என் மலர்tooltip icon

    சேலம்

    • நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுக்க வில்லை யெனினும் ஓரளவு மழை பெய்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மழை பெய்தது.
    • இதனால் பல்வேறு இடங்களில் விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை கைகொடுக்க வில்லை யெனினும் ஓரளவு மழை பெய்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மழை பெய்தது. குறிப்பாக சேலம், தம்மம்பட்டி, எடப்பாடி, மேட்டூர், ஏற்காடு, சங்ககிரி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இங்கு பல மணி நேரம் இடைவிடாமல் மழை பெய்தது.

    விவசாய பணிகள்

    இதனால் கிணறுகள், குளங்கள், குட்டைகள், ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் மதகுகள், ஓடைகள், வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

    பூ செடிகள், காபி செடிகள், அழகு செடிகள், தென்ைன மர கன்றுகள், நெற்பயிர்கள், வெண்டைக்காய், தக்காளி, மிளகாய், புதினா, கொத்த மல்லி, சோளம், மரவள்ளிக்கிழங்கு, கரும்பு உள்ளிட்டவை சாகுபடி செய்துள்ளனர்.

    தற்போது விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    எடப்பாடியில் பலத்த மழை

    இந்த நிலையில் எடப்பாடி, அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் ஓரளவு இருந்தாலும் பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

    இதையடுத்து நள்ளிரவு நேரத்தில் திடீரென இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால் மழை வெள்ளம் சாலைகளில் கரைபுரண்டு தாழ்வான பகுதிகளில் பாய்ந்தோடியது.

    பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

    எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மழை வெள்ளம் குளம்போல் தேங்கியது. குறிப்பாக எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், நெடுங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாய பணிகள் மேற்கொண்டிருந்தனர். நள்ளிரவில் பெய்த மிக கனமழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சோளம், வாழை, பருத்தி, நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாய்ந்தன.

    பூலாம்பட்டி பில்லுக்குறிச்சி, உள்ளிட்ட பகுதிகளில் நெல் நடவு செய்யப்பட்டு இருந்த வயல்களில் தண்ணீர் அதிக அளவு தேங்கி உள்ளது. இதனால் நெற்பயிர்கள் அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் வயல்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த சோளப் பயிர்கள் மழைக்கு தாக்குப்பிடிக்க இயலாமல் சாய்ந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழைப் பாதிப்புகள் குறித்து அப்பகுதியில் வருவாய் துறையினர் மற்றும் வேளாண் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
    • அணைக்கு வினாடிக்கு 139 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. அதே நேரம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும் தண்ணீர் வரத்து குறைந்தது.

    மேட்டூர் அணை கட்டிய 90 ஆண்டு கால வரலாற்றில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அணையின் நீர்மட்டம் இந்த அளவு குறைந்தது இல்லை.

    இந்த நிலையில் கர்நாடக அரசும் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய தண்ணீரை திறந்து விடவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதன் காரணமாக இந்த ஆண்டில் 2-வது முறையாக கிருஷ்ண ராஜசாகர் அணை 100 அடியை எட்டியது. அதே போல் கபினி அணையின் நீர்மட்டமும் உயர்ந்தது.

    ஆனாலும் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய உரிய தண்ணீரை கொடுக்கவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 31.72 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 139 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2,300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் நீரின் அளவை விட அணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்துக்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் நீர்மட்டம் வெகுவாக சரிந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் மீன்வளம் மற்றும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நாளை முதல் நிறுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    இதனிடையே கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு 3,719 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 101.20 அடியாக உள்ளது.

    இதேபோல் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அணையின் நீர்மட்டம் 76.65 அடியாக உள்ளது.

    இந்த 2 அணைகளில் இருந்து வினாடிக்கு 4,719 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • ஆசிரியை தமிழ்வாணி கடந்த ஆண்டுகளில் மாணவிகள் சேர்க்கையின் போது கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரில் சிக்கினார்.
    • தலைமை ஆசிரியை தமிழ்வாணியை இளம்பிள்ளை அரசு ஆண்கள் பள்ளிக்கு மாற்றி மாவட்ட கல்வி அதிகாரி கபீர் உத்தரவிட்டுள்ளார்.

    சேலம்:

    சேலம் கோட்டையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவிகள் வகுப்பை புறக்கணித்து 3 மணிநேரத்திற்கும் மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவிகளுக்கு சுகாதாரமான குடிநீர், கழிப்பறை வசதிகள், விளையாட்டு மைதானங்கள் உள்பட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை.

    குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருப்பதாக புகார் கூறிய மாணவிகளை தலைமை ஆசிரியை மிரட்டியதுடன் கணவரை வைத்து வீடியோ எடுத்து மிரட்டல் விடுப்பதாகவும், முட்டிபோட வைத்து கொடுமை படுத்தியதாகவும் புகார் கூறினர். இதனால் தலைமை ஆசிரியை தமிழ்வாணியை பணிநீக்கம் செய்ய வேண்டும். வேறு தலைமை ஆசிரியையை இப்பள்ளிக்கு அரசு நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த கல்வி அதிகாரிகள் மோகன், சந்தோஷ்குமார், மற்றும் வருவாய்துறையினர், போலீசார் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அடிப்படை வசதிகளை செய்து தருவதாகவும், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினர். இதையடுத்து தலைமை ஆசிரியையும் மாணவிகளிடம் என்மீது தவறு இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் என்று கூறினார். தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தலைமை ஆசிரியை தமிழ்வாணியை இளம்பிள்ளை அரசு ஆண்கள் பள்ளிக்கு மாற்றி மாவட்ட கல்வி அதிகாரி கபீர் உத்தரவிட்டுள்ளார்.

    ஆசிரியை தமிழ்வாணி கடந்த ஆண்டுகளில் மாணவிகள் சேர்க்கையின் போது கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரில் சிக்கினார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் முகப்பு பக்கங்களை தைக்கும் பணிகளில் மாணவிகளை ஈடுபடுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சஸ்பெண்டு செய்யப்பட்டு பின்னர் மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி நெடுந்தூர ஓட்டப்போட்டி இன்று காலை நடைபெற்றது.
    • 25 வயதிற்குட்பட்டோருக்கு 8 கிலோமீட்டர்தூரமும், 25 வயது மேற்பட்டோருக்கு 10 கிலோமீட்டர் தூரமும் நடைபெற்றது.

    சேலம்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி நெடுந்தூர ஓட்டப்போட்டி இன்று காலை நடைபெற்றது.

    2 பிரிவில் போட்டிகள்

    இப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஆண்களுக்கான பிரிவில் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்டோருக்கு 8 கிலோமீட்டர்தூரமும், 25 வயது மேற்பட்டோருக்கு 10 கிலோமீட்டர் தூரமும் நடைபெற்றது.

    மேலும், பெண்களுக்கான பிரிவில் 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்டோருக்கு 5 கிலோ மீட்டர் தூரமும், 25 வயது மேற்பட்டோருக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் என நான்கு பிரிவுகளில் இப்போட்டியானது நடைபெற்றது.

    ரொக்கப்பரிசு

    இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 5,000-மும், இரண்டாம் பரிசாக ரூபாய் 3,000-மும், மூன்றாம் பரிசாக ரூபாய் 2,000-மு ம்வழங்கப்பட்டது.

    மேலும், 4 முதல் 10 இடங்களை பிடிக்கும் வீரர்களுக்கு ரூபாய் 1,000- மும் வழங்கப்பட்டது. இதனை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வழங்கினார். இந்த போட்டியில் 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி சேலம் மாவட்டம் எடப்பாடி சுற்று வட்டார பகுதியில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜையுடன், பெருமாள் சுவாமி உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சவுந்தரராஜ பெருமாள் சன்னதியில் அதிகாலையில் பெருமாளுக்கு 108 வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    எடப்பாடி:

    புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி சேலம் மாவட்டம் எடப்பாடி சுற்று வட்டார பகுதியில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜையுடன், பெருமாள் சுவாமி உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதன் ஒரு பகுதியாக எடப்பாடி மேட்டுதெரு சவுந்தரராஜ பெருமாள் சன்னதியில் அதிகாலையில் பெருமாளுக்கு 108 வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர் அலங்காரத்தில் சவுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    தெப்ப உற்சவம்

    விழாவின் முக்கிய நிகழ்வாக எடப்பாடி பெரிய ஏரியில் தெப்ப தேர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் சவுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார். பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க ஏரியின் மறுகரையில் உள்ள வெள்ளூற்று பெருமாள் சன்னதிக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் சவுந்தரராஜ பெருமாள் சன்னதியை வந்தடைந்தார்.

    இதேபோல் எடப்பாடி அடுத்துள்ள வீரப்பம்பாளையம் வெள்ளைகரடு மலை கோவிலில் உள்ள திம்மராய பெருமாள் சன்னதி, பழைய எடப்பாடி சென்றாய பெருமாள் ஆலயம், எடப்பாடி நரசிம்ம மூக்கரை பெருமாள் கோவில், பூலாம்பட்டி மலைமாட்டுப் பெருமாள் கோவில், ரெட்டிபட்டி கிருஷ்ண பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
    • அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. மேலும் மழை இல்லாததாலும் நீர்வரத்து குறைந்து விட்டது.

    இந்த நிலையில் காவிரியில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனாலும் அந்த தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதில் இந்த ஆண்டில் 2-வது முறையாக கிருஷ்ண ராஜசாகர் அணை 100 அடியை எட்டியது.

    ஆனாலும் அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்காததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 32.25 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 154 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 8.4 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது. நீர்வரத்து இேத அளவில் இருந்து அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் இதே நிலையில் நீடித்தால் மேட்டூர்அணையில் இருந்து இன்னும் ஒரு வாரத்துக்கு மட்டுமே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

    • பேக்கரி கடை ஒன்றில் குழந்தைகளுக்கு சாப்பிட முட்டை பப்ஸ் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • உடனடியாக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் இடங்கண சாலையை அடுத்த மடத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (38), இவர் தனது குழந்தைகளான யாசினி (9), யாசித்(8), சபரீஷ் (3) ஆகிய 3 பேருடன் கொங்கணாபுரம் அடுத்த ஆலங்காடு பகுதியில் உள்ள தனது குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளார்.

    அங்கு வழிபாடு செய்தவர் தனது குழந்தைகளுடன் மீண்டும் வீடு திரும்பிய நிலையில், கொங்கணாபுரம் பகுதியில் உள்ள பேக்கரி கடை ஒன்றில் குழந்தைகளுக்கு சாப்பிட முட்டை பப்ஸ் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனை அடுத்து முட்டை பப்ஸ் சாப்பிட்ட குழந்தைகள் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில், திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    இது குறித்த தகவல் அறிந்த எடப்பாடி தாலுகா உணவு பாதுகாப்பு அலுவலர் குமரகுரு தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கொங்கணாபுரம் போலீசார் சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த தின்பண்டங்களின் மாதிரிகளை சேகரித்ததுடன், சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. 

    • உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    • அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேக்கிரி கடையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் உள்ள பேக்கரியில் பப்ஸ் சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

    உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேக்கிரி கடையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பேக்கிரி கடைக்கு சீல் வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சேலம் கோட்டையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகிறார்கள்.
    • தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து கூறினாலும் அவர் மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்து வந்தனர்.

    சேலம்:

    சேலம் கோட்டையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளியில் மாணவிகளுக்கு சுகாதாரமான குடிநீர், கழிப்பறை வசதிகள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என மாணவிகள் குற்றம்சாட்டி வந்தனர். மேலும் தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து கூறினாலும் அவர் மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட கல்வி அதிகாரி மோகன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது மாணவிகள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று உறுதிப்பட தெரிவித்தனர்.

    இதுகுறித்து மாணவிகள் கூறியதாவது:-

    பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழ்வாணி சக ஆசிரியர், ஆசிரியர்களையும், மாணவிகளையும் தர குறைவாக நடத்துகிறார். பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

    2 நாட்களுக்கு முன்பு பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருந்தது. இதனைப் பார்த்த நாங்கள் அந்த குடிநீரை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்தோம். இது தொடர்பாக புகார் தெரிவித்த மாணவிகள் சிலரை தலைமை ஆசிரியை அறையிலேயே முட்டி போட வைத்து அவமானப்படுத்தினார்.

    கழிவறைகளும் அசுத்தமாக உள்ளதால் அதையும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது. எனவே எங்களின் அடிப்படை வசதியை நிறைவேற்றாத தலைமை ஆசிரியை தமிழ்வாணியை பணிநீக்கம் செய்ய வேண்டும்.

    வேறு தலைமை ஆசிரியையை இப்பள்ளிக்கு அரசு நியமிக்க வேண்டும். விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மாணவிகள் போராட்டம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியை கூறுகையில், குடிதண்ணீரில் புழுக்கள் இருப்பதாக மாணவிகள் புகார் கூறினர். உடனடியாக ஆய்வு செய்த நான் தண்ணீரில் புழுக்கள் இல்லை என்று கூறினேன். மேலும் கழிவறையையும் சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நான் எந்த மாணவி களையும் அவர்களது பெற்றோரையும் மிரட்டவில்லை. வேண்டுமென்று எனக்கு எதிராக சில ஆசிரியர்கள் மாணவிகளை தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த கல்வி அதிகாரிகள், வருவாய்துறையினர் மற்றும் போலீசார் தலைமை ஆசிரியை மற்றும் மாணவிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தலைமை ஆசிரியை தமிழ்வாணி மாணவிகளிடம் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே இன்று காலை 9.30 மணியளவில் ராஜேஷ் கண்ணா என்பவர் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.
    • போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட வாலிபர் ஒடிசா மாநிலம் ஜாக்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே இன்று காலை 9.30 மணியளவில் ராஜேஷ் கண்ணா என்பவர் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் திடீரென ராஜேஷ்கண்ணா கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தார்.

    இதை பார்த்த ரவுண்டானா பகுதியில் நின்றிருந்த சேலம் மாநகர துணை கமிஷனரின் (தெற்கு) அதிவிரைவு படை போலீசார் செல்போனை பறித்துக் கொண்டு ஓடிய வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.

    பின்னர் அந்த வாலிபரை கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் பிடிபட்ட வாலிபர் ஒடிசா மாநிலம் ஜாக்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரபரப்பான ரவுண்டானா பகுதியில் காலை நேரத்தில் போலீ சார் சிறுவனை விரட்டி சென்று பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மத்திய சிறையில் உள்ள குறிப்பிட்ட பிளாக்குகளில் ஜெயிலர் கிருஷ்ணகுமார் மற்றும் சிறை போலீசாருடன் திடீர் சோதனை மேற்கொண்டார்.
    • ஜெயிலர் கிருஷ்ணகுமார் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    சேலம்:

    சேலம் மத்திய சிறையில் உள்ள குறிப்பிட்ட பிளாக்குகளில் ஜெயிலர் கிருஷ்ணகுமார் மற்றும் சிறை போலீசாருடன் திடீர் சோதனை மேற்கொண்டார்.

    அப்போது சோதனை மேற்கொண்ட அறைகளில் இருந்த கைதிகள் விமல், பிரவீன், அஸ்வின் குமார் ஆகியோர் மறைத்து வைத்திருந்த செல்போன், சார்ஜர், சிம் கார்டு போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இது குறித்து ஜெயிலர் கிருஷ்ணகுமார் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முருகன் இன்று காலை மொபட்டில் வீராணம் சாலையில் தனியார் நூல் மில் அருகே சென்று கொண்டிருந்தார்.
    • படுகாயம் அடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வலசையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள வலசையூர் போயர் தெருவை சேர்ந்தவர் முருகன். (வயது 49). தொழிலாளி.

    இவர் இன்று காலை மொபட்டில் வீராணம் சாலையில் தனியார் நூல் மில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது வலசையூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கவுதம் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்தார். அவர் எதிர்பாராத விதமாக முருகனின் மொபட் மீது மோதினார்.

    இதில் படுகாயம் அடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வலசையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது முருகன் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லேசான காயத்துடன் தப்பிய கவுதமனுக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ×