என் மலர்
தேனி
- 7-ந்தேதி குழு ஆய்வு நடத்துவதாக இருந்த நிலையில் தற்போது 22-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
- தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையக்குழு அமைக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் ஆய்வு இதுவாகும்.
கூடலூர்:
கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இரு போக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.
மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் திகழ்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டத்தை 142 ஆக உயர்த்திக்கொள்ளவும், பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என கடந்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆனால் பேபி அணையை பலப்படுத்த தமிழக அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கைக்கு கேரள அரசு தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி முல்லைப்பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
ஆணையத் தலைவர் அனில் ஜெயின் தலைமையிலான இந்தக்குழுவின் தமிழக நீர் வளத்துறை செயலர் மங்கத்ராம் சர்மா, காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் விஸ்வாஸ், நீர் வளத்துறை தலைமைப் பொறியாளர் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் என 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இங்கு 7-ந்தேதி குழு ஆய்வு நடத்துவதாக இருந்த நிலையில் தற்போது 22-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையக்குழு அமைக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் ஆய்வு இதுவாகும். அணை தொடர்பான பிரச்சனைகளுக்கு 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதன் மூலம் பல ஆண்டுகளாக தொடரும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டும். மழை நேரங்களில் தரைப்பாதையில் வல்லக்கடவு வழியாக அணைப்பகுதிக்கு செல்ல முடியாது. எனவே தமிழக படகுகளை தடையின்றி இயக்க அனுமதிக்க வேண்டும். அணை குறித்து கேரளாவின் விஷம பிரசாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பு படி 152 அடியாக அணையின் நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 21-ந்தேதி கம்பத்தில் இருந்து குமுளிக்கு பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.
- கடந்த அக்டோபர் 1ந் தேதி முதல் முல்லைப்பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.20 அடியாக உள்ளது.
கூடலூர்:
கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
அணையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை கண்காணிப்பதற்காக உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையின்படி மத்திய நீர்வள ஆணையர் தலைமை பொறியாளர் ராகேஷ்காஷ்யப் தலைமையில் மத்திய கண்காணிப்பு குழு இருந்தது. ஆண்டுதோறும் அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அங்கு நடக்க வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கி வந்தது.
கடந்த ஆண்டு ஜூன் 13ந் தேதி அணையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2022ம் ஆண்டு எர்ணாகுளத்தை சேர்ந்த ஜோசப் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் 12 மாதத்திற்குள் முல்லைப்பெரியாறு அணையை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய நீர்வள கமிஷன் பரிந்துரை செய்தது.
கடந்த அக்டோபர் 1ந் தேதி முதல் முல்லைப்பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஏற்கனவே பராமரிப்பு பணிக்காக அமைக்கப்பட்டிருந்த மத்திய கண்காணிப்பு குழு, துணை கண்காணிப்பு குழு ஆகியவை கலைக்கப்பட்டது. புதிதாக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில்ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில் தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர் மணிவாசன், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசு சார்பில் கூடுதல் தலைமை செயலர் விஸ்வாஸ், கேரள நீர்வளத்துறை தலைமை பொறியாளர், 2 தொழில்நுட்ப வல்லுனர்கள் என 7 பேர் உள்ளனர்.
புதிதாக அமைக்கப்பட்ட இந்த குழு வருகிற 7ந் தேதி அணைப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதிகள், நீர்கசிவு கேலரி உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு அன்றைய மாலை குமுளியில் உள்ள பெரியாறு அணை கண்காணிப்பு அலுவலகத்தில் இரு மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.20 அடியாக உள்ளது. 97 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 1763 மி. கன அடி நீர் இருப்பு உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 61.01 அடியாக உள்ளது. 234 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 722 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 3821 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.20 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 45 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 73.14 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
சண்முகாநதி அணை 1.2, மஞ்சளாறு அணை 1 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க தி.மு.க. அரசு தவறிவிட்டது.
- தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் அல்ல, ஸ்டாலின் மாடல் என தெரிவித்தார்.
தேனி:
தேனியில் நடைபெற்ற ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
தேனி மாவட்டத்துக்கு தி.மு.க. அரசு எந்தத் திட்டத்தையும் கொண்டுவரவில்லை. 4 ஆண்டுகளில் தி.மு.க. அரசு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை.
முல்லைப் பெரியாறு அணையை நம்பி 5 மாவட்ட மக்கள் உள்ளனர். முல்லைப் பெரியாறு அணையின்நீர்மட்டத்தை உயர்த்தியது அ.தி.மு.க. அரசு.
அ.தி.மு.க. ஆட்சியில் ஏராளமான திட்டங்களைக் கொண்டுவந்ததால்தான் மக்கள் முன் நெஞ்சை நிமர்த்தி நிற்கின்றோம்.
அ.தி.மு.க. ஆட்சி பொற்கால ஆட்சி என்று மக்களே பாராட்டுகின்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மக்களுக்கு நன்மை அளித்தது. ஏழை, எளிய மாணவர்கள் படிக்க ஏராளமான கல்லூரிகள் திறக்கப்பட்டன.
போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க தி.மு.க. அரசு தவறிவிட்டது. போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்க எச்சரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை.
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை தொடர்கதையாக உள்ளது. தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமை நெஞ்சை பதறச் செய்கிறது.
பெண்கள், பெண் குழந்தைகளுக்கான குற்றங்கள் அதிகரித்துள்ளன. சிறுமிகள் அப்பா.. அப்பா.. என்று கதறும்போது அப்பா ஸ்டாலின் எங்கே போனார்?
தமிழகத்தில் உயர் பதவியில் உள்ள பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. அண்ணா பல்கலைக்கழக வழக்கில் யார் அந்த சார் என்பதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.
தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. முதல்வர் ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் போட்டோ ஷூட் செய்து வருகிறார். தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் அல்ல, ஸ்டாலின் மாடல் என தெரிவித்தார்.
- பொதுக்கூட்டத்திற்கு 50,000-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்களை திரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆண்டிபட்டி:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி அருகே மதுராபுரியில் இன்று மாலை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக அவர் சேலத்தில் இருந்து இன்று மதியம் தேனிக்கு வருகிறார். அவருக்கு திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்க அ.தி.மு.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
பொதுக்கூட்டத்திற்கு 50,000-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்களை திரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுக்கூட்டத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் மேற்பார்வையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆண்டிபட்டியில் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுவதற்காக வந்த முன்னாள் அமைச்சர் உதயகுமார் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
மேலும் அ.தி.மு.க. தேனி மாவட்ட செயலாளர்கள் முருக்கோடை ராமர், ஜக்கையன், ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளுடன் ஆண்டிபட்டி பஸ் நிலையம் வழியாக ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி பொதுக்கூட்டத்திற்கு ஆதரவு திரட்டினர். ஆண்டிபட்டி பழைய முருகன் தியேட்டர் அருகில் ஊர்வலத்தை நிறைவு செய்தனர். இந்நிகழ்ச்சியில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.20 அடியாக குறைந்துள்ளது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.65 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை, தேனி மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
நீர்பிடிப்பு பகுதியில் மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து சரியத்தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அணையில் முறைநீர் பாசனம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சில நாட்கள் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதும், அதனைத் தொடர்ந்து நிறுத்தப்படுவதை என நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அதன்படி இன்று காலை பாசனத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டு மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்பட்டது. அணைக்கு 79 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 62.01 அடியாக சரிந்துள்ளது. 3995 மி.கன அடி. நீர் இருப்பு உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.20 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு 61 கன அடி நீர் வருகிற நிலையில் 356 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததால் அணையின் நீர்மட்டம் உயராமல் உள்ளது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மழை பெய்தால் மட்டுமே வழக்கம்போல் ஜூன் மாதத்தில் முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அணையில் 1943 மி.கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.65 அடியாக உள்ளது. 6 கன அடி நீர் வருகிறது. 55 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 79.70 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 26.25 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை.
- அனைவரும் ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும்.
- அ.தி.மு.க. தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணைவீட்டில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகளுடன் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமையில் முன்னாள் எம்.பி. ரவீந்திரநாத் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆட்சியில் தொடர 4½ ஆண்டுகள் ஒத்துழைப்புதந்தேன். அப்போது பிரதமர் மோடி என்னிடம் நீங்களும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறவேண்டும் என கூறினார். அதனை ஏற்று நான் துணை முதல்வராக பதவியேற்றேன். 50 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உழைத்து உருவாக்கிய அ.தி.மு.க. தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் தொண்டர்கள் வேதனையில் உள்ளனர்.
அனைவரும் ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும். இதில் எந்த நிபந்தனையும் இல்லை என ஏற்கனவே கூறியுள்ளேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா ஒன்றிணைந்து அ.தி.மு.க.வை காப்பாற்றும். அவர்கள் வரிசையில் நானும் முதலமைச்சராக இருந்துள்ளேன். எனவே தொடர்ந்து வெற்றிக்காக பாடுபடுவேன் என பேசினார்.
- பால், காய்கறி உள்ளிட்ட சரக்கு வாகனங்களும் சென்று வருகின்றன.
- நீண்ட காலமாக புகையிலை பொருட்கள் கடத்தியது தெரிய வந்தது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி வழியாக கேரளாவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். மேலும் தோட்ட வேலைக்கு ஜீப்களில் ஆட்களை ஏற்றிச் செல்கின்றனர்.
பால், காய்கறி உள்ளிட்ட சரக்கு வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த வழியாக கள்ளச்சாராயம் மற்றும் புகையிலை பொருட்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து அவரது தலைமையில் போடி தாலுகா போலீசார் முந்தல் சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வடமாநில வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் கள்ளச்சாராயம் மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்து வாகனங்களில் வந்த மத்திய பிரதேசம் டிண்டோரி மாவட்டம் மார்வாரி பகுதியை சேர்ந்த கிரிப்பல்சிங் மரவி (வயது39), தீபக்உக்கே (31), சஞ்சய்குமார் (30), அம்ரத்குமார் கைருவார் (25), லலித் (19), வீரசேவ்உக்ரே (35), சிவம் பன்வாசி (26), லலித்குமார் தர்வையா (24), முக்கேஸ்தெக்கம் (27), அனிஷ்யாதவ் (29), துளசிராம் துர்வாரே (40), அரவிந்த் மார்வி (22) ஆகியோரை கைது செய்தனர்.
முதல் கட்ட விசாரணையில் வட மாநிலங்களில் இருந்து புகையிலை, கள்ளச்சாராயம் கடத்தி வந்த இவர்கள் தொழிலாளர்கள் போர்வையில் கேரள மாநிலத்திற்கு கொண்டு சென்று அங்கு சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது.
மேலும் அவர்கள் எங்கிருந்து இதனை வாங்கி வந்தனர் என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போடியில் இருந்து முந்தல், போடிமெட்டு சோதனைச்சாவடி வழியாக கேரளாவுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இவர்கள் நீண்ட காலமாக புகையிலை பொருட்கள் கடத்தியது தெரிய வந்தது. எனவே போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கேரள தரப்பில் தொடர்ந்து புதிய படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
- கேரள படகுகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என தேசிய புலிகள் ஆணையத்திற்கு புகார் அனுப்ப உள்ளோம்.
கூடலூர்:
முல்லை பெரியாறு அணை தமிழக நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அணை நீரை நம்பி தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கரில் பாசன நிலங்கள் உள்ளன. ஒரு கோடி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
தமிழக நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அணை கண்காணிப்பு பணிக்காக தேக்கடி படகு நிறுத்தப்பகுதியில் இருந்து 14 கி.மீ, தூரமுள்ள அணைக்கு செல்வதற்கு ஜலரத்தினா, கண்ணகி ஆகிய படகுகள் உள்ளன. இப்படகுகள் 40 ஆண்டு பழமையானதால் புதிய படகு வாங்க முடிவு செய்து 11 ஆண்டுகளுக்கு முன் ரூ.1 கோடியில் இரு படகுகள் வாங்கப்பட்டன. அதில் ஒரு படகு தேக்கடி ஏரிக்கு கொண்டு வரப்பட்டது.

தேக்கடியில் அனுமதி கிடைக்காததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழன்னை படகு.
அதற்கு தமிழ் அன்னை என பெயரிடப்பட்டது. ஆனால் இப்படகை கூடுதல் குதிரை திறன் கொண்டதாக உள்ளது எனக்கூறி இயக்க கேரள வனத்துறை அனுமதி தரவில்லை.
தேக்கடி ஏரியில் பெரியாறு புலிகள் காப்பகத்திற்கு 9 படகுகளும், கேரள சுற்றுலாத் துறைக்கு 6 படகுகளும், கேரள காவல்துறைக்கு 2 படகுகளும், கேரள நீர்ப்பாசன துறைக்கு 1 படகும் இயக்கப்படுகிறது. இதுதவிர விரைவுப்படகும் உள்ளது.
இந்நிலையில் பெரியாறு அணையை கண்காணிக்க நேற்று கேரள நீர்ப்பாசன துறைக்கு புதிய படகை தேக்கடியில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தொடங்கி வைத்தார். தமிழக நீர்வளத்துறைக்கு சொந்தமான படகு 11 ஆண்டுகளாக அனுமதியின்றி தேக்கடி ஏரியில் காத்திருக்கும் நிலையில், கேரள தரப்பில் தொடர்ந்து புதிய படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழக நீர்வளத்துறையின் படகுகள் ஆண்டு கணக்கில் அனுமதியின்றி நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் கேரளாவில் புதிய படகை தமிழக அனுமதி இல்லாமல் இயக்கிக் கொண்டிருக்கிறது. 130 குதிரை திறன் கொண்ட படகிற்கு அனுமதி தராத நிலையில் கேரள போலீசாரின் 150 குதிரை திறன் கொண்ட படகை இயக்குகின்றனர். கேரள படகுகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என தேசிய புலிகள் ஆணையத்திற்கு புகார் அனுப்ப உள்ளோம்.
மேலும் கம்பத்தில் இருந்து குமுளியை நோக்கி கண்டன ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளதாக பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தெரிவித்தார்.
- மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீர் முறைநீர் பாசன அடிப்படையில் நிறுத்தப்பட்டது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.55 அடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தற்போது மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீர் முறைநீர் பாசன அடிப்படையில் நிறுத்தப்பட்டது.
இந்த மாவட்டங்களில் 2-ம்போக பாசனத்திற்காக கால்வாய் வழியாக டிசம்பர் 18ந் தேதி முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. முறைப்பாசன அடிப்படையில் சில நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டும் பின்னர் சில நாட்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது.
கடந்த 10ந் தேதி முதல் கால்வாய் வழியாக வினாடிக்கு 450 கன அடி நீர் திறக்கப்பட்டு பின்னர் 525 கன அடியாக உயர்த்தப்பட்டது. நேற்று காலை கால்வாய் வழியாக திறக்கப்பட்ட பாசன நீர் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் கிருதுமால் நதி குடிநீர் தேவைக்காக 300 கன அடி மற்றும் மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் என மொத்தம் 369 கன அடிநீர் திறக்கப்படுகிறது. அணைக்கு 170 கனஅடி நீர் வருகிறது. நீர்மட்டம் 63.25 அடியாக உள்ளது. அணையில் 4255 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 117.60 அடியாக உள்ளது. 143 கன அடி நீர் வருகிற நிலையில் 444 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.55 அடியாக உள்ளது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 90.69 அடியாக உள்ளது. 3.8 கன அடி நீர் வருகிறது. 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 30.30 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 14.47 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.
- கடந்த ஆண்டு முதல் டி.புதூர் கிராமத்திற்கு புதிய பஸ் இயக்கப்பட்டது.
- ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதம் செய்தனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி.புதூர் மலை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பஸ் வசதி இல்லாமல் கிராம மக்கள் விடுத்து வந்த தொடர் கோரிக்கையால் 35 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு முதல் நாள்தோறும் 2 முறை தேனியில் இருந்து டி.புதூர் கிராமத்திற்கு புதிய பஸ் இயக்கப்பட்டது.
தினசரி 2 முறை மட்டுமே இயக்கப்பட்ட அந்த அரசு பஸ்சும் தற்போது சரியாக இயக்கப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் ஊருக்குள் வராமல் விலக்கு பகுதியிலேயே பொதுமக்களை இறக்கி விட்டு செல்வதால் பள்ளி மாணவர்கள், முதியவர்கள் உள்பட அனைவருமே 2 கி.மீ. தூரம் நடந்து ஊருக்குள் வரும் நிலை உள்ளது.
பெண்கள் ஊருக்குள் வரும்படி பஸ் ஓட்டுநர், நடத்துனர்களிடம் கேட்டால் ஓசியில்தானே பஸ்சில் செல்கிறீர்கள், அப்படியெல்லாம் இறக்கி விட முடியாது என ஏளனமாக பேசுவதாக குற்றம் சாட்டினர். இந்த நிலையில் கிராமமக்கள், பள்ளி மாணவர்கள் ஊருக்குள் வந்த அரசு பஸ்சை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதம் செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிபட்டி போலீசார் அவர்களை சமாதானம் செய்து பஸ்சை முறையாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். மீண்டும் பஸ் முறையாக வராத பட்சத்தில் குமுளி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போராட்டம் நடத்தப் போவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
- கடந்த 2017-ம் ஆண்டு வைகை அணையை பாதுகாக்க வலியுறுத்தி ஏற்கனவே போராட்டம் நடத்தினார்.
- மழைக்காலங்களில் விரைவில் தண்ணீர் நிரம்பி உபரியாக வீணாகி செல்கிறது.
ஆண்டிபட்டி:
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் நர்மதா (வயது 46). இவருக்கு திருமணமாகி நந்தகுமார் என்ற கணவரும், 18 வயது மகனும் உள்ளனர். ராஜபாளையத்தை பூர்வீகமாக கொண்ட இவரது தந்தை ரெயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
சமூக ஆர்வலரான இவர் நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு வைகை அணையை பாதுகாக்க வலியுறுத்தி ஏற்கனவே போராட்டம் நடத்தினார்.
தற்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து வைகை அணை போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து நிறைவேற்றப்படாமல் இருந்த அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினார். மேலும் கண்ணகி நகர் மக்கள் பிரச்சனை உள்பட பல்வேறு சமூக பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்தியுள்ளார்.
இந்நிலையில் தேனி மாவட்டத்துக்கு வந்த நர்மதா வைகை அணை நீரில் இறங்கி வழிபட்டு தனது போராட்டத்தை தொடங்கினார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக உள்ள வைகை அணையை பாதுகாக்கவும், இதனை தூர்வாரினால் கூடுதல் தண்ணீர் தேக்க முடியும் என்பதை அரசுக்கு வலியுறுத்தி ஏற்கனவே போராட்டம் நடத்தினேன். ஆனால் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து 8 ஆண்டுகளாக எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை.
இதே போல் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அந்த திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்து ஒரு பகுதியை நிறைவேற்றி உள்ளனர். ஆனால் வைகை அணையை தூர் வார ரூ.89 லட்சம் ஒதுக்கினாலே போதுமானது. ஆனால் இந்த நிதியை ஒதுக்காமல் வைகை அணையை தூர் வாராமல் வைத்துள்ளனர்.
இதனால் மழைக்காலங்களில் விரைவில் தண்ணீர் நிரம்பி உபரியாக வீணாகி செல்கிறது. மேலும் வைகை அணை நீர் வெளியேறும் வரத்து வாய்க்கால் பகுதிகளும் தூர் வாரப்படாமல் உள்ளது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். அதிகாரிகள் உத்திரவாதம் அளிக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டேன் என்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
- ஒரு கழிவறையில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இதனால் மற்ற மாணவர்கள் கதவை தட்டி உள்ளனர்.
- சக மாணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகில் உள்ள மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகே அரசு என்ஜினீயரிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நெல்லை அண்ணாநகரை சேர்ந்த விக்னேஷ் (வயது20) என்பவர் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேசன் பிரிவில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவர் நேற்று தேர்வு எழுதி விட்டு விடுதிக்கு வந்தார். பின்னர் மாலையில் கழிவறைக்கு சென்றவர் திரும்பவில்லை. மற்ற மாணவர்களும் தூங்க சென்று விட்டனர். நள்ளிரவில் விடுதியின் ஒரு கழிவறையில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இதனால் மற்ற மாணவர்கள் கதவை தட்டி உள்ளனர்.
ஆனால் உள்புறமாக தாழ்பாள் போடப்பட்டிருந்ததால் திறக்கப்படவில்லை. பின்னர் விடுதி வார்டனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது மாணவன் விக்னேஷ் அமர்ந்த நிலையிலேயே இறந்து கிடந்தார்.
இது குறித்து போடி தாலுகா போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவன் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவன் எவ்வாறு இறந்தார்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து சக மாணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவனுக்கு அடிக்கடி வலிப்பு நோய் வரும் என்று கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ள நிலையில் போலீசார் அது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.






