என் மலர்tooltip icon

    சேலம்

    • தாரமங்கலம் நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பேசிய வார்டு கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை வைத்தனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் சேம் கிங்ஸ்டன், நகர மன்றத் துணைத் தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அடிப்படை தேவைகள்

    கூட்டத்தில் பேசிய வார்டு கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து 23-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் வேதாச்சலம் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு இதுவரை எந்த அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்து வெளியேறினார்.

    5-வது வார்டு உறுப்பினர் தனபால் பேசும்போது தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சிற்ப கலைக்கு சான்றாக விளங்கும் ஓர் அரிய பொக்கிஷமாகும்.

    இந்த கைலாசநாதர் ஆலயத்திற்கு பல்வேறு மாவட்டங்கள், மாநி லங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. இங்கு அமைந்துள்ள அதிசய எண்கோண வடிவ தெப்பக்குளமும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

    சுற்றுலா தலம்

    அதேபோல் தாரமங்கலம் நகராட்சியின் பராமரிப்பில் உள்ள தாரமங்கலம் ஏரி 163 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரி தமிழக அரசின் காவிரி உபரி நீர் திட்டத்தில் நீர் நிரம்ப ஏற்பாடு செய்யப்பட்ட ஏரிகளில் ஒன்றாகும். இந்த ஆண்டு உபரி நீர் திட்டத்திலிருந்து தண்ணீர் வெளியேற்றபடாத காரணத்தினால் ஏரி வறண்டு காட்சியளிக்கிறது.

    இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஏரியை தூய்மைப்படுத்தி, தூர்வாரி தண்ணீர் நிரப்பி பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் சுற்றுலாத்தலமாக்க ஏற்பாடுகள் செய்து நகராட்சிக்கு வருவாய் பெருக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    ஏரியை சுற்றுலா தலமாக்கும் முயற்சிக்கு அனைத்து வார்டு உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று உறுதி அளித்தனர்.

    சுகாதார பணிகள்

    14-வது வார்டு உறுப்பினர் பாலசுப்ரமணியம் பேசும்போது, மழைக்காலம் என்பதால் டெங்கு, மலேரியா போன்ற நோய்களை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் எந்திரங்களை அதிக அளவில் பயன்படுத்தி சுகாதாரப் பணிகளை தீவிரபடுத்தமாறு கோரிக்கை விடுத்தார்.

    4-வது வார்டு உறுப்பினர் சாமுண்டீஸ்வரி தனது வார்டு பகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் செய்யவில்லை என்று தலைவர் மற்றும் ஆணையாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஆணையாளர் உரிய பரிசீலனை செய்து குறைகள் நிறைவேற்றித் தரப்படும் என்று கூறினார். தொடர்ந்து கூட்டத்தில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • பழுதடைந்த சாலையால் கிராம மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளும் சிரமப்பட்டு செல்கின்றனர்.
    • மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கணவாய்புதூர் ஊராட்சியில் வீராச்சியூர், பூமருத்துவர், கண்ணப்பாடி, கோவில்பாடி, சுரக்காப்பட்டி, கொலகூர், கரடியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் மலைப்பகுதியில் அமைந்துள்ளது.

    இந்நிலையில் இன்று காலை இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி குழந்தைகளுடன் இன்று காலை கணவாய்புதூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், வனத்துறையினர், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது கிராம மக்கள் கூறுகையில், கணவாய்புதூர் பகுதியில் இருந்து கண்ணப்பாடிக்கு சுமார் 6 கிலோமீட்டர் தூரம் உள்ளது. இங்கு தார் சாலை அமைக்கப்பட்டு சுமார் 7 வருடங்களுக்கு மேல் கடந்த நிலையில் சாலை முழுவதும் பழுதடைந்து உள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள், இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    மேலும் விடுமுறை நாட்களில் கர்நாடகா, ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் கணவாய் புதூர் வழியாக ஏற்காடு சென்று வருகின்றனர். இந்த பழுதடைந்த சாலையால் கிராம மக்கள் மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளும் சிரமப்பட்டு செல்கின்றனர்.

    எனவே சாலையை சீரமைத்து புதிய சாலை அமைக்க வேண்டும் என அதிகாரிகளை சந்தித்து மனு வழங்கியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால் ஆத்திரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

    • கர்நாடக அரசு பெயரளவில் தண்ணீர் திறந்து விட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது.
    • இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு 1004 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    சேலம்:

    கர்நாடக அரசு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய உரிய தண்ணீரை வழங்க மறுத்து வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து சுமார் 2 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    கர்நாடக அரசு பெயரளவில் தண்ணீர் திறந்து விட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது.

    இதனால் பயிர் சாகுபடியை கருத்தில் கொண்டு மேட்டூர் அணையில் இருந்து கடந்த சில நாட்களாக வினாடிக்கு 6,500 கன அடி வீதம் நீர் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வந்தது.

    நேற்றைய நிலவரப்படி நீர்வரத்து 1,514 கன அடியாகவும், அணையின் நீர்மட்டம் 34.42 அடியாகவும், நீர் இருப்பு 9.3 டி.எம்.சி. ஆகவும் இருந்தது. இதே நிலை நீடித்தால் இன்னும் 3 நாட்கள் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் சூழ்நிலை உருவானது.

    இதையடுத்து அணையில் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் மீன் வளம் மற்றும் குடிநீர் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாசனத்திற்காக திறக்கப்பட்டு வரும் நீரின் அளவை குறைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை முதல் டெல்டா பாசனத்திற்கு 2,500 கன அடி குறைத்து வினாடிக்கு 4,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு 1004 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் 33.58 அடியாக உள்ளது. 9.02 டி.எம்.சி. தண்ணீர் அணையில் உள்ளது.

    நீர் திறப்பு தொடர்ச்சியாக 4 ஆயிரம் கன அடி நீடித்தால் இன்னும் 2 வாரங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. 

    • கிருஷ்ணமூர்த்தி (32), இவரது மனைவி கலையரசி (28), இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
    • தொடர்ந்து மனைவியின் சகோதரருக்கு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாட்ஸ்-அப்பில் இடம் மற்றும் தகவலை அனுப்பினார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள காருவள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (32), இவரது மனைவி கலையரசி (28), இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. மேலும் கலையரசி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    தற்கொலை

    இந்தநிலையில் கிருஷ்ணமூர்த்தி சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெங்களூருக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் நேற்று பனமரத்துப்பட்டி அருகே உள்ள நத்தை மேடு ஏரி பகுதிக்கு வந்தார்.

    தொடர்ந்து மனைவியின் சகோதரருக்கு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாட்ஸ்-அப்பில் இடம் மற்றும் தகவலை அனுப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள்அந்த இடத்தை தேடி கண்டு பிடித்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் அங்கு சென்றன.ர். அப்போது அங்கு கிருஷ்ணமூர்த்தி வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுது புரண்டனர்.

    பின்னர் சம்பவம் குறித்து மல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி அரிமா சங்கம் சார்பாக 2ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் விழா நடைபெற்றது.
    • இவ்விழாவிற்கு அரிமா சங்க பட்டய தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அரிமா சங்கம் சார்பாக 2ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் விழா நடைபெற்றது. துக்கியாம்பாளையம் ஊராட்சி மாரியம்மன் புதூர் ஏரியில் நடைபெற்ற இவ்விழாவிற்கு அரிமா சங்க பட்டய தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் உழவன் முருகன் வரவேற்றார். அரிமா வட்டார தலைவர் ஜவஹர், டாக்டர் பொன்னம்பலம், பொருளாளர் கலைஞர்புகழ், ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், துணைத்தலைவர் தேன்மொழி சண்முகம், ஊராட்சி செயலாளர் குமரேசன், தலைமையாசிரியர் கலைச்செல்வன், ஆசிரியர் ரமேஸ், பா.ம.க. ஒன்றிய செயலாளர் பச்சமுத்து, மக்கள் நலப் பணியாளர் தனபால், கிராம உதவியாளர் கணேசன் மற்றும் அம்மாசி ஆகியோர் கொண்ட குழுவினர் 2ஆயிரம் பனை விதைகளை விதைத்தனர். முடிவில் பிரவீன் நன்றி கூறினார்.

    • வாழப்பாடி அருகே அருநூற்றுமலை பெரியகுட்டிமடுவு, சந்துமலை மற்றும் தருமபுரி மாவட்டம் சித்தேரி பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் நீரோடைகள் சங்கமித்து வசிஷ்டநதி உற்பத்தியாகிறது.
    • 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில் 263.86 ஏக்கர் பரப்பளவில் வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அருநூற்றுமலை பெரியகுட்டிமடுவு, சந்துமலை மற்றும் தருமபுரி மாவட்டம் சித்தேரி பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் நீரோடைகள் சங்கமித்து வசிஷ்டநதி உற்பத்தியாகிறது.

    இந்நதியின் குறுக்கே 67.25 அடி உயரத்தில் 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில் 263.86 ஏக்கர் பரப்பளவில் வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.

    பாசன வசதி

    இந்த அணையால் குறிச்சி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, சின்னம நாயக்கன்பா ளையம், சந்தர பிள்ளைவலசு உள்ளிட்ட கிராமங்களில் 5,011 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பேளூர், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூர்பட்டி ஏரிகளும், 20-க்கும் மேற்பட்ட ஆற்றுப்படுகை கிராமங்களும் நிலத்தடி நீர் ஆதாரமும், பாசன வசதியும் பெறுகின்றன.

    கடந்தாண்டு இறுதியில் ஆனைமடுவு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பருவ மழையால் நிகழ்வாண்டு ஜனவரி மாதம் அணையின் நீர்மட்டம் 53.71 அடியாக உயர்ந்தது. அணையில் 149 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது.

    இதனால் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டுமென நேரடி ஆற்றுப்பாசன பழைய ஆயக்கட்டு விவசாயிகள் மற்றும் அணை வாய்க்கால் பாசன புதிய ஆயக்கட்டு விவசாயிகளும் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் வாயிலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    தண்ணீர் திறப்பு

    இதனையடுத்து அணையில் இருந்து மே மற்றும் ஜூன் மாதத்தில் சுழற்சி முறையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஜூலை மாதத்தில் அணையின் நீர்மட்டம் 30.83 அடியாக சரிந்து 46.64 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே கிடந்தது.

    தொடர்ந்து 2 மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் தற்போது 26 அடியாக சரிந்து 36 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.

    விவசாயிகள் கவலை

    எதிர் வரும் மாதங்களில் போதிய மழை பெய்து அணையின் நீர்மட்டம் உயர்ந்தால் தான் அணை பாசனத்தை நம்பி கரையோர கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள பாக்கு மற்றும் தென்னை மரங்களை வறட்சியிலிருந்து காப்பாற்ற முடியும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    வழக்கம் போல, அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நிகழ்வாண்டும் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பருவ மழை பெய்யும். எனவே, அணையின் நீர்மட்டம் 2 மாதங்களில் படிப்படியாக உயர்ந்து முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பும் என பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு பொறியாளர்கள், விவசாயிகளுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • சேலம் லயன்மேடு போலீஸ் சமுதாய கூடத்தில் இன்று காலை சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் (தெற்கு) மதிவாணன் தலைமையில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது.
    • இன்று தரப்படும் புகார் மனுக்களின் மீதும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மாநகர போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன் உத்தரவிட்டார்.

    சேலம்:

    சேலம் லயன்மேடு போலீஸ் சமுதாய கூடத்தில் இன்று காலை சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் (தெற்கு) மதிவாணன் தலைமையில் பெட்டிஷன் மேளா நடைபெற்றது. இதில் சேலம் டவுன், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி சரகங்களுக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார் மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மீது அதிருப்தியில் உள்ளவர்களை நேரில் வரவழைத்து, விசாரணை மேற்கொண்டு எதிர் தரப்பினரையும் விசாரணைக்கு உட்படுத்தி உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும் இன்று தரப்படும் புகார் மனுக்களின் மீதும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மாநகர போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன் உத்தரவிட்டார். இந்த பெட்டிஷன் மேளாவில் ஏராளமான மனுதாரர்கள் கலந்து கொண்டனர்.

    • கிருஷ்ணமூர்த்தி சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
    • கிருஷ்ணமூர்த்தி வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுது புரண்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள காருவள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (32), இவரது மனைவி கலையரசி (28), இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. மேலும் கலையரசி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    இந்தநிலையில் கிருஷ்ணமூர்த்தி சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெங்களூருக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் நேற்று பனமரத்துப்பட்டி அருகே உள்ள நத்தை மேடு ஏரி பகுதிக்கு வந்தார்.

    தொடர்ந்து மனைவியின் சகோதரருக்கு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக வாட்ஸ்-அப்பில் இடம் மற்றும் தகவலை அனுப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள்அந்த இடத்தை தேடி கண்டு பிடித்து இன்று அதிகாலை 2.30 மணியளவில் அங்கு சென்றனர். அப்போது அங்கு கிருஷ்ணமூர்த்தி வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுது புரண்டனர்.

    பின்னர் சம்பவம் குறித்து மல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

    • சேலம் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன்.
    • பெற்றோர் மீனாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகள் மீனா (22). இவருக்கும் இவரது சகோதரிக்கும் நேற்று இரவு வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த மீனா வீட்டில் திடீரென தூக்கு போட்டுக் கொண்டார். இதை கண்ட பெற்றோர் மீனாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவலின் பேரில் அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள பெரிய கொல்லப்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (39).
    • சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கடந்த ஆகஸ்ட் 25-ந் தேதி பிடி ஆணை பிறப்பித்தார்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள பெரிய கொல்லப்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (39). இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஒரு கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த ஜெயபிரகாஷ் இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதனால் சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கடந்த ஆகஸ்ட் 25-ந் தேதி பிடி ஆணை பிறப்பித்தார்.

    அதனைத் தொடர்ந்து ஜெயபிரகாஷை கன்னங்குறிச்சி போலீசார் தேடி வந்த நிலையில் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார்.

    • சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 2 தம்பதிகளின் 14 வயது உடைய 2 மகள்கள் சேலம் கிச்சிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
    • அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் மாமன் உடனடியாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 2 தம்பதிகளின் 14 வயது உடைய 2 மகள்கள் சேலம் கிச்சிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

    இந்த 2 மாணவிகளும் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர். பின்னர் மதியம் பள்ளியிலிருந்து சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தனர். அதில் ஒரு மாணவி தனது தாய் மாமனுக்கு போன் செய்து நாங்கள் இருவரும் வீட்டிற்கு செல்ல விருப்பமில்லாத காரணத்தால் வெளியூர் செல்கிறோம், எங்களை தேட வேண்டாம் என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் மாமன் உடனடியாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தனர்.

    இதையடுத்து போலீசார் மாணவிகளின் செல்போன் சிக்னலை கண்காணித்தபோது மாணவிகள் திருச்சி பஸ்சில் சென்று கொண்டிருப்பதை கண்டுபிடித்தனர். துரிதமாக செயல்பட்ட போலீசார் உடனடியாக பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரின் செல்போன் எண்களை வாங்கி அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும் அந்த மாணவிகளை முசிறி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கும்படி தெரிவித்துக் கொண்டனர். அதன்படி முசிறி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட மாணவிகளை பள்ளப்பட்டி போலீசார் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் நேற்று இரவு மீட்டு சேலத்திற்கு அழைத்து வந்தனர்.

    • கடந்த 2 ஆண்டு காலமாக தமிழகத்தில் மிக மோசமான மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது.
    • தி.மு.க. 520 தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் 10 சதவீத அறிவிப்புகளை கூட நிறைவேற்றவில்லை.

    சேலம்:

    பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக கடந்த 25-ந்தேதி அ.தி.மு.க. அதிரடியாக அறிவித்தது.

    இந்த கூட்டணி முறிவு நாடகம் என்றும், மீண்டும் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்து விடும் என்றும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்தன. இதற்கு அ.தி.மு.க. சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    அதில் பாரதிய ஜனதா கட்சியுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி நீடிப்பதாகவும், சமரச பேச்சு நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் கோவைக்கு வந்திருந்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதன் மூலம் பாரதிய ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. மீண்டும் கூட்டு சேர திட்டமிட்டிருப்பதாக மீண்டும் தகவல்கள் பரவியது. இந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் எடப்பாடியில் விரிவாக பேட்டி அளித்தார். அப்போது அவர் பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணி முறிவில் உறுதியாக இருப்பதாக விளக்கம் அளித்தார்.

    எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டி வருமாறு:-

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க பா.ஜனதா நிர்வாகிகள் விரும்புவது என்பது அவர்களின் விருப்பம். ஆனால் நான் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டேன். நான் சேலம் மாநகர் மாவட்ட பூத் கமிட்டி நிகழ்ச்சியில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன்.

    25.9.2023 அன்று தலைமைக் கழகத்தில் தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளை அவர்கள் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த தீர்மானத்தில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகிக் கொள்கிறது என்றும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் பா. ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி விட்டது.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் எந்த மாதிரி கூட்டணி அமையும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். நிச்சயமாக எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் சேரும் என்பதை பத்திரிகைகளுக்கும், ஊடகத்துக்கும் தெரிவிப்போம்.

    பா.ஜனதா மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று கூறி இருப்பதற்கு, நான் என்ன கருத்து சொல்ல முடியும். எங்களுடைய கருத்து நான் சொன்னது தான். எங்களுடைய முடிவுகள் அதுதான். 2 கோடி தொண்டர்களின் உணர்வு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டது.

    வேண்டுமென்றே திட்டமிட்டு தினந்தோறும் கேள்வி கேட்டால் நான் என்ன சொல்வது? எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். எங்கள் கட்சியை பற்றித்தான் நாங்கள் பேச முடியும்.

    நாங்கள் தனித்து நிற்பதால் தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறாது. மக்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. வாக்களித்த பிறகு முடிவு தெரியும். எங்களை பொருத்தவரை அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி புதுச்சேரி உள்பட 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

    2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் 7 எம்.பி. தொகுதிகளுக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். சேலத்தில் மட்டும் 2 லட்சத்து 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறோம். இப்படி பல இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறோம்.

    சிதம்பரம் தொகுதியில் 324 வாக்கு வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்தோம். ஈரோட்டில் 7,800 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றோம். நாமக்கல்லில் 15,400 ஓட்டுகள் தான் குறைவு. இந்த 3 தொகுதியிலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் எங்கள் வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார்கள். இந்த 10 தொகுதிகளும் எளிதாக வெற்றி பெற வேண்டியது.

    கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், கடலூர் என 10 பாராளுமன்ற தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்குகளுக்கு குறைவாகத்தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம். 1 லட்சம் வாக்குகளுக்கு கீழ் 7 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பறி போனது. எனவே 100-க்கு 100 சதவீதம் 40 இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்.

    கடந்த 2 ஆண்டு காலமாக தமிழகத்தில் மிக மோசமான மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது. தி.மு.க. 520 தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் 10 சதவீத அறிவிப்புகளை கூட நிறைவேற்றவில்லை. ஆனால் முதலமைச்சர் 95 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக பச்சை பொய்யை சொல்கிறார்.

    தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணம் 12 சதவீதத்தில் இருந்து 52 சதவீதமாக உயர்ந்துள்ளது. வீட்டு வரி 100 சதவீதம், கடை வரி 150 சதவீதம் உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது மக்கள் வாழ்க்கை நடத்துவதே இன்று சவாலாக இருக்கிறது.

    இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறோம். எங்கள் தலைமையில் அமையும் கூட்டணிக்கு பாராளுமன்ற தேர்தல் சாதகமாக இருக்கும்.

    எம்.பி., எம்.எல்.ஏ.க்களை மக்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். வீட்டிலேயே இருந்து விட்டால் அதை யார் நிறைவேற்றி தருவது. அதற்காகத்தான் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர்.

    இங்கிருக்கும் பல தி.மு.க. அமைச்சர்கள் போய் டெல்லியில் பா.ஜனதா மந்திரிகளை சந்தித்தனர். அப்படியென்றால் தி.மு.க.வை அவர்கள் கூட்டணி சேர்த்துக் கொண்டார்களா? பல மத்திய மந்திரிகள் தமிழ்நாட்டுக்கு வரும் போது அந்த நிகழ்ச்சியில் தி.மு.க. அமைச்சர்கள் பங்கு பெறுகிறார்கள். அந்த மாதிரிதான் இதுவும். அந்த பகுதி தென்னை விவசாயிகளின் நலன் கருதியும், அவர்கள் வைத்த கோரிக்கை அடிப்படையிலும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கோவை வந்த போது தென்னை விவசாயிகள் படும் கஷ்டங்களை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவரிடம் எடுத்து கூறி நிவாரணம் கேட்டுள்ளனர்.

    அதற்காகத்தான் சந்தித்தார்கள். ஆனால் உடனே கூட்டணி என்கிறீர்கள். தி.மு.க. அமைச்சர்கள் சந்தித்தால் எதுவும் கேள்வி கேட்பதில்லை. காவிரி பிரச்சனைக்கு மத்திய நீர்வளத்துறை மந்திரியை போய் பார்த்தார்கள். அப்போதெல்லாம் இந்த கேள்வி வரவில்லையே?

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கடமையை செய்வதற்காக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். கூட்டணிக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது. ஏற்கனவே கூட்டணியில் இருந்து விலகுவது என்று எடுக்கப்பட்டது உறுதியான முடிவு.

    பா.ஜனதா கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது நாடகம் என்று தி.மு.க. தலைமை என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இந்தியா கூட்டணிதான் நாடகம். மத்திய பிரதேச மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற வேட்பாளர்களை தனியாக அறிவித்து விட்டது.

    இந்தியா கூட்டணியில் பல்வேறு முரண்பட்ட கருத்துகள் கொண்ட கட்சிகள் ஒன்றாக இணைந்துள்ளன. அது இன்னும் முழு வடிவத்தையே பெறவில்லை. மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி, எங்களுக்கு கம்யூனிஸ்டு கட்சியுடன் உடன்பாடு இல்லை என்கிறார்.

    கேரளாவில் கம்யூனிஸ்டு தலைவர்கள் காங்கிரசுடன் இணைய மாட்டோம் என்கிறார்கள். டெல்லி, பஞ்சாப்பிலும் முரண்பாடுகள் உள்ளன.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர அவசரமாக மேட்டூர் அணை நீரை டெல்டா பாசன விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்கு திறந்தார். அப்போது அவர் தன்னை டெல்டாக்காரன் என்றார். இப்போது அந்த வார்த்தையை காணோம்.

    உங்களை நம்பித்தான் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் சுமார் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்துள்ளனர். அவர்களின் நிலை என்ன என்பதை அறிந்தீர்களா? அங்கு போய் பார்த்தீர்களா? தண்ணீர் இல்லாமல் 3½ லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகி விட்டதாக தகவல் வருகிறது. விவசாயிகள் மீது முதலமைச்சர் அக்கறை கொண்டிருந்தால் காவிரி நீரை மாதா மாதம் கேட்டு பெற்றிருக்க வேண்டும்.

    இந்தியா கூட்டணியில் சேரும் போதே காவிரி நதி நீர் பிரச்சனையை எடுத்து வைத்திருக்கலாம். காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோர் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்ற போது தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படுவதை அவர்களிடம் எடுத்து சொல்லி இருந்தால் நிச்சயமாக நமக்கு ஒரு சாதகமான முடிவு எட்டப்பட்டு இருக்கும். அந்த நல்ல வாய்ப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நழுவ விட்டு விட்டார்.

    கர்நாடக அணைகளில் நீர் நிரம்பி இருக்கிறது. அப்போதே தண்ணீரை கேட்டு பெற்றிருந்தால் இன்றைக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. இதற்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம். 2026 சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. தலைமையில் நல்ல கூட்டணி அமைத்து வெற்றி பெற்று மக்களுக்கு தேவையான திட்டங்களை அளிப்போம்.

    அடுத்த சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பா.ஜனதா அழுத்தம் கொடுத்ததாக கூறுகிறீர்கள். அது தவறான செய்தி. அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இப்போது நான் அதை தெளிவு படுத்துகிறேன். பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா யாரும் எங்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. இங்கே நடந்த நிகழ்வுகள் எங்கள் தொண்டர்களின் மனதை காயப்படுத்தி விட்டது.

    ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் தொண்டர்கள் உழைக்க வேண்டும். எனவே எங்கள் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்கின்ற வகையில் நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

    இப்போது தெளிவுபடுத்துகிறேன். அவர்கள் எந்த சீட்டும் பேசவில்லை. 20 சீட், 15 சீட் என்று எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அதைப் பற்றி பேசவும் இல்லை.

    இங்குள்ள பா.ஜனதா மாநில தலைவரை மாற்ற வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்ததாக கூறப்பட்ட அந்த தகவலும் தவறானது. நாங்கள் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×