என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    தி.மு.க.வை விட்டு வெளியே வந்தால் காங்கிரசுடன் கூட்டணி வைக்க மக்கள் நீதி மய்யம் தயார் என்று கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார். #MakkalNeedhiMaiam #Snehan #Congress
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் 12 இடங்களில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வந்த அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கவிஞர் சினேகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்து மக்கள் நீதி மய்யம் போட்டியிட நினைத்தது. ஆனால் மக்கள் நீதி மய்யம் நினைத்தது நடக்கவில்லை. எதிர்பார்த்தவாறு கூட்டணி அமையவில்லை.

    தற்போதும் தி.மு.க.வை விட்டு காங்கிரஸ் வெளியேறினால் மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளது. இந்த தேர்தலில் ஊழல் கட்சியான பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் விருப்பம்.

    பா.ஜ.க.வோடு காங்கிரஸ் ஒப்பிட்டுப் பார்த்தால் காங்கிரஸ் ஊழல் கட்சி கிடையாது. தன்னை பாதுகாத்துக் கொள்ளவும், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவும் அ.தி.மு.க.வை விட்டு வெளியேறியவர் டி.டி.வி. தினகரன். அவர் அரசியல் ஆதாயத்திற்காக வெளி வந்து கட்சி தொடங்கியுள்ளார். அவரது கட்சி எந்த பயனையும் தராது.

    பா.ஜ.க.வை கண்டு நாங்கள் அஞ்சவில்லை. கோபத்தின் வெளிப்பாடுதான் பா.ஜ.க. எதிர்ப்பு நிலை.

    இவ்வாறு அவர் கூறினார். #MakkalNeedhiMaiam #Snehan #Congress
    அ.தி.மு.க.வை விட்டால் பா.ஜ.க.வை எந்த கட்சியும் கூட்டணியில் சேர்க்காது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #ADMK #Congress #Thirunavukkarasar

    அறந்தாங்கி:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் அறந்தாங்கியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அனுமதி அளிக்கும் தொகுதியில் தான் போட்டியிடுவேன். அந்த தொகுதி ராமநாதபுரமாகவும், திருச்சியாகவும், சென்னையாகவும் இருக்கலாம். பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுவது, அனைத்து அரசுகளும் வாடிக்கையாக செய்யக் கூடிய ஒன்று தான்.

    ஆனால் கடந்த 4½ஆண்டுகளாக பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாமல், தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிதி உதவி வழங்குவது தேர்தலை மனதில் வைத்து தான். ரூ.15 லட்சம் தருவதாக மக்களை ஏமாற்றிய மோடி, தற்போது இந்த தேர்தலில் மக்களை ஏமாற்றும் நோக்கத்தில் விவசாயிகளுக்காக கவுரவ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

    அ.தி.மு.க. பிளவு பட்டதால், தற்போது பெரும் பான்மையை இழந்துள்ள அரசைக் காப்பாற்றிக்கொள்ளவும், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ளவும், தமிழக அரசு பா.ஜ.க.வின் பினாமி அரசு போல செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க.வின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்தே அக்கட்சியை நடக்க உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியில் அ.தி.மு.க. சேர்க்கிறது.

    தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.விற்கும் கெட்ட பெயர் உள்ளதால், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தான் பலமான கூட்டணியாக உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. சேராவிட்டால், அந்த கட்சியை யாருமே சேர்க்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ADMK #Congress  #Thirunavukkarasar

    அ.தி.மு.க.வை பயமுறுத்தி பா.ஜ.க. கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருவதாக திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார். #Thirunavukkarasar #BJP

    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளோடு விரைவில் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கப்பட உள்ளது. எங்களுடைய கூட்டணி பலமாக உள்ளது.

    ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்காக வர உள்ளனர். காங்கிரஸ் கட் சியில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு இணைந்து தேர்தல் பணியாற்றுவோம்.

    நேரடியாக நடக்காத வி‌ஷயத்தை சரியாக தெரிந்து கொள்ளாமல் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை, பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    பா.ஜ.க.விற்கு கூட்டணி கட்சிகள் கிடைக்கவில்லை. இதனால் இருக்கின்ற கட்சிகளை விடக்கூடாது என்பதற்காக அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை நிர்பந்தப்படுத்தி பயமுறுத்தி கூட்டணி பேச்சுவார்த்தையை தற்போது நடத்தி வருகின்றனர்.

    அ.தி.மு.க.விலேயே பா.ஜ.க.வோடு கூட்டணி வைக்கலாம் , வைக்கக்கூடாது என்று இருவேறு கருத்துக்கள் நிலவி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirunavukkarasar #BJP

    ஆலங்குடி அருகே கஜா புயல் பாதித்த பகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 4,200 தென்னங்கன்றுகளை கடல்சார் விஞ்ஞானிகள் வழங்கினர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கஜா புயல் பாதித்த பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு- 4200 தென்னங்கன்றுகளை கடல்சார் விஞ்ஞானிகள் நேற்று வழங்கினர்.

    இந்திய அரசின் தேசிய கடல் வனத்துறை தொழில் நுட்ப கழகம் மற்றும் கடல் மிதவைத் திட்ட குழுமத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் சார்பில், கஜா புயலில் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த பகுதி விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு தென்னங்கன்றுகள் மற்றும் மா, பலா, கொய்யா, தேக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கினர்.

    குழுமத்தின் திட்ட இயக்குநரும், முதுநிலை விஞ்ஞானியுமான முனைவர் வெங்கடேசன் தலைமையில், அருள்  முத்தையா, வெங்கடேசன், திருமுருகன், சுந்தர வடிவேல், முத்துக்குமார், துறையூர் தென்னவன் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ஆலங்குடி, நெடுவாசல், சுற்றியுள்ள கிராமங்களும் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் நெடுவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில், இந்திய அரசின் தேசிய கடல் வளத்துறை    தொழில்நுட்ப கழகம் மற்றும் கடல் மிதவைத் திட்ட குழுமத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் சார்பில் மாணவ, மாணவிகள் மற்றும் தென்னை விவசாயிகளுக்கு சுமார் 4,200 தென்னங்கன்றுகள், மரக்கன்றுகளை வழங்கினர்.

    முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் ராஜலிங்கம் தலைமை தாங்கினார். ஆயுள் காப்பீட்டு நிறுவன முகவர் ராமசாமி, நூலகர் வெங்கட் ரமணி, ஓய்வு ஆசிரியர் வேலு, பசுமை ராமநாதன், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் சுந்தராஜன்  ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் இளையராஜா நன்றி கூறினார். #tamilnews
    கறம்பக்குடி அருகே கஜா புயல் நிவாரணம் வழங்க கோரி அனைத்து கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 97 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுகா, கறம்பக்குடி அருகேயுள்ள துவார் ஊராட்சியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இன்னும் நிவாரணப் பொருள் வழங்கப்படவில்லை. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம்  புகார் செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து அனைத்து கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் துவார் கடைவீதியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    தி.மு.க. ஊராட்சி செயலாளர் தங்கமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்த ராஜன்,தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி செயலாளர் ரெங்கராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் உடையப்பன், துரைச்சந்திரன், தெற்கு ஒன்றிய செயலாளர் பால சுந்தரமூர்த்தி, தே.மு.தி.க. ,ஒன்றியக்குழு டைலர் ரெங்கராஜ், ம.தி.மு.க. மருதமுத்து, அ.ம.மு.க. ரெங்கராஜ் மற்றும் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். 

    சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 63 பெண்கள் உள்பட 97 பேரை ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன், கறம்பக்குடி சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் கைது செய்து, மழையூர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
    மணமேல்குடி காவல்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
    மணமேல்குடி:

    மணமேல்குடி காவல்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மணமேல்குடி பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் கடை வீதி வழியாக மணமேல்குடி போலீஸ் நிலையத்தில் முடி வடைந்தது.

    ஊர்வலத்தில் மது அருந்தி வாகனம் ஓட்ட கூடாது. செல்போன் பேசிகொண்டு வாகனம் ஓட்டக் கூடாது. ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்பன உள்பட விழிப்புணர்வு வாசகங்கள்அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    புதுக்கோட்டை அருகே அதிமுக பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்த ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் விஜயபாஸ்கர் (வயது 45).அ.தி.மு.க. பிரமுகரான இவர் கீரனூர் வடக்கு ரதவீதியில் காய்கறி, பழங்கள் விற்பனை கடை வைத்துள்ளார். இன்று அதிகாலை திருச்சி மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி மற்றும் பழங்களை வாங்கி வந்த அவர், கடையில் வைத்து விட்டு மேலப்புதுவயலில் உள்ள வாடகை வீட்டிற்கு சென்றார்.  அதன்பிறகு அவர் நீண்டநேரமாகியும் கடைக்கு வரவில்லை.

    இதையடுத்து கடை ஊழியர்கள் விஜயபாஸ்கரின் செல்போனை தொடர்பு கொண்டபோது , போனை எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஊழியர்கள் சிலர், மேலப்புதுவயலில் உள்ள வீட்டிற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு தூக்குப்போட்ட நிலையில் விஜயபாஸ்கர் பிணமாக தொங்கினார். அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இது குறித்து உடனடியாக கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு  ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விஜயபாஸ்கர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. அவருக்கு அதிக கடன் இருந்து வந்துள்ளது. கடனை அடைக்கமுடியாததால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. வேறு ஏதேனும் காரணமா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    தற்கொலை செய்த விஜயபாஸ்கருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர்.
    கமல்ஹாசன் உறுதியாக கூறிவிட்ட பிறகும் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி மீண்டும் கூட்டணிக்கு அழைப்பு விடுப்பது ஏன்? என்று முத்தரசன் கூறியுள்ளார். #KamalHaasan #Congress #DMK

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இன்று மாநில செயலாளர் இரா.முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் பா.ஜ.க. தங்களது கட்சியை வளர்க்க அ.தி.மு.க.வை மிரட்டி குரல்வளையை நெரித்து தேர்தலில் போட்டியிட அதிக இடங்களை கேட்டு வருகிறது. இருப்பினும் பா.ஜ.க. தமிழகத்தில் ஒரு போதும் வளராது.

    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகள் உள்ளன. தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாக இது வரை பேசவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பின்னர் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

    தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இருப்பினும் தொடர்ந்து கூட்டணி தொடர்பாக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சில கருத்துக்களை கூறிவருவது ஏன் என்று புரியவில்லை.


    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளோடு கூட்டணி கிடையாது என்று கூறிய பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கமலஹாசன் கூட்டணியில் சேரவேண்டும் என்று கூறியது ஏன்? என்று தெரியவில்லை

    கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டியது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான். தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களின் போது நேரில் வராத பிரதமர் மோடி, தற்போது தேர்தல் பிரசாரத்திற்கு தமிழகம் வருகிறார். அவருக்கு மக்கள் தகுந்த பதிலை சொல்வார்கள்.

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில் பல கட்சிகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் கூட்டணிகள் தொடர்பான கருத்துக்கள் வெளிவந்தாலும் அவை அனைத்தும் மர்மங்களாகவே உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி எத்தனை இடங்களில் போட்டியிடும் என்று நிருபர்கள் கேட்டபோது, இந்திய கம்யூனிஸ்ட் 39 தொகுதிகளையும் கேட்கும் என்று சிரித்துக் கொண்டே கூறினார். #KamalHaasan #Congress #DMK

    கீரனூர் அருகே தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான 5 பேரிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வீராச்சாமி (வயது 70). தொழில் அதிபர். இவரது மகன் முத்து (30). வீராச்சாமிக்கு சொந்தமாக விராலிமலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. 

    இந்த நிலையில் களமாவூர் சத்திரத்தை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவருமான மூர்த்தி (52), என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வீராச்சாமியிடம் இருந்து ரூ.1 கோடியே 25 லட்சம் கடனாக வாங்கி உள்ளார். ஆனால் பணத்தை திரும்ப கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. 

    இதுதொடர்பாக 2 தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று வீராச்சாமி மற்றும் அவரது மகன் முத்து ஆகியோரை, மூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர் வெட்டிக்கொன்றனர்.

    இந்த கொலை சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர், மூர்த்தி உள்ளிட்ட 15 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். 

    இந்த நிலையில் இந்த கொலையில் தொடர்புடைய வினோத், சிக்கல்குமார், செல்வகுமார் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான மூர்த்தி உள்ளிட்டோரை பிடிக்க தனிப்படையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    புதுக்கோட்டை தைலாநகரில் நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி கிராம நிர்வாக அதிகாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி கஜா புயல் தாக்கியது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள், மரங்கள் போன்றவை சாய்ந்தன. இதேபோல குடிசைகள், ஓட்டுவீடுகள் போன்றவையும் சேதமடைந்தன. இதைத்தொடர்ந்து தற்போது புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் சார்பில், புயல் நிவாரண பொருட்களும், தென்னை மரங்கள் போன்ற மரங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பயிர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது வங்கி கணக்கில் நிவாரண தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் புதுக்கோட்டை மச்சுவாடி தைலாநகர் பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நிவாரண பொருட்கள் வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் தி.மு.க.வினர் நேற்று தைலாநகர் பகுதிக்கு வந்த கிராம நிர்வாக அதிகாரி அம்பிகாவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் எங்களுக்கு உடனடியாக நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கணேஷ்நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தைலாநகர் பள்ளியில் நிவாரண பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு உள்ளது. நான் ஒவ்வொரு வீடு வீடாக சென்று ஆய்வு செய்துதான் நிவாரண பொருட்களை வழங்குவேன் என கிராம நிர்வாக அதிகாரி அம்பிகா தெரிவித்தார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    வீட்டின் பூட்டை உடைத்து 7½ பவுன் நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    அன்னவாசல்:

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள லெக்கணாப்பட்டியை சேர்ந்தவர் பழனியாண்டி (வயது 40). இவரது மனைவி அடைக்காயி. பழனியாண்டி சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் வீட்டில் அடைக்காயி, தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் பழனியாண்டியின் மனைவி அடைக்காயி, குழந்தைகளுடன் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு கீரனூரில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் திருமணம் முடித்துவிட்டு மதியம் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அடைக்காயி வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டின் அறையில் பீரோவில் வைத்திருந்த 7½ பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. 

    இதுகுறித்து அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் அடைக்காயி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். 
    ஆலங்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    ஆலங்குடி:

    ஆலங்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மாதவன் முன்னிலை வகித்தார். திருவரங்குளம் ஒன்றியச் செயலாளர் சொர்ணகுமார் அறிக்கை சமர்ப்பித்தார்.

    கூட்டத்தில் அண்மையில் புயலால் பாதிக்கப்பட்டு நிவாரணம் கிடைக்காமல் இருக்கும் ஏழை, எளிய, பொதுமக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட வேண்டும். மா, பலா எலு மிச்சை,வாழை,போன்ற விவசாய பயிர்களுக்கு இன்னும் நிவாரண உதவித்தொகை கிடைக்க  விவசாயிகளுக்கு  உடனடியாக மாவட்ட நிர்வாகம்  இழப்பீடு வழங்க வேண்டும், ஆலங்குடி, கீரமங்கலம்  பேரூராட்சிகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும், சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    வருகிற 11, 12-ந்தேதிகளில் சேலத்தில் நடைபெறும் விவசாயிகள் சங்க மாநில மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க வேண்டும், 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெறும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில மாநாட்டில் இளைஞர்கள் திரளாக பங்கேற்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. 

    கூட்டத்தில் ஒன்றிய துணைச்செயலாளர் செல்வராஜ், மாவட்ட குழு உறுப்பினர் செல்வகுமார், நல்லதம்பி, தமிழ்மாறன், முத்துக்கருப்பன், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
    ×