுவட்டாரத்தில் 9 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், மற்றொரு புறம் பெரும்பாலான பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் நெற்கதிர்கள் செழித்து வளர்ந்திருந்தது. சில இடங்களில் அவை மழையால் வயல்களில் சாய்ந்தன.

    அணைகளை பொறுத்தவரை பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று பாபநாசம் அணை நீர்மட்டம் 80.60 அடியாக இருந்த நிலையில், நேற்று முழுவதும் பெய்த மழையால் 2 அடி உயர்ந்து 82.50 அடியை எட்டியது. அங்கு இன்று காலை வரை 48 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 85.35 அடியை எட்டியுள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 650 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 288 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் நேற்று காலையில் தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 8.1 சென்டிமீட்டரும், நாலு முக்கில் 7.2 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 6.6 சென்டிமீட்டரும், மாஞ்சோலையில் 5.5 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் இன்று காலையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு போலீசாரால் தடை விதிக்கப்பட்டது.

    மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் செம்மண் கலந்த கலரில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மேலும் காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் தொடர்ந்து மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டு வருகிறது.

    தென்காசி மாவட்டம் முழுவதும் இரவில் பெய்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கும் நெற்கதிர்கள் வயல்களுக்குள்ளேயே சாய்ந்து கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் தொடர்ந்து மழை பெய்தால் நெற்கதிர்கள் முளைக்கும் தருவாய்க்கு செல்லப்படும் எனவே தற்பொழுது பெய்த மழையினால் வெயிலின் தாக்கம் குறைந்து பொதுமக்களுக்கு நன்மை ஏற்பட்டாலும் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்கதிர்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது என்பதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.

    தென்காசி நகர் பகுதியிலும், செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாலையில் தொடங்கி இரவு வரையிலும் பெய்த மழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 54 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    தென்காசியில் 24 மில்லிமீட்டரும், ஆய்க்குடியில் 40 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலையில் தொடங்கி சுமார் 2 மணி நேரம் விட்டு விட்டு மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம், மணியாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. எட்டயபுரம், வேடநத்தம், சூரன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டுவிட்டு பெய்த மழையால் குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிகபட்சமாக மணியாச்சியில் 18 மில்லிமீட்டரும், ஓட்டப்பிடாரத்தில் 15 மில்லிமீட்டரும் மழை பெய்தது. கயத்தாறில் 6 மில்லிமீட்டரும், கடம்பூரில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்தது. 

    • வெயில் கொளுத்திய நிலையில் திடீர் மழையால் குளிர்ச்சி நிலவியது.
    • பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பகலில் வெயில் அடித்த நிலையில், பிற்பகலில் வானில் கருமேகங்கள் திரண்டன. மதியம் 1 மணி அளவில் பரவலாக மழை பெய்தது. அவ்வப்போது பலத்த மழையாகவும், திடீரென சாரல் மழையாகவும் பெய்தது. வெயில் கொளுத்திய நிலையில் திடீர் மழையால் குளிர்ச்சி நிலவியது.

    மாநகரில் டவுன், சந்திப்பு, வண்ணார்பேட்டை, பெருமாள்புரம், பாளை, புதிய பஸ் நிலையம், மார்க்கெட், கே.டி.சி. நகர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பரவலாக பெய்த சாரல் மழையால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சில இடங்களில் சாலையோர பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது. சந்திப்பு பஸ் நிலையத்தில் சுமார் 30 நிமிடங்கள் பெய்த மழையில் ஷேர் ஆட்டோக்கள் நிற்கும் இடத்தில் குளம்போல் மழைநீர் தேங்கியது. பாளையில் 12 மில்லிமீட்டரும், நெல்லையில் 11 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் அருகே பழைமையான கட்டிடத்தின் சுவர் ஒரு பகுதி இடித்து விழுந்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை திருப்பி விட்டனர்.

    மாவட்டத்திலும் நாங்குநேரி, அம்பை, களக்காடு, மூலைக்கரைப்பட்டி, சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக சேரன்மகாதேவி 27.40 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. நாங்குநேரியில் 13 மில்லிமீட்டரும், அம்பையில் 12 மில்லிமீட்டரும் மழை பெய்தது. களக்காட்டில் 5 மில்லிமீட்டரும், கன்னடியனில் 10 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. வீரவநல்லூர் பகுதியில் 30 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பெய்த பரவலான மழையால் அணைகளுக்கு சற்று நீர்வரத்து ஏற்பட்டது. பிரதான அணையான பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் 18 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணைக்கு வினாடிக்கு 270 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் 11 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 14 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள ராமநதி, கருப்பாநதி அணைகளில் நீர்பிடிப்பு பகுதிகளில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது. ராமநதியில் 7 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், மணியாச்சி, கயத்தாறு சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகலில் சிறிது நேரம் கனமழை பெய்தது. கோவில்பட்டியில்யில் பெய்த மழையில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 11.50 மில்லிமீட்டர் மழை பெய்தது. சூரங்குடி, கீழ அரசடியில் விட்டு விட்டு லேசான சாரல் அடித்தது.

    • அய்யாவழி திருவிழாவில் நாளை மறுநாள் பங்கேற்கிறார்.
    • 2 நாட்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    நெல்லை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை (வியாழக்கிழமை) முதல் 2 நாட்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இதற்காக நாளை மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வரும் கவர்னர், அங்கிருந்து காரில் திருச்செந்தூர் சென்று அய்யா வைகுண்டர் அவதார பதியில் சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காரில் நெல்லைக்கு மாலை 6.30 மணிக்கு வந்தடைகிறார்.

    அங்குள்ள தனியார் ஓட்டலில் தொழில் வர்த்தக சங்கத்தினர், வணிகர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடுகிறார். தொடர்ந்து அங்கிருந்து வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் இரவு ஓய்வெடுக்கிறார்.

    நாளை மறுநாள் (28-ந்தேதி) காலை 10 மணிக்கு நெல்லை-குமரி நான்கு வழிச்சாலையில் நெல்லை அருகே செங்குளத்தில் உள்ள தனியார் மகாலில் நடைபெறும் அய்யா வைகுண்டர் அவதார திருவிழாவில் அவர் கலந்து கொள்கிறார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பகல் 12 மணிக்கு பாளை கே.டி.சி. நகரில் தனியார் மகாலில் பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலந்துரை யாடுகிறார்.

    பின்னர் மாலை 3.30 மணி அளவில் தூத்துக்குடிக்கு புறப்படும் கவர்னர் ஆர்.என்.ரவி, அங்கிருந்து விமானத்தில் சென்னை திரும்புகிறார். அவரது 2 நாட்கள் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இன்று முதலே பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் சிலம்பரசன், ஆல்பர்ட் ஜான் ஆகியோர் உத்தரவிட்டனர்.

    • மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பின் பகுதி வழியாக மர்ம நபர்கள் யாரோ வந்து எழுத்துகளை அழித்தது விசாரணையில் தெரிய வந்தது.

    நெல்லை:

    மத்திய அரசு மும்மொழி கல்விக் கொள்கை மூலமாக தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக கூறி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    நெல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க. நிர்வாகிகள் பாளையங்கோட்டை ரெயில் நிலையத்தில் நுழைந்து அங்கிருந்த பெயர் பலகையில் இந்தியில் எழுதப்பட்ட வாசகத்தை கருப்பு மையால் அளித்துவிட்டு தமிழ் வாழ்க என அந்த பெயர் பலகையில் எழுதினர்.

    இது தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தி.மு.க. நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை ஒட்டி ரெயில் நிலையத்தில் யாரும் புகுந்து விடாமல் இருப்பதற்காக மாநகர போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர். ரெயில் நிலையத்தில் 2 கட்டிட நுழைவு வாயில்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆர்ப்பாட்டம் முடிந்து தி.மு.க.வினர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்ட நிலையில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் 4-வது நடைமேடையில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் உள்ள திருநெல்வேலி சந்திப்பு என எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை கருப்பு மையால் அளிக்கப்பட்டிருந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக ரெயில் நிலையத்தின் முன் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் பின் பகுதி வழியாக மர்ம நபர்கள் யாரோ வந்து எழுத்துகளை அழித்தது விசாரணையில் தெரிய வந்தது.

    இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்ட வட்டமாக கூறி உள்ளார்.
    • மும்மொழி கொள்கை பற்றி அரசியலமைப்பு சட்டத்தில் எங்கே கூறப்பட்டு உள்ளது.

    மும்மொழி கொள்கையை ஒரு போதும் ஏற்க போவதில்லை. இதற்காக மத்திய அரசு ரூ.2,152 கோடியை நிறுத்தி வைத்திருந்தாலும் சரி. ஏன், பத்தாயிரம் கோடி தருவதாக இருந்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்ட வட்டமாக கூறி உள்ளார்.

    பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு ஆர்வம் காட்டினாலும் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்து வதை ஏற்கவில்லை. அதற்கு காரணம் மும்மொழி கொள்கையை அது வலியுறுத்துகிறது என்பதால்தான்.

    இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் எழுதிய கடிதத்தில் மொழியை வைத்து அரசியல் வேண்டாம். அரசியலமைப்பு சட்டத்துடன் ஒத்துப் போக வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    மும்மொழி கொள்கை பற்றி அரசியலமைப்பு சட்டத்தில் எங்கே கூறப்பட்டு உள்ளது என்று மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.

    இந்நிலையில், இந்தி மொழி திணிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆங்காங்கே இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

    அந்த வகையில், மத்திய அரசின் இந்தித் திணிப்பை கண்டித்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ரெயில் நிலைய பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துகளை கருப்பு மை பூசி திமுகவினர் அழித்தனர்.

    "தமிழ் வாழ்க.." என முழக்கமிட்டபடியே இந்தி எழுத்துகளை அழித்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    ×