என் மலர்
நீங்கள் தேடியது "Edapdi Palaniswami"
- தமிழ் நாட்டில் ஒரு நிர்வாகத் திறனற்ற ஆட்சியை பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வந்துள்ளார்.
- அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான கூட்டணி குறித்து புலம்பல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பா.ஜ.க. பூச்சாண்டி காட்டியே, நான்கு ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்த திரு. ஸ்டாலின், இன்னும் எத்தனை நாட்கள்தான் தமிழக மக்களை ஏமாற்ற முடியும் ? என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பல கோடிகளை கொட்டிக் கொடுத்து, சில கட்சிகளை அடிமைகளாக விலைக்கு வாங்கி, அவர்கள் தயவால் ஆட்சி அமைத்து, பல்லாயிரம் கோடிகளை கொள்ளை அடித்துள்ள ஊழல் பணத்திற்கு ஆப்பு அடிக்கும் விதமாக, நேற்று (11.4.2025) மத்திய உள்துறை அமைச்சர், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததையடுத்து ஸ்டாலின் அலறித் துடிக்கிறார்.
பா.ஜ.க. புகுந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டியே தமிழக மக்களை, கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ் நாட்டில் ஒரு நிர்வாகத் திறனற்ற ஆட்சியை பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வந்துள்ளார்.
சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள் புழக்கம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பட்டப் பகலில் கொலை வெறியாட்டங்கள், நீதிமன்ற வளாகத்திலேயே படுகொலைகள், தனியாக வசிக்கும் முதியோர்களைக் குறிவைத்து, கொலை செய்து கொள்ளை அடித்தல், மணல் கொள்ளை, மூன்று முறை சொத்து வரி -தண்ணீர் வரி - மின்கட்டண உயர்வு, பலமுறை பால் பொருட்களின் விலை உயர்வு, பத்திரப் பதிவுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து அரசு கட்டணங்களும் பலமடங்கு உயர்வு, உணவு மற்றும் கட்டுமானப் பொருட்களின் கடுமையான விலை உயர்வு, நிறைவேற்றாத வாக்குறுதிகள் என்று, தமிழக மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்யாமல் நான்காண்டு காலத்தைக் கழித்துவிட்டார் நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் ஸ்டாலின்.
நான்காண்டுகளாக பொம்மை முதலமைச்சராக ஆட்சியை நடத்திவிட்டு, தற்போது கச்சத்தீவு, தொகுதி மறுசீரமைப்பு, நீட் விவகாரம் என்று தமிழக மக்கள் இதுவரை அனுபவித்துவந்த சிரமங்களை மடைமாற்ற முயலும் விடியா திமுக-வின் முதலமைச்சர் ஸ்டாலின், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான கூட்டணி குறித்து புலம்பல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பா.ஜ.க. புகுந்துவிடும் என்றே நான்காண்டுகள் தமிழகத்தை ஸ்டாலின் சீரழித்ததை இனி தமிழக மக்கள் நம்பமாட்டார்கள் என்பதை உணர்ந்ததால், தன்னிலை மறந்து புலம்பத் தொடங்கி இருக்கிறார்.
தொடர்ச்சியாக, மத்திய அமலாக்கத் துறையின் சோதனைகளுக்குள்ளான அமைச்சர்களைக் கொண்டு ஆட்சிபுரியும் இவர், இரண்டு ரெய்டுகளுக்கு பயந்து அ.தி.மு.க-வை அடகு வைத்தவர்கள் என்று பொத்தாம் பொதுவாக புழுதிவாரித் தூற்றுகிறார்.
என் மீதோ, எங்கள் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மீதோ மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் ரெய்டு நடத்தியதாகக் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா? மற்றவர்களைப் பார்த்து குற்றம் சொல்லும் முன், 2ஜி ஊழலுக்காக சிறைக்குச் சென்றவர்கள், மந்திரியாக பதவி வகிக்கும்போதே சிறைக்குச் சென்றவர். வழக்கு நிலுவையில் இருக்கும்போதே சிறையிலிருந்து வந்தவருக்கு தியாகி பட்டம் வழங்கி, மீண்டும் மந்திரி பதவி அளித்தது போன்ற நிகழ்வுகளை தமிழக மக்கள் மறந்துவிட முடியுமா?
விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்வதில் வல்லமை பெற்றது தி.மு.க. என்று நீதியரசர் சர்க்காரியாவால் சான்றிதழ் பெற்ற கூட்டம் வீராணம் திட்ட ஊழல், பூச்சி மருந்து ஊழல், அரிசி பேர ஊழல், சர்க்கரை பேர ஊழல், கோடம்பாக்கத்தில் இருந்த அரசு ஆதிதிராவிட மாணவர் விடுதியை தனியார் ஒருவருக்கு விற்று, பின்னர் அவரிடமிருந்து தி.மு.க. கட்சி பத்திரிகை பெயருக்கு மாற்றிய ஜகஜால ஊழல் என்று சர்க்காரியா கமிஷன் பட்டியலிட்டதை தமிழக மக்கள் மறந்துவிட முடியுமா?
அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, CBI வழக்குகளில் இருந்து தப்பியதை தமிழக மக்கள் மறந்துவிட முடியுமா?
2011, சட்டமன்றத் தேர்தலின் போது, தி.மு.க-வின் அறிவாலய அலுவலக கீழ்தளத்தில் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே, மேல் தளத்தில் உள்ள கலைஞர் டி.வி. அலுவலகத்தில் காங்கிரஸ் அரசு ரெய்டு நடத்தியதை தமிழக மக்கள் மறந்துவிட முடியுமா?
அந்த ரெய்டுக்கு பயந்து 63 சீட்டுகளை காங்கிரசுக்குக் கொடுத்து, கொத்தடிமை சாசனம் எழுதிக் கொடுத்து, சாஷ்ட்டாங்கமாக காலில் விழுந்ததைத்தான் தமிழக மக்கள் மறந்துவிட முடியுமா?
அன்று முதல் இன்று வரை, காங்கிரஸ் காலடியில் இருந்து எழும் துணிச்சல் இல்லாத புல் தடுக்கி பயில்வான் ஸ்டாலின், எங்களைப் பார்த்து ஏகடியம் பேசுவது கண்டு மக்கள் எண்ணி நகையாடுகிறார்கள்.
அண்ணா தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியே ஊழல் என்ற ஒரு பெரிய கண்டுபிடிப்பை, ஊழலுக்கும், ஊழலுக்காவும் பிறந்த இந்த மாமேதை வெளியிட்டிருப்பது வேடிக்கை. பொய் புரட்டுகளை அள்ளி வீசி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது சேற்றை வாரி இறைத்து, எதிரணியில் இருப்பவர்களை தனித்தனியாக பிரித்து, தன்னிடம் உள்ள ஏவல் கட்சித் தலைவர்கள் துணையோடு மீண்டும் ஆட்சி அமைத்துவிடலாம் என்று பகல் கனவு கண்டுகொண்டு நாள்தோறும் போட்டோ ஷூட் நடத்தி வரும் ஸ்டாலினின் தலையில், நேற்றைய அண்ணா தி.மு.க. - பா.ஜ.க கூட்டணி அறிவிப்பு இடியை இறக்கி இருக்கிறது.
அது கொடுத்த வலியின் வேகம் தாங்காமல் ஸ்டாலின் துடிப்பதும், துவள்வதும் அவரது அறிக்கையில் இருந்து தெரிகிறது. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தாக வேண்டும். ஸ்டாலினும், அவரது குடும்பமும், மந்திரிகளும் கடலையே குடித்திருக்கிறார்கள். 2026, சட்டமன்றப் பொதுத் தேர்தலில் இந்த கொள்ளைக் கும்பலுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை.
- காரசாரமாக கருத்துக்கள் பரிமாறப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததை தொடர்ந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கடந்த 10-ந்தேதி முதல் பாராளுமன்ற தொகுதி வாரியாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், முன்னணி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டு உள்ளார்.
முதல் நாளில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 2 தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி அதற்கு மறுநாளில் இருந்து தினமும் 3 தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதன்மூலம் கடந்த 6 நாட்களில் 17 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசித்து தோல்விக்கான காரணங்கள் பற்றி அலசி ஆராய்ந்தார்.
நேற்று ராமநாதபுரம் நெல்லை, விருதுநகர் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் காரசாரமாக கருத்துக்கள் பரிமாறப்பட்டிருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி யுள்ளன.
ராமநாதபுரம் போன்ற தென்மாவட்ட தொகுதிகளில் முக்குலத்தோர் அதிகம் இருப்பதால் அவர்களது வாக்குகள் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு கிடைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டை கட்சியினர் முன் வைத்திருக்கிறார்கள்.

எனவே சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சி யில் சேர்ப்பது பற்றி ஆலோசிக்க வேண்டும். அவர்களை கட்சியில் சேர்த்தால் அ.தி.மு.க. மீண்டும் வலுப்பெறும் என்கிற பேச்சு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பரவலாகவே உள்ளது எனவும் ராமநாதபுரம் தொகுதி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் வற்புறுத்தி கூறியுள்ளனர்.
இவர்கள் 3 பேரும் கட்சியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதால் முக்குலத்தோர் சமுதாய மக்களிடமிருந்து அ.தி.மு.க. விலகியே நிற்பதாகவும் வெளியில் பேசப்படுகிறது என்றும் நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளின் இந்த கருத்தை பொறுமையுடன் கேட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் பற்றி நீங்கள் இங்கே குறிப்பிட்டீர்கள். அவர்களை எல்லாம் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்வது பற்றி தனியாக குழு அமைத்து ஆலோசிக்கலாம் என்று கூறியுள்ளார்.

இதன்மூலம் சசிகலா-ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்ப்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க.வின் தொடர் தோல்வியால் எடப்பாடி பழனிசாமி முதன் முறையாக தனது பிடிவாதத்தை தளர்த்தி இறங்கி வந்திருப்பதாகவும் ராமநாதபுரம் தொகுதி நிர்வாகிகள் கூறி உள்ளனர்.
பாராளுமன்ற தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமி நாளை மற்றும் நாளை மறுநாளும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
வருகிற 19-ந்தேதியுடன் இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைகிறது. இதன் பின்னர் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க அ.தி.மு.க. மேலிடம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிகிறது.
- எதையும் எதிர்கொள்ளும் சக்தி அ.தி.மு.க.விற்கு உள்ளது.
- விவசாயிகளைப் பற்றி தி.மு.க. அரசுக்கு கவலை இல்லை என்றார்.
சேலம்:
காவிரி-சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்திய அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
அ.தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்காக ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. தி.மு.க. திறந்து வைத்த பெரும்பாலான திட்டங்கள் கடந்த ஆட்சியில் அ.தி.மு.க. கொண்டு வந்தது. விவசாயிகளைப் பற்றி தி.மு.க. அரசுக்கு கவலை இல்லை.
காவிரி நதி நீர் பிரச்சனையை தீர்க்க கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை கொண்டுவர வேண்டும்.
கோட்டையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டும் வேலை இல்லை. விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்து ஆட்சி செய்ய வேண்டும்.
விவசாயிகள் காலில் அணிவதற்கு காலணிகூட இல்லாத நிலையில், பல கோடி ரூபாய் செலவு செய்து கார் பந்தயம் நடத்துவது தேவைதானா?
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 42 மாத காலம் ஆகியும் சரபங்கா வெள்ள உபரிநீர் நீரேற்று திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது.
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் உதயநிதி. அப்பா மகனைப் புகழ்ந்து பேசுகிறார். மகன் அப்பாவைப் புகழ்ந்து பேசுகிறார். இதுதான் வேடிக்கை.
உதயநிதி ஸ்டாலின் அவர்களே நாவடக்கம் தேவை. செல்வ செழிப்பில் வளர்ந்த உங்களுக்கே இவ்வளவு திமிர் என்றால், உழைப்பால் உயர்ந்தவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்.
ரெய்டை பார்த்து எங்களுக்கு பயமில்லை. எதையும் எதிர்கொள்ளும் சக்தி அ.தி.மு.க.விற்கு உள்ளது என தெரிவித்தார்.
- திமுக கூட்டணி கொள்கை கூட்டணி; வெற்றி கூட்டணி; மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய கூட்டணி.
- 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகள் என்ற வெற்றி இலக்கை நோக்கி நடைபோடுவோம் என்றார்.
நாகை:
நாகையில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
தி.மு.க. கூட்டணி உடையாதா என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
தி.மு.க. கூட்டணி கொள்கை கூட்டணி; வெற்றி கூட்டணி; மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய கூட்டணி.
கடந்த 3 நாட்களுக்கு முன் அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், கூட்டணிக்கு சேர்பவர்கள் ரூ.200 கோடி கேட்கிறார்கள்; 20 சீட் கேட்கிறார்கள் என கூறுகிறார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலமாக 1 கோடியே 16 லட்சம் மகளிர் பயன் அடைகின்றனர்.
இதனை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும் அரசின் திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதாலும் அவருக்கு வயிற்றெரிச்சல்.
வரும் 2026 தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தல். பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீத வெற்றியை மக்கள் அளித்தார்கள்.
2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகள் என்ற வெற்றி இலக்கை நோக்கி நடைபோடுவோம் என தெரிவித்தார்.
- இன்று சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்.
- பெண்கள் அச்சமின்றி வாழ்வதற்கான பாதுகாப்பான சூழலை அமைத்திட உறுதியேற்போம்.
சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25ம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், திமுக ஆட்சியில், பெண்கள் சாலையில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு பாதுகாப்பில்லாத அவல நிலை இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்மசாட்டி உள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமான இன்று, பெண்கள் அச்சமின்றி வாழ்வதற்கான பாதுகாப்பான சூழலை அமைத்திட உறுதியேற்போம்.
திமுக ஆட்சியில், பெண்கள் சாலையில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு பாதுகாப்பில்லாத அவல நிலை இருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். அதற்கான விடியல் இன்றுவரை கிடைத்த பாடில்லை.
பெண்கள் முன்னேற்றம்தான் சமுதாய முன்னேற்றம் என்பதை உணர்ந்து, பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திமுக அரசை இத்தருணத்தில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க தி.மு.க. அரசு தவறிவிட்டது.
- தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் அல்ல, ஸ்டாலின் மாடல் என தெரிவித்தார்.
தேனி:
தேனியில் நடைபெற்ற ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
தேனி மாவட்டத்துக்கு தி.மு.க. அரசு எந்தத் திட்டத்தையும் கொண்டுவரவில்லை. 4 ஆண்டுகளில் தி.மு.க. அரசு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை.
முல்லைப் பெரியாறு அணையை நம்பி 5 மாவட்ட மக்கள் உள்ளனர். முல்லைப் பெரியாறு அணையின்நீர்மட்டத்தை உயர்த்தியது அ.தி.மு.க. அரசு.
அ.தி.மு.க. ஆட்சியில் ஏராளமான திட்டங்களைக் கொண்டுவந்ததால்தான் மக்கள் முன் நெஞ்சை நிமர்த்தி நிற்கின்றோம்.
அ.தி.மு.க. ஆட்சி பொற்கால ஆட்சி என்று மக்களே பாராட்டுகின்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மக்களுக்கு நன்மை அளித்தது. ஏழை, எளிய மாணவர்கள் படிக்க ஏராளமான கல்லூரிகள் திறக்கப்பட்டன.
போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க தி.மு.க. அரசு தவறிவிட்டது. போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்க எச்சரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை.
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை தொடர்கதையாக உள்ளது. தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமை நெஞ்சை பதறச் செய்கிறது.
பெண்கள், பெண் குழந்தைகளுக்கான குற்றங்கள் அதிகரித்துள்ளன. சிறுமிகள் அப்பா.. அப்பா.. என்று கதறும்போது அப்பா ஸ்டாலின் எங்கே போனார்?
தமிழகத்தில் உயர் பதவியில் உள்ள பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. அண்ணா பல்கலைக்கழக வழக்கில் யார் அந்த சார் என்பதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.
தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. முதல்வர் ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் போட்டோ ஷூட் செய்து வருகிறார். தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் அல்ல, ஸ்டாலின் மாடல் என தெரிவித்தார்.






