கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தற்போது ஏற்காட்டில் பனிப்பொழிவுடன் கடுங்குளிர் நிலவிவருகிறது.நகரில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து காணப்பட்டது.
கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
Published on

ஏற்காடு:

அரையாண்டுத் தேர்வு முடிந்து தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை.

இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் நேற்று மாலை முதல் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டுக்கு வந்தனர்.

இதனால் நேற்று மாலை மற்றும் இன்று காலை முதல் மலைப்பாதையில் வாகனங்கள் அணிவகுத்து வந்து கொண்டு இருக்கிறது. தற்போது ஏற்காட்டில் பனிப்பொழிவுடன் கடுங்குளிர் நிலவிவருகிறது. இந்த சீதோஷ்ண நிலையை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

மேலும் அவர்கள் அண்ணாபூங்கா, லேடீஸ் சீட் காட்சி முனை, பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட இடங்களை சுற்றிபார்த்தனர். மேலும் படகு சவாரி செய்தும் உற்சாகம் அடைந்தனர்.

சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதால் படகுகள் தொடர்ந்து இயங்கி கொண்டே இருந்தது. படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக ஏற்காடு நகரில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து காணப்பட்டது.

இன்று முதல் புத்தாண்டு வரை ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் வியாபாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு சுற்றுலா தலங்கள் களைகட்டியுள்ளது. கூட்டம் அதிகரித்து வருவதால் மலைப்பாதையில் போலீசார் ரோந்து சென்று வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com