என் மலர்
சேலம்
- பறக்கும் படை அதிகாரி சரவணன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- காரில் 70 கிலோ வெள்ளி கொலுசுகள் இருப்பது தெரியவந்தது.
சேலம்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டு உரிய ஆவணங்கள் இல்லாத பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து சேலம் வடக்கு தொகுதிக்குட்பட்ட செவ்வாய்ப்பேட்டை பகுதியில் பறக்கும் படை அதிகாரி சரவணன் தலைமையில் இன்று அதிகாலை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் 70 கிலோ வெள்ளி கொலுசுகள் இருப்பது தெரியவந்தது. மேலும் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறிய அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து, சேலம் கோட்டாட்சியர் அம்பாயிர நாதனிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து காரை ஓட்டி வந்த சென்னை கிண்டியைச் சேர்ந்த அணில் (30) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து, வெள்ளி கொலுசு சங்க நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் கூறுகையில், உரிய ஆவணங்கள் இருந்தும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்து அதிகாரிகளிடம் புகார் கொடுக்க உள்ளதாகவும் கூறினர்.
- கடந்த ஆண்டு இருவரும் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளனர்.
- கத்தார் நாட்டுக்கு செல்வதாக கூறி விட்டு இருவரும் கோவையில் பீளமேடு பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் 40 அடி பாலம் அருகில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு சூட்கேசில் அடைக்கப்பட்ட பிணம் கிடந்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அந்த பெண்ணின் உடல் அரை நிர்வாணமாக இருந்தது. முகம் அழுகிய நிலையில் அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்தது.
போலீசார் விசாரணையில் பெண்ணின் உடல் இருந்த சூட்கேஸ் கோவையில் வாங்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த சூட்கேசை வாங்கியவர் யார் என்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் சூட்கேஸ் வாங்கிய நபர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பறவைக்கோட்டை பகுதியை சேர்ந்த நட்ராஜ் (வயது 32) என்பது தெரிய வந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-
நட்ராஜூக்கு திருமணம் ஆகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். அவர் கத்தார் நாட்டுக்கு வேலைக்கு சென்றார். அதே நாட்டில் நட்ராஜ் பணிபுரிந்த பகுதியில் தேனி மாவட்டம் முத்துலாபுரத்தை சேர்ந்த சுபலட்சுமியும் (33) வேலை பார்த்து வந்துள்ளார். சுபலட்சுமிக்கு கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். கணவரிடம் விவாகரத்து பெற்று இருந்ததாக தெரிகிறது.
இருவரும் தமிழர்கள் என்ற முறையில் அறிமுகமான நட்பு நாளடைவில் நெருக்கத்தை ஏற்படுத்தியது. வெளிநாட்டில் இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்ததுடன் உல்லாசமாக வாழ்க்கையை அனுபவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு இருவரும் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளனர். அதன்பிறகு கத்தார் நாட்டுக்கு செல்வதாக கூறி விட்டு இருவரும் கோவையில் பீளமேடு பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினர்.
கள்ளக்காதலி சுபலட்சுமி பெயரை நட்ராஜ் கையில் பச்சை குத்தி உள்ளார். கோவையில் கணவன்-மனைவியாக கடந்த ஒரு ஆண்டாக வாழ்க்கை நடத்தி வந்த அவர்களுக்கு இடையே கடந்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த நட்ராஜ் அங்கு கிடந்த கம்பியை எடுத்து சுபலட்சுமியை தாக்கி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சுபலட்சுமி ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
உடனே தன்னுடைய நண்பர் கனிவளவனை வீட்டுக்கு அழைத்து நட்ராஜ் நடந்த விவரங்களை கூறியுள்ளார். அவர் உதவியுடன் சூட்கேஸ் ஒன்றை வாங்கி அதில் சுபலட்சுமி உடலை அடைத்துள்ளனர்.
பின்னர் வாடகை கார் ஒன்றை இவர்களே எடுத்தனர். டிரைவர் வேண்டாம் என்று கூறி விட்டு நட்ராஜூம், கனிவளவனும் பெண்ணின் உடல் இருந்த சூட்கேசை காரில் ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து கள்ளக்குறிச்சிக்கு வந்துள்ளனர். உடலை எங்கு வீசினால் கண்டுபிடிக்க முடியாது என்று இருவரும் திட்டமிட்டனர். அதன்படி காரில் 2 நாட்களாக சுபலட்சுமி உடலுடன் சுற்றி திரிந்துள்ளனர்.
அப்போதுதான் ஏற்காடு மலைப்பகுதிக்கு மனைவி, குழந்தைகளுடன் நட்ராஜ் சுற்றுலா வந்தது நினைவுக்கு வந்தது. அங்கு சென்று சுபலட்சுமி உடலை வீசினால் யாரும் கண்டுபிடிக்க முடியாது என நினைத்துள்ளார். அதன்படி கடந்த 1-ந் தேதி ஏற்காட்டுக்கு வந்துள்ளனர். அன்று இரவு 40 அடி மலைப்பாதை பகுதியில் சுபலட்சுமி உடல் அடைக்கப்பட்ட சூட்கேசை வீசி விட்டு சென்றுள்ளனர்.
போலீசுக்கு பயந்து ஒரு வாரம் சொந்த ஊரான மன்னார்குடியில் இருந்த நட்ராஜ் அதன்பிறகு கோவையில் சுபலட்சுமியுடன் தங்கி இருந்த வாடகை வீட்டுக்கு வந்ததும், அங்கிருந்து வேலைக்கு சென்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
உடனே போலீசார் நட்ராஜ், அவருடைய நண்பர் கனிவளவன் இருவரையும் கைது செய்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று பிரசாரத்தை தொடங்கினார்.
- பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.
சேலம்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது. அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களையும் அறிவிக்கப்பட்டு விட்டன.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று பிரசாரத்தை தொடங்கினார்.
சேலம் பெரிய சோரகையில் உள்ள சென்றாய பெருமாள் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய அவர் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து இன்று மாலை திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வண்ணாங்கோவில் நவலூர் குட்டப்பட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.
இதில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வாக்கு சேகரிக்கிறார். இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்று பேசுகின்றனர்.
- டாக்டர் ராமதாஸ் வேடந்தாங்கல் பறவை போல அடிக்கடி கூட்டணியை மாற்றி கொண்டிருக்கிறார்.
- அ.தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகம் ஏற்றம் பெற்றது, உயர்நிலைக்கு வந்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது குறித்து சேலம் மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. டாக்டர் ராமதாஸ் வேடந்தாங்கல் பறவை போல அடிக்கடி கூட்டணியை மாற்றி கொண்டிருக்கிறார். ஏரியில் தண்ணீர் நிரம்பி இருக்கும்போது பறவைகள் வரும், தண்ணீர் வற்றினால் சென்று விடும்.
அப்படி ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி மாறிக்கொண்டு இருக்கும் கட்சியை பற்றி பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதுமட்டுமல்ல ராமதாஸ் ஒரு பேட்டியின்போது பா.ஜனதாவிற்கு பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுப்பேன் என்று கூறியிருந்தார். தற்போது அந்த கட்சியில் இணைந்து அவரது வேட்பாளர்கள் வெற்றி பெறுவதாக கூறுகிறார். ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு கட்சியை ஆதரிக்கின்ற கட்சிதான் பாட்டாளி மக்கள் கட்சி.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளை நம்பி இல்லை. கூட்டணி கட்சிகள் வந்தால் வரவேற்போம். அதே நேரத்தில் கூட்டணி கட்சிகள் வராவிட்டாலும் எங்களுடைய சொந்த பலத்தில் நிற்போம். நிறைய திட்டங்களை நாட்டு மக்களுக்கு செய்துள்ளோம். அ.தி.மு.க. பொன்விழா கண்ட கட்சி ஆகும். அ.தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகம் ஏற்றம் பெற்றது, உயர்நிலைக்கு வந்தது. மேலும் இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குவதற்கு அடித்தளம் போட்டது.
எனவே நாங்கள் கூட்டணி கட்சிகளை நம்பி கட்சி நடத்தவில்லை.
ஒரு ரூபாய் செலவு செய்கிறாரா? இல்லையா? என்பதை அண்ணாமலையை பின்தொடர்ந்து சென்று பாருங்கள். ஒரு ரூபாய் செலவு செய்யாமல் தேனீர், தண்ணீர் கூட குடிக்க முடியாது. அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அந்தந்த கட்சி செலவு செய்வார்கள். தேர்தல் ஆணையமும் இவ்வளவுதான் செலவு செய்ய வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் ஊழல் இல்லாத இடமே கிடையாது. போதைப்பொருள் விற்பனையை தி.மு.க. நிர்வாகிகளே செய்கின்றனர். அவ்வாறு இருக்கும் நிலையில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கேபிள் மின் வயர்கள் அங்குள்ள சாலையோரம் கடந்த சில நாட்களாக குவித்து வைக்கப்பட்டிருந்தது.
- வழக்கு பதிவு செய்த போலீசார் குப்பைக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் மெய்யனூர் இட்டேரி ரோடு பகுதியில் தமிழ்நாடு மின் வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு சொந்தமான கேபிள் மின் வயர்கள் அங்குள்ள சாலையோரம் கடந்த சில நாட்களாக குவித்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ரோட்டோரம் கிடந்த குப்பைக்கு மர்ம நபர் ஒருவர் தீ வைத்தார். இந்த தீ மளமளவென பரவி கொளுந்து விட்டு எரிந்தது. பின்னர் அங்கிருந்த கேபிள் வயரில் பிடித்து எரிந்தது. இதனை பார்த்த மின் ஊழியர்கள் மற்றும் அந்த பகுதியினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அங்கிருந்த கேபிள் வயர்கள் அனைத்தும் எரிந்து சேதமானது.
இது குறித்து மின் வாரிய உதவி என்ஜினீயர் கண்ணன் ( 48) பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இந்த தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான கேபிள் வயர்கள் எரிந்து சேதமானதாகவும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் புகாரில் கூறி இருந்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குப்பைக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
- வெங்கடேசன் 10 மற்றும் 12-ம் வகுப்பு பி .எட். படித்துள்ளதாக கொடுத்தது போலி சான்றிதழ் என்பது தெரிய வந்தது.
- வெங்கடேசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடினர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முளுவி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சேலம் கோரிமேடு பர்மா காலனியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 9 மாதங்களாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் மீது வட்டார கல்வி அதிகாரி ஷேக் தாவூத் நேற்று ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் 10-ம் வகுப்பு முதல் பி.எட். வரை படித்ததாக போலி சான்றிதழ்கள் கொடுத்து கடந்த 1997 -ம் ஆண்டு முதல் ஏற்காட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றி வந்துள்ளார்.
அவர் மேல் சந்தேகம் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள உண்மை கண்டறியும் குழுவிற்கு அவரது சான்றிதழ்களை அனுப்பி வைக்கப்பட்டது. அதில் வெங்கடேசன் 10 மற்றும் 12-ம் வகுப்பு பி .எட். படித்துள்ளதாக கொடுத்தது போலி சான்றிதழ் என்பது தெரிய வந்தது. எனவே போலி சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளிகளில் 27ஆண்டுகளாக பணியாற்றி வந்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதையடுத்து வெங்கடேசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடினர். அப்போது அவர் தலைமறைவானது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். இதற்கிடையே போலி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்தது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கபீர் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணை முடிவில் அவர் சஸ்பெண்டு செய்யப்படுவார் என்று தெரிவித்தனர்.
- திருச்சியில் நாளை அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் 40 பேரை ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தி பிரசாரம் செய்கிறார்.
- திறந்த வேனில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
சேலம்:
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம், தே.மு.தி.க. எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் அ.தி.மு.க. 33 இடங்களில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. 5 தொகுதிகளிலும், புதிய தமிழகம் தென்காசியிலும், எஸ்.டி.பி.ஐ. கட்சி திண்டுக்கல் தொகுதியிலும் போட்டியிடுகிறது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
இதே போல் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். திருச்சியில் நாளை (24-ந்தேதி) அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் 40 பேரை ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தி பிரசாரம் செய்கிறார்.
இதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தார். பின்னர் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி சேலம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள கரியவரதராஜ பெருமாள் கோவிலில் நாளை காலை 9 மணியளவில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அந்த பகுதியில் திறந்த வேனில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
ஒவ்வொரு தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் தான் தனது பிரசாரத்தை தொடங்குவார். அதே போல் இந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தையும் தொடங்க உள்ளார். பின்னர் இங்கிருந்து திருச்சிக்கு புறப்பட்டு செல்கிறார்.
எடப்பாடி பழனிசாமி நாளை முதல் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதால் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
- தாவரவியல் பூங்காவில் ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா மலர்கள் நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- 675 வகையான ரோஜா செடிகள் என மொத்தம் 6,750 எண்ணிக்கையில் நடவு செய்யப்பட்டு வருகிறது
ஏற்காடு:
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படும். தமிழகத்தில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வருகை தருவார்கள். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தாவரவியல் பூங்காவில் ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா மலர்கள் நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து தோட்ட கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஏற்காடு கோடை விழாவில் மலர் கண்காட்சிக்கு தேவைப்படும் மலர்ச்செடிகளை இப்போதே நடவு செய்ய தொடங்கியுள்ளோம். அண்ணா பூங்காவில் பால்சம், ஜீனியா, சால்வியா, டெல்பினியம், ஆஸ்டர், மேரிகோல்டு, சூரியகாந்தி ஆகிய மலர் விதைகள் 25 ஆயிரம் முதல் கட்டமாக விதைக்கப்பட்டுள்ளன. ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா கட்டிங்ஸ், 3ஆயிரம் எண்ணிக்கைக்கு மேல் மேட்டுப்பாத்திகளில் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும், ரோஜா பூங்கா, அண்ணா பூங்கா, முதலாவது அரசு தாவரவியல் பூங்கா ஆகியவற்றில் 675 வகையான ரோஜா செடிகள் என மொத்தம் 6,750 எண்ணிக்கையில் நடவு செய்யப்பட்டு வருகிறது.
ஏற்காட்டில் பருவமழை சீராக பெய்துள்ளதால், தற்போது தட்பவெப்ப நிலை சீராக உள்ளது. இதன் காரணமாக, தோட்டங்களில் வைத்துள்ள பூச்செடிகள் செழித்து வளர தொடங்கியுள்ளன. கோடை விழா தொடங்கும் போது, பூச்செடிகள் முழுமையாக வளர்ச்சியடைந்து, பூத்துக் குலுங்கி, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மோடி இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சேலம் வந்தார்.
- இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களுக்கு பா.ஜ.க. வாடகை செலுத்துகிறதா? என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும்.
சேலம்:
சேலம் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியதற்காக பிரதமர் மோடி மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளரான நாமக்கல்லை சேர்ந்த டாக்டர் பி.வி. செந்தில், சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவிக்கு இ-மெயிலில் புகார் அனுப்பி உள்ளார்.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது-
கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மோடி இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சேலம் வந்தார். மேலும் இரண்டு ஹெலிகாப்டர்கள் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்டன.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975-ல் தேர்தல் பிரசாரத்திற்கு ராணுவ ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தியபோது தேர்தல் கமிஷனால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் . அதன்படி எந்தவொரு தலைவரும், பிரதமர் அல்லது முதல்வர் கூட, பிரசார நோக்கங்களுக்காக அரசாங்க எந்திரத்தைப் பயன்படுத்தக்கூடாது.
இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களுக்கு பா.ஜ.க. வாடகை செலுத்துகிறதா? என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். அப்படியானால், மற்ற கட்சித் தலைவர்களுக்கும் இந்த வசதி நீட்டிக்கப்படலாம். இந்திய விமானப்படைக்கும் இதன் மூலம் வாடகை வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
- தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஏராளமான திட்டங்கள் கொடுத்து உள்ளார்.
- மக்களுக்கு சேவை செய்யும் பிரதமராக மோடி உள்ளார்.
சேலம்:
சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடந்த பா.ஜனதா கூட்டத்தில் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், 'இங்கு கூடியுள்ள கூட்டம் காசு கொடுத்து வந்த கூட்டம் அல்ல. நரேந்திர மோடி மீது உள்ள பாசத்தால் வந்த கூட்டம். நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்.
தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஏராளமான திட்டங்கள் கொடுத்து உள்ளார். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது எத்தனை திட்டம் கொண்டு வந்தீர்கள் என்று தி.மு.க.வினரால் பட்டியல் கொடுக்க முடியுமா? மீண்டும் தாமரை மலரும். தமிழ்நாட்டில் இருந்து அதிகப்படியான எம்.பி.க்களை டெல்லிக்கு அனுப்ப வேண்டும்' என்றார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். தமிழகத்தில் இதுவரைக்கும் ஆளும் கட்சியில் இருந்து எங்களை தாண்டி வேறு யாரும் வரமுடியாது என்று உட்கார்ந்து இருக்கின்றனர். நிச்சயம் பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது என்பதை அனைவரும் பார்க்க போகிறார்கள்' என்றார்.
மேலும் அவர் கூறுகையில், 'பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மோடி போன்று பிரசாரத்திற்கு வேறு எந்த பிரதமரும் தமிழகத்திற்கு வந்தது இல்லை. பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவதை பிரமிப்பாக பார்க்கிறார்கள். மக்களுக்கு சேவை செய்யும் பிரதமராக மோடி உள்ளார். தேர்தலில் போட்டியிட இதுவரை நான் (குஷ்பு) சீட் கேட்கவில்லை' என்றார்.
- பிரதமர் மோடி இன்று சேலம் வந்தடைந்தார்.
- கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்றார்
கேரளாவில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி இன்று சேலம் வந்தடைந்தார். அவரை பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்றனர். அதனை தொடர்ந்து கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
பொதுக்கூட்டத்தில் ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், சரத்குமார், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, "கடந்த 40-50 ஆண்டுகளுக்கு முன் கைலாஷ் யாத்திரை சென்றேன். அப்போது சேலத்தை சேர்ந்த ரத்தின வேல் என்பவர் என்னுடன் வந்தார்.
அவர் சேலத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே வந்தார். அப்போது முதல் சேலத்தின் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. உணவகம் ஒன்றை நடத்தி வந்தவர் இப்போது நம்மிடம் இல்லை என்று பேசியுள்ளார்.
இதனையடுத்து, மோடிக்கு உண்மையாகவே சேலத்தில் ஒரு நண்பர் இருந்தாரா? இல்லை சேலத்தில் பேசுவதற்காக இப்படி ஒரு பொய்யை சொல்கிறாரா? என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.
- கோவை வந்த பிரதமர் மோடி பேரணியை நடத்தினார்.
- ரமேஷ் இரவும் பகலுமாக கட்சிக்காக உழைத்தவர்.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பிரமதர் மோடி முதல்முறையாக தமிழக வந்தார்.
நேற்று மாலை கோவை வந்த பிரதமர் மோடி பேரணியை நடத்தினார். பிறகு, இன்று சேலம் வந்த பிரதமர் மோடி கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பாஜகவின் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசினார்.
அப்போது, பிரதமர் மோடி மேடையில் மறைந்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மற்றும் பாஜக மாநில பொதுச் செயலாளர் 'ஆடிட்டர்' வி.ரமேஷ் ஆகியோரை நினைவு கூர்ந்து பேசினார். அப்போது அவர், கண்கலங்கி உணர்ச்சிவசப்பட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இன்னைக்கு நான் சேலத்தில் இருக்கிறேன். ஆடிட்டர் ரமேஷ் இன்று நம்முடன் இல்லை. ரமேஷ் இரவும் பகலுமாக கட்சிக்காக உழைத்தவர்.
அவர் கட்சியின் அர்ப்பணிப்புள்ள தலைவராக இருந்தார். அவர் ஒரு சிறந்த பேச்சாளர் மற்றும் மிகவும் கடின உழைப்பாளி. அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
அவசரநிலைக்கு எதிரான போராட்டத்தில்
தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் ஆற்றிய பங்கு மறக்க முடியாதது. மாநிலத்தில் பல பள்ளிகளையும் அவர் தொடங்கினார்.
தமிழகத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய தமது அரசு கடுமையாக உழைத்துள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு சேலம் மாநகரம் மரவனேரி பகுதியில் பாஜக மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் வி ரமேஷ் (54), வீட்டின் வளாகத்தில் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.






