என் மலர்tooltip icon

    சேலம்

    • முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், நரசிம்மராவ் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட புகழ்பெற்றவர்களை எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன்.
    • தேர்தல் மன்னன் பத்மராஜனுக்கு தற்போது 65 வயதாகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் கே. பத்மராஜன். தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர் இதுவரை 238 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். தற்போது 239-வது முறையாக தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நான் டயர் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறேன். முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், நரசிம்மராவ் மற்றும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, உள்ளிட்ட புகழ்பெற்றவர்களை எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களிலும் 6 முறை போட்டியிட்டுள்ளேன். நான் வெற்றி பெற விரும்பவில்லை. தோல்வியை மட்டுமே அடைய வேண்டும். ஏனெனில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வெற்றியை ருசிக்க முடியும். ஆனால் நீங்கள் என்றென்றும் இழப்பை அனுபவிக்க முடியும். மேலும் இதுவரை தேர்தலுக்காக சுமார் ரூ. 1 கோடி செலவழித்து உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேர்தல் மன்னன் பத்மராஜனுக்கு தற்போது 65 வயதாகிறது. இவர் லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் டெல்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் தேர்தல் வரலாற்றில் மிகவும் தோல்வி அடைந்த வேட்பாளர் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.

    • பறக்கும் படை அதிகாரிகளை கண்டதும் காரில் வந்தவர்கள் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
    • குட்கா மூட்டைகள் மற்றும் காரை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி சேலம் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கெங்கவல்லி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பறக்கும் படை அதிகாரிகளை கண்டதும் காரில் வந்தவர்கள் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதையடுத்து அந்த காரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது அந்த காரில் இருந்தது மூட்டைகளை பிரிந்து பார்த்த போது அதில் 50 மூட்டைகளில் குட்கா இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து குட்கா மூட்டைகள் மற்றும் காரை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் வீரகனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதை தொடர்ந்து கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து காரின் எண்ணை வைத்து யாருடையது என்பது குறித்தும், குட்கா எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரமேலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.
    • தே.மு.தி.க. சார்பில் பிரேமலதா பிரசாரம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதையடுத்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரமேலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்தநிலையில் நேற்று ஈரோட்டில் பிரசாரம் செய்த அவர் இன்று சேலம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து ஈரோட்டில் இருந்து அவர் தருமபுரிக்கு புறப்பட்டு சென்றார். தே.மு.தி.க. சார்பில் அவர் பிரசாரம் செய்யும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    • மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.
    • அதிகாலை நடைபயிற்சிக்கு பின்னர் மார்க்கெட் பகுதிக்கு சென்ற முதலமைச்சர், அங்குள்ள பொதுமக்களை சந்தித்து பேசினார்.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.

    அதன்படி, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு இந்தியா கூட்டணி சார்பில் பிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மலையரசன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

    இந்நிலையில் இன்று காலை சேலம் அக்ரஹாரம் பகுதியில் நடைபயணமாக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிகாலை நடைபயிற்சிக்கு பின்னர் மார்க்கெட் பகுதிக்கு சென்ற முதலமைச்சர், அங்குள்ள பொதுமக்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். பின்பு அங்கிருந்த கடையில் தேநீர் அருந்தினார்.


    • பெற்றோர் தினமும் மகனுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி பள்ளிக்கு அனுப்பி வைத்து வந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை காமராஜர் காலனியை சேர்ந்தவர் சிவசண்முகம். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். இவருடைய மனைவி கெஜலட்சுமி. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஹரிகரசுதன் (14) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    ஹரிகரசுதன் அயோத்தி யாப்பட்டணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இதற்கிடையே ஹரிகரசுதனுக்கு பள்ளிக்கு போக விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் தினமும் மகனுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி பள்ளிக்கு அனுப்பி வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் வழக்கம்போல் நேற்றும் ஹரிகரசுதன் தனது பெற்றோரிடம் பள்ளிக்கு போகமாட்டேன் என கூறி அடம்பிடித்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் அவருக்கு அறிவுரை கூறி காலையில் பள்ளி வாகனத்தில் அனுப்பி வைத்தனர். இதனால் மனமுடைந்த ஹரிகரசுதன் மாலையில் வகுப்பு முடிந்து வீட்டிற்கு வந்ததும் வீட்டிற்குள் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் கல்லூரியில் பயிலும் அவரது சகோதரி மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது தம்பி தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி உடனே தனது பெற்றோருக்கு தெரிவித்தார். அவர்கள் வீட்டிற்கு விரைந்து வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாடல்கள் பாடியும் மாணவிகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • புதிய வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை செய்ய வலியுறுத்தினர்.

    ஓமலூர்:

    சேலம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பதிவை அதிகரிக்க செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், விழிப்புணர்வையும் செய்து வருகின்றனர்.

    கிராமங்களில் விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டும், நகரங்கள், கல்லூரிகளில் கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் 100 சதவீதம் வாக்குபதிவை வலியுறுத்தி, ஓமலூர் அருகே உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், பரத நாட்டியம், பாடல்கள், இசை கருவிகள் இசைத்தல், வீணை வாசித்தல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அலுவலர் லட்சுமி, மாணவிகள் முன்னிலையில் வீணை வாசித்து 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    மேலும், தேர்தல் அலுவலர் லட்சுமீ சுமார் ½ மணி நேரம் வீணை வாசித்து அசத்தினார். இவரை தொடர்ந்து சேலம் இசை பள்ளி மாணவிகள் வீணை வாசித்தும், பாடல்கள் பாடியும் மாணவிகள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். புதிய வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை செய்ய வலியுறுத்தினர்.

    • முதலமைச்சர் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    சேலம்:

    தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் முடிவடைந்து மனுக்கள் மீதான பரிசீலனையும் முடிவடைந்து விட்டது. இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது. இதனால் தலைவர்கள் தொகுதியில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை ஆகிய இடங்களில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

    இந்த நிலையில் தருமபுரி தி.மு.க. வேட்பாளர் மணி, கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து தருமபுரியில் இன்று மாலை நடைபெறும் பிரசாரக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஆதரவு திரட்டுகிறார்.

    இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் சேலம் காமலாபுரத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகிறார். பின்னர் தருமபுரி தடங்கம் பகுதிக்கு செல்லும் அவர் அங்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். தொடர்ந்து இரவில் சேலம் வரும் மு.க.ஸ்டாலின் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார்.

    நாளை (30-ந்தேதி) காலையில் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். தொடர்ந்து மாலை 6 மணியளவில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். அங்கு சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் மலையரசன் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார். இதில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம்.செல்வகணபதி ஆகியோர் செய்துள்ளனர்.

    சேலம் பிரசார பொதுக்கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் ஈரோட்டிற்கு புறப்பட்டு செல்கிறார். இதையொட்டி சேலம் விமான நிலையம், பெத்தநாயக்கன்பாளையத்தில் கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் சேலத்தில் அவர் தங்கும் மாமாங்கம் பகுதிகளிலும் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் ஆகியோர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். முதலமைச்சர் வருகையையொட்டி சேலம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • தேர்தல் அதிகாரி சேலம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனுவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.
    • செல்வகணபதிக்கு எதிராக கொடுக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி முதல் தொடங்கியது. 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்த நிலையில், இன்று 40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    வேட்பு மனுவை பரிசீலனை செய்து வரும் தேர்தல் அதிகாரி சேலம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனுவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.

    2 இடங்களில் வாக்கு இருப்பதாக அதிமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சேலம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    செல்வகணபதிக்கு எதிராக கொடுக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    செல்வகணபதிக்கு 2 இடங்களில் வாக்கு இருப்பதாக அதிமுகவினர் அளித்த புகார் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது.
    • வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் மனோ ஆகியோரின் வேட்புமனுக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி முதல் தொடங்கியது. 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்த நிலையில் மொத்தம் 1403 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்திருப்பதால் மொத்த வேட்புமனு எண்ணிக்கை 1749 ஆக உள்ளது.

    40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

    இந்நிலையில் வேட்பு மனுவை பரிசீலனை செய்து வரும் தேர்தல் அதிகாரி சேலம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

    2 இடங்களில் வாக்கு இருப்பதாக அதிமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என கூறி வேட்பு மனு மீதான பரிசீலனையை தேர்தல் அதிகாரி நிறுத்தி வைத்துள்ளார்.

    அதேபோல் வடசென்னை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் மனோ ஆகியோரின் வேட்புமனுக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    பரஸ்பரம் ஆட்சேபணை தெரிவித்த நிலையில் 2 பேரின் வேட்பு மனு மீதான பரிசீலனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
    • குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    மேட்டூர்:

    மேட்டூர் அருகே தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைத்து காடையாம்பட்டி பகுதிக்கு நாள் ஒன்றுக்கு 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.

    இதன் மூலம் ஓமலூர், காடையாம்பட்டி, தொப்பூர், தாரமங்கலம், மேச்சேரி பகுதிகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அனல்மின் நிலையம் செல்லும் சாலையில் காடையாம்பட்டி ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 2 நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

    தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் சூழ்நிலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • நடப்பு ஆண்டில் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாமல் போனது.
    • இன்று முதல் 15 நாட்களுக்கு தண்ணீர் வெளியேற்றப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 15-ந் தேதி வரை 137 நாட்களுக்கு 9.60 டி.எம்.சி, தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

    இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கர், நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கர் என மொத்தம் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் 3 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி அடையும்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்தது மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காது உள்ளிட்ட காரணங்களால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இதனால் நடப்பு ஆண்டில் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாமல் போனது.

    இதனால் கிழக்கு, மேற்கு கால்வாய் கரையோர பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவியது.

    இந்நிலையில் இன்று கால்வாய் கரையோர மக்களின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கரை கால்வாயில் வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.இன்று முதல் 15 நாட்களுக்கு தண்ணீர் வெளியேற்றப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நாளை (28-ந்தேதி) முதல் வருகிற 1-ந்தேதி வரை 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையங்களிலும், இணைய தள முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து பயணிகள் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பில் வருகிற 29-ந்தேதி முதல் புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்கள் விடுமுறையையொட்டி நாளை (28-ந்தேதி) முதல் வருகிற 1-ந்தேதி வரை 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதையொட்டி சேலம் புதிய பஸ்நிலையம், பெங்களூரு, சென்னை கோயம்பேடு, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தருமபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருக்கும் இயக்கப்படுகின்றன.

    அதே போல ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருவிற்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரத்திற்கும், ஈரோட்டில் இருந்து பெங்களூருவிற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்த பஸ்களை அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையங்களிலும், இணைய தள முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து பயணிகள் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×