என் மலர்tooltip icon

    சேலம்

    • அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
    • தற்போது அணையில் 86.20 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    அதே நேரம் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் தேவை குறைந்ததால் அணையில் இருந்து குறைந்த அளவிலேயே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.32 அடியாக உயர்ந்து காணப்பட்டது. மேலும் அணைக்கு நேற்று வினாடிக்கு 25 ஆயிரத்து 98 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 14,404 கனஅடியாக குறைந்தது. தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 86.20 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

    • இந்தியாவில் சமையல் எண்ணெய்கள் அதிக அளவில் மலேசியா உள்பட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
    • மத்திய அரசின் இறக்குமதி வரி உயர்வு மற்றும் சில நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போரால் மலேசியாவில் சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

    சேலம்:

    நமது அன்றாட சமையலில் சமையல் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. வெவ்வெறு வகையான எண்ணெய்களை நம்முடைய அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம் பல்வேறு பலன்கள் கிடைக்கிறது. சமையலுக்கு சரியான எண்ணெய் பயன்படுத்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் சமையல் எண்ணெய் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    உணவுகளில் எண்ணெய் இல்லாத உணவுகளை எடுத்து கொண்டால் அதிக சோர்வு மற்றும் உடல் நிலை சரியில்லாமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எண்ணெயில் இருந்து கிடைக்கும் கொழுப்பு உடலுக்கு மிகவும் முக்கியம், அவை மூளை நரம்பு மண்டலங்களை சிறப்பாக இயங்க உதவி புரியும். மார்க்கெட்டுகளில் பல்வேறு விதமான சமையல் எண்ணெய்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டாலும் தரமான எண்ணெய்களை நாம், தேடி தேர்வு செய்ய வேண்டும்.

    இந்தியாவில் சமையல் எண்ணெய்கள் அதிக அளவில் மலேசியா உள்பட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய எண்ணெயின் விலை தற்போது அதிக அளவில் உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் 110 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு இறக்குமதி வரியை உயர்த்தியதால் தீபாவளி நேரத்தில் லிட்டருக்கு 20 ரூபாய் உயர்ந்தது.

    பின்னர் தீபாவளி பண்டிகை முடிந்ததும் விலை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக லிட்டருக்கு மேலும் 20 ரூபாய் உயர்ந்தது. இதனால் பல்வேறு சமையல் எண்ணெய்கள் ஒரு லிட்டர் தற்போது 150-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கடந்த 2 மாதங்களில் மட்டும் சமையல் எண்ணெய் ஒரு லிட்டருக்கு 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் விலை உயர்வால் நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த விலை உயர்வுக்கு காரணம் குறித்து சேலம் மாவட்ட எண்ணெய் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில் , மத்திய அரசின் இறக்குமதி வரி உயர்வு மற்றும் சில நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போரால் மலேசியாவில் சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. மலேசியாவில் இருந்து அதிக அளவில் சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகள் இந்தியா இறக்குமதி செய்வதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மேலும் சில மாதங்கள் நீடிக்கும். தற்போதைக்கு விலை குறைய வாய்ப்பில்லை இவ்வாறு அவர்கள் கூறினர் .

    • அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் பரிசல் மூலம் பயணித்து வருகின்றனர்.
    • திருமணிமுத்தாறு-சரபங்கா நதியில் தொடர்ந்து வெள்ளம்.

    சேலம்:

    சேலத்தில் முக்கிய நீராதாரமே மலைகள் தான். ஏற்காடு சேர்வராயன் மலை தொடரில் உள்ளது. திருமணிமுத்தாறின் பிறப்பிடமாக ஏற்காடு மலை திகழ்கிறது . சேர்வராயன் மலைகளில் இருந்து வழிந்தோடும் தண்ணீர் திருமணிமுத்தாறில் சங்கமித்து தொடர் சங்கிலி ஏரிகளை நிரப்பி காவிரியுடன் கலக்கிறது.

    அதாவது திருமணிமுத்தாறு சேலம் நகரம் வழியாக உத்தமசோழபுரம், ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி வழியாக 120 கி.மீ. ஓடி பரமத்திவேலூர் அருகே காவிரியில் கலக்கிறது. சிறப்புமிக்க திருமணிமுத்தாறில் கடந்த 1972-ம் ஆண்டு பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது திருமணிமுத்தாறில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி பெரும் அழிவை ஏற்படுத்தியது.


    இந்த பெரும் வெள்ளத்தில் கோட்டை மாரியம்மன் கோவில் அம்மன் கருவறை மூழ்கியது. திருவள்ளுவர் சிலை அருகே ஒரு வாரத்திற்கு மேல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி மற்றும் டிசம்பர் 1,2-ந்தேதிகளில் கன மழை பெய்தது. இதனால் சேலம் மாவட்டத்தில் மற்ற இடங்களை காட்டிலும் ஏற்காட்டில் அதிக மழை பெய்தது.

    அங்கு கடந்த 1-ந்தேதி காலை நிலவரப்படி 144.4 மில்லி மீட்டர் மழையும், 2-ந்தேதி 238 மில்லி மீட்டர் மழையும், 3-ந்தேதி 98.2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

    இம்மழையால் ஏற்காடு மலைப்பாதை மற்றும் கிராமப்பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன.

    ஏற்காட்டில் பெய்த பலத்த மழையினால் திருமணிமுத்தாறில் கடந்த 3-ந்தேதி காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 52 ஆண்டுகளுக்கு பிறகு திருமணிமுத்தாறில் மீண்டும் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கந்தம்பட்டி பைபாஸ் அருகே தரைப்பாலத்திற்கு மேல் இடுப்பளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    பாலத்தில் உள்ள தண்ணீர் மோட்டார்வைத்து வெளியேற்றப்பட்டது. கந்தம்பட்டி மற்றும் ஆற்றங்கரையோரம் உள்ள அனைத்து கிராமங்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    திருச்செங்கோடு அருகாமையில் கிராமங்களில் உள்ள திருமணிமுத்தாறு தரைபாலங்கள் அனைத்தும் மூழ்கடித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பல்வேறு கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

    பரமத்திவேலூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. பரமத்திவேலூர் அருகே உள்ள பில்லூரில் இருந்து வில்லிபாளையம் உள்ளிட்ட தரைபாலம் மூழ்கியது. பொதுமக்கள் தரைபாலத்தை கடக்க வேண்டாம் என வருவாய்துறை, பேரூராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதேபோல் வசிஷ்டநதி, சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சரபங்கா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் எடப்பாடியில் உள்ள பெரிய ஏரி, சின்ன ஏரி, அரசிராமணி, பேரூராட்சி, குள்ளம்பட்டி, செட்டிப்பட்டியில் தரைபாலத்தை மூழ்கடித்து சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    கிராமங்களில் விளைநிலங்கள் மட்டுமின்றி வீடுகள், பள்ளிகள், கடைகள் என கிராமம் முழுவதும் குளம்போல் தண்ணீர் தேங்கி பெருக்கெடுத்து ஓடியது. குள்ளம்பட்டியில் வெள்ளூற்று பெருமாள் கோவிலுக்கு செல்லும் சிறிய பாலமும் வெள்ளத்தால் சேதமடைந்தது.


    ஓலப்பாளையம், கண்டாயிக்காடு, தைலங்காடு, வயக்காடு, சுக்கலான்காடு, கள்ளப்பாளையம், எல்லாப்பாளையம் உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தரைப்பாலம் மூழ்கியது. நைனாம்பட்டி, ஆரையான்காடு, செரக்காடு, வண்ணாங்காடு, கோட்டக்காடு, பூனையம்காடு, பெரியகாடு, புளியம்பட்டி உள்பட 25 குக்கிராமங்கள் வெள்ளம் சூழப்பட்டு தனித்தீவுகளாக மாறியுள்ளது.

    தேவூர் மயிலம்பட்டி, மேட்டுகடை, பெரமச்சிபாளையம், மேட்டாங்காடு, சோழக்கவுண்டனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நெல், கரும்பு, வாழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

    தண்ணீர் சூழ்ந்த கிராமங்களில் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், வெளியூர் செல்பவர்கள் பரிசல் மூலம் பள்ளிக்கு அழைத்து வந்து விடுகின்றனர். பள்ளி குழந்தைகளுக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள், மளிகை பொருட்கள் ஆகியவற்றை பரிசல் மூலம் வீடுகளுக்கு வழங்கி வருகின்றனர். பால, மருந்து, மாத்திரைகள் வாங்க பொதுமக்கள் பரிசல் மூலம் பயணித்து வருகின்றனர்.

    திருமணிமுத்தாறு-சரபங்கா நதி ஆகியவை கிராமங்களில் ஏற்படுத்திய சேதத்தை வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த கிராமங்களில் அடிப்படை வசதிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருமணிமுத்தாறு-சரபங்கா நதியில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 2 ஆறுகள் வெவ்வேறு திசைகளில் பயணித்தாலும் மழை வெள்ளத்தால் கடும் சேதத்தை ஏற்படுத்தி பொதுமக்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. 

    • மலைப்பாதையில் பாறைகள் உருண்டும் மரங்கள் சாய்ந்தும் கிடந்தது.
    • கன ரக வாகனங்கள் மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

    சேலம்:

    பெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 29-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை கன மழை கொட்டியது. இதனால் மலைப்பாதையில் ஆங்காங்கே சிற்றருவிகள் உருவாகி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    தொடர்ந்து அஸ்தம்பட்டியில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 20 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் பாறைகள் உருண்டும் மரங்கள் சாய்ந்தும் விழுந்ததால் வாகனப்போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது.

    குப்பனூர் வழியாக மட்டும் வாகனங்கள் சென்று வந்தன. இதனால் பொது மக்கள் தவித்தனர். தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் விழுந்த மண், பாறைகள் மற்றும் முறிந்து விழுந்த மரக்கிளைகளை அகற்றி வந்தனர். மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து சேலத்தில் இருந்து வழக்கமாக ஏற்காட்டிற்கு செல்லும் அடிவார மலைப்பாதையில் இலகுரக வாகனங்கள் மட்டும் செல்ல நேற்று மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

    இதையடுத்து மோட்டார் சைக்கிள்கள், கார்கள், வேன்கள், மளிகை பொருட்கள், பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லும் சிறிய வாகனங்கள் நேற்று மாலை முதல் இந்த வழியாக சென்று வர தொடங்கின. பஸ்கள் மற்றும் லாரிகள் போன்ற கன ரக வாகனங்கள் இந்த மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை முதல் ஏற்காட்டில் அடிவாரம் வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் ஏற்காட்டிற்கு செல்பவர்களும், அங்கிருந்து சேலத்திற்கு வரும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் அந்த பஸ்களில் பயணம் செய்தனர்.

    சேலம்-ஏற்காடு இடையே 3 நாட்களுக்கு பிறகு இன்று காலை முதல் பஸ் போக்குவரத்து தொடங்கியது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் லாரிகள் ஏற்காடு செல்ல தொடர்ந்து தடை நீடிக்கிறது. 

    • மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது.
    • மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 25,098 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளில் தண்ணீர் முழு கொள்ள ளவை எட்டியுள்ளது. இந்த அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது.

    மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது. இதனால் அணை நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 111.39 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 113.39 அடியாக உயர்ந்து. இன்று காலை 8 மணியளவில் நீர்மட்டம் 114.58 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 85.09 டி.எம்.சி.யாக உள்ளது. இன்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 25,098 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே வாரத்தில் தனது முழுகொள்ளளவை எட்டிவிடும்.

    பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1000 கன அடியும், கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.

    • மேட்டூர் அணைக்கு கடந்த சில தினங்களாக நீர்வரத்து அதிகரித்தப்படி உள்ளது.
    • நீர் இருப்பு 83.05 டி.எம்.சி.யாக உள்ளது.

    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனிடையே தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த சில தினங்களாக நீர்வரத்து அதிகரித்தப்படி உள்ளது.

    நேற்று முன்தினம் வினாடிக்கு 7,414 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலையில் 9,246 கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து நேற்று இரவு 29,021 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது.

    மேலும் இன்று காலையில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 32,240 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. நேற்று 111.39 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு நீர்மட்டம் 113.39 அடி உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 83.05 டி.எம்.சி.யாக உள்ளது.

    • ஏற்காட்டில் 20 இடங்களில் மண் சரிவு, 22 கிராமங்களுக்கு செல்லும் தரைப்பாலம் சேதம் ஆகி உள்ளது.
    • திருமணி முத்தாறு முழுமையாக தூர்வாரப்படாததால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    சேலம் மாவட்டத்தில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதே போல் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது.

    இந்த நிலையில், வெள்ள நீர் வடியத்தொடங்கிய உள்ளதாக சேலம் கந்தப்பட்டியில் ஆய்வு மேற்கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-

    * ஏற்காட்டில் 20 இடங்களில் மண் சரிவு, 22 கிராமங்களுக்கு செல்லும் தரைப்பாலம் சேதம் ஆகி உள்ளது.

    * திருமணி முத்தாறு முழுமையாக தூர்வாரப்படாததால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    * முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் சேலம் மாநகரத்தில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    * சாத்தூர் அணையில் இருந்து எவ்வித அறிவிப்பும் இன்றி தென்பெண்ணை ஆற்றுக்கு நீர் திறக்கப்பட்டதால் கரையோர கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    * தென்பெண்ணை ஆற்றுக்கரையோரம் இருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கடுமையான பாதிப்பு.

    * தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • மேட்டூர் அணைக்கு கடந்த சில தினங்களாக தண்ணீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • நீர் இருப்பு 80.40 டி.எம்.சி.யாக உள்ளது.

    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனிடையே பெஞ்சல் புயல் காரணமாக தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

    இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த சில தினங்களாக தண்ணீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 5,195 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 7,414 கன அடியாக அதிகரித்தது.

    மேலும் இன்று காலை நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 9,246 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1000 கன அடியும், கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. காலை 8 மணியளவில் நீர்மட்டம் 111.39 அடி உயர்ந்தது. நீர் இருப்பு 80.40 டி.எம்.சி.யாக உள்ளது.

    • சரபங்கா நதியில் பாய்ந்து ஓடும் வெள்ள நீர் தாரமங்கலம் அணை மேடு பகுதியில் 5 இடங்களில் வெளியேறி அருவி போல் கொட்டி வருகிறது.
    • திருமணி முத்தாறில் பல ஆண்டுகளுக்கு பின்னர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஃபெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், ஏரிகளுக்கு நீர் வரும் கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகளில் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரை புரண்டோடுகிறது.

    அதன் தொடர்ச்சியாக சேர்வராயன் மலைத்தொடர்களில் கொட்டி தீர்த்த கன மழையால் சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சேர்வராயன் மலைத்தொடரில் இருந்து இறங்கும் தண்ணீர் டேனிஸ்பேட்டை, காடையாம்பட்டி, செம்மாண்டப்பட்டி, ஓமலூர், முத்துநாயக்கன்பட்டி, அணைமேடு பாப்பம்பாடி, சமுத்திரம், எடப்பாடி வழியாக சென்று காவிரியில் கலக்கிறது.

    கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையில் சரபங்கா நதி முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் கரைகள் உடைபட்டு விவசாய நிலங்களை சூழ்ந்தவாறு சென்று கொண்டிருக்கிறது.

    சரபங்கா நதியில் பாய்ந்து ஓடும் வெள்ள நீர் தாரமங்கலம் அணை மேடு பகுதியில் 5 இடங்களில் வெளியேறி அருவி போல் கொட்டி வருகிறது. அணை மேடு பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மேடான பகுதியில் வசிக்கும் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. அங்கிருந்து பொதுமக்கள் வெளியேற முடியாமல் தண்ணீர் ஆர்ப்பரித்த வண்ணம் சூழ்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் வளர்க்கும் ஆடு, மாடுகளுடன் தவித்தனர். இது பற்றி தகவல் அறிந்து அணைமேடு பகுதிக்கு வந்த தாரமங்கலம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் தண்ணீரின் அளவு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

    கல்வராயன் மலையில் உருவாகும் வசிஷ்ட நதி பல ஆண்டுகளுக்கு பின்னர் வெள்ளம் பெருக்கெடுத்து இரு கரைகளையும் தொட்டபடி ஓடுகிறது. இதனால் வசிஷ்ட நதியின் இரு கரைகளிலும் உள்ள வாழப்பாடி, பெத்த நாயக்கன்பாளையம், ஆத்தூர் தலைவாசல் வட்டாரங்களிலும் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேர்வராயன் மலைச்சாரலில் உருவாகி சேலம் வழியாக பாய்ந்தோடும் திருமணி முத்தாறில் பல ஆண்டுகளுக்கு பின்னர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகிறார்கள். டேனீஸ் பேட்டை அடிவாரத்தில் பாலாற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் அதனை ஒட்டியுள்ள தென்னை, பாக்குமரங்கள் வேரோடு சாய்ந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

    மாவட்டத்தில் உள்ள கரியகோவில், ஆனைமடுவு அணை, கன்னங்குறிச்சி புது ஏரி, அல்லிக்குட்டை ஏரி உள்பட மாவட்டத்தில் உள்ள 75 சதவீத்திற்கும் அதிகமாக ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பாசனத்திற்கான ஏரிகள், குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • செவ்வாய்ப்பேட்டை மூலபிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் திருமணி முத்தாறு வெள்ளம் சூழந்தது
    • தொடர்மழை காரணமாக சேலம் அல்லிக்குட்டை ஏரி இரவு நிரம்பியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதே போல் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. சேலம் மாநகரில் நேற்று மாலை 6.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு 10.30 மணிவரை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.

    புதிய பஸ் நிலையத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. மேலும் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கோரிமேடு, தாதகாப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் மாநகரின் பல்வேறு இடங்களிலும் குடியிருப்புகளை சூழ்ந்து தண்ணீர் தேங்கி நின்றது. சேலம் மாநகராட்சியின் பல்வேறு இடங்களிலும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் புகுந்த தண்ணீரை விடிய, விடிய அகற்றினர்.

    சேலம் மாநகராட்சி 26-வது வார்டு குப்தா நகர் 6 முதல் 9 குறுக்கு தெரு முழுவதும், சினிமா நகர், சின்னேரிவயக்காடு ஓடைஓரம் உள்ள வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதுப்பற்றி தெரியவந்ததும் மாநகராட்சி கமிஷனர் ரஞ்சித் சிங், தி.மு.க. வார்டு செயலாளர் முருகன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று பொதுமக்களை மீட்டு அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இதே போல் சேலம் மாநகராட்சி 30-வது வார்டு பகுதியில் திருமணி முத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தண்ணீர் கபிலர் தெரு, பாரதிதாசன் தெரு, போலீஸ் நிலையம் அருகில் உள்ள கந்தசாமி பிள்ளை தெரு, சோமபுரி தெரு, பங்களா தெரு, நந்தவனம் தெரு ஆகிய பகுதிகளிலும் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களை போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மீட்டு நகரவை மேல்நிலைப்பள்ளியில் தங்க வைத்தனர்.

    செவ்வாய்ப்பேட்டை மூலபிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் திருமணி முத்தாறு வெள்ளம் சூழந்தது. இதையடுத்து அந்த வீடுகளில் வசித்த பொதுமக்களை தீயணைப்பு துறையினர் மீட்டு கொண்டு வந்தனர்.

    தொடர்மழை காரணமாக சேலம் அல்லிக்குட்டை ஏரி இரவு நிரம்பியது. இதையடுத்து அல்லிக்குட்டை மெயின் ரோடு பகுதியில் உள்ள வீடுகள், மன்னார்பாளையம் போயர் தெருவில் உள்ள வீடுகளுக்குள் ஏரி தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் வசித்த பொதுமக்கள் விடிய, விடிய தூங்காமல் கடும் குளிரில் அவதிப்பட்டனர். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏரியில் இருந்து வரும் தண்ணீரை வேறு வழியில் திருப்பிவிட வேண்டும் என வலியுறுத்தி அல்லிக்குட்டை பகுதியில் இன்று காலை சாலை மறியல் செய்தனர். இதில் அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுபற்றி தெரியவந்ததும் வீராணம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து உடனடியாக வீடுகளில் புகுந்த மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதேபோல் மன்னார்பாளையம் பிரிவு ரோட்டிலும் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

    இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக கிராமப்புறங்களில் உள்ள வயல்வெளிகளில் தண்ணீர் இடுப்பளவுக்கு தேங்கி நின்றது. வயல் வெளிகளில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

    • ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவும் உள்ளதால் கடுமையான குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
    • ஏற்காடு மலைப்பாதையில் 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை கலெக்டர் பிருந்தாதேவி பார்வையிட்டார்.

    ஃபெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    இதையொட்டி கடந்த 1-ந் தேதி காலை 6 மணி வரை 24 மணி நேரத்தில் 144 மி.மீ. மழையும், 2-ந் தேதி காலை 6 மணி வரை 238 மி.மீ. மழையும், 3-ந் தேதியான இன்று காலை 6 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் 98.2 மி.மீ. மழையும் பெய்துள்ளது. தொடர்ந்து ஏற்காட்டில் பெய்து வரும் கன மழையால் ஏற்காடு மலை பாதை உள்பட பல இடங்களில் திடீர் நீர் வீழ்ச்சி ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவும் உள்ளதால் கடுமையான குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    ஏற்காட்டில் அருவியில் இருந்து கொட்டும் தண்ணீர், தொடர்ந்து பெய்த கன மழையால் ஏற்காடு மலைப்பாதையில் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு மலைப்பாதையில் பல இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. குறிப்பாக ஏற்காடு மலைப்பாதையில் உள்ள 40 அடி பாலப்பகுதியில் நேற்று முன்தினம் மண் சரிவு ஏற்பட்டது. இதனை நெடுஞ்சாலை துறையினர் சரி செய்தனர்.

     

    ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள அருவியில் தண்ணீர் கொட்டுகிறது - ஏற்காடு மலைப்பாதையில் கற்கள், மண் சரிந்து கிடக்கும் காட்சி.

    இந்த நிலையில் நேற்று சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள 60 அடி பாலம் அருகே மண் சரிவு ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள சாலையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதம் அடைந்துள்ளது. இதனை சரி செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 2-வது நாளாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் வாகனங்கள் குப்பனூர் பாதையில் சென்று வருகின்றன. குப்பனூர் சாலையிலும் 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. அதனை அதிகாரிகள் உடனே அகற்றி உள்ளதால் வாகனங்கள் சென்று வருகின்றன. குப்பனூர் பாதையிலும் கன ரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஏற்காட்டில் தொடர் மழை காரணமாக ஏற்காட்டில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் பல சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராமங்களுக்கும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் அவதி அடைந்துள்ளனர். மேலும் ஏற்காட்டில் தொடர் மின்தடை ஏற்பட்டுள்ளதால் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே ஏற்காடு மலைப்பாதையில் 2-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை கலெக்டர் பிருந்தாதேவி பார்வையிட்டார். தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

    மேட்டூர் பகுதியில் நேற்று இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக சேலம் கேம்ப் பகுதியில் உள்ள மலைப்பாதை சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. அப்போது அதிர்ஷ்டவசமாக எந்த வாகனங்களும் வரவில்லை. இதனால் அசம்பாவித சம்பங்கள் ஏற்படவில்லை. மலை பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலை துறையினர் அந்த வழியே வாகனங்கள் செல்லாமல் இருக்க சாலையின் இருபுறமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகள் அமைத்தனர். 

    • தருமபுரி, கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையை கடந்தது.

    இதன் எதிரொலியால், தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. குறிப்பாக புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கனமழையால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    ×